புகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்

போதையின் பாற்பட்டதாகவே
கழிகிறது நம் காலம்

மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்களைச் சிலர் எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பது போன பதிவை எழுதியதும்தான் தெரிந்தது. உண்மையில், போலீஸ் / அரசுகளைவிட சில சக பதிவாளர்கள் வன்முறையாளர்கள் என்பது புரிகிறது - இப்படி எழுதுவதற்காகவும் கொதித்தெழுவார்கள் என்பதும்..

ஒருவர் (இவர் வக்கீல் என நம்புகிறேன்), போலிஸுக்குப் பயந்தால் வீட்டில் (அதுவும் கதவைச் சாத்திக் கொண்டு!) சிகரெட் பிடியுங்கள் என்கிறார். (பேருந்துகளில் ஏன் இடிக்கறீங்க என்றால், இடிக்கக்கூடாதுன்னா ஆட்டோல போகவேண்டியதுதானே எனச் சில இடிமன்னன்கள் சொல்வது ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது!). இன்னொருவர், உன் மகன் முகத்தில் நான் புகையை ஊதட்டுமா எனப் பின்னூட்டுகிறார். இன்னொருவர், வேண்டுமானால் உங்கள் மகன் முகத்தில் புகையை ஊதுங்கள் (என் மகன் முகத்தில் புகையை ஊதுவது என் சுதந்திரமாம்!), அவன் கஷ்டப்படட்டும்; பள்ளிகளருகில் புகைபிடித்தால் என் மகனுக்குத் தீங்கு நேரும்; அதனால் வேண்டாம் என்கிறார். வேறொருவர் அமெரிக்காவில் சுற்றுச் சூழலை மக்கள் மாசுபடுத்துவதில்லை என்கிறார். இன்னுமொருவர், தற்கொலை, கொலை, விஷம், தூக்கு என உதாரணங்கள் தருகிறார். இன்னும் சிலர் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டுமென்கிறார்கள்!!

கொஞ்சம் விட்டால், என்னைக் கழுவிலேற்றிவிடுவார்கள் போல!

மக்களே, நான் சொல்வதெல்லாம் இதுதான் :

புகையிலைக்கு முற்றாகத் தடையென்றால், முடிந்தால், நடத்திக் கொள்ளுங்கள். அது இந்தியா என்றில்லை, உலகில் எங்குமே நடக்க முடியதாது. ஆனால் இப்படி மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை, விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி எனக் காமெடி செய்யாதீர்கள்.

சிலர் லாஜிக்கலாக மடக்குகிறார்கள். எலிவேட்டர்கள் பேருந்து நிலையங்களில் இருக்கிறதா என்று. ஐயா, பேருந்து நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் முதலில் புகைக்க அனுமதியிருந்தது, இப்போது விமான நிலையங்களில் மட்டும் இருக்கிறது. இதுதான் என்னுடைய கேள்வி.

யோசித்துப் பார்த்தால், எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒருவித போதை தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிலருக்குக் குடி, சிலருக்கு சிகரெட், சிலருக்குக் குடும்பம், சிலருக்குப் படிப்பு, சிலருக்கு வேலை.

புகைக்காதவர்கள், குடிக்காதவர்கள் ஏதோ ஒரு மனஇயல்பில் தங்களை மேல்ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு அறிவுரை வழங்குகிறார்கள் :( இன்னும் சிலர் அரிய கண்டுபிடுப்புகளைச் சொல்கிறார்கள் : புகைப் பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானதாம்!!

புகைபிடிப்பவர்கள் எல்லாரும் ஏதோ அடுத்தவர்கள் முகத்தில் புகையை ஊதுவதற்காகவே காத்துக் கொண்டிருப்பவர்கள் போன்ற தோற்றம் வருகிறது பின்னூட்டங்களைப் பார்த்தால். நிஜத்தில் அப்படியில்லை.. புகைப்பிடிப்பவர்கள் கொலைகாரர்கள் அல்ல.

அடிப்படையில், நாம்செய்யும் பலசெயல்கள் அடுத்தவர்களைப் பாதிப்பவையே. குறைந்தபட்ச நேர்மை / அறம் என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை அணுக முடியும் என நினைக்கிறேன்.

