Signs and Symbols - நபக்கவ் (3)

III

புழங்கும் அறையிலிருந்து அவள் கணவர் முனகுவதைக் கேட்டபோது நடுநிசிக்கு மேலாகியிருந்தது. அவர் தடுமாறியிடபடி உள்ளே நுழைந்தார். தன்னுடைய இரவு உடைக்குமேலே பழைய அஷ்ட்ரகன் காலரோடுகூடிய ஓவர்கோட் அணிந்திருந்தார் - இதைத்தான் அவர் தன்னுடைய அழகான நீலநிற குளியலறை ஆடையைவிட விரும்பி அணிவார்.

”என்னால் தூங்கமுடியவில்லை” என்று அவர் கதறினார்.

”ஏன், எதனால் தூங்க முடியவில்லை... நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்களே...”

“நான் செத்துக் கொண்டிருப்பதால், என்னால் தூங்க முடியவில்லை...” என்று சொன்னவாறு இருக்கையில் படுத்தார்.

“வயிறு பிரச்சனை செய்கிறதா? டாக்டர் ஸோலாவை அழைக்கட்டுமா..?”

”டாக்டர்கள் வேண்டாம்...” என்று முனகியவர், “நாசாமாய்ப் போன டாக்டர்கள். நாம் உடனே அங்கிருந்து அவனைக் கொண்டுவந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நாம்தாம் பொறுப்பாளிகள். பொறுப்பாளிகள்!” திரும்பத் திரும்பச் சொல்லியபடி, தரையில் சுருண்டு அமர்ந்து கொண்டார். முஷ்டியால் தன் நெற்றியில் அடித்துக் கொண்டார்.

“சரி, நாளைக் காலை அவனைக் கொண்டு வந்துவிடுவோம்...” என்றாள் மெதுவாக.

”எனக்குக் கொஞ்சம் டீ கொடேன்..:” என்றபடி பாத்ரூமிற்குச் சென்றார்.

இருக்கையிலிருந்து கீழே விழுந்திருந்த சில சீட்டுக்கட்டுகளையும், ஒன்றிரண்டு படங்களையும் அவள் கீழே கஷ்டப்பட்டு குனிந்து எடுதாள் - நேவ் ஆஃப் ஹார்ட்ஸ், ஸ்பேட் ஒன்பது, ஸ்பேட் எஸ் மற்றும் எல்ஸாவும் அவளது அருவருப்பான சொகுசுக்காரனும். அவர் உற்சாகமாகத் திரும்பி, உரக்கச் சொன்னார் :

”நான் எல்லாவற்றையும் தீர்மானித்து விட்டேன். படுக்கையறையை அவனுக்குக் கொடுத்துவிடுவோம். நாம் இருவரும் மாறி மாறி இரவை அவனருகிலும் இந்த இருக்கையிலுமாகக் கழிப்போம். வாரத்தில் இரண்டு தடவை மருத்துவரை வந்து அவனைப் பார்க்கச் செய்யலாம். இளவரசன் என்ன சொல்வான் என்பது பிரச்சனையில்லை - அப்படி அவன் எதுவும் சொல்ல வாய்ப்பில்லை, இந்த ஏற்பாடு சிக்கனமாகவும் இருக்கிமில்லையா...”

தொலைபேசி ஒலித்தது - அவர்களுக்கு அது வேளையற்ற வேளை. அவரது இடது கால் செருப்பு கழன்றுபோயிருந்தது. குதிகால்கள் மற்றும் விரல்களால் அதைத் துழாவியவாறு நடுஅறையில் அவர் நின்று கொண்டு, குழந்தைத்தனமாக, பொக்கை வாயைக் காட்டியபடி மனைவியைப் பார்த்தார். அவரைவிட ஆங்கிலம் அதிகம் தெரியுமென்பதால், அவள்தான் தொலைபேசி அழைப்புகளை எடுப்பது.

“சார்லியிடம் நான் பேச முடியுமா” ஒரு பெண் சோம்பலாக, மெல்லிய குரலில் கேட்டாள்.

”என்ன நம்பர் உங்களுக்கு வேண்டும்.. மன்னிக்கவும், இது ராங் நம்பர்”

ரிஸீவரை மெதுவாக வைத்த அவள் கரம் தனது முதுமையான இதயத்தைத் தொட்டது.

அவர் சட்டென்று புன்னகைத்துவிட்டு, தனது கிளர்ச்சியான தனிமொழியைத் தொடர்ந்தார். விடிந்ததும் அவனைக் கூட்டி வருவார்கள். கத்திகள் பூட்டிய இழுப்பறைக்குள் வைக்கப்பட வேண்டும். அவன் தன் மோசமான நிலையிலும்கூட யாருக்கும் பயத்தைக் கொடுத்ததில்லை.

தொலைபேசி மணி இரண்டாம் முறையாக அடித்தது. அதே தொனியற்ற ஆர்வமான குரல் சார்லியைக் கேட்டது.

”நீங்கள் தவறான எண்ணை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்கிறேன் : பூஜ்ஜியத்திற்குப் பதிலாக O என்ற எழுத்தை அழுத்துகிறீர்கள்...”

அவர்கள் முன் தீர்மானிக்கப்படாத நள்ளிரவு டீ பார்டியில் அமர்ந்தனர். பிறந்தநாள் பரிசு மேஜை மேல் இருந்தது. அவர் சத்தமாக உறிஞ்சினார்; முகம் சிவந்துவிட்டது; சர்க்கரை நன்றாகக் கரைய அவ்வப்போது கோப்பையை மேலுயர்த்தி சுழற்றினார். அவரது வழுக்கைத் தலையின் பக்கவாட்டிலிருந்த அந்த மச்சமிருக்கும் இடத்தின் எலும்பு எடுப்பாகத் தெரிந்தது. அன்று காலையில்தான் மழித்திருந்தார் என்றாலும், வெள்ளி ரேகைகள் அவரது முகவாயில் தெரிந்தன. அவள் இன்னொரு கோப்பை தேனீரை ஊற்றியபோது, அவர் தனது கண்ணாடிகளை அணிந்து கொண்டு, மஞ்சள், பச்சை, சிகப்பில் பிரகாசமாகத் தெரிந்த சிறு ஜாடிகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்.அவரது தடுமாறும் ஈர உதடுகள் அவற்றின் பிரதானமான லேபிள்களை உச்சரித்துப் பார்த்தன : ஆப்ரிகாட், கிரேப், பீச் பிளம், க்வின்ஸ். அவர் ஆப்பிளைக் கையிலெடுக்க முயன்றபோது, தொலைபேசி மணி மறுபடியும் அடித்தது.

(முற்றும்)

முதல் இரண்டு பாகங்களை இங்கு வாசிக்கலாம் :

http://jyovramsundar.blogspot.com/2009/07/signs-and-symbols.html
http://jyovramsundar.blogspot.com/2009/07/signs-and-symbols-2.html

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கு வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

8 comments:

குப்பன்.யாஹூ said...

NICE THANKS FOR SHARING .

மணிஜி said...

ஆமாம் குரு..நீங்க எதுக்கு மாடரேஷன் வச்சிருக்கிங்க?

Karthikeyan G said...

இறுதி பாரா-க்கள் அருமை..

thanks for ur work..

Sridhar V said...

முன்னர் சுஜாதா இந்தக்கதையின் முடிவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்பொழுது தேடிப் பிடித்துப் படித்தேன்.

மீண்டும் உங்கள் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது புதியதாக இருந்தது. இம்மாதிரியான நடைக்கு தமிழில் இன்னமும் நான் பழக்கப்படவில்லை. மீண்டும் சில முறை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஏனோ இதைப் படிக்கும் போது ‘குரங்கின் பாதம்’ W.W.ஜேக்கப் எழுதிய கதையும் ஞாபகம் வருகிறது.

யாத்ரா said...

தமிழாக்கத்தின் மூன்று பகுதிகளையும் ஒரு சேர வாசித்தேன், இதுவரையில் இது போன்ற பெயர்களை மட்டுமே அங்கங்கு கேள்விப்பட்டிருக்கிறேன், இவர்களின் ஆக்கங்களை தமிழில் மொழிபெய்ர்த்து எங்களுக்கு வாசிக்க அளிப்பதற்கு மிக்க நன்றி.

Ronin said...

Jyovram:

Nice story! But I felt I was reading the story in Russian instead of in Tamil..May be my reading, limitation..But even Tamil literature of 50s-60s dont seem hard to read..

V good story..Thanks!

I respect you Jyovram..for doing goodwork in Tamil silently without all the insecurities and komalithanams of "Ilakiyam" writers..

I pray you don't end up in that rut..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, குப்பன் யாஹூ.

நன்றி, தண்டோரா. அலைபேசியில் விளக்கிவிட்டேன் :)

நன்றி, கார்த்திகேயன்.

நன்றி, ஸ்ரீதர் நாராயணன்.

நன்றி, யாத்ரா.

நன்றி, ரானின். இது கொஞ்சம் கடினமான கதைதான்.

Ken said...

நல்ல தேவையான பணி செய்திருக்கிறீர்கள் சுந்தர், சில இடங்களில் மட்டும் சற்று கடினமாக (எனக்கு)இருக்கிறது.

நிறைய மொழிபெயர்ப்புகளை செய்யுங்கள் வாழ்த்துகள்