திலீப் குமார் - வித்தியாசமான கதைசொல்லி

1975லிருந்து எழுதி வருபவர் திலீப் குமார். பரவலாக அதிகம் அறியப் படாதவர். மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு முக்கிய இடம் அவருக்குண்டு. இவரின் தாய் மொழி குஜாராத்தி என்றாலும் எழுதுவது தமிழில். சென்னை மயிலாப்பூரில் புத்தகக் கடை நடத்திக் கொண்டிருந்தார் (இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை). அவர் எழுத்துக்களை அறிமுகப் படுத்துவதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம்.

திலீப் குமாரின் புத்தகங்கள் :

1. மூங்கில் குருத்து
2. கடவு (மேலே உள்ள தொகுப்பிலிருந்து சில கதைகளும் + சில கதைகளும் கொண்டது)
3. மௌனியுடன் கொஞ்ச தூரம் (வானதி பதிப்பகம்)
4. 'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)

முதலிரண்டும் க்ரியா வெளியீடு.

தினமணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலும் மீட்சி, காலச்சுவடு, 1/4 போன்ற சிறுபத்திரிகைகளே அவரின் வெளியீட்டுக் களனாயிருந்துள்ளது.
குறைவாகவே எழுதியிருந்தாலும் விதம் விதமான கதைகளை எழுதிப் பார்த்தவர் திலீப்குமார்.

'அக்ரகாரத்தில் பூனை' கதை சுவாரஸ்ய நடை கொண்டது. பப்லிப் பாட்டி கோயில் பூஜை என இருப்பவள். புஷ்டி மார்க்கத்தின் authority. பூஜைக்கு வைத்திருக்கும் பாலைக் குடிப்பது போன்ற தொல்லைகளைச் செய்யும் பூனையை விரட்டச் சொல்லி தன் மகன் நட்டூவை ஆணையிடுவாள். அவன் சூரியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பான் ('போயும் போயும் அந்தத் துஷ்டப் பயலிடமா, அவன் பூனையைக் கொன்றாலும் கொன்று விடுவான்' என்பாள் பாட்டி). பத்து நாட்களில் அவன் பூனையுடன் வருவான்; அது அவனிடம் குழையும். கொண்டு போய் விடுவதற்கு முன் அவளிடம் காட்ட எடுத்து வந்திருப்பான். பாட்டி அவனிடம் பூனையை தன்னிடம் எடுப்பாகக் காட்டச் சொல்வாள். தன் கையில் மறைத்து வைத்திருந்த மூக்குப் பொடியை அதன் மூக்கில் திடீரென்று தேய்த்து விடுவாள். பொறி கலங்க அலறி அடித்துக் கொண்டு ஓடும் பூனை. எல்லோரையும் வைது விட்டு பூனையைத் தேடிப் போவான் சூரி. அன்று மாலை பாட்டியைப் பார்க்க வந்தவர்களிடம் பாட்டி ஆரம்பிப்பாள்: 'புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்...'

இப்படி எளிதாக கதைச் சுருக்கம் சொல்ல முடிகிற 'அக்கிரகாரத்தில் பூனை', 'கடவு', கதையம்சமே அற்ற 'நிகழ மறுத்த அற்புதம்', எதார்த்த பாணியிலான 'கண்ணாடி', 'கடிதம்', குடும்பத்திற்கு வெளியேயான உடலுறவைச் சொல்லும் 'கானல்' வன்முறையின் வீச்சைச் சொல்லும் 'தடம்'.

'ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக் காரரும்' கதையில் வரும் பாத்திரம் ஜி.நாகராஜனை நினைவு படுத்துவதாலேயே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இவர் கதையில் பெரும்பாலும் கதைமாந்தர்கள் குஜராத்திகள்; நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கதைக் களன் சென்னையில் உள்ள அதிகமும் குஜராத்திகள் வாழும் தங்கசாலை (மிண்ட்). ஆயினும் ஒவ்வொரு கதையும் வேவ்வேறு தொனியில் இருக்கும்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவரைப் படித்தவர்கள் பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.

10 comments:

ஹரன்பிரசன்னா said...

நான் படித்துக்கொண்டு இருக்கிறேன். படித்து முடித்ததும் என் பார்வையை எழுத உத்தேசம். நீங்கள் மிகச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள்.

ஏற்கனவே மரத்தடி குழுவில் ஆனந்த் ராகவ் திலீப்குமாரின் கட்டுரைகள் பற்றி எழுதியிருக்கிறார்.

