கணினியும் போர்னோவும் கொலைகளும்

அறைக்குள் திடீரென
யாரும் பிரவேசித்தால்
வலப்பக்க மேல்மூலையிலுள்ள
சின்ன xஐ அழுத்த வேண்டும்
யாரும் வரும் சமயமல்ல என்றாலும்
எலியை அதை நோக்கியே
வைத்திருக்க வேண்டும்
பாகுபாடில்லாமல் அனைவரும்
சோரம்போகும் தளத்தில்
உலாவுகையில்
ஒலியை இல்லாமலாக்க வேண்டும்

சிலிக்கன் பொருத்தப்பட்ட
நிமிர்ந்த மார்பில்
இல்லாத தாலியைத் தொட்டபடி
தொங்கிக் கொண்டிருக்கும்
விறைப்பேறாத குஞ்சா மணிகளையும்
நம்பிக்கைகளையும்
தூரப்போட வேண்டும்

இப்போது வரலாற்றை
அழிக்கும் படலம்
ஆரம்பமாகிறது

ஈழம்

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நானறிந்த வரையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. அவர்களது இந்த மௌனம் என்னை பயமுறுத்துகிறது. அல்லது மிக உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நாம் ஏன் தலையை நுழைக்க வேண்டுமென்று இருக்கிறார்களோ என்னவோ...? ஆனாலும் தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது.

அனைத்திந்திய அளவில் தொலைக்காட்சிகள் போகும் போக்கில் அல்லது ஒளிபரப்ப வேறு விஷயங்கள் இல்லாதபோது மட்டுமே ஈழப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கின்றன. பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பிரச்சனை பிரதானமாகக் கைகொள்ளப் படவில்லை.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியலாம், அதாவது ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமி, சோ, ஹிந்து ராம், மாலன் போன்ற பார்ப்பனர்களாக அவர்கள் இருப்பது. காங்கிரஸ்காரர்களை விடுங்கள்; காவேரி விஷயத்தில்கூட கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் தனித்தனி நிலைப்பாடெடுக்கலாம். ஆனால் ஈழப்பிரச்சனையில் அதுவும் முடியாது. ஆனால் தேசத் தலைமையைவிட அதிக அளவில் குரல் கொடுக்கிறார்கள் மாநிலத் தலைவர்கள்.. Loyal than the king..?? அல்லது ராஜீவின் ஆவி இன்னமும் அவர்களைத் துரத்துகிறதா...?

ஆயுதங்களின் ஷெல்ஃப் லைஃப் முடிவதற்கு முன்னர் உபயோகித்தாக வேண்டிய கட்டாயத்தினால் சில நாடுகளின்மேல் போர்த் தொடுக்கும் அமெரிக்கா. தன்னுடைய ராணுவத் தளவாடங்களை விற்பதற்காகவே உலகின் பல இடங்களில் போர் நடந்து கொண்டேயிருக்க வேண்டுமென விரும்புமது. இப்படிப்பட்ட வல்லரசாகத்தான் இந்தியா விரும்புகிறதா எனத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி, பிற மாநிலத்தவர்களும் யோசித்துப் பார்க்கலாம்.

இந்திய அரசை நோக்கிப் பலர் இங்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இந்தப் போரில் இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிக் கொண்டிருக்கிறது எனும்போது இதைவிட வேலையற்ற செயல் வேறிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் :

இலங்கையில் தம்முடைய தொழில்களை நடத்தும் மாருதிகளின், அஷோக் லேலண்டுகளின், டாடா டீக்களின், ஹீரோ ஹோண்டாக்களின், ஏர்டெல்களின் நலனை முன்வைத்தே இந்தியா செயல்படுகிறது. ஈராக்கில் மறு கட்டுமானப் பணிகளை பல அமெரிக்க நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டதைப் போல இலங்கையில் செய்ய இந்திய கம்பெனிகள் விழைகின்றன. இதையேதான் பிரணாப் முகர்ஜியும் இலங்கையின் மறு கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா உதவும் எனச் சொல்கிறார்.

இந்நிலையில் நமது போராட்ட வடிவமென்பது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என இல்லாது இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts). இதை ஒரு ஆரம்ப கட்ட போராட்ட வடிவமாகச் செய்யலாம். தனிநபராக இல்லாமல், ஏதாவது ஒரு இயக்கம் முன்னெடுத்தால் நல்லது.

விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் என உடுக்கையடிக்க வரும் நண்பர்களுக்கு... மன்னிக்கவும், அதைப் பிறிதொரு சமயம் வைத்துக் கொள்வோம். உடனடித் தேவை போர் நிறுத்தம்... இது எவ்வளவுதான் மொண்ணையான வெற்று மனிதாபிமான அரசியல் கலப்பற்ற கோரிக்கையாக இருப்பினும்.

குறிப்பு : http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே படிக்கலாம் : http://kalugu.com/2009/02/21/eelam-issue/#comment-236. மொழிபெயர்த்து வெளியிட்டமைக்கு கழுகு.காமிற்கு நன்றி.

கழுகுப் பார்வைக்கு கழுகு.காம்

www.kalugu.com

ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்தத் தளத்தைச் சில மாதங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. தளத்தை நடத்துபவர்கள் எழுதுவது மட்டுமல்லாது, பிறரிடமிருந்தும் கட்டுரைகளை வாங்கிப் போடுகிறார்கள்.

தெற்காசியாவை பாதிக்கும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய தீவிரமான கழுகுப் பார்வைகளை முன்வைப்பது இவர்களின் நோக்கம் என்றாலும் பிரதானமாக தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய நிறைய கட்டுரைகள் வருகின்றன.

உதாரணத்திற்கு, சமீபத்தில் வந்த ஒரு சிறு பதிவைக் கீழே தருகிறேன் : (http://kalugu.com/2009/02/05/go-to-hell-syndrome/).

This is a summary of the stands of our politicians about the Tamils getting killed and their voices suppressed militarily. This will spare you from reading very many insensitive statements from our leaders..

TN Chief minister M Karunanidhi says "Let the tigers go to hell!"

Opposition leader J Jayalalitha says "Let the Srilankan Tamils go to hell!"

Actor turned Political leader Vijayakanth says "Let the Loksabha elections go to hell"

External Affairs Minister Pranab Mukherjee says "Let the Srilankan Tamils and Indian Tamils go to hell"

What is suspected to be behind the sudden spread of "Go to Hell" syndrome amongst our politicians is supposed to be another syndrome-"Leave me Alone" syndrome.

என்னையையும் இத்தளத்தில் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். என்னால் ஆங்கிலத்தில் எழுத முடியுமென்று தோன்றவில்லை. நான் தமிழில் எழுதி அதை அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழறியா வாசகர்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாயிருக்குமென்பதால், நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு செய்திருக்கிறேன்.

www.kalugu.com தளத்தை படித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வழக்கமாகிப் போன பழக்கங்கள்

கிளாசில் தண்ணிர் கலந்தபின் ஒரு சொட்டெடுத்து
பூமித் தாய்க்கு தானம் செய்தபின் குடிப்பவன் உதயா
வெட்ட வெளியில் மரங்களின்கீழ் அமர்ந்து
மதுஅருந்துவதையே விரும்புவார்
என் பழைய முதலாளி முரளி
ஏசி அறைகளிலேயே குடிக்க விரும்புபவன் பாபு
(அங்கு புகைப்பிடிப்பதை அனுமதிப்பதில்லை இப்போதெல்லாம்)
டாஸ்மாக் பாரில் வேலை செய்யும்
கங்காவும் வீரமணியும் நண்பர்கள் ஜெயனுக்கு
காசில்லாமலும் சில சமயம் குடிக்கலாம்
தண்ணீரோ சோடாவோ சேர்க்காமல்
கோலாவை மட்டுமே உபயோகிப்பான் குமார்
அரைக்குப்பியை ஐந்து நிமிடத்தில் காலிசெய்துவிட்டு
அலப்பறை செய்வான் ராஜேந்திரன்
வாட்டர் பாக்கெட்டோ உப்புக் கடலையோ கடன்கேட்பவர்களுக்கு
தாராளமாய்க் கொடுப்பான் மனோகர்
குடிக்க வரும் திருநங்கைகளுக்கு
சிகரெட் மற்றும் சில்லரை கொடுத்து
சினேகமாய்க் கதைபேசிக் கொண்டிருப்பான் செல்வநாயகம்
குடிக்கும்போது எதையாவது படிக்கும் பழக்கமுண்டு பழனிக்கு
குடிப்பதிலேயே இவ்வளவு பழக்கங்கள் இருக்க
போதையைச் சொல்லி என்ன செய்ய

