Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகாரி) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் எனச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை - http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_21.html. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : http://madrasdada.blogspot.com)

என் விநாயக முருகன் கவிதைகள்

என் விநாயக முருகன் மே மாததிலிருந்து வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதானமாக கவிதைகள். நவீன விருட்சம், கீற்று, திண்ணை, உயிரோசை தளங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இவரைப் படித்திருக்கலாம்.

தொடர்ந்து ஒரு தளத்திற்கு மேலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நுட்பமான பார்வையுடன் சிறுசிறு விஷயங்களையும் கவனித்து கவிதையாக்குகிறார் விநாயக முருகன். ஹோட்டல் வாஷ் பேசினில் கைகழுவும் சம்பவத்தைக் கவிதையாக்குகிறார் (பார்க்க : http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html). இந்த இடத்தில் இது குறித்த முகுந்த் நாகராஜனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது!. நேற்று பதிவிட்ட இவரது ஒரு மழை இரவில் நடந்தவை கவிதையும் நன்றாக இருக்கிறது. நமது வசதியை மனதில் வைத்துத்தானே நாம் மழை வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ சொல்கிறோம்!.

பல கவிதைகள் எளிமையான நேரடிக் கவிதைகள். மீன் தொட்டியைப் பார்க்கிறார். அதன் விவரங்களையும் சௌகர்யங்களையும் விற்பனையாளன் விவரிக்கிறான். எல்லாம் சரிதான். ஆனால் மீன்களுக்கும் அந்த மீன் தொட்டி பிடிக்குமென்பது இவரைக் குழப்புகிறது (http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html).

இவரது சற்று முன் வந்த மின்னஞ்சல் கவிதையைக் கீழே தருகிறேன் :
 
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.

(http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html)

இவருடைய பல கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.

என் விநாயக முருகனின் வலைப்பதிவு முகவரி : www.nvmonline.blogspot.com

 
 

கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உன்னதம் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். சில வருடங்களுக்கு முன்பு காத்திரமான சிறுபத்திரிகையாக வெளி வந்த இதழ்தான் உன்னதம். இப்போது இடை நிலை இதழ்களின் கை ஓங்கிவிட்ட காலத்தில் சிறுபத்திரிகைகள் வருவது இன்னும் சிரமமாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்திலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். புதுவித எழுத்து முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். சிறுகதைகள் குறித்து கறாரான பார்வைகள் உடையவர். ஆகஸ்ட் மாத உன்னதம் இதழில் அவர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 1

... தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுகிறார்கள்.

அதாவது, புதுமைப் பித்தன் காலத்தை சிறுகதைத் துறையின் பொற்காலம் என்று கொள்ளலாம். அந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம், அதுவரை உரைநடையிலும், வடிவ நேர்த்தியிலும் மரபார்ந்த பாணியில் இயங்கி வந்த கதையாடலை முற்றிலும் புதிய வடிவிலான நவீனதளத்திற்குத் தள்ளினார் பித்தன். அவர் ஒரு புதிய பாணியை (trend setting) உருவாக்கியவர். அவரது சுவடொற்றி வந்த மற்ற ஆளுமைகளும் தங்களது எழுத்து வன்மைகேற்ப இயங்கினர். இதை நவீன காலகட்டை 1 என்று குறிக்கலாம்.

இதற்குப் பின்னால் வந்த பி எஸ் ராமையா இந்த இலக்கிய மனப்பான்மையை (mood) கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் (அவரது இலக்கிய லாபி கொஞ்ச காலம் மட்டுமே கை கொடுத்தது). அதன் பின்னால் வந்த ஒரு வரிசை (வ.ரா., சிட்டி, மீ.ப.சோமு, கி.ரா. சங்கு சுப்ரமணியன், றாலி, கரிச்சான் குஞ்சு...) கானல் நீராக மங்கிப் போய்விடுகிறது.

