சத்யம் - இன்னொரு என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

மகன்களின் நிறுவனங்களை வாங்கத் திட்டமிட்டு பல களேபரங்கள் நடந்து 20 நாட்கள் கழித்து சத்யம் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மனசாட்சியின்படி செய்திருக்கிறாராம்!

வரவு செலவுக் கணக்கில் பொய்யாக 5,040 கோடி ரூபாய்கள் பண இருப்பு உள்ளதாகக் காட்டியிருக்கிறார்கள் (மொத்த தொகையே 5,400 கோடிதானாம், அதில் 5,040 கோடி பொய்!). தவிர வரவேண்டிய தொகையை ஒரு 500 கோடி அதிகப்படுத்திக் காண்பித்தது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு 1,200 கோடி குறைத்துக் காண்பித்தது, வட்டியில் ஒரு 400 கோடி என சகலத்திலும் விளையாடியிருக்கிறார் மனிதர். அதுவும் இத்தகைய தில்லுமுல்லுகளைச் சில பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துவருகிறாராம்.

கூத்து என்னவென்றால், உலகத்தில் பெரிய அக்கௌண்டிங் நிறுவனங்களுள் ஒன்றான Price Waterhousecoopers தான் இவர்களது ஆடிட்டர்கள்! அது எப்படி இவ்வளவு பெரிய கோல்மால் தெரியாமல் போகுமென்பது அவர்களுக்கும் ராஜூவுக்குமே வெளிச்சம். பன்னாட்டு நிறுவனங்களைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது :))

இன்னொரு விஷயம். அவரது பங்குகளை ஏற்கனவே அவர் அடமானம் (அதிக விலையில் என்பதைச் சொல்லத் தேவையில்லை) வைத்துவிட்டார். இப்போது அவர்களும் அதில் பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டார்கள். இதெல்லாம் முடிந்தபிறகே ராமலிங்க ராஜூ தன்னுடைய ஒப்புதல் கடிதத்தைத் தந்திருக்கிறார்.

சிலருக்குத் தோன்றலாம். வருமான வரியைக் குறைக்க வேண்டி அனைவரும் லாபத்தைக் குறைத்துத்தான் காண்பிப்பார்கள். ஏன் ஐடி நிறுவனங்கள் ஏற்றிக் காண்பிக்கின்றன என்று... பதில் எளிமையானது. இப்போது இந்தியாவில் பல வருடங்களாக stp / ehtp களுக்கு வருமான வரியே கிடையாது! லாபத்தைக் கூட்டிக் காண்பித்தால் சந்தையில் பங்குகளில் விலை கூடும், புதிய பங்குகளைவிடலாம் என ஒரு வட்டம் அது.

இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளியில் வராமல் அமுக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை. இனி அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். கடந்த கால வரலாற்றைப் பார்த்து அது எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால், நிறைய லாபம் வருகிற நிறுவனம் என நம்பி சத்யம் பங்குகளை வாங்கியவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அடிப்படையில் பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?

இது தொடர்பாய் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்ற தலைப்பில் நான் எழுதிய இடுகையை இங்கே படிக்கலாம் :

www.jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

பிற்சேர்க்கை : இது தொடர்பாக எழுதிய அடுத்த இடுகை :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_14.html

காதலும் போதையும்

என்ன செய்வது தெரியவில்லை
என்றேன்
என்ன செய்வது தெரியவில்லை
என்றாள்
ஒன்றும் செய்யாமல் இருந்தோம்
இதமாகத்தான் இருக்கிறது
இதுவும்
(இந்துமதிக்கு)

(மவ்னம் 7 - செப்டம்பர் 1994ல் வெளியானது)

வாங்க வாங்க
கடன் தான்
குடிக்கக் குடிக்க
போதை தான்

(நடு கல் 13 - ஜனவரி 1994ல் வெளியானது)

மழையும் வாசலில் மனிதர்களும்

ஒவ்வொரு மழைதினமும்
முக்கியமான தினமெனக்கு
வாசலில் நிறைய பேர்
ஒதுங்கியிருப்பார்கள் மழை கருதி
நானும் உள்ளே இருப்பேன்
கூட்டம் பலவும் பேசும்
அரசியல், சினிமா -
சிலர் இலக்கியம் கூடப் பேசலாம்
வாசலில் மனிதர்கள்
நிற்பது சுகம்தானே

(கவிதா சரண் செப்டம்பர் 1992ல் வெளியானது)

கலாச்சாரக் காவலர்கள்

பாமகவின் மகளிரணியைச் சேர்ந்த சுமார் 20 பேர் கடந்த 31ம் தேதி இரவு சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பாரில் நடக்கும் 'ஆபாச' நடனத்தை எதிர்த்து. பிறகு போலீஸ் அனுமதிக்க மூன்று பேர் உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடனம் எதுவும் நடக்கவில்லை என்றதும் திருப்தியுடன் திரும்பியிருக்கின்றனர். போலவே வேறு சில விடுதிகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. யாரும் தராமல் இவர்களாகவே கலாச்சாரக் காவலர்கள் வேலையை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

உங்களுக்குக் குடி கொண்டாட்டம், எங்களுக்கு அது பொருளாதாரம், உடல் நலம் சார்ந்த பிரச்சனை என பொதுமைப் படுத்திவிட்டு இதைத் தாண்டிச் செல்ல முடியாது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு குடிப்பதுகூடப் பிரச்சனையில்லையாம், நடனம்தான் கூடாதாம். காரணம் நமது கலாச்சாரம் கெட்டுவிடுமாம் ...

... சில மாதங்களுக்கு முன் என் வீட்டருகில் இரண்டு சிறுவர்கள் நடனப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர், ஏதாவது போட்டிக்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். விஜயும் அசினும் விரக தாபத்தில் நடித்திருந்த ‘டோலு டோலுதான் அடிக்கற' பாட்டு.

நான் உனக்குள் நுழைய
நீ எனக்குள் கரைய
நம் உலகம் உறைய

என்ற வரிகள் ஒலித்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த பெரியவர்கள் ஊக்குவிக்க, படத்தில் வரும் pelvic movementsஐ பிரதியெடுக்க அச்சிறுவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்...

இந்தச் சமூகச் சூழலில்தான் பாமகவினர் விடுதிகளில் வயதுக்கு வந்தவர்கள் ஆடும் நடனங்களை எதிர்க்கின்றனர். இவர்களது செல்வாக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாயிருக்கும் பட்சத்தில், தமிழகத்தின் சிவசேனாவாக மாறிவிடக்கூடும்.

இந்த அபத்த நாடகம் இத்துடன் முடிந்தது. அடுத்தது..? ஃபிப்ரவரி மாதம் காதலர் தினத்தின்போது பூங்காக்களிலும் கடற்கரையில் நடந்தேறும்.