இன்னும் சிலர் நிஜமாகவே இச்சட்டம் புகைப்பழக்கத்தைக் குறைக்கும் என நம்புகிறார்கள். நல்லது. ஆனால் பாருங்கள், நிதர்சனம் வேறுமாதிரியாக இருக்கிறது. பான்பராக் தடைச்சட்டத்தினால் அதன் உபயோகம் குறையவில்லை. காவல்துறை ஊழியர்களிடம், கடைக்காரர்கள், அவர்களிடம் வாங்கிய பொருளுக்குக் காசுகேட்டால் மிரட்டப் படுகிறார்கள் வழக்கு வருமென்று. உடனே அவன் ஏன் தடைசெய்யப்பட்ட பொருளை விற்கிறான், அதனால்தான் இலவசமாகத் தரவேண்டி இருக்கிறது எனச் சொல்லாதீர்கள். சட்டங்களை மதித்து பேணி ஒழுகுவதையே ஆயுட்கால லட்சியமாக வைத்திருப்பதாக நம்பும் சிலர் அப்படியும் சொல்லலாம்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும் இச்சட்டத்தை அமுல்படுத்த முடியாதென்று. they want to leave a legacy. அவ்வளவே.. ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றும் வரப்போகும் அபாயகரமான விஷயங்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன.

சிலர் எல்லாவற்றையும் நல்லது / கெட்டது என்ற இருமைகளுக்குள்ளேயே பார்க்கப் பழகிவிட்டார்கள். ஒருவிதத்தில் அவர்கள் பாக்கியவான்கள்.

புகைப்பிடிப்பது பற்றிய சட்டமும் எதேச்சதிகாரமும்

காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
- தேவதச்சன்

ஆனால் இதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன இங்கு. சட்டங்களின் வாயிலாக பூதங்கள் ஏவப்படுகின்றன. பிரச்சனைகள் மறக்கடிக்கப்படுகின்றன.

முதலில், கேட்கப்படவேண்டிய கேள்வி, இப்போது இச்சட்டத்திற்குத் தேவையென்ன? ரயில்களில் & ரயில்நிலையங்களில், பேருந்துகளில், விமானங்களில் புகைபிடிக்க முதலிலிருந்தே தடை இருக்கின்றது (ஏற்கனவே தடைசெய்யப்பட்ட பலவிஷயங்கள் பரவலாக நடந்து கொண்டிருப்பது நாமறிந்ததே). இப்போது புதிதாக தனியார் அலுவலகங்களையும் வேறுசில இடங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் பிரதானமாக இரண்டைச் சொல்கிறார்கள் :

(1) சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது
(2) புகைபிடிப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கும் அது தீங்கிழைக்கும்

என் உடல்நலத்தைப் பற்றி என்னைவிட அரசு அதிகக் கவலைப்படவேண்டாம். நன்றாக இருப்பதோ அல்லது நாசமாகப் போவதோ நானே பார்த்துக் கொள்கிறேன். முடிந்தால் இதைவிட அதிகத் தீமையான பலவிஷயங்களை முதலில் சரிசெய்யட்டும்.

இந்த passive smoking பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள். என்னவோ புகைப்பிடிப்பவர்கள் எல்லாம் கொலைகாரர்களைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முனைகிறார்கள். இங்கு இதுவரை எத்தனை பேர் பேஸிவ் ஸ்மோகிங்கால் கேன்சர் வந்திருக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா.? கெடுதல் இல்லாமலிருக்காது, ஆனால் அது மிகக்குறைவான விகிதமே. அதைப்போய் ஏன் ஊதிப் பெரிதாக்கவேண்டும்?

விமான நிலையங்களில் புகைபிடிக்கவென தனியறை இருக்கிறது. ஆனால் பேருந்து நிலையங்களில் இல்லை. ஐயா, வண்டிகள் எல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகளாக வந்துகொண்டிருக்கின்றன. மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழலில், ஒருவன் பீடிகூடப் பிடிக்கக்கூடாதா?

அமெரிக்கா வாழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், அங்கு பேருந்து நிலையங்களில் புகைக்க அனுமதியுண்டாம். பலநாடுகளிலும் இல்லாத ஒன்றை இங்கு திணிக்க முயல்கிறார்கள்.

சரி, அப்படியே பிடித்துத்தான் ஆகக்கூடாதெனில், விமான நிலையங்கள் போல பேருந்து நிலையங்களிலும் தனிஅறை புகைக்கவெனக் கொடுத்துவிட்டு இச்சட்டதை அமுல்படுத்தலாம்.