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 2

அடுத்து வந்த வரிசை பித்தன் காலத்து நவீனத்துவப் போக்கை அப்படியே பின்பற்றாது வாழ்வியலின் அகம் சார்ந்த தரிசனத்தோடு முற்றிலும் நவீனத்துவமாகிறது. மௌனி சார்ந்து பிரமிளிடமிருந்து கவித்துவமாகத் துவங்கும் இவ்வரிசை கசடதபற நா கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம ராஜாராம் போன்றவர்களின் தீவிரத்தில் ஆரம்பித்து சா கந்தசாமி, ந முத்துசாமி, அம்பை.. என ஒரு புதிய பாணி உருவாகிறது. இந்த வரிசை தமிழ்ச்சூழலில் நிராகரிக்க முடியாத கதைகாரர்களாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

இங்கும் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பி எஸ் ராமையாக்கள் இருந்தார்கள். இதை நவீன காலகட்டம் 2 என்று குறிக்கலாம்.

சிறுகதைகளின் யதார்த்தவாதக் காலகட்டம்

... யதார்த்தவாதம் என்னும் அழகியலை தமிழின் மண்ணோடு இணைத்து அதன் செழுமை மிக்க கதையாடலை உருவாக்கத் தொடங்கியவர்களில், கி. ரா சார்ந்து பா செ., பூமணி, வண்ணநிலவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களுக்கு நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இதற்கடுத்த வரிசை (பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி வகையறாக்கள்) இந்தப் பிரபலமான யதார்த்தப் பாணியை அப்படியே பின்பற்றி தாங்களும் நீர்த்துப் போய் சிறுகதைத் துறையையும் நீர்த்துப் போக வைத்தது...

சிறுகதைகளின் பின்நவீனத்துவ காலகட்டம்

ஆக, புதிதாக ஒரு பாணியை உருவாக்காமல் லாபியை வைத்தே குதிரை ஏறிக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ, அடுத்த வந்த வரிசை (கௌதம சித்தார்த்தன், கோணங்கி, எம் டி முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், எஸ் ராமகிருஷ்ணன்...) அப்பொழுது உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பின்நவீனத்துவம் என்னும் பாணியை உருவாக்கியது...

... இந்தக் கட்டத்தில் உருவான பி எஸ் ராமையாக்களாக பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், கார்த்திகா ராஜ்குமார் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களிடமிருந்து மேலெழுந்து வந்தவர்தான் ஜெயமோகன்.

ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு இந்தக் கதையாடலின் தீவிரம் சரிய ஆரம்பித்திருக்கிறது. புதுமைப் பித்தன் காலத்துக் கதையாடல்களின் தீவிரத்தன்மையை கல்கி மடை மாற்றி விட்டாற் போன்றதொரு சூழல் உருவானது. பத்திரிகைகளில் காலச்சுவடு கண்ணனின் பிரவேசம், சிறுபத்திரிகைகளின் தீவிரத்தன்மை மங்கி இடைநிலைப் பத்திரிகைகளின் தோற்றம், ஜெயமோகனின் கத்தடாய்கள் (ஜெயமோகனின் கதைகளைப் பற்றிய பிரமிளின் விமர்சனச் சொற்றொடர்) பற்றிப் பாராட்டும் வாசகர் கடிதங்கள்.

இந்தச் சரிவு இத்தோடு நிற்காமல், ஜெயமோகனின் கத்தடாய்களில் ராமகிருஷ்ணனும் சேர்ந்து கொள்ள, ரமேஷ் பிரேம் மெதுவாக அவர்களை நோக்கிப் பின் நகர...

எனச் செல்கிறது கட்டுரை. சிறுகதைகளின் தலித் இலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என அலசுகிறார். இறுதில் தன்னுடைய பார்வையாக தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அரசியல் மொழியாகத்தானிருக்கும் என்கிறார்.

உன்னதம் இதழைப் படிக்க விரும்புபவர்களுக்காக :

உன்னதம் - தனி இதழ் ரூ 20, ஆண்டுச் சந்தா ரூ 200. தொடர்புக்கு :
உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638 455, ஈரோடு மாவட்டம். அலைபேசி : 99407 86278

நண்பர் பா ராஜாராம்

நேற்று இரவு 12 மணி வாக்கில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பா ராஜாராமின் கவிதையொன்று தமிழ்மணத்தில் இருந்தது. ஏற்கனவே வாசித்தது போன்ற நினைவு.

