சின்னத்துவம்

'பெரிதினும் பெரிது கேள்
என்றானே பாரதி...'
ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த
பேராசிரியரை
இடைவெட்டினான்
சி மணியின்
மினி யுகத்து மனிதன்
காணி நிலம் வேண்டாம்
10க்கு 12 அறை போதும் என்றான்
முக்கியத்துவம் வேண்டாம்
சின்னத்துவம் போதாதா?
என வினவினான்
'ஸின்னத்துவம் என்றால்...'
இழுத்த பேராசிரியரிடம்
சின்னதாய்க் கோபப் பட்டான்
சின்ன விஷயங்கள் குறித்து
சின்னதாய் விளக்கினான்
சின்னத்துவத்தைச்
சின்ன தத்துவம்
என முணுமுணுக்கலானார்
சின்ன விரக்தியில்
பெரிதாய்ச் சிரித்து
கைகுலுக்கி விடை கொடுத்தான்
மினி ஆசிரியன்

0 comments: