என் குடிப் பிரச்சனை

குடி சிலருக்குப் பிரச்சனையாயிருக்கலாம். ஆனால் எனக்குக் குடிக்கும் இடம் பிரச்சனையாயிருக்கிறது.

யாராவது பேசினால் பதிலுக்குப் பேசுவது என்னுடைய வழக்கம். இது எல்லாருக்கும் பொதுவானதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவே சில சமயங்களில் என்னைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

சுங்க இலாகா அலுவலகம் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு (அரசு சாராய வியாபரத்தை கையிலெடுக்குமுன் அதன் பெயர் சதீஷ் வைன்ஸ்) தினமும் செல்வது என்னுடைய வழக்கம். இது பல வருடப் பழக்கம். அங்கு கொஞ்சம் சுமாராயிருக்கும் சூழலும் என்னுடைய அலுவலகம் அருகிலிருப்பதாலும் நானே ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.

ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை மாற்றுவது கடினமாயிருக்கிறது. பாரிமுனையில் சதீஷ் வைன்ஸ் என்றால் அம்பத்தூரில் லக்ஷ்மி வைன்ஸ். சிகரெட், பத்திரிகைகள் வாங்குவதுகூட ஒரே கடையில்தான். செக்கு மாட்டைப் போல் தடம் தவறாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

தினமும் ஒரே இடத்தில் குடிப்பதால் சிலருடன் முகப் பழக்கம் வந்துவிடும். நட்பாகச் சிரிப்பார்கள். தீப்பெட்டி, சிகரெட் மாற்றிக் கொள்வதும் நடக்கும்.

ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். அதாவது தண்ணீரோ அல்லது சோடாவோ சேர்க்காமல் முழுக்க முழுக்க கோலா. இல்லாவிட்டால் குடி தொண்டையில் இறங்காது, உமட்டிக் கொண்டு வரும். ஸ்மர்னாஃப் வோட்கா என்றாலும் கறுப்பு நாய் ஸ்காட்ச் விஸ்கியே ஆனாலும் செவன் அப் இல்லாமல் இறங்காது எனக்கு. அதனால், முழுக்க பெப்ஸியோ கோக்கோ விட்டுக் கொண்டு ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.

என்னுடைய இந்தப் பழக்கம் சிலருக்கு உறுத்தலாயிருக்கும் போல. அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவர் என்னைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தார். குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.

‘பழக்கமாகிடுச்சுங்க, மாத்த முடியல’
‘சரி, மாத்திக்கப் பாக்கறேங்க’
‘இல்லாட்டி குடிக்க முடியாது’
‘ரம்மை விடவா கோலா கெடுதல்’

என்று பலவாறு பதில் சொல்லிப் பார்த்தும் மனிதர் விடுவதாயில்லை.

நல்ல வேளையாக அவர் என்னைத் தினமும் பார்ப்பதில்லை. இல்லாவிட்டால், கடையையே மாற்றிக் கொண்டு எப்போதோ போயிருப்பேன். அவரிடமே நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லலாம்தான். ஆனால் சாதாரணமாகவே நான் யார் முகத்தையும் சுருங்கச் செய்ய மாட்டேன். என்னளவில் லலிதமான பழக்கங்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய நண்பர்களானாலும் அவர்கள் செய்யும் அசூயையான காரியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட மாட்டேன்.

அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது உடன் பணிபுரியும் கோபால் வருவான். குடிக்கும்போது திராட்சைப் பழங்களை மென்றுவிட்டு அங்கேயே கொட்டைகளைத் துப்புவான். பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டோ அல்லது வராண்டாவிற்கோ வந்துவிடுவேன். வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.

இதுகூடப் பரவாயில்லை, அலுவலக உணவு மேஜையில் முருங்கையைப் போட்டு கடித்து மென்று (அப்போது பசு மாட்டின் அசையும் அடி வாய்தான் ஞாபகம் வரும்) தட்டிற்கு அருகிலேயே துப்புவான் உதயா. நைஸாகத் தலையைக் குனிந்து கொள்வேன்.

