அபாண்டமாகப் பொய் சொல்லியிருக்கிறேன், கயமைத்தனமாக எழுதியிருக்கிறேன் எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ரோசா. அப்படிச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை ஆனாலும் சொல்லியிருக்கிறேன் என்கிறார்.
விஷயம் வேறு திசைக்குத் திரும்பிவிடாமல் இருக்க, நான் பொய் சொன்னதாக அவர் சொல்லியிருப்பதற்கு (அவரது எழுதியிருக்கும் முதல் ஐந்து பதிவுகளுக்கான) என் பதில் இது. பிரதானமாக பொய் குறித்தும் சமயத்தில் மற்றவை குறித்தும் விளக்குகிறேன் :
இடுகை 1 (கொலைகார கும்பல்கள்) :
இதில் நான் சொன்ன பொய்யாகச் சொல்லியிருப்பது /̀திட்டமிட்டு இருட்டு சந்துக்கு அழைத்து சென்று, கூப்பிட்டு திரும்பியவன்' முகத்தில் விழுந்தது/
இதைப் பொய்யென்று சொல்கிறார். என்னுடைய விளக்கங்கள் :
1. இருட்டு சந்திற்கு அழைத்துச் சென்று என்று நான் சொல்லவேயில்லை. நான் சொல்லாததைச் சொல்லி, நான் அபாண்டமாகப் புளுகுகிறேன் என்றால் என்ன பதில் சொல்ல. என் பதிவில் சொல்லியிருந்தது அவர் என்னை அடித்தது இருட்டான இடத்தில் என்று. பிக்னிக் ஹோட்டலில் இருந்து பூங்கா ரயில்நிலையம் செல்லும் சப் வேவிற்கு முன் ஒரு சின்ன பஸ் நிறுத்துமிடம் இருக்கும். அதை ஒட்டிய இடம் இரவு 9.45 மணி வாக்கில் இருட்டாகத்தான் இருக்கும். இதை யார் வேண்டுமானாலும் உறுதி செய்துகொள்ளலாம். இன்னும் இரண்டு நிமிடங்கள் நடந்திருந்தால் சப் வேயில் அவரும் செண்ட்ரலை நோக்கி நானும் பிரிந்து சென்றிருப்போம்.
2. தோளைத் தொட்டுக் கூப்பிடவில்லை என்கிறார். என் தோளில் ஒரு கை விழுந்த உணர்வு எனக்கிருந்தது. அருகில் அவர் மட்டும்தான் இருந்ததால் அவர்தான் தொட்டிருப்பார் என்று நினைத்தேன். அவர் இல்லை என்கிறார். சரி, அவர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் -
ஆனால், பிரச்சனையின் மையம் இதுவல்ல. நான் எதிர்பாராத கணத்தில் என்னைத் தாக்கியதுதான். இதை மறுக்கிறாரா என்ன!
ஒரு குத்துதான் என்கிறார். ஒன்றா பத்தா என்பதல்ல பிரச்சனை. கொலைவெறித் தாக்குதலா இல்லையா என்பதுதான். கொலைவெறியோடு தாக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அது கொலைவெறியான தாக்குதலா இல்லையா (ரோசா பதிவைப் படித்ததின் விளைவு இப்படியெல்லாம் எழுதச் சொல்கிறது!) என்பதை அவர் சொல்ல வேண்டும்.
இடுகை 2 (நடந்தவை 1) :
இந்த இடுகையில் நான் பொய் சொன்னாதான ஒரு விவரமும் அவர் தரவில்லை. அதனால் என்னுடைய பதில்கள் எதுவும் இல்லை
இடுகை 3 (பின்னணி) :
1. இதில் நான் பொய் சொன்னதாக எந்த விவரமும் இல்லை. ஆனால் சாரு - கென் - எஸ் எம் எஸ் விஷயம் குறித்து. சாரு என்னைப் பற்றிச் சொல்லவில்லை என்று ஒரு முறைக்கு மேல் அவர் சொன்ன போது அதை மறுக்க, (அப்போதிருந்த) நட்பின் நம்பிக்கையின் அடிப்படையில் நான் சொன்ன விஷயம் இது. நான் பொய் சொல்லவில்லை என்றாலும், இந்த விஷயத்தை இவரிடம் சொன்னதற்கு நிச்சயம் கென் கோபப்படுவார். என்னுடைய பதிவிலேயே தனிப்பட்ட முறையில் இருவர் பேசிக் கொள்வதை அடுத்தவரின் அனுமதியின்றி பொதுவெளியில் வைக்கக்கூடாது என்று சொன்னவர் ரோசா! அந்த நம்பிக்கையில், பிற்காலத்தில் இதை இவர் உபயோகிப்பார் என்று தெரியாமல் நான் சொன்னது இது.
2. சாரு சொல்வது போல் நான் RSS என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது நான் நிச்சயம் இல்லையென்று மறுத்தேன்.
