Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

நான் வளர்கிறேனே மம்மி!

நான் டுவிட்டரில் சேரவில்லை. வேறொன்றும் இல்லை - இந்த 150 வார்த்தைகளுக்குள் கதையெழுதுக, 200 வரிகளுக்குள் இந்திய சுந்தந்திர வரலாற்றைப் பற்றிய சிறு குறிப்பு வரைக போன்ற கட்டுப்பாடுகள் எனக்கு 9ம் வகுப்புப் பரிட்சைத் தாள்களையே நினைவுபடுத்துகின்றன. அப்போதே வகுப்புகளைக் கட் அடித்துவிட்டு அருகிலிருக்கும் சினிமா தியேட்டருக்குச் சென்றுவிடுவேன். அப்படிச் செய்யும் நான் சில சமயங்களில் அம்பத்தூரில் இருக்கும் அழகப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்களும் படித்துக் கொண்டிருப்பேன் (ஆனால் நிச்சயமாக கடினாமான கணக்குச் சூத்திரங்களை அல்ல).

உடனே.. ஆஹா, இவன் 9ம் வகுப்புதான் படித்திருக்கிறான், இவனுக்கெப்படி சிக்கலான கலை இலக்கியச் சூத்திரங்கள் புரியும் எனச் சிலர் கேட்கலாம். என்ன செய்ய, எனக்கிருப்பது குருவி மண்டைதான். நான் படித்ததே +2 வரை... அதுவும் தத்தக்கா பித்தக்கா என்றுதான் முடித்தேன்.

IIM, IITல் படித்தவர்களுக்கோ அல்லது ஜப்பானிலோ சான் ஃபிரான்ஸிஸ்கோவிலோ வாழ்ந்துகொண்டு கடினமான சூத்திர வாய்ப்பாடுகளை மனனம் செய்து திண்ணைப் பேச்சாகப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கோ சில விஷயங்கள் புரிவதில்லை. அதில் முக்கியமான ஒன்று : இலக்கியம் என்பது எளிமையானது என்பதுதான். இதற்கு பர்ரோஸிலிருந்து ஆரம்பித்து பாடம் நடத்தும் ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறென். தர்க்கங்களாலேயே தங்களது மூளையை / மனதை வடிவமைத்துக் கொண்டவர்களுக்கு இது சர்வ நிச்சயமாய்ப் புரியாது.

நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். (முதலிலேயே வேறொரு அனானி நண்பர் ரோசா வசந்தின் டுவிட்டர் எழுத்தின் இணைப்பைக் கொடுத்திருந்தார்).

விஷயம் பெரிதாக எல்லாம் ஒன்றுமில்லை. நான் பதிவிட்டிருந்த மூன்றாவது வகுப்பும் ஏழாவது வகுப்பும் பதிவைப் பற்றித்தான் காரசாரமாக வெற்றிலை எச்சில் தெறிக்க ‘விவாதித்துக்' கொண்டிருந்தார்கள்.

ஐயா, மகாஜனங்களே, அது நான் எழுதியதில்லை என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். குறைந்த பட்சம் நான் எழுதிய ஏதாவது ஒன்றை எடுத்து வைத்துப் பேசியிருந்தாலும் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும் :). டுவிட்டரும் இணையத்தில்தான் இருப்பதால் அந்த 'விவாதங்களில்' பங்குபெறும் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்தால் எங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்ல ஏதுவாயிருக்கும்.

கழிவறை வாசகங்களை உயர்ந்த இலக்கியம் எனச் சொல்ல நான் ஒன்றும் மூடனில்லை. அதே சமயம், அப்படி யாரும் பாடுவதேயில்லை என்று சொல்ல முடியுமா என்ன? மூன்றாம் வகுப்பில் முதல் பாடலைப் பாடியது எவ்வளவு நிஜமோ அதே போல்தான் ஏழாம் வகுப்பில் பாடிய இரண்டாவது பாடலும். ஒரு சமூக ஆய்வாளனின் பார்வையோடுதான் அதைப் பதிவிட்டிருந்தேன். அதைப் பிறர் தங்களுக்கு விருப்பப்பட்டவாறு புரிந்துகொள்ளவோ அர்த்தப்படுத்திக்கொள்ளவோ செய்யலாம். அது பிரச்சனையில்லை.