(இப்படி என் கதைல நான் நல்லவன் நான் நல்லவன்னு நானே சொல்லிக்கறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யுது, ஆனாலும் எல்லாரும் பண்றதுதானே இது)

பழகிய நண்பர்களிடமே இப்படித்தான் என்பதால் இவரிடம் எப்படி நேரடியாகச் சொல்ல. சில சமயம் அவர் பேசுவதைக் கேட்காதது மாதிரி தலைத் திருப்பி வெளியில் பராக்குப் பார்ப்பேன். தொடர்ந்து அறுத்தால், ம்ம் என்று தலையைக் குனிந்து கொள்வேன்.

இவரிடமிருந்து தப்பிக்க அவர் தலையைப் பார்த்தாலே தினசரியை (Economic Times) பிரித்துப் படிப்பது மாதிரி பாவ்லா செய்ய ஆரம்பித்தேன். மனிதர் விடுவாரா... சப்ளையரிடம் பேச பத்திரிகையைத் தாழ்த்தினால், அந்த இடைவெளியில் பிடித்துக் கொண்டு விடுவார்... ‘பாஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் பெப்ஸி வேணாமே...’

’நீங்க குடிங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா தயவுசெஞ்சு தண்ணியோ இல்ல சோடோவோ மிக்ஸ் பண்ணிக்குங்க.. பாருங்க.. நான் அப்படித்தான் குடிக்கறேன்’

‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ என்று கத்த நினைப்பேன். போலியான மரியாதை காட்டித் தொலைய வேண்டியிருக்கிறது சாராயக் கடைகளிலும். மேலும், மேல வேறு சொல்லியிருக்கிறேன் என்னுடைய நற்குணத்தை.

வெளியில் அரை லிட்டர் பெப்ஸி விலை 20 ரூபாய். கோக் விலை 22 ரூபாய். இது வெளியில்தான். டாஸ்மாக் பாரில் பெப்ஸி விலை 28 ரூபாய். ஒரு க்வார்ட்டருக்கு அரை லிட்டர் பெப்ஸி அல்லது கோக் வேண்டும் எனக்கு. நிறைய டூப்ளிகேட் வேறு பாரில் ஓடும். அந்த எரிச்சலில் நான் இருக்க, இவர் வேறு ரம்பம்!

கொஞ்சம் கொஞ்சமாக அன்பரின் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் என் நினைவெல்லாம் ஒரே பெப்ஸி மயம். ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே... ஆனால் எனக்கோ கனவில் கூட அரை லிட்டர் பெப்ஸி பாட்டில்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்குமளவிற்கு சங்கடப் பட்டேன்.

அவரைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு முறைதான் என்பதாலும், அலுவலகத்தின் அருகில் வேறு எந்த நல்ல டாஸ்மாக் பார் இல்லை என்பதாலும், பெர்மிட் ரூமில் போய்க் குடித்தால் பாக்கெட் தாங்காது என்பதாலும், எழவு அதே பாருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நேற்று மறுபடியும் அந்த ஆசாமியைச் சந்தித்தேன். மறுபடியும் அதே புராணம்... இப்போது கூடுதலாக கோக், பெப்ஸி பற்றி மின்னஞ்சலில் எப்போதோ சுற்றுக்கு வந்த விஷயங்களைச் சொல்லிப் பயமுறுத்தினார். கழிவறைகளைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாமாம் கோக் மற்றும் பெப்ஸியை. அந்த அளவிற்கு அமிலமானது உங்கள் வயிற்றை என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பினார். எனக்கு வயிற்றை வலிப்பது மாதிரி தோன்றியது. மறுபடி மறுபடி தண்ணீரோ அல்லது சோடாவோ கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

எழவு, பெயர்கூடத் தெரியாத ஒருவர் நம்மை இப்படி இம்சிப்பதா?

நிச்சயம் நான் ஒரு கொலைகாரனாகத்தான் ஆகப் போகிறேன்.

உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன்.

51 comments:

Anonymous said...

சுந்தர்,

குடி என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புத் தாண்டி அறம் சம்பந்தப் பட்டதாக இருப்பதால்தான் அதிகப் பிரச்சினைகள்.

மேலும் குடிப்பழக்கம் உள்ளவனுக்கு அட்வைஸ் செய்வது எல்லோருக்கும் பிடித்த வேலை. நமக்குத்தான் அது இம்சை. நமது மனநிலை என்ன என்பது தெரியாமல் பினாத்துவார்கள். எதுக்கு எது பெஸ்ட் காம்பினேசன் என்று அறிவுரை சொல்லாத சக குடிகள் இல்லை எனச் சொல்லலாம்.