என்னுடைய 20 வயதில் குமார்ஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக தெய்வாவும் பா ராஜாராமும் பழக்கமானார்கள். வாரத்திற்கு இரண்டு முறை குமார்ஜிக்கும் பா ராஜாராமுக்கும் நீளமான கடிதங்களை எழுதுவது என் வழக்கம். பெரும்பாலும் படித்த புத்தகங்கள், கவிதைகள் தொடர்பாகத்தான் இருக்கும் கடிதங்கள். என்னிலும் 6 வயது மூத்தவர்கள் மூவரும் என்றாலும், அது துளியும் தெரியாமல் நட்புடன் பழகுவார்கள்.

1994ல் நான் ஒரு மன அழுத்தத்தில் இருந்தபோது (வேறு என்ன, எல்லாம் எழவெடுத்த காதல் தோல்விதான்), கிளம்பி வாடா சிவகங்கைக்கு என்றார். சிவகங்கைக்குப் போய் ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்.

டிவிஎஸ் 50 வைத்திருந்தார். அதில்தான் ஊர் சுற்றுவது. அப்போது அந்த ஊரில் பார் வசதி கிடையாது என்பதால் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர். ஆஹா, தனி அறையெல்லாம் எடுத்திருக்கிறார்களே, சரியான செட்தான் என்று சந்தோஷப்பட்டால்... எல்லாருமே 60 எம் எல் அல்லது 90 எம் எல் பார்ட்டிகள்! (நுரைகளற்ற 90 மில்லிக்கான காசு இருந்தது பாக்கெட்டில் என்ற ராஜாராமின் கவிதை வரி இப்போது ஞாபகம் வருகிறது).

ராஜாராமின் வீடும், பின்னாலிருந்த அவரது அறையும், தெருக்களும், ரயில்வே ஸ்டேஷனும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்தக் குடி அறையின் வாசலில் இருந்த பெட்டிக் கடையில் வாங்கிய கோலி சோடாவும் கலரும்கூட. இன்னொரு முறை கோலி கலர் கலந்து ரம் குடித்தால் அந்தப் பழைய வாசனையைக்கூட கண்டுகொள்வேன் என நினைக்கிறேன்.

நிறைய கடிதங்களும் எப்போதாவது தொலைபேசி அழைப்புகளுமாக எங்கள் நட்பு இருந்தது. ராஜாராம் பழகுவதற்கு மிகப் பிரியமானவர்.

அவ்வப்போது அவரது கவிதைகள் சிறுபத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. கணையாழியில் சில கவிதைகள் வந்திருக்கின்றன. சுபமங்களாவின் கடைசி இதழில் (கோமல் இறந்த பிறகு ஒரு இதழ் வந்தது - வண்ண நிலவனை ஆசிரியராகக் கொண்டு) நடுப்பக்கத்தில் இவரது கவிதை வந்த நினைவு.

நாங்கள் எழுதும் கவிதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம். அதிகமும் இவரது கவிதைகளைப் பாராட்டியதில்லை நான். அது சரியில்லை, இது சரியில்லை என்று நொள்ளை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்.

அவ்வளவு அன்பான மனிதருடன் 1996க்குப் பிறகு திடீரென்று தொடர்பு அறுந்து போய்விட்டது. எவ்வளவு முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

எப்போதாவது குமார்ஜியிடமோ தெய்வாவிடமோ பேச நேர்கையில் ராஜாராம் பற்றிய பேச்சு வராமல் இருக்காது!

நடுவில்தான் நேற்று வலைப்பதிவில் அவரது கவிதையைப் படித்தது, அவர்தான் என்று பின்னூட்டத்தில் உறுதி செய்து கொண்டது, பிறகு அலைபேசியில் வெகுநேரம் பேசி, கடிதம் எழுதி என....

குமார்ஜி எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. வாசிப்பதுகூட அதிகபட்சம் ஆனந்த விகடன்தான். தெய்வா எப்போதுமே எழுதுவதில்லை - படிப்பதோடு சரி. இப்போது சவுதியில் இருக்கும் ராஜாராம் திரும்ப எழுத வந்திருக்கிறார். வலைப்பதிவில் தன்னுடைய கவிதைகளைப் பதிய ஆரம்பித்திருக்கிறார்.

