அப்பாவும் அம்மாவும் காணாமல் போக்கியவை

காணாமல் போக்கியவை பற்றிய
நீண்ட பட்டியலே அப்பாவிடமிருந்தது
சின்ன வயதில் அட்லஸ் சைக்கிள்
அக்காவை விட்டு வரப் போனபோது
எடுத்துச் சென்ற ஃபாரின் குடை
கோயிலில் எப்போதோ செருப்பு
வேலையிலிருந்து திரும்பும் போது
இருநூறு ரூபாய் பணம்
என ஆரம்பித்து சென்று கொண்டேயிருந்தது
அம்மாவும் சிலவற்றை தொலைத்திருந்தாள்
வெளித் திண்ணையில்
மறந்து வைத்த டிரான்ஸிஸ்டர்
ஒரு காதுத் தோடு
மற்றும்
பதினேழு வயதுப் பையன்

16 comments:

வடுவூர் குமார் said...

கடைசி வரி பஞ்ச்??
ஹா! ஹா!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜெட் லீ பன்ச்.? :)
பின்னூட்டத்திற்கு நன்றி வடுவூர் குமார்.

ஆடுமாடு said...

நல்லாருக்கு. கடைசி வரி பச்சக்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு.

சின்னப் பையன் said...

நல்லாத்தான் இருக்கு...:-)

பாச மலர் / Paasa Malar said...

இலகுவாகத் தொடங்கி தொடர்ந்து கனமாய் முடித்திருக்கிறீர்கள்..சின்னச் சின்ன விஷயங்கள் அழகாய் வெளிப்பட்டிருக்கிறது கவிதையில்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

கடைசி வரி.. ரொம்ப வலிக்குது சுந்தர்..

ஜமாலன் said...

நவீனக்கவிதையின் குணாம்சங்களில் ஒன்று உயிர் உள்ள உயிரற்ற (சேதன அசேதன) பொருட்களை சமதளத்தில் வைப்பதன் மூலம் ஒரு மனித இழப்பை சொல்வது. மகன் ஒரு உயிரற்ற பொருளாக மாற்றும் அந்த இறுதிவரிகள் அருமை. மனிதன் தனது மையத்தை இழந்து ஒரு மறந்து வைத்தவிட்ட பொருளாக மாறும் அவலம். இதுதான் நவீனக்குரல் என்பது.

அப்பாவின் பொருட்கள் அம்மாவின் பொருட்கள் இவற்றின் வித்தியாசம் கொஞ்சம் பிரக்ஞைக பூர்வமாக கவிதைக்குள் ஆளப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அம்மா தொலைத்தது அவளது டிராண்ஸிஸ்டரை மட்டுமல்ல வாழக்கையையும்தான் என்பதான வரிகளைதான் எதிர்பார்த்தேன். நம்காலத்து அம்மாக்களும் அக்காக்களும் அப்பாவைவிட டிராண்ஸிஸ்டருடன்தான் அதிகம் இருந்திருப்பார்கள். அதுவும் இலங்கை வாணொலி அல்லது விவதபாரதிதான். டிராண்ஸிஸ்டர் அப்பா மகனைவிட மதிப்பு வாய்ந்ததாக அம்மாவிற்கு இருப்பதும் ஒரு அவலம்தான். இறுதியில் கவிதை வேறு தளத்தில் பயணித்துவிட்டது. இதுவும் நல்லாதான் இருக்கு.

தினேஷ் said...

உங்கள் கவிதைகள் ஒரு அதிர்வை தருகின்றன, அந்த அதிர்வை ரசிக்க பழகி கொண்டு உள்ளேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ச்சின்னப் பையன் & பாச மலர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

நன்றி, ஜமாலன். நானும் அப்படித்தான் நினைத்தேன். பிறகு அம்மாவை ரொம்ப glorify செய்வது போல இருக்குமோ என்று நினைத்தேன் + கடைசி வரி அதிர்ச்சி இருக்காது என்றும். அதனாலேயே இவ்விதம் எழுதினேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தினேஷ்.

Anonymous said...

கடைசி வரித் திருப்பம் அதிர்ச்சியைத் தந்தது. நன்றாக உள்ளது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனானி.

தெய்வா said...

மிக நன்றாக இருந்தது கடைசி வரி.
எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போல் தொலைந்தது நிறைய இருக்கிறது

தெய்வா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தெய்வா.