யுவகிருஷ்ணா said...

தலைவிதியை நொந்துக்கிட்டு கோயிலுக்கு போனா அங்கே அம்மனே தலைவிரி கோலமா ஆடிச்சாம் :-)

வால்பையன் said...

ஹாஹாஹா!

குடிச்சிட்டா சிலருக்கு நாட்டாமை பலம் வந்துரும் சகா!

நல்லா கவனிங்க காட்டாமை அல்ல, நாட்டாமை!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சுந்தர்,
பேசாம சரக்க வாங்கிட்டு வீட்டு மொட்டை மாடிக்கு போய் நிம்மதியா, பொறுமையா, சாப்பிடலாம். இந்த பார்க்கு போனாலே இதே தொல்லைதான்.

தராசு said...

குருஜி,

முள்ளை முள்ளால எடுத்துருங்க.

Selvaraj Jegadheesan said...

I also faced same type of problem, not in bar, some other place, while smoking.

Any way, interesting one.

யாத்ரா said...

ஒரு மனுஷன் நாட்ல நிம்மதியா குடிக்கக் கூட முடியல பாருங்களேன் :)

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

இந்த மாதிரி அனுபவம், எனக்கும் உண்டு... இப்போ நான் வெறும் தண்ணி மிக்ஸ் பன்னித்தான் சரக்கடிக்கிறேன்... :)

Thamira said...

1. கொஞ்சம் டீஸன்ஸியை ஏறக்கட்டிவிட்டு அவன் வாயிலேயே ஒரு குத்து விடலாம்.

2. கைதவறி ஊற்றுவதைப்போல அவன் கிளாஸிலும் பெப்ஸியை ஊற்றி மவனே சாவுடா எனலாம். அதை அவனே நமக்கு தந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

3. சரக்குடன் சோடா ஊற்றிக்குடித்தால் (அவன் பிராண்டைக்குறிப்பிடுங்கள்) பைத்தியம் பிடிக்கும் வாய்ப்பிருக்கிறது என ஏதாவது அறிக்கையை காண்பியுங்கள்.

4. நாளைக்கு நானும் ஸ்பாட்டுக்கு வருகிறேன். வெயிட் பண்ணுங்க.. அனுஜன்யா கவிதையை படிச்சு காண்பிச்சு இந்த திசை பக்கமே வராம ஊரவிட்டு போகவச்சுடலாம். நீங்க ஆசைப்பட்டா உங்க கவிதையையும் பயன்படுத்தலாம்.. ஹிஹி.!

அகநாழிகை said...

சுந்தர்,
குடி மனோபாவம் என்பது தனித்துவ உணர்வு கொண்டது. வெளியில் இருந்து பார்க்கும் எவருக்கும், அவர் குடி பாவிப்பரேயானாலும் அவரது தொனி ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும்.
விட்டுத்தள்ளுங்க நண்பா,
சரி எனக்கு எப்போ பெப்சி வாங்கித்தரப் போறிங்க ?

ஒரு காசு said...

இதை போதையில எழுதுனீங்களா ? எனக்கெல்லாம் புரியிற மாதிரி எழுதி இருக்கிறீங்களே ?

உண்மைத்தமிழன் said...

ஜ்யோவ்ஜி..

எதுக்கு இந்த மன உளைச்சல்..?

நாளைக்கு அவரைப் பார்த்தீங்கன்னா குடிக்காம இருந்தாத்தான் பிரச்சினை.. குடிக்காதவன்லாம் ஒரு மனுஷனா.. ஆம்பளைன்னா ஒரு கப் பட்டைச்சாராயமாவது அடிச்சிருக்கணும். அவன்தான் உண்மையான ஆம்பளை.. அப்படி.. இப்படின்னு அந்தாள் கைல கிளாஸை திணிச்சு.. டேய் குடிடா எழவெடுத்தவனே.. அப்படீன்னு உங்க கச்சேரியை ஆரம்பிங்க..

இனிமே அந்த டாஸ்மாக் பக்கமே அவன் வர மாட்டான்..