மாதிரிக்கு ஒரு கவிதை :

குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.

அவரது வலைப்பதிவு முகவரி : www.karuvelanizhal.blogspot.com. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கலாம்.

ராஜாராம் நேற்று சொன்னது போல தேடித் தேடியும் தொலைந்த நட்பு பிறகு சடாரென்று எதேச்சையாகக் கிடைப்பது உன்னதமான கணம்தான். மிக மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

போட்டிகளும் வேறு விஷயங்களும்

உரையாடல் சிறுகதைப் போட்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறைய கதைகள் வந்திருக்கின்றன. (இதுவரை 111 கதைகள்) . மிச்சமிருக்கும் 7 நாட்களில் மற்ற வலைப்பதிவர்களையும் கதை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு வந்துள்ள எல்லாக் கதைகளையும் இந்த இணைப்பில் படிக்கலாம் :

http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

செந்தழல் ரவி சிரத்தை எடுத்து எல்லாக் கதைகளையும் வாசித்து தன்னுடைய இம்சை வலைப்பதிவில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மின்னல் பக்கம் லாவண்யாவும் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளார். அதன் விவரங்கள் உயிரோடையின் தளத்தில் இருக்கின்றன. ச முத்துவேல் எழுதிய கவிதையொன்றைப் பார்த்து கதை சொல்ல வேண்டும். கதை அளவு ஒரு பக்கத்திலிருந்து மூன்று பக்கங்கள் இருக்கலாம். மேல் விவரங்களுக்கு :

http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html

இந்தப் போட்டியிலும், அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உயிரோடை சிறுகதைப் போட்டியில் வந்த ஒரே ஒரு கதையைத்தான் படித்திருக்கிறேன் இதுவரை. நானும், ஸ்ரீவித்யாவும், அனுவித்யாவும், வெறும் வித்யாவும்... என்ற தலைப்பில் நந்தா எழுதியதிருந்த கதை எனக்கு மிகப் பிடித்திருந்தது.

நந்தாவின் இந்தக் கதை மட்டுமல்ல, அவரது பல கவிதைகளும் என்னைக் கவர்கின்றன. ஒரு மாதிரி டிஜிட்டல் கவிஞர்! பிரம்மராஜன், எஸ் சண்முகம் போன்ற கவிஞர்களை வாசித்தவர்கள் இவரை அதிகமாக ரசிக்க முடியும். மனிதர் கவிதைகளில் கலக்குகிறார். திரட்டிகளில் இவரது கவிதைகள் வருகிறதா எனத் தெரியவில்லை. என்னுடைய பிளாக்ரோலில் இவரது முகவரி இருந்தாலும், தனியாகத் தருகிறேன் : www.nundhaa.blogspot.com

நந்தாவைத் தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நந்தா மட்டுமில்லை. யாத்ரா, பிரவின்ஸ்கா, சேரல், மண்குதிரை எனப் பலர் இப்போது தொடர்ந்து நன்றாகக் கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார்கள். மண்குதிரை விடுமுறையில் இருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் எழுதத் துவங்கிவிடுவார் என நம்புகிறேன்.

இங்கே வலைப்பதிவுகளில் முதலில் ஆர்வமுடன் எழுதத் துவங்குபவர்கள், பல்வேறு காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை.

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், அனுஜன்யா வெறும் கவிதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்தவர் பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள் என முன்னேறியிருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுகிறார். அனுஜன்யாவிற்கு ஆங்கில மொழியின் மேல் நல்ல கண்ட்ரோல் இருக்கிறது. இவர் கவிஞராகவும் இருப்பதால், கவிதைகளை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். தமிழில் பல கவிதை மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். சிலர் அகராதியை அருகில் வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பார்கள். அங்கே தமிழ் வார்த்தைகள் இருக்கும், கவிதை இருக்காது. (hit the nail on its head என்பதை நகத்தின் தலையில் அடி மாதிரியானவை மொழிபெயர்ப்பில் சேர்த்தியே இல்லை!)

