கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் (2)

நீங்கள் எத்தனை தூரம் விவாதித்தாலும், கவிதையில் உள்ள சமகால கருத்தியல் பாதிப்பை நிராகரிக்க முடியுமா என்ன? நவீனக் கவிதைக்கும் இருத்தலியத்துக்கும் உள்ள தொடர்பை... ரசசித்தாந்ததுக்கும் மையத்தை வலியுறுத்தும் வேதாந்த மருபுக்கும் உள்ள தொடர்பை...
இதெல்லாம் வரலாற்றுரீதியான வாசிப்பின் விளைவாக கண்ணில் படுபவை.  வரலாற்றுரீதியான நிர்பந்தம், என்னில் ஒரு கருத்தியலைப் புகுத்தவும் செய்யலாம்.  ஆனால், கவிஞனாகவும் வாசகனாகவும் அதைத் தாண்டிச் செல்வதே என் பணி.

ஆனால், கவிதை விவாதங்களில் நீங்கள் எப்போதும் ஒரு தெளிவான வடிவப் பிரக்ஞையுடன் இருப்பதாகத் தெரிகிறதே...

அது இயல்பான வெளிப்பாடு.  ஒரு கவிதை தோல்வியடையும்போது, ஏன் அது தோல்வியடைந்தது என்று விவாதிக்கும்போது, வடிவம் பற்றிய  பேச்சு வருகிறது.  அதற்கு அர்த்தம், ‘அவ்வடிவத்தை அது அடைந்திருந்தால் நல்ல கவிதையாக ஆகிவிட்டிருக்கும்’ என்பது அல்ல.  அதன் சரிவை, வடிவம் சார்ந்த உருவகங்கள் மூலம் விளக்க முடியும்.  அவ்வளவுதான்.  என் விசுவாசம் கவிதையனுபவத்துக்குத்தான்; வடிவத்துக்கு அல்ல.

உங்கள் விருப்பம் அது.  ஆனால்  மானசீகமான ஒரு வடிவ உருவகம் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

அதை மீறுவதே என் கவிதை.

மீண்டும் உங்கள் பதிலில் இருந்து தொடங்குகிறேன்.  கவிதையனுபவத்தின் ‘மாயத்தருணம்’ பற்றிச் சொன்னீர்கள்.  நீங்கள் கவிதையை மர்மப்படுத்த முயல்கிறீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?

ஏன் நான் மர்மப்படுத்தக்கூடாது?

அறிவார்ந்த தேடல் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் தன்னைக் கிழித்து, உடைத்து மர்மங்களை அவிழ்க்கவே முயலும்.  பெரும் கலைப்படைப்புகளின் இயங்குமுறையே அதுதான்.  மர்மப்படுத்துதலும் புனிதப்படுத்துதலும், கலையின் தத்தளிப்புக்கும் தேடலுக்கும் எதிரான ஒரு சமநிலையை உருவாக்குபவை.

ஏற்கிறேன்.  ஆனால், தமிழ்ச்சூழலில் அதன் கடைசி மர்மத்தை மறுக்கக்கூடிய போக்குதான் வலுவாக இருந்து வருகிறது.  ஏன் அதன் தொழில்நுட்ப சூட்சுமங்களையேகூட, புரிந்து கொள்ளாமல் எளிமைப்படுத்தும் போக்குதான் பரவலாக உள்ளது.  ஆகவேதான், நான் அந்த மர்மத்தை அழுத்திச் சொல்கிறேன்.  அந்த மர்மம்தான் முக்கியம் என்பதில், அதை அறிய முயலவேண்டும் என்ற தாபமும் உள்ளது.

கவிதையை ஓர் அறிவார்ந்த பரவசமாகப் (intellectual ecstacy) பார்க்கும் பார்வை நவீனத்துவ மரபில் உள்ளது.  அந்த அறிவார்த்தம், உண்மையில் தத்துவத்தால் கட்டமைப்பட்டது. ஆகவே, நவீனத்துவ கவிதையைத் தத்துவத்தின் ‘சோராத்திரி’ என்று இன்று சிலர் கூறுகிறார்கள். (தத்துவத்தின் சோதனைக்குழாய் புத்திரிகளுக்கு நம்மிடையே பஞ்சமில்லை).

இன்று தத்துவத்தின், தருக்கத்தின், அறிவார்த்தத்தின் பிடியே இல்லாத பீறிடலாக, கவிதையைக் காணும் ஒரு போக்கு தமிழில் உருவாகி வருகிறது.  உங்கள் தரப்பு என்ன?

பாடல் என்ற வடிவத்துக்கும், கவிதை என்ற வடிவத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே நீங்கள் குறிப்பிடும் அறிவார்ந்த பரவசம்தான்.  சாதாரண உணர்ச்சியின் உச்சநிலைகளைக் கூறும் வரிகளை இன்றைய கவிதை வாசகன் உடனடியாக நிராகரித்துவிடுவான்.  உணர்ச்சியும் அறிவார்த்தமும் கிரகிக்க முடியாத மனோவேகத்தில் புணரும் சொற்சேர்க்கையே இன்றைய கவிதையாக இருக்க முடியும்.  உண்மையில் இந்தக் கிளர்ச்சிநிலையை நோக்கி தமிழ்ப் புனைகதை விரைந்து செல்கிறது.  வறட்டு அறிவார்த்தத்துக்கும் அனுபவமாக ரசவாதம் கொள்ளும் அறிவார்த்தத்துக்குமான வித்தியாசம் எவராலும் உணரமுடிவதுதான்.  அதற்காக மென்மையான, சிந்தனையை வருடிச்செல்லும் கவிதைகளுக்கு நான் விரோதி அல்ல.  அவற்றை நான் எழுத முயலமாட்டேன். அவ்வளவுதான்.