சலிப்பு, குடி, புணர்ச்சி இன்னபிற

எந்த சினிமாவையும்
முழுதாக அமர்ந்து பார்க்க முடிவதில்லை இப்போதெல்லாம்
மனதிற்குப் பிடித்த புத்தகமேயானாலும்
இரண்டு மணிநேரத்திற்குமேல் படிக்க முடிவதில்லை
கிரிக்கெட் மேட்ச் என்றாலும் 10 ஓவர்களுக்குமேல்
பார்க்க முடிவதில்லை தொலைக்காட்சியை
பேரழகியாய் இருந்தாலும் எவளையும்
ஒரு வருடத்திற்குமேல் காதலிக்க முடிவதில்லை
பெற்றோரிடமும் மனைவி குழந்தைகளிடமும்
தொடர்ந்து அன்பு செலுத்த முடிவதேயில்லை
உத்தியோகமும் அடிக்கடி
மாறிக் கொண்டேயிருக்கிறது இவனுக்கு
நெருக்கமான நட்புகளும் நெடுங்காலம் தொடர்வதில்லை
எழுதுவதும் சலித்துப் போகிறது பல சமயம்
இப்பட்டியலில் சிக்காமல் இருப்பது
கோல்ட் பிளேக் கிங்ஸும்
ஓல்ட் மாங்கும்
எப்போதாவது புணர்ச்சியும்
சுய இன்பங்களும்

பூனைகளைப் பற்றி ஓர் ஆய்வு

இது பூனை வரும் சமயம்.

ஜன்னல்களையும் கதவையும் அகலத் திறந்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அதன் வருகையை எதிர்பார்திருந்தான். வீட்டில் யாருமில்லை. கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டான். பூனை நுழைந்தது.

வெள்ளை நிறத்தில் முதுகின் மீது லேசான மஞ்சள் நிறத்தில் இருந்தது பூனை. வெள்ளை மஞ்சள் நிறப் பூனை என நகுலன் வந்து சொல்லிப் போனார். வாசலில் நின்று கொண்டு கண்களை மூடித் திறந்தது. நிழைவாயிலில் நின்று கொண்டிருந்த அதைப் பார்த்துச் சிரித்தான். உடலை விரைப்பாக்கி முதுகை நிமிர்த்திச் சோம்பல் முறித்துச் சிரித்தது. மியாவ் என்று நாக்கை நீட்டி மீசையத் தடவி விட்டுக் கொண்டது. உள்ளே வருமாறு அழைத்தான். தலையை நிமிர்த்தி அறையில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நுழைந்தது. ஒன்பதடி தொலைவில் நின்று கொண்டது. அருகில் வருமாறு அழைத்தான். தயங்கியது. கையை நீட்டி அதை இழுத்தான். தன்னுடைய எதிர்ப்பை லேசாகக் காட்டிக் கொண்டு வந்தது. அதன் உடல் மேல் தன் கை பட்டதும் அந்த மென்மையான ஸ்பரிசத்தை மிக நேசித்தான்.

முதலில் அந்தப் பூனை வரத் தொடங்கியபோது அவனுக்குச் சிறிய வயது. அதனுடன் விளையாடுவது அவனுக்குப் பிடித்துப் போனது. வீட்டில் யாராவது இருக்கும் போது சில சமயங்களில் அது வந்து விடும். நேரம் காலம் இல்லாமல் அதனுடன் அவன் விளையாடுவான். அந்தப் பூனை வளர்ந்து கொண்டேயிருந்தது. திடீரென்று ஒரு நாள் சிங்கம் போல் வளர்ந்த அது உறுமிய போது பயந்து போனான். அதை வெளியே அனுப்ப முடியாமல் திணறினான். அதன் ஸ்பரிசம் இன்னும் கைகளில் இருந்து கொண்டிருந்தது. அது பெரிதானாலும் தோல் மென்மை மாறவேயில்லை. மிகவும் பயந்து போனவனாய் அதனோடு விளையாடுவதை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்தான். அது மறுபடியும் சிறிதானவுடன் அவனுக்கு ஆசுவாசமேற்பட்டது.