ஒரு டுவிட்டர் (பதிவெழுதுபவர்கள் பதிவர், டூவிட்டர் எழுதுபவர்கள்? - தெரியாததால் டுவிட்டர் என்றே தொடர்கிறேன்), தன் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலாக எழுதுவார்களா என அறச் சீற்றம் கொண்டிருந்தார் (அவரது வெத்தலைக்குச் சுண்ணாம்பு கிடைக்காத கோபமோ என்னவோ). அப்படி என் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலீடாகச் செய்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை - ஆனால், பள்ளி மாணவர்கள் ஸ்ரீதேவி என்றுதானே பாடுகிறார்கள் என்று நானும் லாஜிக்கலாக மடக்கலாம்தான். ஆனால் எதற்கு வம்பு.. பிறகு டுவிட்டரை விட்டுவிட்டு துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு தம்வீட்டின் அகலக் கண்ணாடி முன்நின்று வெவ்வவ்வே காண்பித்தாலும் காண்பிப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லப் போனால், உன் வீட்டில் இருப்பது குறுகிய எளிமையான சுவர், உனக்கெல்லாம் கண்ணாடியின் அருமை தெரியாது எனலாம்!

இதில் ரோசா தான் செம காமெடி (எனச் சொல்ல ஆசைப் படுகிறேன்). அவர் சொல்லியிருந்தது எனக்குப் பின்னூட்டமாக வந்தது :

/ஜ்யோவ்ராம் சுந்தர் எனக்கு இலக்கிய சுகுணா திவாகராக தெரிகிறார்; அவருக்கு எளிய அரசியல் சூத்திரங்கள், இவருக்கு அதே போன்ற இலக்கிய சூத்திரம்./

பதிவுலகத்திலிருந்து VRS வாங்கிக் கொண்டு போய்விட்டவர் ரோசா. ஆனாலும் அவ்வப்போது பென்ஷன் வாங்கவோ அல்லது பழைய பாசத்தில் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்க்கவோ பதிவுலகிற்கு வந்து செல்பவர். அவருக்கென்ன பதில் சொல்ல என்று யோசித்தேன். நண்பரோ, ‘இப்படியெல்லாம் நீங்கள் இருக்கக்கூடாது, ஏதாவது பதில் சொல்லாவிட்டால் உங்களது புகழுக்கு ஹாரம் வந்துவிடும்' என்றார். இன்னொருவர், ரோசா கையில் கத்தியுடன் யாருடைய குறியையோ அறுக்க இணையப் பக்கங்களில் அலைந்ததைச் சொல்லிக் கிலியூட்டினார். ம்ஹூம்; எனக்குப் பயமாயிருக்கிறது - நான் ஒப்புக் கொள்கிறேன் - ரோசா சொன்னதெல்லாம் 100% உண்மையானதுதான். தொடருங்கள் ரோசா உங்களது இரண்டு வரித் தீர்ப்புகளை...

(பதிவின் தலைப்பில் மம்மி என்ற வார்த்தை இருப்பதால் மம்மி ரிடர்ன்ஸ் பார்ட் III என்று யாராவது வாசித்தால் நான் பொறுப்பல்ல. உடனே 'இதுவும் உம்பர்டோ ஈகோ உபயோகித்த உத்திதான், அதான் சொல்கிறேனே ஜ்யோவ்ராம் சுந்தருக்கு எல்லாமே எளிய சூத்திரங்கள்தாம்' என்று தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் சாமிகளா!).

