எனது நேர்காணல்

1. உங்கள் முழுப்பெயர், புனைப்பெயர்(காரணம்), சொந்த ஊர், வாழிடம், படிப்பு, முக்கிய பணி ஏனையவை பற்றி கூறுங்கள்.

பெயர் சுந்தர். புனைபெயர் ஜ்யோவ்ராம் சுந்தர். முதலில் ஜீவராம் சுந்தர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கும் முன் எழுத ஆரம்பித்த சில மாதங்கள் அனாமிகன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன்.

பிரமிளின் பல புனைபெயர்களில் ஒன்றின் ஒரு பகுதி ஜியோவ்ராம். அவரது எழுத்துகளின் மேல் உள்ள ஈர்ப்பினால் அப்பெயர் வைத்துக் கொண்டேன்.

சொந்த ஊர், வாழிடம் எல்லாம் சென்னைதான். படிப்பு இளங்கலை (கடைசி வருடம் முடிக்கவில்லை). 1990லிருந்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணி.

2. நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? உங்களை எழுதச்செய்தது அல்லது முன்னோடி யார்?

1990லிருந்து எழுதிவருகிறேன். 1998ல் எழுதுவதை நிறுத்திவிட்டேன். மறுபடியும் இப்போது இணையத்தில் 2007 நவம்பரிலிருந்து. வாசிப்பு தீவிரமடைய தானாகவே எழுதத் துவங்குவது பலருக்கு வாடிக்கை. நானும் அப்படியே.

3. பதிவுத்துறை மற்றும் அச்சு ஊடகத்துறை போன்றவற்றில் வெளிவந்துள்ள உங்கள் ஆக்கங்களை பற்றி குறிப்பிட முடியுமா?

அச்சு ஊடகத்தில் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளிலேயே எழுதியிருக்கிறேன். பிரதானமாகக் கவிதைகளும், சில சிறுகதைகளும், ஒன்றிரண்டு விமர்சனக் குறிப்புகளும். கவிதாசரண், மவ்னம், நடுகல், செந்தூரம் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.

4. உங்கள் ஆரம்பகால எழுத்துக்கள் பற்றி சொல்லுங்கள். கூடவே எவ்வகை எழுத்தை விரும்பினீர்கள், இப்போது எவ்வகை எழுத்தை மேற்கொள்கிறீர்கள் எனவும் விளக்குவீர்களா?

புனைவு சார்ந்த எழுத்துகளே என்னை அதிகமும் (எழுத) வசீகரித்தவை. அவ்வகை எழுத்துகளையே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

'கவித்துவம்' என்று நம்பப்படும் வார்த்தைகளைப் போட்டு அதைக் கவிதையாக நம்புவது என்னளவில் உடன்பாடில்லை.

புனிதம், உன்னதம் என்றில்லாமல் இலக்கியத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கவே விருப்பம். வெற்றிமேல் வெறி ஏற்றாத, அதற்காக தோற்பதற்கான ஆட்டமாகவும் ஆகிவிடாத ஒரு விளையாட்டு - இதைச் செய்வது சுலபமில்லை என்றபோதும்.

5. ஞான பீட விருதை குறிவைத்து ஜெயமோகனின் எழுத்து நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுவதைப் பற்றி?

புனைவிலக்கியம் என்ற வகையில் ஜெயமோகனின் பல சிறுகதைகள், நாவல்களின்மேல் எனக்கு ஈடுபாடுண்டு. அவருடைய ரப்பர், காடு, ஏழாம் உலகம் போன்ற நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. அவரது கதைகளில் சில அரசியல் சிக்கல்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியத்தில் அவருக்கென ஓர் இடம் நிச்சயமுண்டு. (அவரது பல்டிகளையும் கோணங்கித்தனங்களையும் நியாயப் படுத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்!)

அவருக்கு ஞானபீட விருது கிடைத்தால் மகிழ்ச்சியே. ஆனால் அதைக் குறிவைத்து அவர் இயங்குவதாக எனக்குத் தோன்றவில்லை.

6. இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்க்கு சாரு நிவேதிதாவினுடைய படைப்புகள் மனம் பிறழ்ந்த எழுத்துக்கள் போல்தான் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எழுத்துக்கு வெளியேயும் அவரது நடவடிக்கைகளுக்கும் மரை கழண்டவர் போலவே இருப்பது ஏன்?

ஒருவரின் செயல்பாடுகள் புரியாதபோது, அதைக் காரணமாகக் கொண்டே அவரை மரை கழண்டவர் எனச் சொல்வதெல்லாம் மிகமிக அதிகப்படியான வார்த்தைகள். எதிர்-கலாச்சாரக்கூறுகள் கொண்ட பல விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அதனாலேயே பொதுப்புத்தி கட்டியமைத்த ஒரு பிம்பம் அது.


7. சமூகக்கேட்டை பற்றி ஒருவர் எழுதினால் அவரை கட்சி எழுத்தாளர் என்றும் சமூக விழுமியங்களை கேள்வி கேட்டால் அவரை கலக எழுத்தாளர் என்றும் எழுத்துலகில் முத்திரை இடுவார்கள் என்பது உண்மையா? கொள்கை எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் இல்லையா?

இல்லை. அப்படி எனக்குத் தோன்றவில்லை.

எந்தக் கொள்கையையும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வது நம்பிக்கையாளர்கள் என்ற இடத்தை அடையத்தான் உதவும். முடிந்தவரையில் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துபவனே கலைஞன். கேள்விகள் எதுவும் எழுப்பாத சரணாகதி நிலையில் தன்னை வைத்துக் கொள்வதை எழுத்தாளன் ஏற்கமுடியாதில்லையா?

கொள்கைகளில் தீவிர ஈடுபாடுடையவர்களும் பல இலக்கியங்களைத் தந்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம் தமிழிலேயே பல உதாரணங்கள் உண்டு. (இங்கே கொள்கை என்பதைக் கட்சிக் கொள்கை எனப் புரிந்து கொள்ளவும்)

இன்னும் கொஞ்சம் தீவிரமாகச் சிந்தித்தால் கொள்கை அல்லது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்தென ஏதாவது உண்டா என்ன? சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துவதும் ஒரு எழுத்தாளனின் வேலைதான்.


8. திராவிட இயக்கத்தின் அரசியல் வெற்றி (தமிழ்ச்)சமூகத்தில் அதிகாரத்தை பரவலாக்காமல் வெறும் மடைமாற்றிவிட்டது என்பது பற்றி உங்கள் கருத்தை கூற முடியுமா?

திராவிட இயக்கம் என்றில்லை - எல்லாவித அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க அல்ல, மாறாக குவித்துக்கொள்ளவே விரும்பும். அதிகாரம் செயல்படும் விதம் அப்படி!


9. பார்ப்பனிய கொட்டம் திராவிட எழுச்சியால் அடங்கியது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் பிராமணரல்லாத உயர்சாதியினரின் கொட்டம் யாரால் அடங்கக்கூடும்? இதில் திருமாவின் பங்களிப்பு வருங்காலத்தில் எப்படி இருக்கும்?

படிநிலைகளில் கொஞ்சம் உயர்ந்ததும் பிற உயர்சாதியினர் பார்ப்பனர்களாக ஆக முயற்சிக்கின்றனர் என்பது எனது பார்வை. உதாரணத்திற்குப் பெயர் வைப்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை! ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இம்மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். போலவே ‘சுத்தம்' பற்றிய கருத்தியலும். அதாவது மொத்த உயர்சாதியினரும் இப்போது பார்ப்பனர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!

திருமாவின் பங்களிப்பு சிலவருடங்களாக ஏமாற்றத்தையே அளிப்பதாயுள்ளது. ஆனால் நடைமுறை அரசியல்சார்ந்து அவர்தான் ஓரளவிற்கு நம்பிக்கையளிக்கிறார் என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.


10. வடஇந்திய நகரங்களில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு காஷ்மீர் காரணமா அல்லது இந்து அடிப்படைவாதிகள் காரணமா? அல்லது இரண்டுமா?