மொழிபெயர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவிதையின் உயிர். சில கவிதைகள் இறுக்கமான மொழிநடையில் இருக்கும். தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த இறுக்கத்தை அப்படியே கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதாவது, நம்முடைய கவிதை நடையை மறந்துவிட்டு, மொழிபெயர்க்கும் கவிதைக்கு நேர்மையாயிருக்க வேண்டும்.

வளர்மதி சமீபத்தில் a leaf, treeless என்பதை 'ஒரு இலை, மரமற்று' என்று மொழிபெயர்க்காமல் 'காற்றில் அலையும் இலையொன்று ' என எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் அய்யனார் மொழிபெயர்த்திருந்த கமலாதாசின் கவிதையும் நன்றாக வந்திருந்தது. தொடர்ந்து அய்யனாரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு வலைப்பதிவுகள்

அவ்வப்போது நான் வாசிக்கும் எனக்குப் பிடித்த பதிவுகளை அறிமுகம் செய்து எழுதி வருகிறேன். அப்படிச் சமீபத்தில் என்னைக் கவர்ந்தவர் யாத்ரா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர். இவரது வலைப்பூ முகவரி :
http://www.yathrigan-yathra.blogspot.com/

இவரது சில கவிதைகள் அட போட வைக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று :

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமன்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

(http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_14.html)

புதிதாக வலையுலகத்திற்கு வந்தவர் எனத் தெரிகிறது. ஒரு மாதத்தில் 25 பதிவுகள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து அவர் இயங்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இவரை வாசித்துப் பாருங்கள்; உங்களுக்கும் பிடிக்கலாம்.

***

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் வா மு கோமு. எனக்குத் தெரிந்து இருபது வருடங்களாக சிறுகதை, நாவல், கவிதை என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். (1990களின் ஆரம்பத்தில் இவர் நடத்திய நடு கல் என்ற சிறுபத்திரிகையின் சில இதழ்களில் என்னுடைய கவிதைகள் வந்திருக்கின்றன). இவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் வலைப்பதிவிலும் எழுதுகிறார் என்பது தெரிந்திருக்காது. முகவரி : http://www.vaamukomu.blogspot.com/

இவரது 1/2 பியருக்கு வந்த மப்பு கவிதையை ஏற்கனவே இந்தப் பதிவில் ஏற்றியிருக்கிறேன் (எ-கவிதை என்ற லேபிளில் பார்க்கலாம்).

கழுகுப் பார்வைக்கு கழுகு.காம்

www.kalugu.com

ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்தத் தளத்தைச் சில மாதங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. தளத்தை நடத்துபவர்கள் எழுதுவது மட்டுமல்லாது, பிறரிடமிருந்தும் கட்டுரைகளை வாங்கிப் போடுகிறார்கள்.

தெற்காசியாவை பாதிக்கும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய தீவிரமான கழுகுப் பார்வைகளை முன்வைப்பது இவர்களின் நோக்கம் என்றாலும் பிரதானமாக தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய நிறைய கட்டுரைகள் வருகின்றன.

உதாரணத்திற்கு, சமீபத்தில் வந்த ஒரு சிறு பதிவைக் கீழே தருகிறேன் : (http://kalugu.com/2009/02/05/go-to-hell-syndrome/).

This is a summary of the stands of our politicians about the Tamils getting killed and their voices suppressed militarily. This will spare you from reading very many insensitive statements from our leaders..

TN Chief minister M Karunanidhi says "Let the tigers go to hell!"

Opposition leader J Jayalalitha says "Let the Srilankan Tamils go to hell!"

Actor turned Political leader Vijayakanth says "Let the Loksabha elections go to hell"

External Affairs Minister Pranab Mukherjee says "Let the Srilankan Tamils and Indian Tamils go to hell"

What is suspected to be behind the sudden spread of "Go to Hell" syndrome amongst our politicians is supposed to be another syndrome-"Leave me Alone" syndrome.