(தினம் ஒவ்வொரு ரூபம் கொள்ளும் பூனை. ஒரு நாள் சிகப்பாக இருக்கும்; மறுநாள் மஞ்சளாக மாறும். திடீரென்று கறுப்பாகும் போது அவனை அச்சம் ஒரு அடர்ந்த போர்வையைப் போல் மூடிக் கொள்ளும். முதுகில் இருக்கும் வரிகள் சில நாட்கள் காணாமல் போகும். அவனும் கொஞ்சம் கொஞ்சமாகப் பூனையாக மாறுவதை உணர்ந்து ஓவென அழத் துவங்கினான்.)

விரும்பிய போது வந்து கொண்டிருந்த பூனை அவன் விரும்பாத போதும் வரத் துவங்கியது. முதலில் அதை விலகச் சொல்லிக் கெஞ்சியவன் பிறகு மிரட்டத் துவங்கினான். அது அவனை பொருட்டாகவே மதிக்கவில்லை. மெதுவாக அவனை நெருங்கி கைவிரல்களைக் கடித்து தின்ன ஆரம்பித்தது. அந்த வலியின் இதத்தில் கண்களை மூடிக் கொண்டான். நாக்கால் நக்கிக் கொடுத்தது. அதன் சொரசொரப்பில் கையை நீட்டிக் கொடுத்தான். நாக்கு வாளைப் போல் அறுக்க ஆரம்பித்தது. தரையெங்கும் ரத்தம். கதவைத் தாண்டி வெளியே ஓடிய ரத்தத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பூனை ரத்தத்தைக் குடிக்கத் துவங்கியது.

பூனைகளை நேசிக்கும் நண்பர்களின் வீடுகளைத் தேடிச் சென்றான். தொலைக்காட்சியில் வரும் பூனைக் காட்சிகளைப் பதிவு செய்து வைத்திருந்தார்கள். வீடு முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகளாக அடுக்கிப் பூனைகளைக் காட்டினார்கள். வீடெங்கும் பூனைகள் சுதந்திரமாகத் திரிந்தன. ஜன்னலைத் திறந்து பார்த்தான். தெருவெங்கும் பூனைகள். ‘எங்கு பார்த்தாலும் பூனைகள், பூனைகள், இது பூனைகளின் உலகமாகிவிட்டது' எனக் கத்திக் கொண்டே ஓடினான்.

இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் நான், ‘அதிலொன்றும் தவறில்லையே' என்றேன். ‘கதை எழுதுவது தான் உன் வேலை. குறுக்கே பேசுவது அல்ல' என்றான்.

வீட்டிற்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண்கள் வந்திருந்தார்கள். உட்கார வைத்துப்பேசிக் கொண்டிருக்கையில், பூனை வந்துவிடக் கூடாதென்று வேண்டிக் கொண்டிருந்தான். ஆனால் பூனை மெதுவாக உள்ளே நுழைந்தது. ‘போய்விடு; இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்' என இரைந்தான். பூனை அலட்சியப் படுத்தி அவன் மேல் ஏறியது. அவன் கதறக் கதறக் கேட்காமல் அவனது கழுத்தில் தன் கூர்மையான பற்களைப் பதித்தது. அவனது அலறல் அந்தக் கட்டிடத்தையே நடுக்கியது. முழித்துப் பார்க்கையில் பெண்கள் போய்விட்டிருந்தார்கள். இந்த உலகத்திலிருந்து பூனைகளை ஒழிப்பேன் என சபதம் பூண்டான். ‘உன்னால் அது ஆகாது. எங்களை அழிக்க யாராலும் முடியாது. முயற்சித்தவர்களை நாங்கள் அழித்து விட்டோம்' எனக் கெக்கலித்தது பூனை. அன்று முதல் பூனைகளை அழிக்க வெறி கொண்டு அலைந்தான்.

