ஒத்திப் போடுதல்

ஒவ்வொரு அறையாகக்
கீழே செல்லச் செல்ல
இருளும் புகையும் சூழ்கிறது
நடுவில் திடீரென எரிந்தணையும்
விளக்குகள்
இருளை அதிகப் படுத்துகின்றன
காதலென்ற பெயரில்
கடித்துக் குதறிக் கொண்டோம்
வயிற்றுக்குள் இருக்கும்
வைன் ஷாப்களின்
போதைத் தள்ளாட்டம்
இறந்தபின் வாழும் ஆசையை
தினந்தோறும் ஒத்திப் போடுகிறது

அ-கவிதை (3)

உனக்குச் சொல்ல
வளர்ந்தது உணர்ந்தபோது
யார் அதையெல்லாம் செய்வார்கள்
collage கவிதை
சாதாரண வாசக மனம்
assemblage கவிதை
கேள்வி எழுப்பும்
Reader Reception Theory
என்று
வெட்டி ஒட்டப் படுவது
கவிதை
நாகார்ஜூனன் சொன்னால்
கவிதை வந்தது
ஒன்றுமில்லை

இலக்கு

இருளால் மூடப் பட்டிருக்கிறது சாலை
தவளைகளின் இரைச்சல்
நரம்புகளை ஊடுருவுகிறது
குடைகளை மீறி மனிதர்களைச்
சில்லென்று ஸ்பரிசிக்கிறது மழை
செடிகளும் மரங்களும் பேயாட்டம் போடுகின்றன
மின்னல் வழிகாட்டுகிறது உற்ற தோழனாய்
குறுக்கே மல்லாந்த மரங்களை
அப்புறப் படுத்தி
இலக்கை நோக்கிச் சக பயணிகள்
வேகமாக முன்னேறிச் செல்கின்றனர்
மழையையும்
இருட் சாலை அழகையும்
பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்

(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)

அக்காவும் நானும்

'எப்படி இருப்பே
தெரியுமாடா...'
அக்கா ஆரம்பித்த விதமே
அலாதியாயிருந்தது
‘நாந்தான் தூக்கிப்பேன்
நாந்தான் தூக்கிப்பேன்னு
நானும் பவானியும் சண்டை போடுவோம்...'
கண்கள் விரிய
கடந்த காலத்தில் வசிக்க ஆரம்பித்தாள்
சற்றுத் தள்ளி நின்று கொண்ட
என்னைப் பார்த்தபடி
‘ஏண்டா இப்படி ஆயிட்டே...'
கேள்வியை முடிக்காமலேயே
நகர்ந்து போனாள்
எனக்கு இரண்டிரண்டாக
எல்லாம் தெரிய

(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)

நாய்கள்

தெருவோர நாய்
நரகல் தின்று ஓடும்
சிறுவன் ஒருவன்
துரத்துவான்
கையில் கல்லிருக்கும்
துணிச்சலில்
இடையில்
நழுவும் நிஜாரைச்
சரி செய்ய நிற்பான்
நாய் ஓடிவிடும்
நாய்களை
(அதிலும் நரகல் தின்னும்
நாய்களை)
ஒழிக்க வழி தெரியாமல்
வீடு திரும்புவேன்
அந்தச் சிறுவன் மேல்
பரிதாபப் பட்டபடி

(மாலைக் கதிர் டிசம்பர் 1995ல் வெளியானது)

தொடர்புகள்

இரண்டாய் இருந்த புறாக்களின் எண்ணிக்கை
பல்கிப் பெருக
அணில்களின் வருகையும் அதிகமாயிற்று
சதா சர்வ காலமும்
சங்கீதமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும்
மொட்டை மாடி ஓலைக் கூரையின் மேல்
வரிசையாய் ஓடும்
ஒருமுறை தொட்டுக் கூடப் பார்த்திருக்கிறேன்
அதன் மென்மையை
தீனியென்று தனியாக எதுவும் போட்டதில்லை
புறாக்களுக்கென இறைத்த மீதியை
பின்னங்கால்களில் அமர்ந்து
முன் கால்களால் கொறிக்கும் அழகே தனி
புறாக்களுக்கும் அணில்களுக்கும்
சிநேகம் இருந்ததாய்த் தெரியவில்லை
ஆனால்
புறாக்களோடு சேர்ந்து தொலைந்து போயின
அணில்களும்