பூம் பூம் ஷக்கலக்க பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் பதிவைப் படித்ததும் சாரு ஒரு ஹிட்லரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு எழவில்லை. எதற்காக அந்தப் பதிவு என்றுதான் தோன்றியது.

அதற்காகச் சிலர் கேட்டது போல் முதல் பத்தியை நீக்கச் சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் மொத்தப் பதிவுமே கிசுகிசுக்களின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான். யார் அலெக்ஸ், யார் விஷால் என்பதைத் தெரிந்து கொண்டதைத் தவிர அதில் பெரிதாக வேறொன்றுமில்லை.

அந்த முதல் பத்திகூட சிறுபத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுவாக இருந்ததைத்தான் பைத்தியக்காரன் எழுதியிருக்கிறார். சாருவைப் பற்றிய சமீபத்திய வலையுலக (காமரூபக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வந்த) கிசுகிசுக்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாரோ தெரியவில்லை.

இதற்கு மாற்றாக நானும் மானாவரியாக கிசுகிசுக்களை அடுக்கிச் செல்லலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பதோடு நானும் பைத்தியக்காரன் செய்யும் தவறையே செய்தவனாவேன். அதனால், விபரங்களின் அடிப்படையில் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?

அவர் புதுமைப் பித்தனின் பல கதைகளை விரிவாக விமர்சித்து - கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு - கட்டுரை எழுதியிருக்கிறார். உடனே இலக்கு கால இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் ஜீரோ டிகிரி இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் என ஆரம்பித்து விடாதீர்கள். இந்தப் பிரஸ்தாபக் கட்டுரை வெளியாது 2002 இறுதியில். போலவே ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றி மார்ச் 2003ல் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய / லத்தீன் அமெரிக்க / அரேபிய எழுத்தாளர்களின் பெயர்களை (மட்டும்) சாரு உதிர்க்கிறாராம். மரியா வர்காஸ் யோசாவின் The Real Life of Alejandro Mayta, எல்ஃபிரெட் ஜெலனிக்கின் பியனோ டீச்சர், சார்லஸ் ப்யுகோவ்ஸ்க்கி, முகமது ஷூக்ரி பற்றியெல்லாம் விரிவாகவே சாரு எழுதியிருக்கிறார். இப்போது நான் கேட்கிறேன் - சாரு தமிழில்கூடப் படித்ததில்லை எனச் சொல்லும் நீங்கள் சாருவையே படித்ததில்லை என்று நான் சொல்ல முடியும்தானே?

அவருடைய வாசிப்பிற்கு அவரது எழுத்துகளே சாட்சி. அதை வைத்து நாம் உரையாடலாம். ஆனால் நீங்கள் அதையும் வேறு யாராவது எழுதிக் கொடுத்தது எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடக் கூடும். அதனாலேயே நான் அவரது ஆரம்ப கால எழுத்துகளை மேற்கோள் காட்டாமல் அவரது பிந்தைய - அதாவது 2002ற்குப் பிறகு எழுதிய விஷயங்களை மேலே எழுதியிருக்கிறேன். இல்லை, இவையும் வேறு யாராவது தவணை முறை நண்பர்கள் எழுதிக் கொடுப்பது என்று சொல்லிவிட்டால், தவணை முறையில் இல்லாமல் மொத்தமாகத் தீர்ந்தது விஷயம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் & ஜீரோ டிகிரி பிரேம் ரமேஷ் எழுதியதாம்! ஆபிதீன், எக்ஸிஸ்டென்ஷியலிசம் நாவலில் ஒரு பத்தி தான் எழுதியதாகச் சொன்னதிலிருந்து, இதுவரை எனக்குத் தெரிந்து அந்த நாவல்களுக்கு ஆறு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது இப்போது வரைக்குமான கணக்குதான். நாளையேகூட இன்னும் சிலர் வந்து அந்நாவல்களை தாம்தான் எழுதினோம் என்று சொல்லக் கூடும். இதெல்லாம் என்னய்யா விவாதமா - இதெற்கெல்லாம் ஒருவனால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