பூனைகளை விட்டுப் பிரிந்த புதிதில் சில நாட்களுக்கு பைத்தியம் பிடித்தவன் போலானான். மாற்றாக நாய் வளர்க்க முடிவு செய்து குட்டி நாய் ஒன்றை வாங்கினான். குருப்பு நிறக் குட்டி நாய் எப்போதும் அவன் கால்களைச் சுற்றிக் கொண்டிருக்கும். அதனுடன் விளையாடுவதில் அவன் பூனைகளை மறக்க ஆரம்பித்தான். நாயைக் கூட்டிக் கொண்டு காலையில் நடை போவான். அதற்குத் தாவி உணவைப் பிடிக்கும், டயருக்குள் பாயும் வித்தைகள் எனப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தான். அந்த நாயும் சுதந்திரமாக அவனது படுக்கையறை வரை உலவியது. அவன் மேல் ஏறி விளையாடியது. நாக்கால் அவன் கால்களை நக்கியது. கால் விரல்களைக் கவ்வியது. நெஞ்சின் மீதேறி, தன்னுடைய ஈரமான மூக்கினால் அவனது கழுத்தைச் சீண்டியது. திடீரென்று குரல்வளையைக் கவ்வியது. அலறிக் கொண்டு நாயைத் தூக்கிப் போட்டான். எழுந்தமர்ந்து பார்த்ததில் அது பூனையாக மாறியிருந்தது. கண்களில் அவனை வெற்றி கொண்ட பெருமிதம். ஓவென்று அழத் துவங்கினான். பூனைகளை ஒழிக்க முடியாதா எனப் புலம்பினான்.

பூனைகளைப் பற்றிய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தான். புத்தகங்களின் மேலிருந்தும் நடுவிலிருந்துமாகப் பல பூனைகள் தோன்றின. அந்தப் பூனைகளின் சத்தம் நாராசமாயிருந்தது. வாசல், திண்ணை, படுக்கை, சமையலறைப் பாத்திரம் என எங்கும் பூனைகள் வசிக்கலாயிற்று. பூனையின் மென்மையை நினைத்தாலே திகட்டலாயிற்று. புத்தகங்களில் உள்ள பூனைகளை அழிக்கும் முறைகளைச் செய்து பார்த்தான்.

“உன்னுடைய முயற்சி சிறுபிள்ளைத் தனமாயிருக்கிறது” என்றேன், இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கும் நான்.

“உன் வேலையை நீ பார்”

“இந்தக் கோபம் தான் உன்னால் பூனைகளை அழிக்க முடியாதிருக்கும் காரணம்”

“ஐயா, கோபத்தைத் துறந்த முனிவரே, உங்களால் பூனைகளை ஒழிக்க முடிந்ததா”

“நான் பூனைகளை ஒழிக்க நினைக்கவேயில்லையே”

“நீ கதை எழுதுவதை விட்டுவிட்டு வாதம் செய்கிறாய்”

பதினாறாம் நூற்றாண்டுப் புத்தகமொன்றில் பூனையைக் கவனிப்பதால்தான் அதன் முக்கியத்துவம் கூடுகிறதென்றும், அதனைக் கண்டு கொள்ளவே கூடாதென்றும் இருந்தது. பூனைகளைப் பார்த்தாலும் பார்க்காதது போல் இருக்கலானான். அவை அவன் மடியில் வந்து உட்காரும். கைகளை நக்கும். உடலைத் தேய்க்கும். அவன் இறுகிய மனத்துடன் அவற்றைப் புறக்கணித்தான். பூனைகள் அவனைக் கிண்டல் செய்தன. மீசையைத் தடவிக் காட்டின. அவனெதிரில் ஜோடி ஜோடியாகப் பூனைகள் கூத்தாடின. அறையெங்கும் மறுபடி பூனைகள். ‘என்னை விட்டுப் போய்விடுங்கள்' எனக் கதறினான். “இவ்வளவு நாட்கள் நான் உங்கள் அடிமையாயிருந்தது போதாதா? எவ்வளவு சிநேகிதமாகப் பழகியிருக்கிறேன்; உண்பதற்கு எவ்வளவு கொடுத்தேன்; எனக்கு விருப்பமில்லையெனத் தெரிந்த பிறகும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்; தயவு செய்து போய்விடுங்கள்.” பூனைகள் மறுபடியும் அவனைச் சுற்றின. தூக்கத்திலும் விழிப்பிலும் அவனை ஆண்டன.

