என் வண்டி

வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு
தொலைவில் இருக்க
இருக்கும் நேரமோ மிகச் சொற்பம்
மெதுவாகத்தான் செலுத்த இயலும்
இந்த வண்டியை
பாதியில் நின்றுவிடும்
என்னுடன் சண்டை போடும்
தூக்கியெறியும்
இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன்
சோனியாக இருக்கும் இவ்வண்டி
துருப்பிடிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது
என்றாலும்
எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

(மாலைக்கதிர் - 26.12.1995ல் பிரசுரமானது)

21 comments:

anujanya said...

//இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி//

இதுதான் முத்தாய்ப்பு என்றாலும்

//எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது//

இந்த வரிகள் எனக்கு ஒரு கவிதை செய்ய வேண்டிய சிந்தனைத் துவக்கத்தை அளித்தது. இந்த வரிகளில் தான் நீங்கள் தெரிகிறீர்கள் சுந்தர். :)

அனுஜன்யா

A N A N T H E N said...

:)

அத்திரி said...

//வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு//

ஹிஹிஹிஹி/;;;;;;;;;;;;

உயிரோடை said...

வ‌ண்டியை ம‌ட்டும் சொல்வில்லை என்ப‌து புரிகின்ற‌து

இராகவன் நைஜிரியா said...

// இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன் //

இப்போ பெட்ரோல் விற்கின்ற விலையில் முழுவதும் அழவேண்டியிருக்கும்..

மிகவும் ரசித்தேன்

Ken said...

எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

இந்த வரிகள் ஒரு ஆழமான பொருள் தருது கலக்குங்க சுந்தர் ஓல்ட் இஸ் கோல்ட் :)

Anonymous said...

//எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி//

எதையோ சொன்னதுபோல் இருந்தாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாற் போலவும் இருக்கிறது.

வால்பையன் said...

வண்டி மேல் உங்களுக்கு
காதலா?
கட்டாயமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனுஜன்யா.

நன்றி, ஆனந்தன். எதற்கிந்தச் சிரிப்பு?

நன்றி, அத்திரி. நீங்களும் சிரிக்கிறீர்களே...

நன்றி, மின்னல்

கூட்ஸ் வண்டி said...

என்னை பற்றியும் கொஞ்சம், கொஞ்சும் தமிழால் பாடுங்களேன்!

Unknown said...

வித்தியாசமான கவிதை. நல்லா இருக்கு.love/hate உறவுக் கவிதை.

Wandering Dervish said...

வண்டி என்பது நமக்கே நமக்கனா இந்த உடல் தானோ ?
எப்படி இருப்பினும் கவிதை அபாரம்.

Anonymous said...

நல்லா இருக்குங்க!

மாதவராஜ் said...

சுந்தர்!

இன்றுதான் உங்கள் கவிதையை பார்த்தேன்.
ரொம்ப ரசித்தேன்
எளிமையான வரிகள்தான்:
பல தளங்களில் அர்த்தம் தருபவையாக இருக்கின்றன.
என்ன ஆனாலும் விட்டுக் கொடுக்காத
கடைசி வரிகளில்,
நீங்களும், கவிஞரும் இருக்கிறீர்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

வழக்கம் போல ரொம்ப நல்லா புரிஞ்சிடிச்சி.. :(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ராகவன் நைஜீரியா.

நன்றி, கென். ஆனால் கோல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட் :)

நன்றி, வடகரை வேலன்.

நன்றி, வால்பையன். கட்டாயமான காதல் :)

நன்றி, கூட்ஸ் வண்டி. பாடிட்டா போச்சு :)

நன்றி, ரவிஷங்கர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, நாடோடி.

நன்றி, சுந்தரேஸ்வரன்.

நன்றி, மாதவராஜ்.

நன்றி, சஞ்சய். :) :)

butterfly Surya said...

உங்க வலை நல்லாயிருக்கு..

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

Unknown said...

//எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி/ அற்புதமான வரிகள் சுந்தர்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வண்ணத்துப் பூச்சியார் & உமா ஷக்தி... நன்றி.

ரமேஷ் வைத்யா said...

பதின்மூன்று வயதான கவிதை, வாலை வனப்புடன் இருக்குங்க.