no title

கண்களை மூடிக் கொண்டு
கிறுக்குகையில்
ஆழ்கனச் சகதியிலிருந்து
மேலே வருகிறது
புதைக்கப்பட்டு வெகுநாளாகிவிட்ட உருவம்
மெதுவாகச் சுருக்கங்கள் அகற்றி
தெளிவாகிறது முகம்
பாய்ச்சலாக இல்லாது
ஓடிப் போய்த் தேங்குகின்றன நினைவுகள்
அணையை உடைத்துக் கொள்ள முடியாமல்
அறுந்து ஒரு மூலையில் தொங்குகிறது
கிழிபட்ட நான்

(இந்தக் கவிதை மவ்னம் அக்டோபர் 1993ல் வெளியானது)

முதல் முயற்சி

அகண்ட வெளியை
நோக்கிப் பயணப்பட்ட
மகிழ்ச்சி
இடையில் உடையும்
சுக்கு நூறாய்
தலையணையில் முகம் புதைத்த
கேவல்கள்
அழுகையாய் வெடிக்கும்
ஆதரவுக் கரங்கள்
அதிகப் படுத்தும் வேதனையை
ரயிலின் முன் விழுவதற்குத்
தயாராய்
உயிர் தாங்கிய உடல்

மனச் சலனங்களில்
சோர்வுறும் உடல்
உடற் சலனங்களில்
சோர்வுறும் மனம்

முகமூடி

எனக்குக் கிடைக்கும்
நேரமே கொஞ்சம்
அதிலுன்
தழும்பேறிய கோரமான
முகத்தைக் காட்டாதே
நான்
படிக்கவேண்டிய புத்தகங்கள்
கிழிக்க வேண்டிய கவிதைகள்
ஏராளமிருக்கின்றன
பிரபஞ்சத்தின் பேருண்மைகளை
யோசித்துக் கொண்டிருக்கையில்
உன்னுடைய விகாரமான
கற்பனைகளை நீட்டாதே
போ போய்விடு
இல்லையா
இந்தா முகமூடி
அணிந்து கொண்டு
ஓர் ஓரமாக உட்கார்

(கவிதா சரண் மார்ச் 1993ல் வெளியானது)

இரை

அசையாதிருக்கும் இரவின் வெளிச்சத்தில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஓலைக் கூரையின் நடுவில்
இரை தேடும் பாம்பு
இப்புறம் திரும்புமா
அப்புறம் செல்லுமா
என்பதில் இருக்கிறது
வாழ்வு

பிரார்த்தனையின் இரைச்சலில்
திரும்பிய பாம்பு
விழுங்கிச் செல்லும்

வாழ்தல்

பயமுறுத்தியபடி நின்றிருக்கிறது
கேள்விக் குறியான எதிர்காலம்
கழுவி விடப்பட்ட தரையைப் போல்
கிடக்கிறது மனம் சலனமற்று
வேலை செய்ய மறுக்கிறது மூளை
உதறுகின்றன கால்கள்
எதிரிகளின் கெக்கலிப்பு
ஒலிக்கிறது காதுகளில்
பெற்ற மற்றும் பெறப் போகும்
அவமானங்களை நினைத்து
தற்கொலைக்கும் வாழ்விற்கும்
இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது உயிர்

சோடியம் வேப்பர் வெளிச்சம்
தொட முடியாத தூரம்
பௌர்ணமி நிலா ஒளி
தடவிக் கொடுக்க
ஆர்பரிக்கும் கடல் அலைகளின்
வெள்ளை நுரை
படுதா விரிப்பு
பார்வைக்கெட்டிய வரையில்