இந்தியா ஒரு எதேச்சதிகார நாடாக மாறிக்கொண்டிருக்கிறதோ! அவர்கள் சிகரெட் பிடி என்றால் பிடிக்கவேண்டும், அபராதம் கட்டு என்றால் கட்டவேண்டும்.

ஒரு நண்பர் பேசும்போது சொன்னது : சிகரெட் / பீடி என்பது முழுக்க முழுக்க bio product (இயற்கையிலிருந்து வருவது), இதனால் என்ன பெரிய தீங்கிருக்கமுடியும். பெட்ரோல் டீசல் போன்றவற்றோடு ஒப்பிட்டால் இதில் தீமைக்குறைவாக இருக்கவே (ஒப்பீட்டளவில்) வாய்ப்புண்டு என்றார்.

இன்னொன்று, இதை வெறும் உடல்நலம் சம்பந்தப்பட்டதாக மட்டும் குறுக்கிவிடமுடியாதென்று தோன்றுகிறது.

இச்சட்டத்தின் இணை-நிகழ்வான போலீஸ் / போலீஸாக மாற விரும்புபவர்களின் அதிகாரம் / அது பிரயோகிக்கப்படப்போகும் விதம்... இவற்றை விலக்கிவிட்டு தனியாக இப்பரச்சனையைப் பற்றிப் பேசமுடியாதென்பது என் எண்ணம்.

WHO போன்ற அமைப்புகளின்மூலம் கேன்சர் பூச்சாண்டியைக் காட்டி, எய்ட்ஸ் பேயைக் காட்டி, மரண பயத்துடனேயே வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். மரண பயத்திலிருப்பவனுக்கு அதைத்தவிர வேறு எதைப்பற்றியும் உணரமுடியாது. அதுவே அவர்களின் அரசியலோ?

என் பார்வையில் இது பெரும்திரளான மக்கள் கூட்டத்தைக் குற்றவாளிகள் ஆக்கும் சட்டம். குற்றம் செய்கிறோம் என்ற guilt senseலேயே அவர்களை வைத்திருக்க உதவுவது.

இம்மாதிரியான சட்டங்களின் பின்னிருக்கும் அபாயம் இதுதான். இதைப் பலர் உணர்ந்து கொள்ளாதது வருந்தத் தக்கதே.

பரவலாக அறியப்படாத சிறுபத்திரிகைகள்

வாசகர்களிடம் பரவலாகப் போய்ச்சேராத சிறுபத்திரிகைகளைப் பற்றி எழுதலாம் என்ற ஒரு எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவருகிறது.

1990லிருந்து சிறுபத்திரிகைகளை வாசித்து, சேமித்து வருகிறேன். அவற்றிலிருந்து சில சுவாரசியாமன இதழ்களைப் பற்றிய சிறு குறிப்புகள், அதில் வெளியான கவிதைகள் அல்லது சுருக்கப்பட்ட கட்டுரைக் குறிப்புகள் மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாலாமென நினைக்கிறேன். இதற்காக மீண்டுமொருமுறை பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பும் அதுகுறித்த சிறுஅசைபோடல்களும் கூடுதலாகக் கிடைக்கிறது.

கவிதை அழகியலுக்கான சிற்றிதழ் என்ற அறிவிப்போடு ‘பிரதி' என்ற சிறுபத்திரிகை வந்துகொண்டிருந்தது. ஆசிரியர் ஆலன் திலக். தனி இதழ் விலை ரூ 3. அட்டைகள் இல்லாத 'ழ' மாதிரியான மிகச் சிறிய இதழ்!

'பிரதி' ஜனவரி 1993ல் வெளிவந்த இதழில், எஸ் சண்முகத்தின் இரண்டு கவிதைத் தொகுதிகளைப்பற்றிய நாகார்ஜூனனின் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த இதழில் வந்த தமிழவனின் கவிதையொன்றைத் தருகிறேன் :