வெங்கட்சாமிநாதன் திலீப்குமாரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

நீங்கள் வாசித்த கடவு தொகுதியில் வரும் நிகழ மறுத்த அற்புதம் சிறுகதையை ஞாநி 'இனி திருமதி.ஜேம்ஸ் என்ன செய்யவேண்டும்' என்கிற ஒற்றை ரீல் படமாக எடுத்தார். இதைப் பற்றியும் எழுதவேண்டும். இதைப் பற்றிய அறிமுகத்தை பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்டின் வலைப்பதிவில் காணலாம்.

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எழுதுங்கள் ஹரன்பிரசன்னா.

வெ.சா. படித்திருக்கிறேன். மரத்தடி குழுமம் கேள்விப்பட்டதுதான், படிப்பதில்லை.

நான் அவரைச் சுமார் 16 - 17 வருடங்களாக வாசிக்கிறேன். சிறு பத்திரிகைச் சூழலிலேயே அவ்வளவாய் விமர்சிக்கப் படாதவர் திலீப் குமார் என்ற வருத்தம் எனக்குண்டு.

அவரது நகைச்சுவை எழுத்துக்கு சிறந்த உதாரணமாய் சொல்லக்கூடிய ஒரு சிறுகதை இந்தியா டுடேயில் - should என்பதை சுல்ட் எனத் திரும்பத் திரும்பச் சொல்லும் மாணவன் - அது எந்தத் தொகுதியில் உள்ளது என்பது தெரியவில்லை (வந்து ஒரு பத்து வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன்).

ஹரன்பிரசன்னா said...

அந்தக் கதையின் பெயர் நுனிப்பற்று. இந்தியா டுடேயில் வந்தது. முக்கியமான கதை. கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்திய கதை. அதைப் பற்றியும் எழுத நினைத்திருக்கிறேன். அது கடவு தொகுப்பில் இல்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தகவலுக்கு நன்றி, ஹரன்பிரசன்னா. எழுதிவிட்டு தெரியப் படுத்துங்கள். படிக்க ஆவலாயுள்ளேன்.

எனக்குத் தெரிந்து இரண்டு தொகுதிகள்தான் வந்திருக்கிறது (மூங்கில் குருத்து + அதிலிருக்கும் கதைகளையும் சேர்த்து கடவு). வேறு ஏதாவது தொகுதி வந்திருக்கிறதா என்ன...

Muruganandan M.K. said...

நான் அவரது மூங்கில் குருத்து படித்திருக்கிறேன். படித்து பல காலம் ஆகிவிட்டது. மிகச் சிறந்த படைப்பாளி. ஆயினும் தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் பேசப்படாதவர். உங்கள் கட்டுரை கண்ட மகிழ்ந்தேன். நீண்ட நாட்களுக்கு முன் சென்னை சென்றபோது சந்தித்தும் இருக்கிறேன். இனிய மனிதர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, டாக்டர் எம்.கே.முருகானந்தன். எனக்கும் அவருடன் கொஞ்சம் பழக்கமுண்டு. பழகுவதற்கு மிக இனிமையானவர்.

ஜமாலன் said...

நானும் அவரது கதைகளை 18 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். தமிழ் சிறுகதை இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்தவர். புதிதாக எழுத வந்தபோதே சிறு பத்திரிக்கையில் பேசபப்பட்டவர்தான். அவரை அவரது புத்தகக்கடை அதாவத அவரது வீட்டின் வரவேற்பறையியே புத்தக கடையாக மாற்றியிருந்தார். அதில் அவரை சந்தித்து பேசியும் புத்தகங்கள் வாங்கியும் இருக்கிறேன். நினைவூட்டியமைக்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

மு. சுந்தரமூர்த்தி said...

திலீப் குமார் மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார். தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும். முக்கியமான ஒன்று பெங்குவின் வெளியீடாக வந்த A Place to Live என்ற தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதி (என்னிடமிருந்த புத்தகத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியாததால் எல்லா கதைகளுமே அவரால் மொழிபெயர்க்கப்பட்டனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை).

http://www.sawnet.org/books/reviews.php?A+Place+to+Live

Aranga said...

கடவு முதலில் படித்தபோது டேக்சா பாட்டி ,இப்போது படிக்கும் போது “பூனை” செத்த கிணற்றுக்கு கங்கா ஜலம் தெளிக்கும் பாட்டி ,

ஷட்டகருக்கு பெரிசு எழுதும் கடிதம் , முக்கியமாக முடியாததால் அவமானப்படும் அவன் , சந்திக்காமலேயே இருந்திருக்கல்லம் என்கிற அவள் ,

மறக்காத கதைகள் ,நிகழ மறுத்த அற்புதம் தலைப்புதான் பிடித்தது.