பூனைகளில் பலவகை உண்டு. நெருங்கிப் பழகும்; தூரத்திலிருந்தே சிநேகமாய்ச் சிரிக்கும்; மடியில் வந்து அமர்ந்து கொள்ளும்; காலைக் கடிக்கும், உருண்டையான கண்களால் உருட்டிப் பார்க்கும், நகத்தை நீட்டிப் பிறாண்டும்... எனப் பலவகை. காலில் அடிப்பாகம் மெத்தென்று இருக்கும். தரையில் காலை அழுத்தித் தாவும் போது நகங்கள் தரையைக் கீறும் சப்தம் சிலிர்க்க வைக்கும். தாவும் போது சில சமயம் நகங்கள் கீறுமே தவிர, தரை இறங்குகையில் மெத்தென்று தான் குதிக்கும். அதன் முதுகைச் சற்று அழுத்தித் தேய்தால் முடி கொட்டும். அவனது பாட்டி பூனையின் ஒரு முடி விழுத்தாலும் ஏழேழு ஜென்மங்களுக்கும் அந்தப் பாவம் தொடரும் என்பாள். இப்படிப் பட்ட மாயைகள் பூனைகளைக் காப்பாற்றுகின்ற என நினைத்தான்.

“அவ்வளவு தான்” என்றான்.

கதையைப் பாதியில் நிறுத்தினான். மேலே கதையைச் சொல்ல விருப்பமில்லை; அது முடியவும் முடியாதென்றான்.

ஆனால் இந்தக் கதையை எழுதுவது நான் தானே. கூர்ந்து கவனித்து விட்டேன்.

அவன் தன் கைகளில் விஷ பாட்டிலை வைத்துக் கொண்டிருந்த போது அறையினுள் நிழைந்தேன்.

ஒரு சிறிய பாத்திரத்தில் பாலை விட்டான். அதில் விஷத்தைக் கலந்தான். ‘இதைப் பூனை குடித்தால் நொடிப் பொழுதில் மரணம் தான்' என உரக்கச் சொல்லிக் கொண்டான். ‘ஒரு பூனையை அழித்தால் போதும்; மற்றவை தானாக அழிந்து விடும்' என்றான். ஒரு மாதிரியான மயக்கத்தில் இருந்தான். முகத்தில் வியர்வை ஊறிக் கொண்டே இருந்தது. நாற்பத்தைந்து கைக்குட்டைகளில் துடைத்துப் போட்டும் அடங்குவதாயில்லை. அறையெங்கும் வியர்வை நெடி. விஷப் பால் கலந்த பாத்திரத்தை கதவருகில் வைத்தான்.

பூனை நுழைந்தது. பாத்திரத்தைப் பார்த்துச் சிரித்தது. அவனை முறைத்தபடி பாலைக் குடித்தது. விதிர்த்துப் போய் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அது பாலை நக்கிக் குடிக்கும் சத்தம் அறையின் மௌனத்தைக் கிழித்தது. முழுவதுமாகக் குடித்து முடித்தது. பாத்திரத்தில் ஒட்டியிருந்த பாலை நக்கும் போது, இடதும் வலதுமாகப் பாத்திரம் ஓசையெழுப்பியபடி நகர்ந்தது. தலையை நிமிர்த்தி மீசையில் ஒட்டியிருந்த பாலை நாக்கை வெளியில் நீட்டிச் சுத்தம் செய்தது.

“அவ்வளவுதான், பூனைகள் ஒழிந்தன” எனக் கூக்குரலிட்டான்.

அது அவனைப் பார்த்தபடியேயிருந்தது. ஒவ்வொன்றாகப் பல நிறத்தில் பூனைகள் வரத் துவங்கின. அறையெங்கும் உலகெங்கும் பூனைகள் தோன்றி அலைந்தபடியே இருக்கின்றன.

(இது ஒரு மீள் பதிவு)

ஒரு பதிவு, கலைஞர், அறிவிப்பு

அவ்வப்போது இணையத்தில் மேயும்போது படிக்கும் பதிவுகளில் பிடித்தவற்றை அறிமுகம் செய்து வருகிறேன். இன்றைக்கு : மதன் (www.azhagiyalkadhaigal.blogspot.com).

நிறைய கவிதைகளும் எப்போதாவது கதை / கட்டுரைகளும் எழுதுகிறார். 'போலக் கவிதை'களாகவே நிறைய இணையத்தில் பார்க்க முடியும் வேளையில், இவரது கவிதைகள் தனித்துவமானவையாகத் தெரிகின்றன. பல்வேறு முறைகளில் கவிதைகளைச் சொல்லிச் செல்கிறார்.

