காணாமல் போன மொழி

உனக்கும் எனக்குமான
இடைவெளி
அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
மௌனத்தை
உடைத்து கொண்டு
வெளிக் கிளம்பிய
வார்த்தைகள் வஞ்சித்து விட்டன
அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
என் மொழியை
விரட்டி விட்டது
வார்த்தைகளற்ற வனாந்தரத்தில்
வசித்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான
மொழியின்மையோடு
கணக்குப் போட்டு
காய் நகர்த்துகிறாய்
போதும் போதுமென்றாலும்
போதுமே போதுமா
எல்லாவற்றிலிருந்தும்
வெளிவர முடியுமென்றிருந்த
இறுமாப்பு சிதைந்து விட்டது
இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது
இப்போதென் வாழ்வு
குடிகாரனின் புலம்பல்களாய்ச்
சிறுத்துப் போன
என் மொழியை
மீட்டெடுப்பேன்
இப்போதைக்கு வணக்கம்

15 comments:

நித்யன் said...

“தான்”
ஓங்கி வளர்ந்து
உயர்ந்து நின்று
வெட்டவெளிப்பொட்டலில்
தனிமை சுட
மென்மேலும் சுட்டுக்கொண்டேயிருக்க

சற்று குட்டையானாலும்
பரவாயில்லையென
நினைத்து
எல்லாம் சரியாகும்
நேரத்தில்
ஓங்கி வளர்ந்திருப்பதின் கர்வம்
வந்து படுத்தும்

இந்த தனிமை
பழகாதோருக்கு கொடுமை
பழகியோருக்கு இனிய கொடுமை

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
என் மொழியை
விரட்டி விட்டது"
உண்மை, இன்றிருக்கும் பணிச்சூழலில் பலருக்கும் நேர்ந்து விட்ட கொடுமை இது.. இதிலிருந்து மீளவும், நம் மொழிக்கான ஆளுமைகளை திரும்பப்பெறவுமே இத்தகைய முயற்சிகள்.. வாழ்த்துக்கள்.

Anonymous said...

மொழி காணாமல் போக வழியில்லை.
:-) ஆனால் பதிலுக்குக்
கோபமாக இப்படி மொழி சொல்லுமோ? just for fun.please dont take it seriously.

குடிகாரனின் புலம்பல்களாய்ச்
சிறுத்துப் போன(உன்)
வார்த்தைகள் வஞ்சித்து விட்டன
கணக்குப் போட்டு
காய் நகர்த்துகிறாய்

உனக்கும் எனக்குமான
வார்த்தைகளற்ற வனாந்தரத்தில்
வசித்துக் கொண்டிருக்கிறேன்

இப்போ(து)ன் வாழ்வு
அலுவலகக் கடித மொழி
சூழ்ந்து கொண்டு
இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது

உடைத்து கொண்டு
வெளிவர முடியுமென்றிருந்த
எல்லாவற்றிலிருந்தும்
வெளிக் கிளம்பிய
உனக்கான
என் மொழியை
இடைவெளி
விரட்டி விட்டது

போதுமே போதுமா
போதும் போதுமென்றாலும்
மீட்டெடுப்பேன்
மௌனத்தை
மொழியின்மையோடு

இப்போதைக்கு கோபமாக வணக்கம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பகிர்வுகளுக்கு நன்றி நித்யகுமாரன் & கிருத்திகா.

ஆடுமாடு said...

//இருளோடு செய்யும்
யுத்தம் போல் இருக்கிறது
இப்போதென் வாழ்வு//


நிஜம்தான். என்ன பண்ண? என் மொழி தொலைஞ்சுப்போய் ஊர்க்காரங்ககிட்ட பேசி பேசி மீட்டெடுக்கேன்.

வாழ்த்துகள்

Anonymous said...

இப்போதைக்கு வணக்கம்

பெருகும்
என்-உன் இடைவெளி.
வஞ்சித்தன
மௌனமுடைத்துக்
கிளம்பிய சொற்கள்.
விரட்டியது
சூழ்ந்த
அலுவலஞ்சல்.
இன்மை உனதாய்க்
கணக்கிட்டு
நகர்த்துகிறாய்
காய்.
வசித்தேன்
சொற்களற்ற
வனாந்தரத்தில்.
சிதைந்த்து
யாவற்றிலிருந்தும்
வெளிவர
முடியுமெனும்
இறுமாப்பு.
இருளுடன்
யுத்தம்
வாழ்வு.
போதும்
போதுமெனினும்
போதுமா.
போதுமே மீட்பேன்
சிறுத்த மொழியை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனானி. நல்லாவே இருக்கு உங்க கவிதை. பெயரோடு வந்தா உரையாட வசதியாயிருக்குமே (இரண்டு மூன்று அனானி பின்னூட்டங்கள் வந்தா எந்த அனானி எனக் குழப்பம் நேர்வதால் இந்த வேண்டுகோள்; பிறகு உங்கள் முடிவு).

நன்றி, ஆடுமாடு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டக் கவிதைக்கு நன்றி, நாகார்ஜூனன்.

Anonymous said...

I like your poems which are small ones rather than your long stories.!

Regards,

Ramesh

VinisPearls said...

I like your poems

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரமேஷ், இதில் உள் குத்தொன்றும் இல்லையே...

நான் என்னமோ அம்பாரம் அம்பாரமா சிறுகதை எழுதின மாதிரி சிறுகதையை விட கவிதை பரவாயில்லைன்னா என்ன அர்த்தம்.? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரவி பாலசந்திரன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
This comment has been removed by the author.
Muni said...

Good one. Congratulations.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முனி.