துரத்துதல்

சிறு வயது நண்பன் செழியன்
இப்போது பணத்தைத் துரத்துகிறான்
வித்தியாசமாக இருக்க நினைக்கும்
பல்லவன் துரத்தித் துரத்திப் படிக்கிறான்
காணக் கிடைக்காத புத்தகங்களை
வெண்திரை பிம்பங்களைத் துரத்திய குமார்
இப்போது பத்துக்கு எட்டு அறையில்
தொலைக்காட்சியின் வீச்சில் சிக்கிக் கிடக்கிறான்
இவ்வளவு வயதிற்கு இது தேவையா
எனும் அளவிற்குப் பெண்களைத்
துரத்துகிறான் குலோத்துங்கன்
போதையைத் துரத்தும் சங்கருக்கும்
புகழைத் துரத்தும் மாரியப்பனுக்கும்
இப்போது நேரமே இருப்பதில்லை
எதையாவது துரத்துவது போலவாவது
இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் போல

8 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

சரிதான் அதுதானே வாழிக்கை.. குறைந்த பட்சம் அமைதியையாவது துரத்தாதவர் எவருமுண்டோ

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா...

முபாரக் said...

நாமல்லவா துரத்தப்படுகிறோம்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முபாரக், நம்மை துரத்தும்போதும் நாம் வேறு எதையாவது துரத்தினால்...

இப்படியாக, இப்படியாக.....

ஜமாலன் said...

கவிதையின் அங்கதம் அருமை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

துரத்துதல் என்பதை ஒரு சமூக அமைப்பின் பார்வையில் தேடல் எனவும் கொள்கிறார்கள்.. உங்கள் கருத்து என்ன.. !

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முத்துக்குமார். அப்படி ஒரு பார்வை இருக்கிறது எனத் தெரியும். என்னைப் பொறுத்தவரை தேடலும் துரத்துதலும் ஒன்றல்ல.