என் விநாயக முருகன் கவிதைகள்

என் விநாயக முருகன் மே மாததிலிருந்து வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதானமாக கவிதைகள். நவீன விருட்சம், கீற்று, திண்ணை, உயிரோசை தளங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இவரைப் படித்திருக்கலாம்.

தொடர்ந்து ஒரு தளத்திற்கு மேலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நுட்பமான பார்வையுடன் சிறுசிறு விஷயங்களையும் கவனித்து கவிதையாக்குகிறார் விநாயக முருகன். ஹோட்டல் வாஷ் பேசினில் கைகழுவும் சம்பவத்தைக் கவிதையாக்குகிறார் (பார்க்க : http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html). இந்த இடத்தில் இது குறித்த முகுந்த் நாகராஜனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது!. நேற்று பதிவிட்ட இவரது ஒரு மழை இரவில் நடந்தவை கவிதையும் நன்றாக இருக்கிறது. நமது வசதியை மனதில் வைத்துத்தானே நாம் மழை வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ சொல்கிறோம்!.

பல கவிதைகள் எளிமையான நேரடிக் கவிதைகள். மீன் தொட்டியைப் பார்க்கிறார். அதன் விவரங்களையும் சௌகர்யங்களையும் விற்பனையாளன் விவரிக்கிறான். எல்லாம் சரிதான். ஆனால் மீன்களுக்கும் அந்த மீன் தொட்டி பிடிக்குமென்பது இவரைக் குழப்புகிறது (http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html).

இவரது சற்று முன் வந்த மின்னஞ்சல் கவிதையைக் கீழே தருகிறேன் :
 
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.

(http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html)

இவருடைய பல கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.

என் விநாயக முருகனின் வலைப்பதிவு முகவரி : www.nvmonline.blogspot.com

 
 

15 comments:

anujanya said...

விநாயகமுருகன் கவிதைகள் எனக்கும் பிடிக்கும். இவருடைய நிறைய கவிதைகள் மனதுக்கு நெருக்கமாக (கொஞ்சம் முகுந்த் போல தான்) இருக்கும். நெருக்கமாக இருப்பதால் வி.மு. என்றுதான் அழைப்பேன் :)

அனுஜன்யா

யாத்ரா said...

விநாயக முருகன் அவர்களை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன், எனக்கும் இவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும். நீங்கள் இங்கு பகிர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

குப்பன்.யாஹூ said...

அறிமுகத்திற்கு நன்றி. நீங்கள் கூறிய பிறகுதான் அறிந்து கொண்டேன். அருமையான கவிதைகள. எனக்கும் பிடித்து இருக்கிறது.

நன்றிகள் பல சுந்தர்.

Unknown said...

நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.
எளிமை.நல்ல கவிதைகள்.கொஞ்சம் ”வீணாப்போனவன்”சாயல்.குறைக்கலாம்.

நீங்கள்தான் ”விநாயகன் முருகன் கவிதைகள் எழுதியிருக்கிறீர்களோ என்று பார்த்தால், இங்கு என்.விநாயகமுருகன் எழுதிய கவிதைகள்.

Ashok D said...

நல்ல அறிமுகம். நன்றி

மாதவராஜ் said...

அறிமுகத்திற்கு நன்றி சுந்தர். இனி நானும் தொடர்ந்து படிக்கிறேன்...

நந்தாகுமாரன் said...

நவீன விருட்சம் மற்றும் உயிரோசை தளங்களில் இவரது கவிதைகளை வாசித்து இருக்கிறேன் - அருமையாக எழுதுகிறார்

விநாயக முருகன் said...

நன்றி சுந்தர். அடியேன் தன்யனானேன்.

நன்றி அனுஜன்யா,யாத்ரா,ராம்ஜி யாஹூ, ரவிஷங்கர்

எனது கவிதையொன்று.......

புரியாமை
---------

இத்தனை எளிமையாக
இருக்கிறதே கவிதையென்று
விமர்சித்தார்கள்
புரியாமை கொண்ட வாழ்க்கையில்
தோற்றுப்போன வரிகளை எழுத
ஜோடனைகள் ஒரு கேடா?

நான் கவிதைகளில் இருண்மை, படிமங்களை குறைத்து எழுதுகிறேன். அது எளிமையாக தெரியலாம்.
முகுந்த் நாகராஜனின் பாதிப்பு இல்லீங்க. அதுக்கும் ஒரு கவிதை சொல்லிவிட்டேன்


இதுவரை யாரும் சொல்லாத
கவிதையை
எடுத்துக்கொண்டு
திரும்பினேன்.
அ‌ங்கே
நீ இல்லை.
நான் இல்லை.
யாரும் இல்லை.
எதுவும் இல்லை.
எதுவுமற்ற அதுவும் இல்லை.

உண்மையை சொல்ல வேண்டுமெனில்
நான் கவிதை வடிவத்தை ஜென் சிறுகதை உள்ளடக்கம், வடிவத்தில் இருந்து திருடுகிறேன். எளிமையான கதை கடைசி வரி திருப்பம். மென்மையாக கவிதைசொல்லுவது

நன்றி நண்பர்களே.

பா.ராஜாராம் said...

நானும்,நெருக்கமாக உணர்கிறேன் விநாயகத்தை சுந்தரா.

Kumky said...

தலைப்பை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன்...
துணிந்து உள்ளே வந்து பார்த்தால்....

:--))

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி தல.. அனைத்தும் அருமையான கவிதைகள்!

நேசமித்ரன் said...

சுந்தர் ஜி

பாதிப்பற்ற மொழி வாய்ப்பதும் மொழி வாய்த்தவர்களுக்கு

பாடு பொருள் வாஇகாத மனமலட்டுத் தன்மை கூடிவரும் துரிதமான சூழலில்

வினாயக் முருகனின் பாடு பொருட்கள் வகிடெடுக்க முயற்சிப்பது கவனத்திற்குரியது. அவரை உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியது லைம் லைட்

ஜெனோவா said...

அருமையான கவிதைகள.அறிமுகத்திற்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனுஜன்யா, யாத்ரா, ராம்ஜி யாஹூ, கே ரவிஷங்கர், அஷோக், மாதவராஜ், நந்தா, விநாயக முருகன், ராஜாராம், சென்ஷி, நேசமித்ரன், ஜெனோவா... நன்றி.

Several tips said...

நல்ல பதிவு