இரண்டு புத்தகங்கள்

சென்ற வாரம் அகநாழிகை புத்தக வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றிருந்தேன். நர்சிம்மின் சிறுகதைத் தொகுதி, விநாயக முருகன், லாவண்யா மற்றும் இன்னொருவரின் கவிதைத் தொகுதிகள் வெளியாயின. நர்சிம்மின் சிறுகதைத் தொகுதியையும், பா ராஜாராமின் கவிதைத் தொகுதியையும் வாசித்தேன். இனிதான் விநாயக முருகனின் தொகுதியை படிக்க வேண்டும். (லாவண்யா + இன்னொருவரின் புத்தகங்கள் வாங்கவில்லை).

நர்சிம் : பல கதைகளைத் தனித் தனியாக அவரது தளத்தில் ஏற்கனவே வாசித்ததுதான். ஆனால் சிறுகதைகளை ஒட்டு மொத்தமாக ஒரு தொகுதியாகப் படிக்கும்போது கிடைக்கும் மனப்பதிவிற்கும் தனித் தனியாக அவற்றை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தவிர, சில கதைகளைக் கொஞ்சம் மாற்றியும் உள்ளார்.

ஆற்றொழுக்கு நடையில் அனாயசமாகக் கதைகளைச் சொல்லிச் செல்கிறார். வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம். அது இவருக்கு இயல்பாக வருகிறது.

கதைகளில் வரும் எல்லா வரிகளும் அதன் மைய உணர்வுக்கு ஒட்டியே இருக்க வேண்டுமென்பது மரபான கதைகளுக்கு ஒரு விதி. அது இந்தத் தொகுதியில் பல இடங்களில் தவறியிருக்கிறது. வாசிக்க நன்றாயிருந்தாலும் தேவையற்ற வர்ண்னைகள் கதையோடு ஒட்ட விடாமல் தடுக்கின்றன.

வாசிப்பு சுவாரசியத்திற்காகவே இவரது கதைகளைப் படிக்கலாம். இன்னும் தீவிரமான கதைகளை எழுதுவார் என நம்புகிறேன்.

ராஜாராமின் தொகுதி 1995-96 வாக்கில் வர இருந்தது. எனக்குத் தெரியாத காரணங்களால் அது முடியாமல் போய் இப்போது பல வருடங்கள் கழித்து வந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.

கவிதையைப் பற்றித் தமிழில் ஆயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன. எது கவிதை, எது உயர்வான கவிதை, கவிதையின் வடிவம்... என்று பலவாறாகப் பலர் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய முன் - தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்டு கவிதைகளை அணுகி அந்த வரையறைகளுக்குள் கவிதை அடங்கினால் சிலாகிப்பார்கள், மீறினால் நிராகரிகரிப்பார்கள்.

கவிதையைக் கசக்கித் துவைத்துக் காயப்போடுவதுடன் எனக்கு உடன்பாடில்லை. கவிதை விமர்சனம் என்ற பெயரில் சிலர் ருப்பி ருப்பி எழுதுவதைப் பல சமயம் படிப்பதுகூட இல்லை.

இந்தத் தொகுதி சிறிய தொகுதிதான். மொத்தமுள்ள 64 பக்கங்களில் முதல் எட்டு பக்கங்கள் வேறு விஷயங்களுக்குப் போய்விட மீதமுள்ள 56 பக்கங்களில் கவிதைகள். எல்லாக் கவிதைகளுமே புத்தகமாவதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது (உதா : மஞ்சுவிரட்டு). வாடகை வீடு போன்ற கவிதைகளில் வாழ்க்கை விசாரங்களும் தத்துவங்களும் துருத்திக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில கவிதைகளில் கடைசி வரித் திருப்பங்களுக்காக வலி்ந்து எழுதப் பட்டது போலிருக்கின்றன. பிரதானமான குற்றச் சாட்டாக இவர் ஒரே மாதிரிக் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார் எனலாம் (ஆனால் பலர் - வெற்றி பெற்ற, எனக்குப் பிடித்தமானவர்களும் சேர்த்தி - அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பது வேறு விஷயம்!). ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும் (வண்ணநிலவனின் கதை மொழி போல் விதம் விதமாக இருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட விருப்பம்).

எனக்குத் தெரிந்தே இவருடைய வேறு சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் சேர்க்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

எனக்கு ’என்ன சொல்லட்டும் முத்தண்ணே’, ‘சரசு அத்தை’ மாதிரியான கவிதைகள்தாம் முக்கியமாகப் படுகிறது. அதற்காகவே பா ராஜாராமின் கவிதைகளை நேசிக்கிறேன்.