அதுக்கப்புறம் நீங்க உங்க இஷ்டம்போல பெப்ஸியை கலந்தும் குடிக்கலாம்.. இல்லாட்டி தொட்டுக்கிட்டும் குடிக்கலாம்..

டேக் இட் ஈஸி குருஜி..!

epowerx said...

i don't drink. dang.. haven't ever tasted the darn thing.. in our area they call it "நாய்(கூட‌) குடிக்காத‌ த‌ண்ணி". I have never tested this theory either. (note to self: feed a dog with R*m; Forgive me Peta people).
Anyways.. I always found the company of drunkards interesting. and don't forget the crunchy snacks. lol...

நேசமித்ரன் said...

ஓசி சரக்க குடிச்சுகிட்டே அட்வைஸ் பண்றது . சிகரெடோட ஒவ்வொரு இழுப்புக்கும் எச்சி துப்புறது.
பாக்கை மென்னுகிட்டே தம் அடிக்கிறது நடுவுல தெறிக்க தெறிக்க 'உலர்ரது.'

வாந்தி எடுக்குற மாதிரி அப்பப்போ பாவனை செய்றது எல்லாம்.....

குவர்டருக்கு மேல அக்கௌண்டு வச்சுக் குடுக்க செய்பவை

ரொம்ப நல்லா இருக்குங்க

குப்பன்.யாஹூ said...

வடகரை வேலன் சொல்வது போல குடி தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயம்.

எனக்கும் குடிக்கும் காத தூரம்., இருந்தும் உங்கள் எழுத்து நடைக்ககா பொறுமையாக படித்தேன்.

குடியைப் பற்றி கூட விரிவாக எழுத சுதந்திரம் அளித்துள்ள பதிவுலகம் வாழ்க.

Kumky said...

சுந்தர்ஜீ.,

ஒரு நாளைக்கு அவர் சொல்வதை செய்து பார்த்துவிட்டு, போதும் ஆளவுடுப்பா” என்று சொல்லிவிடுவதுதானே...?

சரி அதவுடுங்க.,
கோக் கொஞ்சமாகவும், தண்ணீர் அதிகமாகவும் கலப்பதுதான் நம்ம ஸ்டைல்....நல்ல வேளை நாம் 250 கி மீ தூரத்திலிருக்கிறோம்...தப்பித்தீர்கள்.

விநாயக முருகன் said...

ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். முழுக்க முழுக்க கோலா. ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால்

எனக்கும் இதே டேஸ்ட்.

வீட்டு மாடில அடிக்கலாம். பொண்டாட்டி ஊருல இல்லாட்டி. பெஸ்ட் பீச்சுல அடிக்கறதுதாங்க. டாஸ்மாக் பாரெல்லாம் கொடுமை.

Ashok D said...

ரம்முக்கு கோலா தான் பெஸ்ட்.. மம்மிக்கிட்ட கிட்டக்க பேசினாலும் கப்பு அடிக்காது. மறுநாள் ’டாய்லட்ல’ஃப்ரியா இருக்கும். வாயு பகவான் தொல்லையிருக்காது. இது மாதிரி நல்ல பாயிண்டுகளை உங்கள் ‘பெயர் தெரியாத’ பார் தோழரிடம் சொல்ல்லாம்.

இல்லன்னா காதுல handsfreeya மாட்டிக்கிட்டு தலைய தலைய ஆட்டலாம் :)

நந்தாகுமாரன் said...

firstly about 30% of the screen space is taken away by the permanent stuff (er what else do i call them eh ... the left part of the screen) and that hurt's readability ...

secondly i have had 2 glasses of wine with fish manchurian before reading this (how else can u relate to my first complaint)

this is about habits? ... this is about a drinkard? hmmm drunkard? i'm not correcting that word right there but here :) ... okay ... well rum goes well with water any other thing u mix is adulteration ... and with vodka u take coconut water ... ரஷ்ய சாராயமும் இந்திய இளநீரும் :) ...

// கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில் // என்பதற்கு எனக்கு வேறு காரணம் ...

// பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம். /// பின்னே ... i like this guy he is telling the truth and it hurts ...

// ‘ரம்மை விடவா கோலா கெடுதல்’ // ஆமாம்பா ஆமாம்

// லலிதமான பழக்கங்கள் // லலிதாவிடம் அல்லவே :)

// அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது // when is the next time u r here ...

// பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். // this is very close to a haiku instance ... i like this expression ...

// ‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ // எனக்கு ஒரு மண்ணும் இல்லை எல்லாம் உ...தான்

// ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே // well thats what i thought but

// உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன் /// என்னது டாஸ்மாக்கா ... ஆள விடுங்கப்பா

- ஒரு புனைவிற்கு எழுதிய இந்த commentஉம் ஒரு புனைவே

Anonymous said...

பூக்கடை காவல் நிலையத்திற்கு எதிரே மாடியில் ஒரு ஏசி பார் உண்டு முயற்சித்து பாருங்களேன்.

பா.ராஜாராம் said...

அது ஒரு தனி உலகம் மக்கா..இருந்து,முங்கி,பிறகு முகம் மேலே வரும்போது,புர்ர்ர்ர்ரர்ர்ர்ச் என துப்பி,துடைத்துக்கொண்டு வீடு வந்து,"வக்காளி என்னா வெக்கை"எனவோ "வேலை பெண்டை கலட்டிட்டாங்கப்பா" என மனுஷியை அடிக்கண் பார்வை பார்த்துகொண்டு,"தெனம் இந்த கொண்டகடலை கொலம்புதானா"என முகம் துடைத்தபடியே சம்மணமிட்டு சாப்பிடுவியா?என்னமோ,புலம்புற...
மூணு நாளைக்கு முன்னாடி,ஜெத்தாவில் பிலிபினோ நண்பர்கள் சவுதி சரக்கு கொடுத்தார்கள்.முதல் முறை என்பதால்,"கடவுளே, காலையில் கண் தெரியணுமே"என்று வேண்டியபடியே குடித்து வைத்தேன்.இரவெல்லாம்"நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்"என்று முக்காடிட்ட ஷேக் வேஷத்தில் கார்,காரா நிறுத்தி பிச்சை கேட்பதுபோல் கனவு வேறு.நீ சொர்க்க புரியில் இருக்கிறாய்.உனக்கு அறிவுருத்துவர்தான் சரியான தொக்கு அல்லது ஊறுகாய்.தொட்டு நக்கிக்க மக்கா...மறக்காமல் இது மாதிரி தொடர் பதிவு போடு.சிரிச்சு,சிரிச்சு பாலை சூட்டை,தாங்க சுகமாய் இருக்கும்.நடை அபாரம்டா!

யாசவி said...

interesting to read

:-)

மதிபாலா said...

உங்க கஷ்டம் புரியுதுண்ணே...!

ஆனாலும் இதுல மகா காமெடி..

சரக்கை விட பெப்ஸி கெடுதல்னு சொன்னதுதான்....

காரணம் - சரக்கப் பத்தி அவுரு ஒன்னும் சொல்லமுடியாதே...ஏன்னா அவுரும் அடிக்கிறார்....:)

anujanya said...

உங்க நடை (குடிக்கு முன்னும், குடிக்கும் போதும், குடிக்குப் பின்னும்) ரொம்ப நல்லா இருக்கு. அட்டகாசமான, to the point கதைசொல்லல்.

மது அருந்துபவர்களுக்கு தமிழ் நாடு ஒரு நரகமாகத் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். பெங்களூரு, மும்பை எல்லாம் இவ்வளவு துன்பங்கள் இல்லை. அவரவர் வசதிக்கேற்ப செல்கிறார்கள்.

வாசு, உங்க டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு :)

அனுஜன்யா

மண்குதிரை said...

ithai vaiththu ezhuthiya paaniyai rasikkireen.

naanum ungkal jathithaan sir.

நர்சிம் said...

சிம்ப்பிள் குருவே.. ஒரு மூன்று அல்லது நான்கு நாட்கள் சிவராமன் அண்ணாவையும் உடன் அழைத்துச் சென்று நீங்கள் இருவரும் அல்லது அவர் உங்களிடம் ஃபூக்கோ,நீட்சே உரையாடல்கள் நிகழ்த்தினால்,டாஸ்மாக் என்ன, தமிழ்நாட்டை விட்டே ஓடிவிடமாட்டானா அந்தாளு?

மணிஜி said...

