இன்னொன்று

ஆகச் சிறந்த கவிதையெழுத
காகிதம் பேனா அட்டை
சிகரெட் லைட்டர் சாம்பல் கிண்ணம்
முன் தயாரிப்புகளுடன் அமர்கிறேன்
பால்கனியில்
தொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரக் கம்பியில்
ஆடிக் கொண்டிருக்கின்றன மூன்று காக்கைகள்
தெருவில் துரத்திப் பிடித்து விளையாடுகின்றன இரண்டு நாய்கள்
கிரிக்கெட் விளையாடும் சிறார்களின் சப்தம்
தொலைக்காட்சி ஒலியோடு கலந்து கேட்கிறது
எதிர் காலிமனையிலிருந்து டாடா இண்டிகா கிளம்புகிறது
காக்கைகளில் ஒன்று பறந்துவிட்டிருக்கிறது இப்போது
கிரிக்கெட் சப்தம் குறைந்தது போல் தோன்றுகிறது
நாய்களைக் காணவில்லை,
பக்கத்துத் தெருவிற்குச் சென்றிருக்கலாம்
தெருமுனைச் சாக்கடையின் துர்கந்தம் அடிக்கறதா என்ன
தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
வேறொன்றுமில்லை
சும்மா
உன்னிடம் சொல்லத் தோன்றியதடா லவ்டா

நச்சென்று கதை எழுதுவது எப்படி?

(அல்லது கதை எழுதுவதைப் பற்றிய கதை எழுதுதல்)

நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன?

அவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.

இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.

சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என்பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.

அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.

எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.

இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.

மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.

அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.

கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :

அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே! உயிரிருக்கிறது இன்னமும்! ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :

எப்படிக் கொலை செய்வது?

(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)

கிட்டத்தட்ட செய்யப்பட்ட கவிதை

நீரூற்றின் அருகில் உன் நீல நிறக் குட்டிக் கைகளால்
மதுவருந்துவதைப் பார்த்தேன்.
உன் கைகள் குட்டியில்லை, ஆனால் சிறியது.
அந்த நீரூற்று ஃபிரான்ஸில் இருக்கிறது
அங்கிருந்துதான் நீ உன்னுடைய கடைசிக் கடிதத்தை எழுதினாய்
அதற்கு என்னுடைய மறுமொழிக் கடிதத்திற்கு
உன்னிடமிருந்து பதில் இல்லை
நீ கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும் பெரிய எழுத்துகளில் பைத்தியக்காரக் கவிதைகளை
எழுதிக் கொண்டிருந்தாய்.
உனக்குப் பிரபலமான கலைஞர்களைத் தெரிந்திருந்தது
அவர்கள் எல்லாரும் உன்னுடைய காதலர்களாய் இருந்தார்கள்
நான் உனக்கு எழுதியிருந்தேன் : பரவாயில்லை அவர்கள்
வாழ்க்கையில் புகுந்து கொள், எனக்குப் பொறாமையில்லை,
ஏனெனில் நாம் சந்தித்ததேயில்லை. நாம்
ஒருமுறை நெருங்க இருந்தோம், ஆனால் சந்திக்கவோ
அல்லது இருவரும் தொட்டுக் கொள்ளக்கூட இல்லை.
நீ பிரபமானவர்களிடம் சென்றாய்,
பிரபலமானவர்களைப் பற்றி எழுதினாய்.
பிரபலமானவர்களுக்குத் தங்கள் புகழைப் பற்றித்தான்
கவலை என்பதைப் புரிந்து கொண்டாய்.
தங்களுக்குப் புகழைத் தரும்,
தங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்
இளம் பெண்ணைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
காலையில் எழுந்து பெரிய எழுத்துகளில்
கடவுளைப் பற்றியும் தேவதைகளைப் பற்றியும்
கவிதை எழுதினாய். கடவுள் இறந்துவிட்டார் என்பது
நமக்குத் தெரியும். அவர்கள் சொன்னார்கள்,
ஆனால் உன்னைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது
என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை -
பெரிய எழுத்துகள் காரணமாயிருந்திருக்கலாம்.
பல ஆசிரியர்களிடமும் பதிப்பகங்களிடமும்
நீ மிகச் சிறந்த பெண் கவிஞர் என்று சொல்லியிருக்கிறேன்.
பிரசுரிக்கச் சொல்லியிருக்கிறேன். நீ
பித்துதான் ஆனால் நீ மந்திரவாதியும்கூட
உன்னிடம் பொய் இல்லை 
சின்னச் சின்னப் புகைப்படங்கள் மட்டும் வைத்துக் கொள்ளும்,
தொட்டுக்கொண்டேயிராத,
கடிதத் தொடர்பு மட்டுமே உள்ள
ஒரு ஆண் பெண்ணை எப்படிக் காதலிப்பானோ
அப்படிக் காதலித்தேன் உன்னை.
சிறிய அறையில் சிகரெட்டை உருட்டியபடி
நான் அமர்ந்திருக்க, பாத்ரூமில் நீ சிறுநீர் கழிக்கும்
ஓசையைக் கேட்டிருந்தால் உன்னை இன்னும் காதலித்திருப்பேன்.
ஆனால் அது நடக்கவேயில்லை. உன்
கடிதங்கள் சோகமாக ஆகிக் கொண்டிருந்தன. உன்
காதலர்கள் உன்னை ஏமாற்றினர்.
எல்லாக் காதலர்களும் ஏமாற்றுக்காரர்கள்தான்
என்று பதில் எழுதினேன்.
அந்தப் பதில் உன்னைச் சமாதானப்படுத்தவில்லை.
உன்னிடம் ஒரு அழும் மேஜை இருப்பதாகவும்,
அதை நதி ஓடும் பாலத்தின் மேல் போட்டு,
தினமும் இரவுகளில் அதன் மீது அமர்ந்து,
உன்னைக் காயப்படுத்திய, உன்னை மறந்த
காதலர்களை நினைத்து அழுவதாக எழுதியிருந்தாய்.
நான் உனக்குப் பதில் எழுதினேன் -
ஆனால் அதன் பிறகு உன்னிடமிருந்து கடிதமேயில்லை.
நீ தற்கொலை செய்து கொண்டதாக
3-4 மாதங்கள் கழித்து
என்னுடைய நண்பன் தெரியப்படுத்தினான்.
நாம் சந்தித்திருந்தால்,
உன்னிடம் நானோ அல்லது என்னிடம் நீயோ
உண்மையாக இருந்திருக்க மாட்டோம்
என்பதற்கான சாத்தியம் உள்ளது.
இப்படி முடிந்துபோனதே நல்லது.

(சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி எழுதியது. சில இடங்களில் மட்டும் வசதி கருதி மாற்றியிருக்கிறேன்)

புத்தகக் கண்காட்சி

ஜனவரி 1ம் தேதி புத்தகச் சந்தைக்குப் போகலாம் என்று முடிவு செய்தது அன்று காலைதான். முதல் நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் மதியம்கூட ஏனோ தலையை வலித்தது. கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை. ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) ஆனால் வெளியில் 1 ரூபாய்தான். மாத்திரையைப் போட்டுக் கொண்டு ரயில் பிடித்து சேத்துப்பட்டில் இறங்கினேன். என்னுடன் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அங்கிருந்து அப்படியே நடந்து வந்து பஸ் பிடித்து பச்சையப்பா கல்லூரியில் இறங்கிக் கொண்டோம்.

கண்காட்சிக்கு எதிராகப் பழைய புத்தகக் கடை ஒன்றிரண்டு இருந்தது. நிறைய புத்தகங்களை விரித்திருந்தார்கள். சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை 10 ரூபாய்க்குக் கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு பிரதி வீட்டிலிருந்தாலும் யாருக்காவது கொடுக்கப் பயன்படுமே என்று நினைத்துத்தான் வாங்கினேன். போலவே என்னுடைய நண்பன் ஒருவனுக்குப் பரிசளித்து விட்டேன்.

கண்காட்சியில் வாசலில் கார்கள் வருவதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டூ வீலரில் வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் - உடனே செல்ல முடிந்தது. ஆனால் பார்க்கிங் சீட்டு ரொம்பச் சின்னதாக இருந்தது என்று உள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஃபிளெக்ஸ் பேனர்களில் நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனந்த விகடன் நிறைய விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். நல்ல வேளையாகக் க்யூ இல்லை. மூன்று பேருக்குமாய்ச் சேர்ந்து 15 ரூபாய் சில்லரையாகக் கொடுத்தேன். உள்ளே நுழையும் முன் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தேன்.

பதிவர்கள் பைத்தியக்காரன், லக்கி லுக், சங்கர் மற்றும் சிலரைச் சந்தித்தேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனி இடுகையாகப் புகைப்படங்களை வெளியிடுகிறேன்.

நிறைய ஸ்டால்கள் இருந்தன. ஸ்டால்களின் நடுவில் நிறைய இடைவெளி விட்டிருந்தார்கள். கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பா ராகவனும், பத்ரியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தேன்.

புதிய தலைமுறை (?) பெரிய பையைக் கொடுத்தார்கள். புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாயிருந்திருக்கும். விகடன் அரங்கிலும், இன்னும் சில அரங்களில் மட்டும் கூட்டம் அம்மியது.

சாரு நிவேதிதா.உயிர்மை அரங்கில் இருந்தார். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். எஸ் ரா இல்லை. இருந்திருந்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.

கார்பெட் நன்றாக இருந்தது. சென்ற வருடங்களைப் போல முனை மழுங்கியில்லை. மழுங்கியிருந்த இடங்களிலும் உடனுக்குடன் ஆணியடித்துச் சரி செய்து கொண்டிருந்தார்கள்.

வீட்டுக் கடன் வழங்கும் HDFC ஸ்டாலில் நின்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். குறைவான வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. அப்போது வெளியில் இருந்த புடவைக்கடை விளம்பரங்களைக் குறித்து யாரோ பேசியபடி சென்றார்கள்.

அழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது. காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.

முக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம். லிச்சி ஜுஸ் 10 ரூபாய். வாங்கிக் குடித்தோம்.

புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது சரியான கால்கடுப்பு. மதியம் ஏற்பட்ட தலைவலி ஏனோ ஞாபகம் வந்து, தலையும் வலிப்பது போல் தோன்றியது.