வட இந்திய நகரங்கள் என்றில்லை. இப்போது மும்பை போன்ற மேற்கிந்தியாவிலும், முன்னர் கோயமத்தூர், பெங்களூர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகள் போன்ற காரணங்களினால் தென்னிந்தியாவும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

இது ஒரு சமூக ஆய்வாளனுக்குரிய கேள்வி. என்னிடம் பதிலில்லை. நீங்கள் குறிப்பிட்டது தவிர வேறு காரணங்களும் இருக்கலாம்.

என்னளவில், யார் காரணம் என்பது முக்கியமில்லை. வன்முறை என்பதை யார் எந்தக் காரணம் கொண்டு முன்வைத்தாலும் எதிர்க்கப்படவேண்டியதே.


11. மும்பை சம்பவத்திலும் ஈழம் மற்றும் தமிழக மீனவர் விஷயத்திலும் வட இந்திய ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்தை கூறமுடியுமா?

மும்பை வன்முறையை அவர்கள் அழகான தொடர்-காட்சி மயப்படுத்தலின்மூலம் மக்கள் தங்கள் நினைவிலி மனங்களில் இன்னும் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் வேண்டும் என ஆவலாய் கேட்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த கோரத்தில் 48 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பெரிதாகப் பேசக்காணோம். இவர்களுக்கு தாஜ் மகால் / ஓபராய் ஓட்டல்களின் தாக்குதலே பெரிதாகப் போய்விட்டது.

ஈழம், தமிழக மீனவர் குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுகிறார்களா என்ன? ஒளிபரப்ப வேறு விஷயங்கள் கிடைக்காவிட்டால், அதைத் தொட்டுச் செல்கிறார்கள், அவ்வளவே.


12. சமீப காலங்களில் திமுக -வினர் கூட விமர்சனங்களை பொறுக்க மாட்டாதவர்களாக உள்ளனர். அவர்கள் (ஒருவேளை)நினைப்பதுபோல் திமுக இல்லாவிட்டால் திராவிட சிந்தனையாளர்களும் நடுநிலையாளர்களும் அரசியல் அகதிகளா என்ன?

நீங்கள் சொல்லியிருப்பதுபோல் நான் உணரவில்லை. விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்; அவ்வளவே. ஒரு உதாரணத்திற்கு இப்படிப் பார்ப்போம் : அதிமுக ஆட்சியிலிருந்தால் இப்போது கலைஞரைச் செய்வதைப்போல் ஜெயலலித்தாவை கண்டமேனிக்கு விமர்சிக்க முடியுமா?

நடுநிலை என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நடுநிலையான கருத்து என எதுவுமே இருக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்.

கட்சி சாராதவர்கள் என வேண்டுமானால் சொல்லலாம்.

13. வலைப்பூ உலகம் வழங்கும் சுதந்திரம் அனைத்தையும் தமிழ்மணத்தால் வழங்க முடியாததற்கு என்ன காரணம்? தமிழ்மண பயனர்களா? தமிழ்ச்சமூகமா? நண்பர் பைத்தியக்காரன் சொன்னதுபோல், இலவச சேவை தரும் தமிழ்மண நிர்வாகிகளின் புரவல மனப்பான்மையா?

சிம்பிள் : பாண்டிச்சேரிப் பெண் பதிவர்கள் :))

நம்முடையது ஒருமாதிரியான கட்டுப்பெட்டித்தனமான, அதே சமயம் அதை மீறவும் உள்ளுக்குள் விரும்பும் ஒரு சமூகம் என்பதாய் நான் கணித்திருக்கிறேன்.

இன்னொன்று, இணையத்தில் சில இடங்களில் பொறுப்பற்ற முறையில் சுதந்திரம் (கட்டற்ற சுதந்திரம்!) பாவிக்கப்படுகிறது. இதுவும் ஆபத்தானதே.

14. உலகெங்கும் பெண்டாட்டி என்பது இன்றும் வேலைக்கார வர்க்கம் தானே?