வெளியீட்டு நிகழ்விற்குப் பிறகு நண்பர்கள் என்னைச் சாரு நிவேதிதாவிற்கு அறிமுகப்படுத்தினர். அவருடன் சில முறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், பல பொது இடங்களில் நான் பார்த்திருந்தாலும், நேரில் பேசுவது இதுதான் முதல் முறை. நிறைய பேர் இருந்ததால், மிகக் கொஞ்ச நேரமே பேச முடிந்தது. கூட்டம் என்றால் அலர்ஜி என்பதாலும் அதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் மலேரியா காய்ச்சல் சரியாகியிருந்ததாலும் சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவரிடம் விரிவாகப் பேச நிறைய இருக்கிறது.

20 comments:

மணிகண்டன் said...

***
ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும்
****

இந்த விமர்சனத்துக்கு மனுஷ்ய புத்திரன் பதில் சுவாரசியமா இருக்கு. (இந்த மாத அகநாழிகை இதழ்ல வந்த அவரோட பேட்டில ). அந்த பதில் எனக்கு சரியானதுன்னு தான் தோணுது.

மண்குதிரை said...

உபயோகமான் பதிவு.

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//வாசிப்பு சுவாரசியத்திற்காகவே இவரது கதைகளைப் படிக்கலாம். இன்னும் தீவிரமான கதைகளை எழுதுவார் என நம்புகிறேன்.//

ஆமா நர்சிம் சார் நம்புறோம்...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும் //

சரியான கருத்து சார்...

பா.ராஜாராம் said...

மிக உபயோகமான கருத்துக்கள் சுந்தரா.குறித்துக்கொண்டேன்.

அது அகநாழிகையின் தவறில்லை.அது சமயம் அவ்வளவே என்னிடம் கவிதைகள் இருந்தது.

//ஆற்றொழுக்கு நடையில் அனாயசமாகக் கதைகளைச் சொல்லிச் செல்கிறார். வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம். அது இவருக்கு இயல்பாக வருகிறது.//

ஆம்.வாழ்த்துக்கள் நர்சிம்!

பா.ராஜாராம் said...

விடுபட்டு போயிற்று..

நன்றிடா மக்கா!

நர்சிம் said...

குருஜி

நன்றின்னு சொன்னா ஃபார்மலா இருக்கும்.

ஆனால்

இன்னும் என் தவறுகளைச் சுட்டிச் சொல்லி இருக்கலாமோ என்று தோன்றியது. நிச்சயம் நீங்கள் சொன்னவற்றை மனதில் குறித்துக் கொண்டேன்.

நம்பிக்கைக்கு நன்றி.

Anonymous said...

சாருவுக்கு சொம்பு தூக்கிய காலம் போய் நர்சிம்முக்கு எல்லாம் கூட சொம்பு தூக்கும் அவலம். என்ன கொடுமை ஜ்யோவ்ராம் சார்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, இது சொம்பு தூக்குவதா :(

Unknown said...

நேர்மையான விமர்சனம்.நல்லா இருக்கு சுந்தர்.வாசிப்பனுபவம் விமர்சனத்தில் கை கொடுக்கும்.

அந்தந்த கதை/கவிதை பின்னோட்டத்தில் அப்போது இதை சொல்லாதது ஆசசரியம்!

//வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம்//

1000% சதவீதம் உண்மை.இதைக் விமர்சனத்தில் குறிப்பிட்டுக் காட்டினால வீட்டுக்கு டாடா சுமோவில் அட்டாக பாண்டிகளைஅனுப்புகிறார்கள்.

இந்த சுவராசியம் வருவதற்கு SOP(Standard operating Procedure).
எஸ்.வி.வி. என்று அந்த கால எழுத்தாளர்.”நறுக்” “கச்சிதம்”இவர் க்தையில் பார்க்கலாம்.

//தேவையற்ற வர்ண்னைகள் கதையோடு ஒட்ட விடாமல் தடுக்கின்றன//

எல்லா எழுத்தாளருக்கும் இந்த போதை உண்டு.பிரபஞ்சத்தில் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கதையில் சூட்கேஸ் மேல் உட்கார்ந்து துணி அடைப்பது போல் அடைப்பது.

நான் அறிமுக எழுத்தில் இருக்கும் போது சுப்ரமணிய ராஜூ என் கதையைப் படித்து விட்டு “நல்ல வேளை G.R.விஸ்வ நாத் 97ல் அவுட் ஆயிட்டார்” என்றார்.

கதை: ஒரு தற்கொலையைப் பற்றியது.ஆனால் முக்கால் பக்கம் G.R.விஸ்வ நாத்தின் அற்புதமான 97 ரன் வெஸ்ட் இண்டீஸ்(1974) எதிராக அடித்ததை (1985ல்) எழுதி இருந்தேன்.

anujanya said...

