ஆள் மாறாட்டம்

உங்கள் பெயரான கே என்பதை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானமாக இருக்கிறீர்கள். உங்கள் காதலிக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. அதனால் பொல்லாதவன் படத்தில் தனுஷின் பெயரான எல் என்பதை வைத்துக் கொள்ள விழைகிறீர்கள்.

பெயர் மாற்றுவதில் உள்ள பல சிக்கல்களை நான் எவ்வளவு விளக்கியும் நீங்கள் கேட்பதாயில்லை. காதலே பிரதானமாயிருக்கிறது உங்களுக்கு. காதலி பெயரை மாற்றாவிட்டால் உங்களுக்குப் பதில் வேறொருவரைக் காதலிக்கத் துவங்கிவிடுவாளோ என்ற பயம் உங்களுக்கு. அதை வெளிப்படையாகச் சொல்லவும் தயக்கம்.

பொல்லாதவன் தனுஷ் பெயரை நீங்கள் சூட்டிக் கொண்டவுடன் உங்களுக்கு கில்லி விஜய்யின் சக்தி வந்ததாக நினைக்கிறீர்கள். உங்கள் மாளிகையின் அழகான இண்டெர்காமை எடுத்து உதவியாளரை வரச் சொல்கிறீர்கள். ஸ்விட்சர்லாந்திற்கு காதலிக்கும் உங்களுக்குமான பயண ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறீர்கள். பிறகு வேறு ஏதோகூடச் சொல்கிறீர்கள்; அதை என்னிடம் சொல்லாததால் இங்கு எழுத முடியவில்லை.

பிறகு உங்கள் காதலியுடன் டூயட் பாட ஸ்விட்சர்லாந்திற்கும் பாங்காக்கிற்கும் செல்கிறீர்கள். அகண்ட படகில் நீங்கள் இருவரும் பாடிக் கொண்டே பயணம் செய்கிறீர்கள். அப்போது உங்கள் காதலியின் உடலெங்கும் நீங்கள் முகர்ந்தபின் தொப்புளில் முத்தம் வைத்தபோது அவளின் முகபாவத்தை ஏறிட்டுப் பார்க்கிறீர்கள். அந்தக் காட்சியைக் கண்ட அக்கணமே எனக்கு ஆர்கசம் வந்தது.

உங்கள் நண்பனும் எனக்குப் பிடிக்காதவனுமான எம் என்பவனைப்பற்றி என்னிடம் அடிக்கடி பேசுகிறீர்கள். உணவு விடுதியொன்றில் நீங்களும் எம்மும் அமர்ந்திருக்கிறீர்கள். எம் பியர் அடித்துக் கொண்டிருக்க நீங்கள் கோக் அருந்தியபடி இருக்கிறீர்கள். அப்போது பக்கத்து இருக்கைப் பெண்ணை நான்கு தடியர்கள் கிண்டல் செய்ய நீங்கள் வெகுண்டெழுந்து ஆக்ரோஷமாகச் சண்டையிடுகிறீர்கள். அப்போது ஒருவன் கத்தியால் உங்களைக் குத்த வர, எம் பாய்ந்து உங்களைக் காப்பாற்றுகிறான். நட்பின் இலக்கணம் அவன் என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை நீங்கள் சொன்னாலும், அவனது காதலியை நீங்கள் தள்ளிக் கொண்டு போனதை என்னிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறீர்கள். காதல் என்பது வாழ்க்கையில் ஒருமுறை மலரும், அதுபோலவே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் சிறந்தது என நீங்கள் திரையில் சொன்னதுதான் இதற்குக் காரணமாயிருக்கலாமென நினைக்கிறேன். சரியா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

உங்கள் நண்பனை எனக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஆள் மாறாட்டம் என்ற இந்தக் கதையின் தலைப்பை அவன் பூல் மாறாட்டம் என்று படித்தால் எனக்குக் கோபம் வராதா என்ன? நான் மிகவும் சாந்தமானவன்; தன்மையானவன்; ஆனால் அதையே என் தலைமேல் ஏறி குதிரை ஓட்டுவதற்குச் சிலர் உபயோகித்துக் கொள்ளும்போது, என் இனிய நண்பா, நாம் அதை எப்படிச் சகித்துக் கொள்வது?