(இடைவெட்டு : மாலதி மைத்ரி ஜீரோ டிகிரியை சாரு எழுதவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அந்நாவலை எடிட்டிங் செய்தது ரமேஷ்தான் என்று எழுதியிருக்கிறார். நாவலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட்டவுடன், அதற்கு எடிட்டிங் அவசியமாகிறது. அந்த எடிட்டிங் பணிக்குச் சிலர் உதவியிருக்கலாம். மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக அந்தப் புத்தகத்தையே எழுதினது தான்தான் என்று சொன்னால் என்ன செய்ய?)

”ரோலான் பார்த் ரைட்டிங் டிகிரி ஜீரோ என்று எழுதியிருக்கிறார். அதனால் ஜீரோ டிகிரி என்று தலைப்பு வைத்தது சாருவாய் இருக்க முடியாது!” ஜீரோ டிகிரி எப்போது வந்தது? ரோலான் பார்த்தின் அந்தப் புத்தகம் வெளியானது 1953ல். தமிழிலேயே ஜீரோ டிகிரி வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் அறிமுகமாகிவிட்டார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பைத்தியக்காரன்.

சாருவுக்கும் பின் நவீனத்திற்குமான தொடர்ப்பு எத்தகையது என்பதை பிரேம் ரமேஷை விடுங்கள், நீங்கள் எழுதுங்கள். நான் எதிர்வினையாற்றுகிறேன். சும்மா சாருவுக்கு பின் நவீனம் தெரியாது, அமைப்பியல் தெரியாது என்பதெல்லாம் ஹம்பக்.

அவருடைய கட்டுரைகளை யார் எழுதிக் கொடுத்தார்கள், யார் பிழை திருத்தினார்கள் (எழுதறவனே பிழையையும் கொஞ்சம் திருத்திக் கொடுத்துடக் கூடாதா!) என அதே கிசுகிசு பாணியில் சொல்லிச் செல்கிறீர்கள். நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லும் அவர்களே இதை ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நீங்கள் பிரமிளுக்குச் சாரு எழுதிய குசு கடிதத்தையோ விமர்சன ஊழல்களில் பிரமிள் எழுதியதையோ சொல்வீர்களேயானால், பிரமிளைப் பற்றி சுந்தர ராமசாமி தொடங்கி அழகிய சிங்கர் வரை எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதும் யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய், எது புனைவு என்று ஒரு மயக்கம் ஏற்படலாம்! மட்டுமில்லாமல், எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க நாம் யார்?

சரி, சாருதான் இறந்த பிறகு பிரமிளையும் சுஜாதாவையும் பாராட்டுகிறார். ஜெயமோகன் என்ன செய்கிறார்? கமலாதாஸ் இறந்தவுடன் அவர் குரூபி, தன்னுடைய நிறைவேறாத காமத்தினால்தான் (பச்சையாகச் சொன்னால் படுக்க அலைந்தார் என எழுதியிருந்தார்!) எழுதினார் எனச் சொன்ன போது எங்கே போயிருந்தீர்கள். அப்போது உங்கள் அறச் சீற்றத்தை இப்படித்தான் காட்டினீர்களா?

விஷ்ணுபுரம்தான் முதலில் ஃபிரெஞ்சிற்குப் போக வேண்டுமாம்! உங்கள் மனச் சாய்வு தெளிவாகவே தெரிகிறது பைத்தியக்காரன். இப்போது சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலைக்கூட ஒரு முறை கஷ்டப்பட்டு படித்து விட்டேன், ஆனால் விஷ்ணுபுரத்தை இவ்வளவு வருடங்களில் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை! அவரது தலையணை புத்தகங்களின்மேல் ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது.