@ Ravishankar

Just to put record straight, GRV was unbeaten on 97. Only India were all out :)

Anujanya

நிலாரசிகன் said...

//தங்களுடைய முன் - தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்டு கவிதைகளை அணுகி அந்த வரையறைகளுக்குள் கவிதை அடங்கினால் சிலாகிப்பார்கள், மீறினால் நிராகரிகரிப்பார்கள்.//

Superb :)

யாத்ரா said...

நண்பர்கள் படைப்புகளை புத்தகங்களாக பார்க்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, புத்தகங்கள் குறித்த உங்களின் கருத்துகளும் நன்று

Unknown said...

அனுஜன்யா நீங்கள் சொல்வது கரெக்ட்.
சந்திரசேகரதான் அவுட் கடைசியில் இந்தியா 190 அல்லது 201 ஆல் அவுட் என்று நினைக்கிறேன்.நாம் ஜெயித்து விட்டோம்.ஆண்டி ராபர்ட்ஸ்
பீக்கில் இருந்தார்.

சுப்ரமணிய ராஜு “நல்ல வேளை இந்தியா ஆல் அவுட் ஆயிடுச்சு” என்று சொல்லி இருக்கலாம்..

நன்றி அனுஜன்யா.

Ronin said...

Jyovram,

Nice review! I have pointed this earlier..Your clarity and structuring of ideas is simple and lovable..

Please write more such articles..

Narsim's writing seems to suffer from a strenuous effort to be ornamental..Hope he reduces as he continues writing..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மணிகண்டன், மண்குதிரை, ப்ரியமுடன் வசந்த், பா ராஜாராம், நர்சிம், கே ரவிஷங்கர், அனுஜன்யா, நிலா ரசிகன், யாத்ரா, ரானின்... நன்றி.

@ மணிகண்டன், அகநாழிகை இன்னும் படிக்கவில்லை.

@ ரவிஷங்கர் & அனுஜன்யா - நீங்கள் ரெண்டு பேரும் ரொம்ப யூத் என்று தெரியும் :)

Kumky said...

நேர்மையான கருத்து...

ருப்பி..ருப்பி வார்த்தை ரசிக்கும்படி இருக்கிறது.

பா.ரா.வின் கவிதைகளில் வாழ்க்கை விசாரங்களும், தத்துவார்த்தங்களும் துருத்தலாக தெரியவில்லை...அப்படியே இருந்தாலும் பொருட்படுத்த வேண்டுமா என்ன?

காலம் பூராவும் பெண்களை குறித்து கவிதைகள் உணர்வை வடித்துக்கொண்டிருப்பதைக்காட்டிலும் இது 1000 மடங்கு மேலல்லவா?

Kumky said...

@ ரவிஷங்கர் & அனுஜன்யா - நீங்கள் ரெண்டு பேரும் ரொம்ப யூத் என்று தெரியும் :)

அவ்வப்போது இவர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் போல...
இல்லையெனில் 1974 ரேஞ்சுக்கு உலாத்த ஆரம்பித்து விடுகிறார்கள்..
.பூனை தானாக வெளிவந்துவிடுகிறது.

இப்படித்தான் 1969ல்...வேண்டாம் விடுங்கள்.

Sanjai Gandhi said...

பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டம் :

1.உங்களை ஏன் பலரும் குருஜி என்று அழைக்கிறார்கள் சுந்தர் சார்?. இங்கு கூட நர்சிம் குறிப்பிட்டிருக்கிறார்.. :)

2.இப்போதெல்லாம் உங்கள் தொலைபேசி அழைப்புகள் வருவதில்லையே. ஏன்?

3. இந்தப் பதிவு அவசியமானதும் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிப்பதுமானது. நல்ல செயல். இந்தப் பதிவில் கும்மி அடிக்கலாமா?

4. அதாவது...சரி விடுங்க.. :))

( சும்மா.. ஜாலிக்கு தான் சுந்தர்ஜி.. வெளியிடவேண்டுமென்று அவசியம் இல்லை.. முதல் கேள்விக்கு சீரியஸ் பதில் சொன்னால் மகிழ்வேன்)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கும்க்கி, சஞ்சய்... நன்றி.

@ கும்க்கி.. சில கவிதைகள் அப்படித் தோன்றியதால் சொல்லியிருந்தேன்.

@ சஞ்சய் ...

1. தல, சகா மாதிரி ஒரு விளிச்சொல், அவ்வளவுதான்.

2. ஆமாம்ல

3. வேண்டாமே :)

4. சரி... விடுங்க :)