துரதிர்ஷ்டவசமாக, ஆம்!

15. துணைக்கண்ட அரசியலில் அதிகார உச்சிக்கு சென்றதும் பெண்கள் கிடைத்தற்கரியது கிடைத்தது போல் அதிகாரத்தை கையாள்வதேன்?

இது மிகப் பெரிய உளவியல் ஆய்விற்குரியது.

துணைக்கண்ட அரசியலில், ஒப்பீட்டளவில் ஆண்களைவிட, அரசியல் பதவியடையும் பெண்கள் சர்வாதிகாரிகளாகவே மாறிவிடுகிறார்கள். பெனாசீர் புட்டோ, மாயாவதி, இந்திரா காந்தியிலிருந்து நம்மூர் ஜெயலலிதாவரை நிறைய உதாரணங்கள். ஷீலா தீட்சித், வசுந்தரா ராஜே சிந்தியா போன்றவர்கள் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருப்பதால் தப்பிப்போனார்களோ என்னவோ!

இத்தனைகாலம் அடக்கிவைக்கப் பட்டிருந்ததால் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாகக்கூட இது இருக்கலாமோ?

16. எழுத்தாளர் எழுதினாலும் காமக்கதைகள் சரோஜாதேவிக்கதைகள் போலவே இருப்பது ஏன்? உங்கள் கதைகள் காமத்தை தூண்டவே இல்லையே!
உங்கள் கேள்வியில் முரண் உள்ளது :)

சரோஜாதேவிக் கதைகள் உணர்ச்சிகளைக் கிளறிவிடுவது. சுயமைதுனத்திற்கு மட்டுமே பயன்படுவது. அல்லது உடலுறவின்போது படித்ததை நினைவுக்கு கொண்டுவந்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொள்ளப் பயன்படுவது.

ஒரு வசதிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறேன் : action based கதைகளை எழுதினால் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். ஆனால் என் நோக்கம் அதுவல்ல.

இன்னொன்று, குதப் புணர்ச்சி பற்றி ஒரு கதை எழுதிவைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகப் பதிவிடவில்லை. அப்படியே எழுதினால் அடிக்க வருவார்கள்! மாற்றவும் கைஓடவில்லை :)

என்னுடைய கதைகளுக்கு வந்த சில அனானிப் பின்னூட்டங்களும் சில பதிவர்களின் எதிர்ப்பையும் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது! என்னுடைய கதைகள் தோல்வி என விமர்சிப்பது வேறு, வெறும் ஆபாசம் எனப் புறந்தள்ளுவது வேறல்லவா?

எல்ஃபிரெட் ஜெலனிக்கின் Piano Teacher, ழார் பத்தேலின் Story of the Eye மாதிரியான ஒரு கதையை தமிழில் வெகுஜன ஊடகத்தில்கூட வேண்டாம், சிறுபத்திரிகை ஊடகத்திலோ அல்லது மாற்று ஊடகம் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ் இணையப் பக்கங்களிலோ ஏன் எழுத முடிவதில்லை என யோசித்துப் பார்க்கலாம்.

17. உங்கள் காமக்கதைகளில் இருக்கும் இலக்கியச் சுவை உங்கள் ஏனைய படைப்புகளிலும் அப்படியே கிடைக்கிறது. இந்நிலையில் காமக்கதைகளை ஒரு வெரைட்டிக்காகத்தான் எழுதினீர்களா? வேறு என்ன காரணம்?

முன்பே ஒர் இடத்தில் சொல்லியது போல காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் திட்டமன்றி வேறில்லை. திரட்டிகளில் இணைந்து இயங்கும்போது அதற்கான விதிமுறைகள் இருக்குமல்லவா. அதற்கு உட்பட்டே எழுதவேண்டியிருக்கிறது. உதா :

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ஜிக்கு ஜிகு ஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்தச் சண்டையில
கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