3. டிவிட்டில் இவர் எழுதியதற்குக் காரணம் வாசித்த கடுப்பு. நான் எழுதினால் வசைப்பதிவு. அப்படித்தான் தோன்றும் போல :(
இடுகை 4 (நடந்தவை 2 ) :
அவரும் நானும் தொலைபேசியில் பேசிய விவரங்களை எழுதியிருக்கிறார். பெரிதாக எனக்கு மாற்றுக் கருத்துகளில்லை. ஆனால் புதன்கிழமை அவர் பேசியதாக எழுதியிருக்கும்
/நான் முழுவதும் அதை கேட்காமலேயே, ̀அதனால் பிரச்சனையில்லை' என்றேன். ̀நாளை (வியாழன்) சந்திக்க முடியும்' என்று ஜ்யோவராம் சொன்னார்./
முதலில் நான் விளக்கத் துவங்கியதும் அவர் இடைமறித்து பரவாயில்லை நாளைக்குச் சந்திக்கலாமா என்றுதான் கேட்டார். அவர் மறுக்க மாட்டார் என நம்புகிறேன். புதன்கிழமை அவர் என்னைச் சந்திக்கக் காத்திருந்ததாக அவரே எழுதியிருப்பதால் அவர் மறுத்தாலும், இதைப் படிப்பவர்கள் உணரலாம்.
நான்காவது நாளாக வியாழனன்றும் மாலை 5.45 மணிவாக்கில் தொலைபேசி இன்னும் 1 மணிநேரத்தில் ஹோட்டலுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். இது விடுபட்டிருப்பதால் சொல்கிறேன் - மற்றபடி இதற்குப் பெரிய அழுத்தங்களில்லை.
ஆனால் ’விஷயம்’ ரோசா சொல்லியிருக்கும் மிஸ்ட் கால், 20 நிமிடங்களில் அழைத்தல் போன்ற விவரங்களில் இல்லை. மாறாக
இதில் முக்கியமானது தொடர்ந்து மூன்று நாட்கள் பேசும்போதும் ரோசாதான் என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார் என்பதுதான். சாதாரணமாக எழுதும்போது விருப்பம் தெரிவித்தார் என்று எழுதலாம். ஆனால் அடிபட்டவன் எழுதும்போது சுத்திப் போட்டு அழைத்தார் என்றுதான் எழுதுவான்.
இன்னொன்று அலுவலகத்தில் சந்திக்கத் தயாராயிருந்தேன், வீட்டில் சந்திக்கத் தயாராயிருந்தேன் என்பதெல்லாம் மோசடி. ஏதாவதொரு இடத்தில் சந்திக்கலாம் என்பதில் அலுவலகமும் வீடும் அடக்கம் என்றாலும், அலுவலகத்தில் சந்திக்க விரும்புபவர்கள், அலுவலகத்தில் சந்திக்கலாமா என்றுதான் கேட்பார்களே தவிர எங்காவது சந்திக்கலாமா என்று கேட்க மாட்டார்கள். பல நண்பர்களை அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன் -- அப்போதெல்லாம் இப்படித்தான் கேட்டார்கள் :) இன்னொன்று, பிக்னிக் என்று சொன்னதும், அங்கே பார் இருக்கிறதா என்றும் கேட்டுக் கொண்டார் ரோசா. அதை இங்கே கவனமாகத் தவிர்த்திருக்கிறார்.
ஏதாவது ஒரு கட்டத்தில் மறுத்தோ தட்டியோ கழிக்கவில்லை என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரி வாதம் என்று தெரியவில்லை. அப்போது அவர் என் நண்பராக இருந்தார். நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும்போது பேசாமல் இருப்பார்களா என்ன! ஆனால் அதே ரோசாவின் வெள்ளிக் கிழமை காலை அழைப்பை நான் எடுக்கவில்லை. நண்பர்கள் அழைத்தால் பேசுவதும் கூப்பிட்டால் சென்று சந்திப்பதும்தான் எல்லாரும் செய்வது.
இன்னொரு விஷயம் இந்த நயவஞ்சகம் வார்த்தை. ரோசாவே எழுதியது போல் அவர் கோபப் பட்டிருக்கிறார் என்னுடைய பதிவைப் பார்த்ததும். என்னுடன் தொலைபேசியில் பேசும்போது ஒருமுறையாவது அதைக் காட்டினாரா... அல்லது குறைந்த பட்சம் தன்னுடைய எதிர்ப்பையாவது தெரிவித்தாரா. (அதே அவரது டிவிட் குறித்து நான் என்னுடைய எதிர்ப்பைக் காட்டியதை அவரே பதிவு செய்திருக்கிறார் - இதுதான் என்னுடைய நேர்மை). என்னுடைய பதிவைப் பற்றிப் பேசத்தான் அழைக்கிறேன் என்பதைக் கூட அவர் சொல்லவில்லை (பேசக்கூடாது என்பதில்லை, ஆனால் அதற்குத்தான் அழைக்கிறார் என்றுகூடச் சொல்லவில்லை). சாதாரணமான நட்பின் நிமித்தமான அழைப்பு என்றுதான் நான் நினைத்திருந்தேன் (நான் பதிவெழுதி அதற்கு அவர் பதிலும் எழுதிவிட்டார் எனும்போது அவர் பதிவைப் பற்றிப் பேசத்தான் கூப்பிடுகிறார் என்று எனக்குத் தோன்றவேயில்லை). பிறகு நடந்தவற்றைப் பார்த்து எழுதியதுதான் அந்த நயவஞ்சகம் என்ற வார்த்தை.