நீங்க எழுதினது இல்ல நான் படிச்சது எதோ ஒரு எழவு தெளிவா இல்லை..கொஞ்சம் ராவா சொல்ல முடியுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வடகரை வேலன், யுவ கிருஷ்ணா, வால்பையன், பாலகுமாரன், தராசு, செல்வராஜ் ஜெகதீசன், யாத்ரா, அக்கிலீஸ், ஆதிமூலகிருஷ்ணன், வாசுதேவன், ஒரு காசு, உண்மைத்தமிழன், epowerx, நேசமித்ரன், ராம்ஜி யாஹூ, கும்க்கி, விநாயகமுருகன், அஷோக், நந்தா, அனானி, ராஜாராம், யாசவி, மதிபாலா, அனுஜன்யா, மண்குதிரை, நர்சிம், தண்டோரா... நன்றி.

மணிப்பக்கம் said...

// நர்சிம் said...
சிம்ப்பிள் குருவே.. ஒரு மூன்று அல்லது நான்கு நாட்கள் சிவராமன் அண்ணாவையும் உடன் அழைத்துச் சென்று நீங்கள் இருவரும் அல்லது அவர் உங்களிடம் ஃபூக்கோ,நீட்சே உரையாடல்கள் நிகழ்த்தினால்,டாஸ்மாக் என்ன, தமிழ்நாட்டை விட்டே ஓடிவிடமாட்டானா அந்தாளு? //

- இது மாதிரிதான் ஏதாவது பண்ணனும் தல, (எங்க ஊர்ல வரிசையா பார், இந்த மாதிரி தொந்தரவுக்காக, பைக்க நிப்பாட்டிட்டு செக் பண்ணிட்டு, இல்லாட்டி அடுத்த பார் ... 50 மீட்டருக்கு ஒன்னு இருக்கும்!)

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிப்பக்கம்.

நன்றி, தங்கமணி பிரபு. கையெழுத்திட்டு விட்டேன். மற்றவர்களையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கிரி said...

//மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.//

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

// ஃபூக்கோ,நீட்சே உரையாடல்கள் நிகழ்த்தினால்,//

:) :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுந்தர் இதிலிருந்து விடுபட ஒரு யோசனை சொல்றேன்..
எனக்கு ஒரு குவார்ட்டரும்..அரை லிட்டர் பெப்ஸியும் வாங்கித் தந்தால்.

அபி அப்பா said...

குருஜி! ஒரு இரண்டு நாள் போதைல செய்வது போல அந்த ஆள் தலையில ஆம்லெட் போட்டு பாருங்க! 100 சதம் அவரு பார் மாத்திடுவார். நான் அதுக்கு உத்தரவாதம்!!!!

Pot"tea" kadai said...

// ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே...//

கொடுத்து வெச்சவர் நீங்க...
நமக்கெல்லாம் ஜாக்கோ, ஹீத் லெட்ஜர் வழி தான் ...;)

லதானந்த் said...

என்னங்க சுந்தர் இது!
”அவரோட” பதிவை உங்க பேர்ல மீள்பதிவாப் போட்ட மாதிரி இருக்கு?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கிரி, ப்ருனோ, ராதாகிருஷ்ணன், அபி அப்பா, பொட்டீக்கடை, லதானந்த் நன்றி.

@லதானந்த் - ஏற்கனவே யாரோ ஒருவர் எழுதியதன் சாயல் இருக்கிறது என நீங்கள் சொல்வதாய்ப் புரிந்து கொண்டேன். இருக்கலாம் :)

K.R.அதியமான் said...

நண்பர் ஜோ,

சூப்ப‌ர் ப‌திவு. பாரி முனைக்கு வ‌ரும் ச‌ந்த‌ர்ப‌த்தில், நானும் வ‌ந்து ஜோதிய‌ல‌
அய்கிய‌மாயிக்கிறேன் !!

அந்த அன்ப‌ரிடம், உறுதியான‌ குர‌லில் இந்த‌ விசிய‌த்தை ப‌ற்றி இனி பேச‌
வேண்டாம் என்று சொல்லிவிடுவ‌துதான் மிக‌ எளிய‌ வ‌ழி. சில‌ நேர‌ங்க‌ளில்
ந‌ம் உணார்ச்சிக‌ளை நாசூக்காக‌ காட்டிவிட‌ வேண்டும்தான். (யாம் அப்ப‌டித்தான் !!)
காம‌ க‌தைக‌ள் என்று பூந்து விளையாடுறீக‌, இது போன்ற‌ ச‌ப்ப‌ மேட்ட‌ரிலும்,
வெளிப்ப‌டையாக‌ "செய‌ல்ப‌ட‌லாமே" !!