என்னையையும் இத்தளத்தில் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். என்னால் ஆங்கிலத்தில் எழுத முடியுமென்று தோன்றவில்லை. நான் தமிழில் எழுதி அதை அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழறியா வாசகர்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாயிருக்குமென்பதால், நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு செய்திருக்கிறேன்.

www.kalugu.com தளத்தை படித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகார்) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் என்ச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : www.madrasdada.blogspot.com )

விக்ரமாதித்யன் கவிதைகள்

என் மனிதிற்கு நெருக்கமான கவிஞர்களுள் ஒருவர் விக்ரமாதித்யன். இவரது முதல் தொகுதி 1982ல் அன்னம் நவ கவிதை வரிசையில் வெளியானது (ஆகாசம் நீல நிறம்). தொடர்ந்து பல தொகுப்புகள் (ஒரு முழுத் தொகுதி உட்பட) வந்து கொண்டிருக்கின்றன.

வண்ண நிலவன், வண்ணதாசன், கலாப்ரியா காலகட்டத்தைச் சேர்ந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன். 1960களின் இறுதியிலிருந்து எழுதி வருகிறார். 'சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்' என்பது இவரது கவிதைகளுக்குச் சாலப் பொருந்தும்.

போய்ச் சேர்ந்தான் புதுமைப் பித்தன்
வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்

என எழுதும் துணிவு இவருக்குத் தான் உண்டு !

இவரது தனிச்சிறப்பு குறுங்கவிதைகள். இவரின் பிரபலாமான சில குறுங்கவிதைகள் :

அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு
*
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
*
சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்
*
கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
*
எஜமானனைவிட
ஊழியனுக்கு நல்லது
எஜமான விசுவாசம்
*
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை
*
சாக்லெட்டே சாக்லெட்டே
குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லெட்டே
சிகரெட்டே சிகரெட்டே
நேரம்கெட்டநேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே
*
கண்ணாடிப் பாத்திரங்களைக்
கையாள்கிற கஷ்டம்
*

கவிதை / கவிஞர்கள் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுகிறார். அதிலிருந்து சில :

கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா
*
நடுவழியே நல்லது
கலைஞர்கள் துருவசஞ்சாரிகள்
*
கலைஞர்களாவதற்கு
இல்லை குமாஸ்தாக்கள்
*
விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்
*

இனி, கொஞ்சம் பெரிய கவிதைகள். நேரடித் தன்மை வாய்ந்த கவிதைகள் இவருடையவை. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்

மிகச் சொற்ப வார்த்தைகளில் ஒரு சித்திரத்தைத் தீட்டிக் காட்டி விடக் கூடிவை இவரது கவிதைகள். வேலை தேடி மனமின்றி வெளியூர் செல்லும் ஒரு நடுத்தர வயது மனிதனின் கவிதை. :

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள

நிறைய சுய புலம்பல் கவிதைகளும் இருக்கும். உதாரணத்திற்கு :

ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
*

சில கதைக் கவிதைகளும் உண்டு :

அத்தனைபேர் இருந்த பேருந்தில்
அது நிகழ்ந்தது
அப்பாவைவிடவும் வயது கூட
அந்தப் பெரியவருக்கு
தளர்ந்துபோன உடம்பு
குச்சிகுச்சியான கையும் காலும்
எப்படித்தால் அந்தப் பாய்க்கட்டுகளை ஒத்தையில் சுமந்து வந்து
ஓட்டுநர் பக்கமாக ஏற்றி இறக்கி வைத்தாரோ
அந்த ஊரின் கடைசி நிறுத்தத்தில்
பயணச் சீட்டு கொடுக்கும் நேரத்தில்
வெடித்துக் கிளம்பிஅது தகராறு
சுமைக்குக் கட்டணமாக முழுச்சீட்டுப் போட
முஸ்லீம் முதியவர் அரைச்சீட்டுத்தான் என மறுதலிக்க
வழமையைச் சொல்லி வாதித்த
வயசாளியின் பக்கம் பாதிக்கூட்டம்
நடத்துநரின் நியாயத்துக்கு
லாலி பாடியது மீதிக் கூட்ட்ம்
இருக்கிற காசுக்குள்
வருகிற ஊரில்
இறக்கி விட்டார் நடத்துநர்
முழுக்கட்டணம்தான் பாய்ச்சுமைக்கு என்று
முதலிலேயே சொல்லியிருந்தாராம் அவர்
பாவப்பட்ட கிழவர் சபித்தார்
நொந்துகொண்டு அழுதார்
ஆதரவாக ஏந்திவைத்துக் கொள்ளும் உயிர்கள்
அனுப்பி வைத்திருக்கும் நிச்சயமாக ஊருக்கு
என்றபோதும் அன்றையதினம்
அவருக்கு உதவாமலிருந்தது
உறுத்துகிறது இந்த நிமிஷமும்
நண்பரிடம் வாங்கிவந்த யாசகக் காசில்
பத்து ரூபாய்க்கும் மேல் பையிலிருந்தது
வேலையற்ற
வீட்டிலிருந்தது நாலுநாளில் திரும்பிவந்து அலையவேண்டிய
வெங்கொடுமை நிலைக் குழப்பத்தில் சிக்கலில்
வறண்டு போயிற்றோ என் மன ஊற்று
விளங்கவில்லை இன்னமும்
எப்படிக் காய்ந்தது என் மனஈரம்
எவ்விதம் உலர்ந்தது என் பச்சையம்
எனக்கு நானே அந்நியமானதுதான் என் சோகம்
ஆழ்ந்து யோசித்தால்
அவர் ஸ்திதியல்ல பிரச்சனை
என் ஸ்திதிதான் எனக்குப் பிரச்சனை
*