இந்தப் பாடலை ஆறாவது / ஏழாவது படிக்கும்போது பள்ளி மாணவர்கள் பாடிக் கேட்டிருக்கிறேன். இதை நீங்கள் நாயகன் என்றால் சண்டை போடும் வீரர்களாகவும் நடிகை / பெண் என்றால் அவள் யோனி மட்டுமே (அதாவது புணர்ச்சிக்கு மட்டுமே லாயக்கானவள்) உடையவள் என்பது எப்படி சிறுவயதிலேயே கட்டியமைக்கப்படுகின்றது என்றும் வாசிக்கலாம். இந்தப் பாட்டை விளக்கங்களுடன் எழுதினால் கட்டுரையாகிவிடும். என் வேலை அதுவல்ல. வெறும் பாட்டை மட்டுமே பதிவிட்டால் வரும் எதிர்ப்பு எத்தன்மையாய் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்மாதிரியான சில சங்கடங்கள் :(


18. "அர்ப்பணிப்பு ஆசை இல்லாத பெண்காமமும் இரக்க உணர்வு இல்லாத ஆண் காமமும் வெறும் உடற்காரணிகளின் கைவரிசையே! அவை உங்களுக்கு விதிக்கப்பட்ட காமுறும் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாது, அர்பணிப்பும் இரக்கமுமே காதலாக கொள்ளப்படும்" -என்கிறார் எங்கள் பேராசிரியர்(இந்தியாவில்). இவ்விரு உணர்வுகளும் உங்கள் காமக்கதைகளில் தென்படவில்லையே? (காலச்சுவடோ அல்லது தீராநதியிலோ நான் படித்த ஒரு சிறுகதை பேராசிரியரின் இவ்வரிகளை ஞாபகப்படுத்தியது!)

என்னங்க இப்படில்லாம் கேக்கறீங்க :( அர்ப்பணிப்பு வேணுமாம் பெண்களுக்கு, இரக்க உணர்வு வேணுமாம் ஆண்களுக்கு.. இதை உடைத்துப் பார்த்தால் வரும் அர்த்தம் பெண்கள் அடிபணிய வேண்டும், ஆண் பெண்களைக் கண்டு இரக்க உணர்வோடு கலவி செய்ய வேண்டும். காலம் காலமாக சொல்லப்பட்டு வருவதுதானே இதெல்லாம்... ஏன், பெண்ணோ ஆணோ காமத்திற்காக - உடல் தேவைகளுக்காக - மட்டுமே ஓக்கக் கூடாதா?

இம்மாதிரியான ஆணாதிக்க வெறி பிடித்த பேராசிரியர்கள் இருந்தால் விளங்கிடும் :(


19. ஜனரஞ்சக எழுத்து வாசகர்களை இலக்கிய வாசிப்புக்கு நகர்த்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சியாக உங்களது சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுக பதிவுகளை கொள்ளலாமா? அவ்வகைப்பதிவுகள் தொடருமா?

இணையத்தில் புழங்குபவர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாவிதமான எழுத்துகளும் தெரிந்திருப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பிடித்த வகைமாதிரி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள். அவ்வளவே.

எனவே இக்காரியம் வெகுஜனப் பத்திரிகைகள் (அல்லது அதில் எழுதும் எழுத்தாளர்கள்) செய்யவேண்டியது.

நான் எழுத நினைத்தது சிறுபத்திரிகை வாசகர்களும் பரவலாக அறியாத பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகள்.

20. 'ச்சும்மா ட்டமாஷ்' -வலைப்பூ பற்றி உங்கள் கருத்து என்ன?

கோவியார், தமிழ் சசி, லக்கி பேட்டிகள் என்று வித்தியாசமான விஷயங்களுடன் இருக்கிறது. தள்போட்சுத்ரி படித்த ஞாபகமிருக்கிறது. ச்சும்மா ட்டமாஷூக்கென்றாலும், சீரியஸான விஷயங்களும் இருக்கின்றன :)



எதிர் கேள்வி 1:

எழுத்தாளர் நகுலனைப் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருக்கிறீர்கள். அவரைப்பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் நகுலன். அவரது எழுத்துகளை ஆராதிப்பவன் என்ற முறையில் நான் எழுதினால் அது மிக மிக ஒருதலைப் பட்சமாகவே இருக்கும். ஏற்கனவே இணையத்தில் அவரைப் பற்றி சில பதிவுகள் இருக்கின்றன.