ரொம்பப் புரிகிற ஒரு கவிதை

அவனுக்குப் பாதையில் போகவேண்டும்
இதன்பின்பு கொஞ்சம் யோசிக்கவேண்டும்
அதன்பின்பு உணவு அருந்தவேண்டும்
அவனுக்குப் பூக்களை தரிசிக்கவேண்டும்
அவனுக்குத் திரும்பி வரவேண்டும்
அதன்பின்பு குளித்து பூஜை செய்யவேண்டும்
ஒளிக்கற்றைகளை விரலில் பிடித்து விளையாடவேண்டும்
கண்ணாடியில் படிந்த தூசை போக்கவேண்டும்
பாதையில் புகைநடுவே மூக்கடைத்து நடக்கவேண்டும்
அங்கு போகிறவனை ஓரக்கண்ணால் பார்க்கவேண்டும்
தினமும் பேப்பர் படித்துவிட வேண்டும்
ஓரத்தில் ஒருநூலில் குறிப்பெடுக்க வேண்டும்
ஒருஎலி செத்துக்கிடப்பதை புகைப்படம் எடுக்கவேண்டும்
நூலகத்தில் மூலையில் தனியாய் ஒருபெண் செத்துக்கிடப்பதையும்
எதையோ நினைத்தபடி இருப்பதைப்பற்றி அவனும்
ஒருநாள் நினைக்க வேண்டும்

கவிதையைவிட அதன் தலைப்பு மிகப் பிடித்திருந்தது எனக்கு!

வளர்மதி விலகல்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்
- பிரமிள்

வளர்மதியை நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். கவிதாசரணில் அவரை முதலில் படிக்கத் துவங்கியவன், பிறகு பழைய நிறப்பிரிகை இதழ்களிலும் அவருடைய எழுத்துகளைத் தேடிப் படித்தேன்.

அவர் வலைப்பதிவில் எழுதுகிறார் எனத் தெரிந்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். நான் அப்போது வலைப்பதிய ஆரம்பித்திருக்கவில்லை. அறியப்பட்ட அறிவுஜீவிகளுடன் நேர்ப்பழக்கம் வைத்துக் கொள்வதில் எனக்கு மனத்தடை உண்டு. அதையும் மீறி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி 2007 நவம்பர் முதல்வாரத்தில் நேரில் சந்தித்தேன். நவம்பர் இறுதியில் நானும் வலைப்பதியத் துவங்கினேன்.

அப்போதிலிருந்து அவர் மீதான மதிப்பு கூடிக் கொண்டிருக்கிறதே தவிர, குறைந்ததில்லை. தமிழில் இருக்கக்கூடிய முக்கிய சிந்தனையாளர்களுள் அவர் ஒருவர் என்பது என்னுடைய திடமான தீர்மானம்!

போன வருட இறுதில் துவங்கிய எங்களுடைய நட்பு இன்னமும் நெருக்கமாகியிருக்கிறது. அவருடன் கழித்த நேரங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. பெரிய சிந்தனைவாதி என்பதான தோற்றம் எதுவும் தராமல் உடனிருப்பவர்களுடன் பழகுவது அவருடைய தனிப்பண்பு. தான் அடையாளம் கண்ட சில இளைஞர்களை அவர் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவ்விளைஞர்கள் இலக்கியம் மட்டுமல்லாது பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள்!!

அடிப்படையில் அவர் மிகவும் ஜாலியானவர். அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவரது குணத்திற்குத் தீங்கு வருமோ என நினைத்து திரட்டிகளிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

அவரது தீவிர வாசகர்கள் தொடர்ந்து அவரை வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள் - புதிதாக வரும் வாசகர்களுக்கு அவரிருப்பது தெரியாமல் போய்விடக்கூடிய அபாயமிருக்கிறது. ஆனாலும், பலர் இணைப்புச் சுட்டி தந்திருக்கின்றனர். தமிழ்மானம் போன்ற வலைச்சிற்றிதழ்களும் அவருடைய எழுத்துகளைத் தாங்கி வருகின்றன. அதன்மூலம் அவரைப் புதுவாசகர்கள் படிக்கலாம்.

தமிழ்மணப் பொது வாசகர்களுக்கு அவரது விலகல் இழப்பே. இதை, அடிப்படை அறமோ நேர்மையோ அற்று திருடன் போன்ற வசைகளை வீசிச்செல்லும் சில பின்னூட்ட / தனிப்பதிவு கருத்து கந்தசாமிகள் கொண்டாடலாம்! அவர்கள் எங்கு பிரச்சனை என்றாலும் பின்னூட்டியோ அல்லது தனிப்பதிவிட்டோ ஊதிப் பெரிதாக்குபவர்கள் :( இப்போதைக்கு கட்டற்ற இணையப் பொதுவெளியில் ஒன்றும் செய்ய இயலாது :((

இனியாவது அவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் காழ்ப்பு தீர்ந்தால் நல்லது.

நல்லா இருங்க மக்கா!!!

திரட்டிகளில் இல்லாவிட்டாலும் வளர்மதி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது என் அவா. அவரும் அப்படியே செய்வார் என்பது என் நம்பிக்கை!