இனி, வேறு சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு :

நான் யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை
வசந்தம் தவறிய போதும்
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை
வெயில் காயும்
மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை
நீ கலகக்காரன் இல்லை?
நல்லது நண்ப
நானும் கூடத்தான்
எனது இருபதுகளில்
*

நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு
***

விதம் விதமாய் நவ நவமாய் எழுதியவர் விக்ரமாதித்யன். இன்னும் பல கவிதைகள் இருக்கினறன. எழுதி மாளாது.!

வளர்மதியின் குறும்படம் - Shiva : The Third Eye

நண்பர் வளர்மதி சமீபத்தில் UNESCOவிற்காக சிவா : தி தேர்ட் ஐ என்ற மூன்று நிமிடங்கள் ஓடும் குறும் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்து மத தொன்மங்களில் உள்ள சிவ பார்வதி நடனத்தை முன்வைத்து இந்த நாட்டிய குறும் படத்தை இயக்கியிருக்கிறார். சிவனும் பார்வதியும் நடனமாட பார்வதி காலை தூக்கி ஆடிய கோபத்தில் அவரை எரித்து விடுகிறார். அவரது மறு பாகம் போனதால் தடுமாறி, தன் தவறை உணர்ந்து பார்வதியை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். மன்னிப்பு கோரும் விதமாக பார்வதியை நெருங்க, அவர் சாதுர்யமாக சிவனின் மூன்றாவது கண்ணைப் பிடுங்கி அதை முழுங்கச் செய்கிறார். சிவனின் தொண்டையில் அதை நிறுத்துகிறார். இதுவே adam's apple. பிறகு இருவரும் களி நடனம் புரிகிறார்கள். இருவரின் கால்களும் ஒரு கண்ணைப் போலத் தோன்ற நடுவில் நீல நிற ஒளி வீசுவதுடன் படம் முடிகிறது.

இந்த நாட்டியப் படம் தொன்மங்களை மறு வாசிப்பு செய்வதன் மூலம் இரு பாலருக்குமான சமத்துவத்தை முன் வைக்கிறது. படத்தில் நிறங்களை கையாண்டிருக்கும் விதம் நன்றாக வந்துள்ளது.

இக்குறும் படத்தின் வெளியீட்டு விழா உலக நடன தினமான நாளை (29/04/2008) யதார்த்தா ஃபிலிம் சொசைட்டியால் மதுரையில் நடத்தப் படுகிறது :

MUTA அரங்கு
6 காக்கா தோப்பு தெரு
மதுரை 625 001
நேரம் : மாலை 6.15

செந்நிறக் கண் இமைத்தபடி துவங்கும் இப்படத்தை நீங்கள் யுனெஸ்கோவின் இணைய தளத்தில் பார்க்கலாம் :

http://www.unesco-ci.org/cgi-bin/media/page.cgi?g=Detailed%2F134.html;d=1

இப்படத்திற்கான என் விமர்சனத்தை பிறகு நேரம் கிடைக்கையில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு வளர்மதிக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்கிறேன்.