எதிர் கேள்வி 2: அப்படியென்றால், திராவிட இயக்கம் தான் யாரை பிரநிதித்துவம் செய்வதாக சொல்லிக்கொள்கிறதோ அவர்கள் அனைவருக்கும் அதிகாரத்தை குவித்திருக்க வேண்டும். தோன்றிய காரணியும் செயல்படும் விதமும் தொடர்பின்றி இருப்பது திராவிட இயக்கத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக பிரித்துவிடுமா / பிரிக்க வேண்டுமா?


திராவிட இயக்கம் தோன்றியது அது represent செய்யும் மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக அல்ல, மாறாக தங்களது கொள்கைகளை அமலாக்க என்றே நினைக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த அமைப்பில் பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது என நினைக்கிறேன்.

இன்னும் விளக்க வேண்டுமானால் அதற்கு நாம் அரசு, அதிகாரம் செயல்படும் விதத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும். நீட்ஷே, ஃபூக்கோ எனச் செல்ல வேண்டும். எனக்கு அவ்வளவு தெளிவாக அவற்றை விளக்கத் தெரியாது என்பதுடன் அது நான் ஃபிக்ஷன் ஆட்கள் செய்ய வேண்டிய விஷயம் :) அதனால் வேறு கேள்வி கேட்க முடியுமா?

எதிர் கேள்வி - 3: கட்டற்ற சுதந்திரம் விளைவிக்க வாய்ப்புள்ள ஆபத்து ஒன்றை உதாரணம் கூறி விளக்க முடியுமா?

சிலருக்கு இணையம் தரும் முகமற்ற தன்மை மிரட்டல்களை விட முடிகிறது. என்னுடைய சாரு நிவேதிதாவும் ஆபாசமும் என்ற இடுகை அப்படிப்பட்ட ஒரு வலைப்பூவைப் பார்த்த எரிச்சலில் எழுதியதுதான். மேலும், பலரும் அறிந்திருக்கும் போலிப் பிரச்சனை கட்டற்ற சுதந்திரத்தினால் வந்ததே.

21. கவிஞன் சொல்லாத பொருளையும் வாசகன் கற்பித்துக்கொள்ளும் வகைக் கவிதை தமிழில் சாத்தியமா? உதாரணம் தரமுடியுமா?

நிச்சயம் சாத்தியம். இன்னும் சொல்லப்போனால், எழுதியபிறகு ஆசிரியனின் பங்கு முடிந்துவிடுகிறது.

தமிழ் வலைப்பக்கங்களில் Death of the Author என்பதை எவ்வளவு மலினப் படுத்த முடியுமோ அவ்வளவு மலினப்படுத்திவிட்டார்கள் (ஒருவர் பிறகு எதற்கு பணம் கேட்கிறார்கள், அவர்கள் பெயர்களில் ஏன் வெளியிடுகிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டார்!)Death of the Intentions of the Author எனப் புரிந்து கொள்ளலாம் நாம். ஆசிரியப் பிரதியைவிட வாசகப் பிரதியே முக்கியம். அதற்கென வாசகன் இஷ்டத்திற்கு அர்த்தங்களைச் சொல்லிச் செல்லலாமென்பதில்லை.

ஒரு நல்ல கவிதை என்பது பல அர்த்தங்களைத் தரவல்லது! வலைப்பதிவுகளிலேயே அப்படிப்பட்ட பல கவிதைகளை நீங்கள் பார்க்கலாம். தனிமையைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. கென் எழுதிய கவிதையொன்றைப் பார்ப்போம் (http://www.thiruvilaiyattam.com/2008/11/blog-post.html).