ச‌ரி, இருக்க‌ட்டும். ஒரு மிக‌ முக்கிய‌ விசிய‌ம். பெப்ஸி, போக் போன்ற‌
ப‌ன்னாட்டு, "ஏகாதிப‌த்திய" க‌ம்பெனிக‌ள் இந்திய‌வை பாழ் ப‌ண்ணுவ‌தாக‌வும்,
அவ‌ற்றை "எதிர்க்க‌" வேண்டும் என்றும் ஒரு சில‌ தீவிர‌ இட‌துசாரிக‌ள்
"போராடிகிறார்க‌ள்" ; ந‌ம் இணைய‌ த‌ள‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர், இது போன்ற
"கொள்கை" உடைய‌வ‌ர். ஆனால் ந‌ல்லா ச‌ர‌க்க‌டிப்பார். பாவ‌ம்.
கோக், பெப்ஸி உப‌யோகிக்க‌ தார்மீக‌ த‌டை. பெரிய‌ சிக்க‌ல்.

அப்ப‌டி எல்லாம் "கொள்கை" வ‌ச்சிருந்தா, நம்ம பொழ‌ப்பு என்ன
ஆவரறதூ ? மிக்ஸிங்க்கு என்ன‌ ப‌ண்ண‌ற‌தாம் ? ந‌ல்ல‌ க‌தை..

சிறுக‌தை ப‌ட்டறையை வெற்றிகரமா நடத்தியதற்க்கு வாழ்த்துக்க‌ள். (அனைவருக்கும் தான்)
வ‌ர‌ முடிய‌வில்லை. சாவ‌காச‌மா, டாஸ்மார்க்கில் ச‌ந்திச்சு "ப‌ரிமாறிக்க‌லாம்" !!

வால்பையன் said...

கோக், பெப்ஸியை குடிப்பது அவரவர் சாய்ஸ்.
அதற்காக பன்னாட்டு பொருள்களை உபயோகிக்காமல் உள்நாட்டு பொருள்களை உபயோகிப்பவர்களை கின்அல் செய்யும் தோணியில் எழுதியதற்கு அண்ணனுக்கு கண்டனங்கள்!

இம்மாதிரியான பொருள்களை உள்நாட்டில் தயாரிக்கும் பொருள்களை வாங்குவது உள்நாட்டு பொருளாதாரத்துக்கு நல்லது என் கருத்து! இல்ல நான் காசை கொண்டு போய் சுவிஸ்ல தான் போடுவேன்னு சொல்றவங்களை நான் கைய பிடிச்சா தடுக்க முடியும்!

K.R.அதியமான் said...

தம்பி வால் பையன்,

நீங்க உபயோகப்படுத்தும் செல் ஃபோன், கம்ப்யூட்டர், மென்பொருள்களும் இந்த கோக் / பெப்ஸி போன்றவைதான். பன்னாட்டு நிறுவன தயாரிப்புகள் தாம். மேலும் ஸ்விஸ் வங்கிகளுக்கு செல்லும் கருப்பு பணம் வேறு ; ஏற்றுமதி / இறக்குமதி, பன்னாட்டு மூலதனம் போன்றவை வேறு. குழப்பிக்க வேண்டாம்.

அது இருக்கட்டும், சில மாதங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை இரவு, ஈரோட்டிலிருந்து எம்மை அலைபேசியில் அழைத்து பேசிய போது, "என்ன, பார்ல இருக்கீகலா" என்று சரியா கண்டுபிடித்தேன். நியாபகம இருக்கும் !! மிக்ஸிங்க்கு நீங்க என்ன யூஸ் பண்றீக ? கோலாவா அல்லது வெறும் தண்றியா அல்லது கோலி சோடாவா ? :))))

அது சரி(18185106603874041862) said...