இப்போது ரோசா சொல்லக்கூடும் : ’ஜ்யோவ் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன் இது குறித்துதான் பேசப் போகிறேன் என்று’. ஆனால் நண்பர்கள் ஏதாவது அஜெண்டா இருந்தால் அது குறித்துப் பேசலாம் என்பார்கள். சாதாரணமாக அழைத்தால் அது நட்பின் நிமித்தமான சந்திப்பு என்றுதான் புரிந்து கொள்வார்கள்.
ஏன் எழுதினேன் என்று அந்தப் பதிவிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறேன். எழுதத் துவங்கியதும் வந்த ஆற்றாமையில் ஒரே மூச்சில் எழுதி ஸ்பெல்லிங் பிழை திருத்தம் கூடச் செய்யப் பிடிக்காமல் பதிவேற்றியது அந்த இடுகை. இதோ இந்த இடுகைகூட நேற்று வரை அவர் எழுதியதைப் படித்து ஒரே மூச்சில் எழுதியதுதான். பத்து நாட்கள் ஆற அமர யோசித்து எழுதப் பட்டதல்ல என்னுடைய அந்த இடுகை. அதனால் ஏதாவது ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது சரியாக இருக்காது :)
இடுகை 5 (தண்ணீ) :
அளவாகத்தான் குடித்தார் என்று பதிவில் அல்ல - பின்னூட்டத்தில் சொன்னது. குடிவெறியில் நடந்திருக்கக் கூடும் என்றதற்குச் சொன்ன பதில் அது. ரோசா முதலில் ஒரு பியரும் பிறகு சில விஸ்கிகளும் அருந்தினார் என்று தெரியும். எதிரிலோ அல்லது அருகிலோ அமர்ந்து மது அருந்துபவர்கள் எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை நான் பொதுவாகக் கவனிப்பதில்லை - அதனால் ரோசா குடித்த அளவு தெரியாது. தொடர்ந்து மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் தாங்கள் குடிக்கும் அளவில் கவனமாக இருப்பார்கள் (போதையின் அளவு கைமீறிப் போய்விடக்கூடாதென்பதற்காக). அதனால் நான் குடித்தது ஆறு பெக் என்பது நினைவில் இருக்கிறது. ரோசாவுடைய நடவடிக்கை (அதாவது பேச்சு, நடை போன்றவை) அவர் குறைவாகக் குடித்திருக்கலாம் என்று தோன்றியது. கலக்கும் குச்சிகள், பெக்கின் விலை போன்றவை எனக்குச் சத்தியமாக நினைவிலில்லை. அதைக்கூட ரோசா தெளிவாகவே நினைவில் வைத்திருக்கிறார் எனும்போது இது குடிவெறியில் நடந்த தாக்குதல் இல்லைதானே.
யாராவது குடித்த அளவையெல்லாமா குறைத்தோ அதிகப் படுத்தியோ சொல்வார்கள். இதற்கெல்லாம் அடுத்தவரை சாட்சியாக அழைக்கத் தேவையில்லை.
இப்போது ரோசா டாக்டர் ப்ரூனோவைச் சாட்சிக்கு அழைக்கிறார். ஒரு வாதத்திற்கு சொல்கிறேன் - சப்போஸ் டாக்டர் ப்ரூனோ ரோசாவைப் பற்றி என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தால், அது என் தரப்பிற்கு ஆதரவாகவே இருந்தால்கூட நான் அதைப் பொது வெளியில் வைக்க மாட்டேன். இது எனக்கான அறம்.
இப்போதைக்கு அவ்வளவுதான். இன்னும் அஞ்சா! அடப் போங்கப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என மனம் சுணங்கினாலும் பதில் சொல்லிவிடுகிறேன் :)
முதல் ஐந்து இடுகைகளுக்கான என் பதிலை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் :
1. தொடர்ந்து என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ரோசாதான்
2. நடந்தது கொலைவெறித் தாக்குதல்தான்
3. நான் எதிர்பாராத கணத்தில் என்னைத் தாக்கினார்
4. என்னுடைய இடுகையில் எந்தப் பொய்யும் இல்லை
(இதை வாசிப்பவர்களின் பின்னூட்டங்களைச் சேமித்து வைத்துப் பிறகு வெளியிடுகிறேன்)