அடுத்த கண்டுபிடிப்பு : ஜீரோ டிகிரி ஐரோப்பிய வடிவ பாணி நாவலாம், அதனால் ஃபிரென்சில் மொழிபெயர்த்தால் செல்லுபடியாகாதாம்! நாளையே நாவல் என்கிற வடிவமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதானே, அதனால் ஆங்கிலம், ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கவே வேண்டாம் என்றுகூட நீங்கள் சொல்லக் கூடும் - அதற்குள் உங்கள் விருப்பப்படி விஷ்ணுபுரம் நாவலை ஃபிரெஞ்சில் மொழிபெயர்த்து விடட்டும்.

உங்களுக்கு ராசலீலாவில், ஜீரோ டிகிரியைப் போன்ற அடர்த்தியோ கட்டுடைப்போ தெரியவில்லை. அது உங்கள் அபிப்ராயம். ஆனால் எனக்கு ராசலீலா அவரது முந்தைய ஆக்கங்களை விட அதிகமாகப் பிடித்திருக்கிறது. இதெல்லாம் தனிப்பட்ட நபர்களின் கருத்து என்பதற்குமேல் ஒன்றுமில்லை. உடனேயே ஜீரோ டிகிரிவரை மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள், பிறகு இந்த நிலைமை என்று சொன்னால் எப்படி?

சாரு எவ்வளவு மோசமானவர் என்பதைக் காட்ட நீங்கள் ஜீரோ டிகிரிக்குப் பிரச்சனை வந்தபோது ஜெமோதான் ஆதரித்தார் என்கிறீர்கள். இது என்னய்யா புதுக்கதை என்றால் ஜீரோ டிகிரி நாவலின் ஒரு பதிப்பில் வெளியான ஜெமோவின் 5 வரிக் கடிதமாம்! அந்தப் பதிப்பில் அவரது கடிதம் மட்டுமா வந்தது? பலர் அந்நாவலைப் பாராட்ட ஜெமோ செய்திருந்தது கோஷ்டி கானமாகத்தான் தெரிகிறது எனக்கு.

எழுத்தாளன் என்பவன் தன் புத்தகங்களை வெளியிட பல பதிப்பகங்களை அணுகுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் தன்னுடைய புத்தகங்களை வெளியிடாததால், தமிழினி வசந்தகுமாரை எங்கே குறிவைத்துத் தாக்கினார் சாரு? தமிழினியில் புத்தகங்கள் எழுதுவதால் ஜெமோ உயிர்மையை எதிர்க்கிறார் என்று எழுதினால் அது தமிழினியைத் தாக்குவதா? பண்பாட்டைப் பேசுதல் என்ற கட்டுரையில் மற்ற எல்லாப் பத்திரிகைகளையும் மட்டம் தட்டி தமிழினி, வார்த்தை போன்றவற்றை ஜெமோ தூக்கிப் பிடித்ததற்கான எதிர்வினை அது. மனதாரச் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் கட்டுரை ஏற்புடையதுதானா?

இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது.

மற்றபடி ஒரு புத்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பெரிய தவறே இல்லை - இப்படி எவ்வளவு புத்தகங்களைப் பற்றி, எவ்வளவு சினிமாக்களைப் பற்றி வந்திருக்கிறது. என்னவோ தமிழ்கூறும் நல்லுலகமே சாரு சொல்லிவிட்டால் படிக்காமல் விட்டுவிடப் போகிறதா என்ன? அதற்கான எதிர்வினையையும் நாகார்ஜூனன் செய்துவிட்டார். எனக்கென்னவோ நீங்கள் அதற்காக உங்கள் பதிவை எழுதியது போல் தெரியவில்லை.

அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் அவராவது பதில் சொல்ல வாய்ப்பிருக்கும் மனிதரைப் பற்றி எழுதுகிறார். ஆனால் ஜெமோ அந்த வாய்ப்பில்லாத இறந்து போனவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார். நீங்கள் ஜெமோவை விட்டுவிட்டு சாருவிற்கு மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினை செய்கிறீர்கள். உங்களின் இந்தத் தேர்வுதான் என்னை உறுத்துகிறது. இன்னொன்று, சிறுபத்திரிகைக்காரர்கள் என்றாலே சண்டை (மட்டுமே) போடுபவர்கள் என்பதாகச் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், எழுத்து காலம் முதற்கொண்டு, படிகள், பரிமாணம், கசடதபற, பிரக்ஞை, மீட்சி, கல்குதிரை, நிறப்பிரிகை ஈறாக தமிழில் பல விஷயங்கள் சாத்தியமானது சிறுபத்திரிகைகளால்தான் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதற்கு உங்களின் இந்தப் பதிவும் துணை போவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

உலகமயமாக்கல் - அதியமான் - எதிர்வினை

க.ர. அதியமான் ஒரு பதிவிட்டுள்ளார். பார்க்க : http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html. முழுக்க முழுக்க மறுக்கப் பட வேண்டியது இக்கட்டுரை. எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.

/ /ல் வருவது அவர் பதிவிலிருந்து எடுத்தது. வேறு வழியில்லை. 'மேற்கோள் யுத்தம்' செய்து தான் ஆக வேண்டியுள்ளது :)

/முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்/

சரி, விளக்குங்களேன். தெரிந்து கொண்டே ‘எதிர்க்கிறோம்'.

/இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!/

1. தொழில் நுட்ப முன்னேற்றங்களை உலகமயமாக்கலால் தான் சாத்தியமானது எனச் சொல்ல முடியுமா.? wheel, ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி எல்லாம் வந்தது உலகமயமாக்கலுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.?

2. முரண் தொகை எனச் சொல்வது முரண்நகையைத் தானென நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் இயங்குவதால் அதில் உள்ள பாதகமான அம்சங்களை விமர்சிப்பதில் என்ன முரண்நகை இருக்க முடியும்.? இதை இவர் செய்வதில்லையா.?

/சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)..../

இதன் பாதக அம்சங்களை ஏன் பட்டியலிடாமல் வசதியாக மறந்து விட்டார்.? உதா. hire and fire policy etc. அப்புறம் இந்தத் ‘தரமான'ங்கற வார்த்தையை கேட்டாலே என்னவோ போலிருக்கிறது :)

சரிங்க, stp / ehtp நிறுவனங்களுக்கு வரி விலக்கு (வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரி - எல்லா வரிகளும்) அளிப்பது எதனால்.? ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டும் சென்னைத் துறைமுகத்தில் சகாய விலை (subsidised rates) எதனால்.?

/சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?/

சிலரின் வாங்கும் சக்தியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், பலரின் வாழ்க்கை நிலையை கணக்கில் கொண்டால், நன்றாக இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

/இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி./

உலகமயமாக்கலின் 'சாதனைகள்' :

1. வினாயகர் சோடா, பொவண்டோ போன்றவை கிட்டத்தட்ட காணாமல்
போனது

2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது

3. ஏழைகளைப் பிச்சைகாரர்கள் ஆக்கியது

4. என்ன சொல்ல வருகிறார்.? விட்டால், வேலை வாய்ப்புகளே உலகமயமாக்கலுக்குப் பின் தான் வந்தது என்கிறாரா.?

பொதுவாக கேப்பிடலிசத்தினால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டது உலகமயமாக்கல் மட்டுமே என்பதால் அதைத் தவிர்ப்போம்.

அவர் பதிவில் எழுதிவற்றை முழுவதுமாக எடுத்து எழுதியிருக்கிறேன். பிற அவர் பதில் கண்டு...

T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி

நண்பர் டிபிசிடி ஒரு பதிவு போட்டுள்ளார் (http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html).