சுந்தர்ஜி....ஒரு நாளு அவரு சரக்கை "குடுங்க, குடிச்சி பார்க்கலாம்"னு வாங்கி முழுசா முடிச்சிருங்க...அப்புறம் பேசுவாரு?? :0))

அது சரி(18185106603874041862) said...

சரக்கு, கோக்கு, தண்ணி, வழக்கமான டாஸ்மாக்கு...குறியீடாக எடுத்துக் கொண்டால் எனக்கு வேறு அர்த்தம் புரிகிறது...அது என்னுடனே இருக்கட்டும்...

வால்பையன் said...

அத்யாவிசயம் வேறு அநாவிசயம் வேறு!

தன் அத்யாவிசய தேவைகளுக்கு கடன் வாங்குவது போல சில நேரங்களில் கணினியும், செல்போனும்.

எல்லா நேரமும் அது தான் கதி என்பது கொஞ்சம் உதைக்கிறது! மேலும் தற்போது இந்தியாவிலேயே தயாராகும் பொருள்கள் கிடைக்கின்றன!

நான் சொல்லவருவது
ஜ்யோவ் விரும்பவது கோக்கோ அல்லது ராவாகவோ அது அவர் இஷ்டம், அந்த நபர் ஒருமுறை சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம் அதன் சொன்னது தவறு, அதற்காக கொலை குற்றவாளியை போல் குதறுவது நம்மை நாம் மறுபரீசிலனை செய்ய வில்லை என்று அர்த்தம்!

அவர் சொன்னது எதற்காக இருந்தாலும் நமக்கு உலகமயமாக்கலுக்கு பிரச்சாரத்துக்கு ஒரு களம் கிடைத்து விடுகிறது அல்லவா!?. அவர் அறிவிரை வழங்கினார் என்றால் நீங்கள் செய்வதற்கு என்ன பெயர்!?


(நான் தண்ணீர் மட்டுமே கலந்து அடிப்பேன், எனக்கு அந்த சுவை பிடித்திருப்பதால்)

"உழவன்" "Uzhavan" said...

:-)))

Cable சங்கர் said...

/நாளைக்கு அவரைப் பார்த்தீங்கன்னா குடிக்காம இருந்தாத்தான் பிரச்சினை.. குடிக்காதவன்லாம் ஒரு மனுஷனா.. ஆம்பளைன்னா ஒரு கப் பட்டைச்சாராயமாவது அடிச்சிருக்கணும். அவன்தான் உண்மையான ஆம்பளை.. அப்படி.. இப்படின்னு அந்தாள் கைல கிளாஸை திணிச்சு.. டேய் குடிடா எழவெடுத்தவனே.. அப்படீன்னு உங்க கச்சேரியை ஆரம்பிங்க.//

அலோவ்.. யாரோ உங்கள பாத்து திட்டினதையெல்லாம் இங்க வந்து சொல்ல கூடாது..

Beski said...

//குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.//
கழுத விட்டைல முன் விட்ட என்ன, பின் விட்ட என்ன?-ன்னு நம்ம ஊரு பக்கம் சொல்வாங்க... அதான் ஞாபகத்துக்கு வருது.

அந்த ஆள் கிட்ட குடிச்சா உடம்புக்கு கெடுதின்னு அட்வைஸ் பண்ணுங்க.

Anonymous said...

i thought it was a short story, was it not ? :)

Anonymous said...

சுந்தர்,
நான் ஏதாவது சொல்லி, அதை நீங்க அறிவுரைன்னு எடுத்துகிட்டா?

Kumky said...

Anonymous said...

சுந்தர்,
நான் ஏதாவது சொல்லி, அதை நீங்க அறிவுரைன்னு எடுத்துகிட்டா?

இருந்துட்டு போட்டும் வுடுங்க.......

இப்ப உங்க ப்ரச்னை என்ன....?

KARTHIK said...

தல எனக்கும் புடிச்ச மிக்ஸிங்க இதுதான்.
ஆனா நாம் கொஞ்சம் தண்ணியும் கலந்துக்குவேண்.
எனக்கு அந்த ரம்மின் வாசமும் கோக்கின் வாசம் கலந்த மனம் ரொம்ப்ப புடிக்கும்.

// ரஷ்ய சாராயமும் இந்திய இளநீரும் //

இதுவும் நல்லா இருக்கும்.
லிம்காவும் நல்லா இருக்கும்.