தனித்த இரவு
எவருமற்ற அறையின் கதவுகள்
இருளோடு விரியத்திறக்கிறது
சுருண்டு கிடக்கும் பாய்கள்
தலையணையோடு புணர்ந்து முகிழ்கிறது
முந்தின தினம் தொலைத்த
மின்சாரம் எதிர் வீட்டுப்பூனையின்
கண்களில் ஒளிந்து மினுக்கிடுகிறது

ரத்தசோகை நோயென மெழுகின்
வெளிச்சம் அழுது வடிய
ஈரம் கசியும் சுவரில்
பேயாடுகிறது உருவம்

தீராத நாளின் சொச்ச
இரவை
விரல் உருவங்கள் படைத்துக்
கழிக்கிறேன்
கிழிந்த நிலா நகர்கிறது மெல்ல
மிக மெல்ல

வாசகனாக இது எனக்குச் சொல்வது என்ன... யோசித்துப் பார்க்கிறேன். இதில் பாய்கள் ஏன் பன்மையிலும் தலையணை ஒருமையிலும் வரவேண்டும். ஒருவேளை இன்னொருவர் இருந்திருந்து அவர் தலையணையை எடுத்துச் சென்றிருக்கலாம். அந்த இன்னொருவர் எதிர்-பாலினமாக இருப்பாரோ (பாய்கள் தலையணையோ புணர்ந்து...) அந்த இன்னொருவர் பிரிந்ததாலேயே தனிமை அதிக வாதையைத் தந்திருக்கலாம். இப்படியாக இதை நான் வாசிக்க வேறொருவர் வேறு மாதிரியான வாசிப்பைத் தருவதற்கான ஸ்பேஸ் இந்தக் கவிதையில் இருக்கிறது!

22. பெண்சீண்டலை ஆணாதிக்கமாகத்தான் கொள்ளமுடியுமா? வேறு பரிமாணங்கள் அதற்கு உண்டா?

நிச்சயமாக சீண்டல் காதலின், காமத்தின் ஓர் அங்கம்தான். ஆனால் யாரைச் சீண்டுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம் :)

23. அடிப்படை ஆதாரம் ஏதும் தரமுடியாத ஒரு கேள்வி. தமிழிஷ் திரட்டியில் உங்களுக்கு பங்கு இருக்கிறதா?

தமிழ்மணம் போலவே அதிலும் இணைந்திருக்கிறேன் :)எனக்கு கணினி அறிவே மிகக்குறைவு. ஒரு படம் இணைக்கக்கூட இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதில் திரட்டியா.. கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், அதெல்லாம் ஒன்றுமில்லை.

(2008 இறுதி மாதங்களில் நண்பர் மோகன் கந்தசாமி பதிவில் வெளியான நேர்காணல் இது. அவரது பதிவு பொது வாசகர்களுக்கு மூடப்பட்டுள்ளதால் இங்கே சேமிக்கும் பொருட்டு வெளியிட்டிருக்கிறேன்).

22 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னொரு பைத்தியக்காரன்...


அத்தனையும் படித்தேன் சுந்தர்சார் சிவா சார் போலவே நீங்களும் எழுத்து காதல் கொண்டவர் போல ....

Asir said...

வெற்றிமேல் வெறி ஏற்றாத, அதற்காக தோற்பதற்கான ஆட்டமாகவும் ஆகிவிடாத ஒரு விளையாட்டு - இதைச் செய்வது சுலபமில்லை என்றபோதும்.



class....

பா.ராஜாராம் said...

பிரமிப்பா இருக்கு சுந்தரா. பதினைந்து வருடங்களுக்கு முன்பே இருந்த பிரமிப்பை விட அதிகம்.
விசயமே இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்
என புரிகிறது.

hats off-மக்கா!

(என்றாலும்,இப்படி இருக்க வசதியாய் இருக்குடா)

:-)

விநாயக முருகன் said...

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
இதை விளக்கி ஒரு கட்டுரை போடலாமே :)

உங்கள் பேட்டி அருமை...

Kumky said...

ஒரு 10சதவிகிதம்தான் உங்களை வெளிக்கொணர வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது..
கேள்விகளின் நேரடி தன்மையும், பதில்களின் ஆழ்ந்த அனுபவங்களும்...
ரொம்பவும் அருமையாக வந்திருக்கு..

புதியவன் said...