உங்கள் காதலியின் தந்தை ஏற்பாடு செய்திருந்த அடியாட்கள் உங்களை வேனில் துரத்துகிறார்கள். நீங்கள் அனைவரையும் அடித்து நொறுக்குகிறீர்கள். பிறகு அவரை நேரில் சந்தித்து சொடுக்குப் போட்டு நீங்கள்தான் அவளைத் திருமணம் செய்வேன் எனச் சபதமிடுகிறீர்கள். குடும்பப் பகையை மறக்கும்படி உங்கள் காதலியும் தந்தையிடம் கண்ணீர் மல்கக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள்.

நான் உங்கள் நண்பன் என்பதால் இதையெல்லாம் ஒன்றுவிடாமல் எனக்கு அவ்வப்போது சொல்லி வருகிறீர்கள்.

திடீரென்று உங்கள் வாழ்வில் அம்மாவும் தங்கையும் வரவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது உங்களுக்கு. மாளிகையின் மாடியறையில் அம்மாவிடம் சிரித்து விளையாடி தங்கையுடன் குறும்பு செய்கிறீர்கள். உங்கள் தங்கையை தோளை அணைத்தபடி தட்டிக் கொடுக்கிறீர்கள்.

உங்கள் தாயார் ஃபிளேஷ்பேக்கை உங்களிடம் விலாவரியாகச் சொல்கிறார். இது புதுவகையான கதைஎழுத்து என்பதால் அவற்றை என்னிடமிருந்து மறைக்கிறீர்கள். உங்கள் தங்கையின் காதலனுடன் (அவன் உங்கள் நண்பனும்கூட!) அவளைச் சேர்த்து வைக்கிறீர்கள்.

காட்டமான கஞ்சாப் புகை அறையெங்கும் சூழ்ந்திருக்கிறது. நீங்கள் எழுந்து கண்ணாடியைப் பார்க்கிறீர்கள். அதில் நீங்களும் நானும் தெரிகிறோம். இப்போது நீங்களும் நானும் ஒருவராகிவிட்டோம்.

நீங்கள் / நான் இருவரும் நடந்து கொண்டிருக்கிறோம் தலைவர் எம்ஜியார் பாடல்களைப் பாடியபடி. முன் ஜென்மத்தில் எனக்கு ரஜினியைத்தான் பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, நம்மில் ஒரு குரல் 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற பாடலைப் பாடுகிறது. இன்னொரு குரல் ‘தூங்காதே தம்பி தூங்காதே' என்று பாடுகிறது.

கடற்கரை மணலில் பாதம் புதையப் புதைய நாம் நடந்து கொண்டிருக்கிறோம். நம் கையைப் பிடித்தபடி நம் காதலி வருகிறாள். நீலக் கடல் ஆர்பரிக்க பின்னணியில் நளினமான இசை வாத்தியங்கள் முழங்குகின்றன. நாம் அவளுடன் கடலலையை ஒத்த கடலை போடுகிறோம்.

எம் நம்முடனேயே இருந்து பல நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்லி நம்மைச் சிரிக்க வைக்கிறான் அவ்வப்போது. அவனது காதலுக்கு நாமும் துணை நிற்கிறோம். அவர்களைச் சேர்த்து வைத்ததும் நா தழுதழுக்கிறான். கதையின் முடிவில் அனுதாபத்தைத் தூண்ட தன்னைச் சாகடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறான்.

காதலியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் நம்மைத் தலைகீழாகக் கட்டி வைத்து உருட்டுக் கட்டையால் அடிக்கிறார்கள். படுக்க வைத்து பாதங்களில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார்கள். நம் முகம் வீங்கி ரத்தத்தால் தோய்ந்திருக்கிறது. இடையில் எம் வந்து நம்மைப் பிணையில் எடுக்கிறான்.

நம் காதலிக்கு வேறொருவனுடம் திருமணம் நிச்சயமாகிறது. நாம் அழுதுகொண்டிருக்கும்போது எம் வந்து இன்னொரு கஞ்சா தருகிறான். அதைப் புகைத்தபடி இருக்கிறோம். அழகான இறக்கைகளுடைய வெள்ளைப் பறவை வந்து நம்மை அழைத்துச் செல்கிறது. இப்போது எம்மும் நம்முடன் இணைய மூவரும் ஒன்றாகிறோம். நம்முடன் நம் காதலியும் வருகிறாள். மேகப் பஞ்சுகளின் மேல் நம் பறவை பறந்து செல்கிறது.