எனக்குப் பிடித்திருக்கும் இவரது கவிதைகளை நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!

***

இதை எழுதிவைத்து மூன்று நாட்களாக வெளியிடவேண்டாமென்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் 'திடீர் சாம்பார்' 'திடீர் ரசம்' மாதிரி சில திடீர் தமிழ்ப் பற்றாளர்கள் இணையத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக எழுதும் இடுகைகளைப் படித்தால் சிரிப்பு வருகிறது; சில சமயம் எரிச்சலும். என்னவோ கலைஞர்தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதுமாதிரி இவர்கள் திரிக்கும்போது கோபம்வராமல் என்ன செய்யும்? காங்கிரசைக்கூடக் கும்முகிறார்கள் - ஆனால் நீங்கள் கவனமாகப் பார்த்தால் புரியும், அதிமுகவையோ அல்லது ஜெயலலிதாவையோ லேசான நகக்கீறல்கூடப் படாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

கைது நடவடிக்கைகளின்போது போலீஸ் எப்படி நடந்து கொள்வார்கள்? ஜெயேந்திரனை எப்படிக் கைது செய்தனர், கதிரவனை எப்படிக் கைது செய்தனர் என்பதை நீங்கள் மனக்கண்முன் கொண்டுவந்தால் இதற்கான விடை கிடைக்கலாம். அல்லது ராமலிங்க ராஜூ Vs 1000 ஆயிரம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த திருடன் அல்லது ஜெயலலிதா கைது செய்யப்பட்டது Vs கலைஞர் கைது செய்யப்பட்டது ... இப்படியாகப் பல உதாரணங்களை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். அந்தப் போலீஸ் மனநிலையே கலைஞர் x ஜெயலலிதா விஷயத்தில் வலைப்பதிவர்களிடம் இருக்கிறது.

இதில் சிலர் முன் ஜாமீன் வாங்கிவிடுகிறார்கள் : ஜெ என்றால் அவர் அப்படித்தான் என்பதால் பிரச்சனையில்லையாம். அதாவது நீங்கள் நட்பு சக்தியைத்தான் அதிகம் விமர்சிப்பீர்களா..? எதிரிகளை அவர்கள் எதிரிகள் என்பதற்காகவே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா... :(

உண்மையான அக்கறையுடன் சிலர் எழுதுவது புரிந்தாலும் (இந்த விஷயத்தில் கலைஞர் மேல் எனக்கும் கோபமும் வருத்தமும் உண்டு), இதையே சாக்காக வைத்துக் கொண்டு சிலர் கலைஞரைக் காய்வதையும் சில இணைய திடீர் புரட்சியாளர்கள் சதிகார கருணாநிதி என்றெல்லாம் எழுதுவைதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

***

இந்த ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒடுக்குமுறைக்கெதிரான வலைப்பதிவர்கள் குழு தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வீரவணக்கக் கூட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். விவரங்கள் :

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4.00 மணி முதல்
இடம் : நடேசன் பூங்கா, தி. நகர், சென்னை.

(அவ்வறிவிப்பில் இருக்கும் ஒரு வார்த்தை எனக்கு ஏற்புடையதில்லை என்பதால் முழுதாகத் தரவில்லை. நேரில் சந்திக்கும்போது பேசிக் கொள்வோம்).

வலைப்பதிவர்கள் / வலைப்பதிவுலக வாசகர்கள் அனைவரையும் வரும்படி அழைக்கிறோம்.

வெற்றி வெற்றி, இந்தியா வெற்றி!!

இன்றைய இரண்டாவது போட்டியில் இந்தியா இலங்கையை வென்றிருக்கிறது. இது நாம் தொடர்ந்து பெறும் ஏழாவது வெற்றியாகும்.

நவம்பர் மாதம் நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தை ஐந்துமுறை வென்றோம். அது clean sweep எனச் சொல்லக்கூடிய ஏழு வெற்றியாக ஆகியிருக்க வேண்டியது, பயங்கரவாதிகளின் செயலால் முக்கால் கிணறு தாண்டிய நிலையில் நிறுத்தப்பட்டது. இப்போது நாம் ஆட்சி செய்ய விரும்பும் இலங்கையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றிருக்கிறோம்.