அப்பதிவில் சியர் லீடர்ஸ் நடனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிபிசிடி முக்கியமாக வைக்கும் பிரச்சனைகள் :

1. கால்பந்தைப் பின்பற்றி இதை இறக்குமதி செய்தது ஏனோ.?
2. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் உற்சாகமடைவார்களா.? அதற்கு நிர்வாணப் படத்திற்குப் போக மாட்டானா.?
3. சியர் லீடர்களைக் காட்டும் காட்சிக் கோணம் கீழிருந்து மேலாகப் படு கேவலமாக இருக்கிறது

சியர் லீடர்கள் வரவேண்டிய கட்டாயதைப் பார்க்க வேண்டும். அதற்கு கிரிக்கெட் விளையாட்டு மிகப் பெரிய வர்த்தகமாகியது ஏன், 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான பார்வையாளர்கள் குறைந்தது ஏன் போன்ற பல கேள்விகள் கேட்கப் பட்டாக வேண்டும் (டெஸ்ட் கிரிக்கெட்டே உண்மையான கிரிக்கெட்டாகவும் 50 ஓவர்கள் ஆட்டம் பொழுது போக்காவும் பல வீரர்களால் சொல்லப் பட்டிருக்கிறது. இப்போது அந்தப் பொழுது போக்கிற்கு ஆபத்து வந்து விட்டது).

உலகத்தில் மிகச் சில நாடுகளே விளையாடும் இவ்விளையாட்டிற்கு இந்திய மக்களிடம் ஆர்வம் உண்டாக்கப்பட்டதின் பின்னாலுள்ள வர்த்தகர்களின் அக்கறைகள் பேசப் பட்டாக வேண்டும்.!

ஒவ்வொரு ஓவர் நடுவிலும் விளம்பரம் காட்ட முடிவது தான் இதிலுள்ள கவர்ச்சி. அதனாலேயே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இவ்விளையாட்டை முன்னிறுத்துகின்றன. பல கோடிக் கணக்கில் செலவழித்து இவ்வாட்டத்தின் மீதான ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டமைத்தன. விளையாட்டில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வணிக நிறுவனங்களைன் அக்கறைகள் காப்பாற்றப் பட்டாக வேண்டும்.

பொதுவாக பெண்கள் மறைத்து வைத்திருக்கும் பாகங்களை வாயூரிஸ்டிக்காக upskirt view ஆகவோ அல்லது down blouse viewஆகவோ காட்டுவது கேவலமானது தான். ஆனால் இங்கு நடனமாடும் பெண்களுக்கும் இப்படிக் காட்டப் படுவது தெரியுமென்றே நினைக்கிறேன். பெண்களைச் சுரண்டுவதாக இதைப் பார்க்க முடியுமே தவிர ஒரு ஒழுக்குப் பிரச்சனையாகவோ அல்லது சமூக ஒழுங்காகவோ பார்க்க முடியாதென்று தோன்றுகிறது.

விளையாட்டும் சினிமாவும் இங்கு ஒன்று கூடுகிறது -- T20 எனும் விறுவிறுப்பான சினிமா மைதானத்தில் வீரர்கள் விளையாட அதற்கு நடிகர்கள் (உதா ஷாருக் கான், பிரிதீ ஜிந்தா, விஜய்) துணைப் பாத்திரங்களாக, சில சமயம் முதலாளிகளாக மாறுகின்றனர். இதன் மூலமாக அதிகப் பணம் புரளுவது சாத்தியமாகிறது.

கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி ஒரு மாலை நேர பொழுது போக்காக, வேலை முடித்து ஓய்வாக அமர்ந்து பார்ப்பதற்குத் தேவையான விறுவிறுப்பு கொண்டதாக மாற்றப் பட்டாகி விட்டது. இனி இன்னும் சுவாரசியம் குறையும் பட்சத்தில் டிபிசிடி சொன்னது போல் ஸ்டிரிப் டீஸ் அல்லது டாப்லெஸ் நடனங்களுடன் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.!

விளையாட்டை ஜெயித்தே ஆக வேண்டிய ஒன்றாக மாற்றப் பட்டதை, வணிக மயமானதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர இது போன்ற விஷயங்களை அல்ல.