//எல்லாவித அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க அல்ல, மாறாக குவித்துக்கொள்ளவே விரும்பும். அதிகாரம் செயல்படும் விதம் அப்படி!//

சுத்தமா புரியல. அரசு செயல்படும் விதமா? இல்ல அதிகாரம் செயல்படும் விதமா? அரசு அதிகாரங்களைக் குவித்துக்கொள்கிறதா? இல்ல அதிகாரங்களே குவிந்து கொள்கிறதா?

Ken said...

மீண்டும் நன்றி தல

தனித்த இரவுகள்தான் இன்னமும் நிகழ்கின்றன.

:)

manjoorraja said...

சுவாரஸ்யத்துடன் சிந்திக்க வைக்கிறது.

நிலாரசிகன் said...

நல்லதொரு நேர்காணல். நகுலன் பற்றி நீங்கள்தான் எழுத வேண்டும் ஜி :)

நந்தாகுமாரன் said...

நீங்கள் எனக்கு அறிமுகமான போது இணையத்தில் உங்கள் பெயரைத் தேடி வேறொரு தளத்தில் ஏற்கனவே படித்த ஸ்வாரஸ்யமான பேட்டி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

புதியவன், அதிகாரம் செயல்படும் விதம்தான். அதனாலேயே அரசுகள் அப்படிச் செயல்படுகின்றன எனச் சொல்ல வந்தேன். தெளிவாக இல்லை போல :(

நிலாரசிகன், நகுலன் என்ற லேபிளில் பார்க்கவும். எழுதியிருக்கிறேன்.

நர்சிம் said...

அங்கேயும் படித்திருக்கிறேன். நன்றி

மண்குதிரை said...

நன்றி. சிறப்பாக இருக்கிறது.

Anonymous said...

குதபுணர்ச்சி பற்றி கோவா புரட்சி செய்து விட்டது எங்கிறார்கள் நீங்களும் புரட்சி செய்ய வேண்டியது தானே

குப்பன்.யாஹூ said...

கமல் ஹாசன் உங்களுக்கு புடிக்குமாம புடிக்காதா என்று எனக்கு தெரியாது.

ஆனால் என் பார்வையில், நீங்கள் பதிவு உலக கமல் ஹாசன். ஆமாம் புதுமைகளை புகுத்தி பதிவுலகின் முன்னேற்றத்திற்கு இடையறாது பனி ஆற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

மிகவும் சிறப்பான பதிவு இது, புதிய நடை.

மணிஜி said...

”ம்ராயோஜ் க்மாஸ்டா” க்கின் கவிதை படித்தது போல் இருந்தது குருஜி!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. எனக்கு தான் புரில சில விஷயங்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பிரியமுடன் வசந்த், ஆசிர், பா ராஜாராம், விநாயக முருகன், கும்க்கி, புதியவன், கென், மஞ்சூர் ராசா, நிலாரசிகன், நந்தா, நர்சிம், மண்குதிரை, சதீஷ்குமார், குப்பன் யாஹு, தண்டோரா, பேநா மூடி... நன்றி.

மதி.இண்டியா said...

//மும்பை வன்முறையை அவர்கள் அழகான தொடர்-காட்சி மயப்படுத்தலின்மூலம் மக்கள் தங்கள் நினைவிலி மனங்களில் இன்னும் துப்பாக்கி வெடிச் சத்தங்கள் வேண்டும் என ஆவலாய் கேட்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது ஆபத்தானது//

மிக ஆழமான புரிதல் ஜியோ . உண்மை உண்மை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மதி. இண்டியா.

Unknown said...

Oh how I wish that twit Rosavasanth had broken your nose as well as hands.then we wouldnt be subject to this torture from you Jyovram;(arent you ashamed to name yourself as such;even that twit rosa vasanth has better aesthetic sense).

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தச் சின்னப்பெண் மாதிரி நிறைய பின்னூட்டங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

சின்னப்பெண் 2000, பத்து வருடங்கள் ஆகிவிட்டன - இப்போதேனும், நீங்களும் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்ப்பது நலம்.