இனிமேலாவது அகண்ட பாரதக் கனவுகள் தவறென்று யாரும் சொல்ல மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

முதல் போட்டியில் நாம் சேஸ் செய்து வென்றோம். அவர்கள் 246 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நமது வீரர்கள் - குறிப்பாக தோனி, கம்பீர் போன்றவர்கள் - நன்றாக ஆடி போட்டியை ஜெயித்துக் கொடுத்தனர்.

ஆனாலும் பாருங்கள் சதம் அடித்ததற்காக ஜெயசூர்யாவிற்கே ஆட்ட நாயகன் விருது தந்திருந்தார்கள். இன்று அது 57 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக இஷாந்த் ஷர்மாவிற்குக் கொடுக்கப்பட்டதன் மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. 93 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் கடாம்பிக்கு நம் வருத்தங்கள் உரித்தாகுக.

இன்றைய போட்டியில் முதலில் ஆடி வென்றிருக்கிறோம். நேற்று பேட்டியில் தோனி விளக்கு வெளிச்சத்தில் சேஸ் செய்வதைப் பற்றிய தன்னுடைய தயக்கங்களைத் தெரிவித்திருந்தார். அப்போதிலிருந்தே என்னைப் போன்ற பலருக்கு மன நெருக்கடி வந்துவிட்டது. நல்ல வேளையாக இன்றும் அவர் டாஸ் ஜெயித்துவிட்டார். நாம் முதலில் பேட் செய்தோம்.

ஆனாலும், நாம் முதலில் பேட் செய்தாலும் சரி, பௌலிங் செய்தாலும் சரி, இந்தியாவுக்கே வெற்றி என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எப்போதுமே இலங்கை தன் மண்ணில் விளையாடும்போது வெற்றியே பெறும். ஆஸ்திரேலியா வலுவாக இருந்தபோதே அங்கு தோற்றிருக்கிறது. ஆனால் இப்போதைய நம் இளஞ்சிங்கம் தோனியின் தலைமை அந்த இலங்கை மேலாண்மையை அவர்கள் மண்ணிலேயே முறியடித்திருக்கிறது. . சென்ற முறை டெஸ்ட் தொடர்களில் தோற்றதற்குக் காரணம் கும்ப்ளே போன்ற வயதான தலைவர்களே. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் நாம் ஜெயித்திருந்தோம் என்பதிலிருந்தே தலைமைக்கு இள ரத்தம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

இந்நேரத்தில் நம்முடைய நாயகர்களை நாம் அங்கீகரிக்காமல் இருப்பது தவறு. சென்ற போட்டியில் தோனி, கம்பீர், ரைனா அரை சதம் அடித்திருந்தனர். அதில் தோனி ஆட்டமிழக்காமல் வேறு இருந்திருக்கிறார் (அதனால்தான் ஒரு நாளைக்கு 3 லிட்டர் பால் குடிக்க வேண்டுமென்று நான் சொல்கிறேன். போலவே போஷாக்கான உணவுகளும் வேண்டும் நல்ல திடகாத்திரமான உடல் வலிமைக்கும் விளையாட்டுகளில் அடுத்த நாடுகளை வெல்வதற்கும்). இன்றைய போட்டியில் யுவ்ராஜ் சிங், ஷேவாக் அரை சதம் அடித்திருக்கின்றனர். பிரவீன் குமார் 8.3 ஓவர்களில் 22 ரன்களே கொடுத்திருக்கிறார் எனும்போது அவரது பங்கும் மிகப் பெரிய பாராட்டுக்குரியது.

வேண்டுமென்றே முத்தையா முரளிதரன் தான் தமிழன் என்பதற்காக விட்டுக்கொடுத்தார் எனச் சிலர் சொல்லலாம். ஆனால் அதிலெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடி ஒளிபரப்பில் பார்த்த 100 கோடிக்கு மேலான இந்தியர்களும் உணர்ந்திருப்பார்கள்.

ஐந்து போட்டிகள் உள்ள இந்தத் தொடரில் நாம் ஐந்திலும் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொள்வோம். தொடர் முடிந்தபின் அடுத்தகட்ட நிலவர அறிக்கை வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவ்வளவுதான்.