திலீப் குமார் - வித்தியாசமான கதைசொல்லி

1975லிருந்து எழுதி வருபவர் திலீப் குமார். பரவலாக அதிகம் அறியப் படாதவர். மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு முக்கிய இடம் அவருக்குண்டு. இவரின் தாய் மொழி குஜாராத்தி என்றாலும் எழுதுவது தமிழில். சென்னை மயிலாப்பூரில் புத்தகக் கடை நடத்திக் கொண்டிருந்தார் (இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை). அவர் எழுத்துக்களை அறிமுகப் படுத்துவதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம்.

திலீப் குமாரின் புத்தகங்கள் :

1. மூங்கில் குருத்து
2. கடவு (மேலே உள்ள தொகுப்பிலிருந்து சில கதைகளும் + சில கதைகளும் கொண்டது)
3. மௌனியுடன் கொஞ்ச தூரம் (வானதி பதிப்பகம்)
4. 'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)

முதலிரண்டும் க்ரியா வெளியீடு.

தினமணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலும் மீட்சி, காலச்சுவடு, 1/4 போன்ற சிறுபத்திரிகைகளே அவரின் வெளியீட்டுக் களனாயிருந்துள்ளது.
குறைவாகவே எழுதியிருந்தாலும் விதம் விதமான கதைகளை எழுதிப் பார்த்தவர் திலீப்குமார்.

'அக்ரகாரத்தில் பூனை' கதை சுவாரஸ்ய நடை கொண்டது. பப்லிப் பாட்டி கோயில் பூஜை என இருப்பவள். புஷ்டி மார்க்கத்தின் authority. பூஜைக்கு வைத்திருக்கும் பாலைக் குடிப்பது போன்ற தொல்லைகளைச் செய்யும் பூனையை விரட்டச் சொல்லி தன் மகன் நட்டூவை ஆணையிடுவாள். அவன் சூரியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பான் ('போயும் போயும் அந்தத் துஷ்டப் பயலிடமா, அவன் பூனையைக் கொன்றாலும் கொன்று விடுவான்' என்பாள் பாட்டி). பத்து நாட்களில் அவன் பூனையுடன் வருவான்; அது அவனிடம் குழையும். கொண்டு போய் விடுவதற்கு முன் அவளிடம் காட்ட எடுத்து வந்திருப்பான். பாட்டி அவனிடம் பூனையை தன்னிடம் எடுப்பாகக் காட்டச் சொல்வாள். தன் கையில் மறைத்து வைத்திருந்த மூக்குப் பொடியை அதன் மூக்கில் திடீரென்று தேய்த்து விடுவாள். பொறி கலங்க அலறி அடித்துக் கொண்டு ஓடும் பூனை. எல்லோரையும் வைது விட்டு பூனையைத் தேடிப் போவான் சூரி. அன்று மாலை பாட்டியைப் பார்க்க வந்தவர்களிடம் பாட்டி ஆரம்பிப்பாள்: 'புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்...'

இப்படி எளிதாக கதைச் சுருக்கம் சொல்ல முடிகிற 'அக்கிரகாரத்தில் பூனை', 'கடவு', கதையம்சமே அற்ற 'நிகழ மறுத்த அற்புதம்', எதார்த்த பாணியிலான 'கண்ணாடி', 'கடிதம்', குடும்பத்திற்கு வெளியேயான உடலுறவைச் சொல்லும் 'கானல்' வன்முறையின் வீச்சைச் சொல்லும் 'தடம்'.

'ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக் காரரும்' கதையில் வரும் பாத்திரம் ஜி.நாகராஜனை நினைவு படுத்துவதாலேயே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இவர் கதையில் பெரும்பாலும் கதைமாந்தர்கள் குஜராத்திகள்; நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கதைக் களன் சென்னையில் உள்ள அதிகமும் குஜராத்திகள் வாழும் தங்கசாலை (மிண்ட்). ஆயினும் ஒவ்வொரு கதையும் வேவ்வேறு தொனியில் இருக்கும்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவரைப் படித்தவர்கள் பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.