24 comments:

மண்குதிரை said...

புதிய அனுபவமாக இருக்கிறது. இன்னும் ஒரு முறை வாசிக்கவேண்டும்.

லக்கிலுக் said...

இரண்டாம் கோபிகிருஷ்ணன் வாழ்க வாழ்கவே :-)

Raju said...

சுத்தமா புரியல தலைவரே..!

மாதவராஜ் said...

தமிழ்ச்சினிமாவை விமர்சனம் செய்யும் அதே நேரம், மொழியும், நடையும், கொஞ்சம் புகையோடு படு சுவராஸ்யமான ஒரு வாசிப்பு அனுபவம் நேர வைத்திருக்கிறீர்கள். பிடித்தது. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

நந்தாகுமாரன் said...

பிரமாதமான பகடி ... சாருவின் சாயல் தெரிகிறது ...

வால்பையன் said...

தமிழ் சினிமா கதை சொன்ன மாதிரியே இருந்தது!

ILA (a) இளா said...

பிடித்தது. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

யாத்ரா said...

\\நட்பின் இலக்கணம் அவன் என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை நீங்கள் சொன்னாலும், அவனது காதலியை நீங்கள் தள்ளிக் கொண்டு போனதை என்னிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறீர்கள்\\

\\ஆள் மாறாட்டம் என்ற இந்தக் கதையின் தலைப்பை அவன் பூல் மாறாட்டம் என்று படித்தால் எனக்குக் கோபம் வராதா என்ன? \\

\\இது புதுவகையான கதைஎழுத்து என்பதால் அவற்றை என்னிடமிருந்து மறைக்கிறீர்கள்\\


\\அதில் நீங்களும் நானும் தெரிகிறோம். இப்போது நீங்களும் நானும் ஒருவராகிவிட்டோம்\\

மேலும் பல இடங்களை மிகவும் ரசித்தேன்.

Cable சங்கர் said...

ஆள் தான் மாறியிருக்கிறதே தவிர.. சினிமா மாறவில்லை என்பதை உணர்த்தும் கதை.. இண்ட்ரஸ்டிங் சார்..

Ken said...

arumai

Ken said...

en per kuda k than thala :) aanaa enakku kathaliyee illayee

anujanya said...

அட்டகாசம். பகடி என்றால் இது இது.

அனுஜன்யா

லக்கிலுக் said...

என் பெயரும் ‘கே’ (Gay அல்ல) என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மணிஜி said...

வெளியில் குறை வைத்தவன் உள்ளே ..சும்மா சொல்ல வில்லை..dryice போட்டு இளனிர் கலந்த ஜின் குடித்தது போல் இருந்தது தலை(?)வரே...

கார்க்கிபவா said...

அடி தூள்..

/ Nundhaa said...
பிரமாதமான பகடி ... சாருவின் சாயல் தெரிகிறது //

என் கமெண்ட் வாபஸ்..

தராசு said...

ஒரு நாலஞ்சு தடவை படிச்சாத்தான் புரியும்

அது சரி(18185106603874041862) said...

மொழி படம் மாதிரி, சினிமாவை வச்சே, சினிமாவை பகடி....வழக்கம் போல கலக்கல் :0))

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸபாஆஆஆஅ....

நர்சிம் said...

Class!

Ashok D said...

ம்ம்ம்ம்ம்ம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மண்குதிரை, லக்கி லுக், டக்ளஸ், மாதவராஜ், நந்தா, வால்பையன், இளா, யாத்ரா, கேபிள் சங்கர், கென், அனுஜன்யா, தண்டோரா, கார்க்கி, தராசு, அது சரி, சஞ்சய், நர்சிம், அசோக்... நன்றி.

R BALAKRISHNAN said...

The later portion of the narrative is written in haste and the end is not perfect.

G Gowtham said...

நன்றி லிஸ்ட்டில் எம்மையும் சேர்த்துக்கங்க.. முதல்முறை ரசித்துப் படித்தேன், ரெண்டாம் முறை படித்தும் ரசித்தேன்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி பாலகிருஷ்ணன்.

கௌதம் சார், :-) நன்றி!