ஊசலாட்டம்

காற்சட்டைப் பையில்
கால் குப்பி ரம்முடன்
சட்டைப் பையில்
கோலாவுக்கான பணத்துடன்
மூடியிருக்கிறது வீடு
பல்லிடுக்கில் சிக்கிய துகளாய்
கடினப் பட்டு துழாவிக் கொண்டிருந்த
மதியக் கவிதை
நினைவில் வர
அகலத் திறந்தது கதவு
போதைக்கும் கவிதைக்கும் இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது மனது

4 comments:

ஜமாலன் said...

விக்ரமாதித்யன் பாணியிலான நல்ல கவிதை. தவறாக நினைக்காவிட்டால் இரண்டு சொற்கள் கவிதையின் இறுக்கத்தை சிதைப்பதாக உள்ளது. 'நுறை ததும்பும்' மற்றும் 'காத்திருக்கிறேன்'. இரண்டு வார்த்தைகளும் இடைவெளிக்குள் மறைந்திருப்பவை. முதல் நான்கு வரிகளில் உள்ள 'னும்'மையும் தவிர்த்திருக்கலாம்.

"போதைக்கும் கவிதைக்கும் இடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது மனது"

நல்ல வரிகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன். நீங்கள் சொல்லியபிறகு, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

மாற்றி விடுகிறேன்.

ஆடுமாடு said...

சுந்தர்ஜி. நன்றாக இருக்கிறது. வித்யாசங்கரின் கவிதை சாயல் தெரிகிறது. அவர் வெளிப்படையாகவே எழுதியிருப்பார். அம்மாவே சாராயம் வாங்கிதருவதான கவிதை. அதில் நேட்டிவிட்டி. படித்ததும் அதுதான் ஞாபகம் வந்தது. அவர் எழுதியிருந்தாலும் இது உங்களுக்கான நடைதான். நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

துரையின் அந்தக் கவிதையைப் படித்திருக்கிறேன். அந்தக் கவிதையைப் பற்றி, ஒரு விரிவான விமர்சனத்தை விக்ரமாதித்யன் எழுதியிருப்பார் (சுபமங்களாவில் என்று ஞாபகம்). அது கவிதையைப் போலவே அருமையாயிருக்கும்.