அனுபவமாக ரசவாதம்கொள்ளும் அறிவார்த்தம் என்று சொன்னேன்.  தமிழ் நவீனக் கவிதையின் சவால் என்று நான் காண்பது இதைத்தான்.  ஒரு படிமம் முன்வைக்கப்படுகிறது.  அது வளர்ந்து செல்லும் போக்கில், பாதை இரண்டாக கிளை பிரிகிறது.  ஒன்று உணர்ச்சிப்பெருக்கின் பாதை.  மற்றது சிந்தனை வேகத்தின் பாதை.  இவ்விரண்டு பாதைகளில் ஏதேனுமொன்றில் கவிதை நுழைவதற்கு முன்னால், தான் புறப்பட்டு வந்த பாதையையும் சேர்ந்த முச்சந்தியிலேயே கவிதையை நிறுத்திவிட முயன்றால், அது சாத்தியமானால், நவீனக் கவிதையில் ஒரு புதிய சந்தியை அறிமுகப்படுத்திவிட முடியும்.

அந்த அறிவார்த்தத்தில் உள்ள தத்துவ அம்சத்தைப் பற்றிக் கேட்டேன்...

கவிதையில் அறிவார்த்தம் என்பது, ‘சிந்தனையின் வழியாக கண்டடைந்த உண்மையின் கூறு ஒன்றைச் சிந்தனையின் கூறாகவே முன்வைப்பது அல்ல; அறிவார்த்தத்தினால் தீர்த்துவிட முடியாத ஆழ்நிலைத்துயரம் ஒன்றை, மனிதார்த்தத்தின் கையறுநிலையைப் பிரலாபிப்பதுதான்.’ இந்தத் துயரொலியைக் கேட்குமளவு தன் செவிப்புலனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளும் அவசியம் வாசகத் தரப்பில் இருக்கிறது.

இவ்வாறு நான் சொல்லிச் செல்லும் ஆதர்சக் கவிதாநிலை போதத்தின் திடுக்கிடலை, ஆழ்மன சாத்தியங்கள் போத விளிம்புகளுக்கு அப்பால் சலனமுறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.  இது நேர்த்தியான, தருக்கபூர்வ சிந்தனையை முறித்துவிடக்கூடியது.  வெறும் ஆவேசமான வார்த்தைச்செட்டால் மட்டும் இது நிகழ்ந்து விட முடியாது.

சரி, இப்படிக் கேட்கிறேன்.  தத்துவத்தின் அறிவார்த்தத்துக்கும் கவிதையில் உள்ள அறிவார்த்தத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஓர் அறைக்குள் நுழைகிறோம்.  அது ஒரு முழுமையாக (wholesomeness) நம்மை எதிர்கொள்கிறது.  அறிந்தும் அறியாததுமாக புலன்கள் அதன் முழுமையை உள்வாங்குகின்றன.  அது ஓர் அனுபவம்.  பிறகு வெளியே வந்து அந்த அறையை நினைவு கூர்கிறோம் அல்லது கூற  முயல்கிறோம். அப்போது அந்த அறை பல்வேறு அறிதல்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது.  அவ்வறிதல்களை நாம் பட்டியலிடுகிறோம்.

விஞ்ஞானம், அறிகிறது. கவிதை, அனுபவமாக ஆகிவிடுகிறது.  தத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாமானியம், விசேஷம் என்ற இரு தளங்கள் உள்ளன.  இந்த வாஷ்பேசின் இல்லை, அணு கூட்டமைப்பே உள்ளது.  ஆனால், அதில் கைகழுவலாம்.  ஒரே சமயம் சாமானிய விஷேஷ நிலைகளில், இந்த வாஷ்பேசின், கவிதையில் இருக்க முடியும்.

நான் இப்படிச் சொல்கிறேன்.  வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் பிரக்ஞையாகவே கவிஞனில் தத்துவம்; அதாவது, அறிவார்த்தம் உள்ளது.  அது அவனுடையதல்ல, சூழலில் இருந்து வந்து படிவது.

கவிஞனை மீறிய மொழியின் தன்னிச்சையான சுதந்திரப் போக்கு ஒன்று இருப்பதாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.  கவிஞனின் ரகசிய மனத்தளங்களில் ஒரு சுனைபோல பீறிடக்கூடும்.  சொற்கள், அவற்றின் கட்டுமானங்கள் எல்லாமே ‘சொல்லல்’ என்று வரும்போது, தருக்கபூர்வமான தொடர்களாகவே முன்வைக்கப்பட முடியும்.  சொல்லின் வழியாக நுட்பமான திருகலுக்கு ஆட்பட்டே மொழி வெளியேறுகிறது.  நான் கவிதையைத் தரித்தவனைக் கவிஞனாகவும், சொல்பவனைத் தொகுப்பாளனாகவும் (editor) பார்க்கிறேன்.  கவிதையியல் சம்பந்தமான என் விவாதங்கள் தொகுப்பாளனுடன்தான்.

வார்த்தைகளின் மீதான அடங்காக் காதலின் வழியாக ஒரு சொற்கூட்டமைப்பைக் கவிஞன் தேர்கிறான்.  இந்தக் காதலை வெளிப்படுத்துவதற்கு, கதை இறுக்கம் பூண்ட வார்த்தைகளைக் கோர்த்து தைப்பு நிலையொன்றை உருவாக்குவது என்ற ஒற்றைப் பாதை மட்டுமே மார்க்கம் அல்ல.  மாறாகக் கூரான, மிகப் பொருத்தமான சொற்களை மிதமாகப் பயன்படுத்தியும் நீங்கள் விழையும் ஆழ்மனச் சாத்தியங்களை மொழியில் நிகழ்த்திவிட முடியும்.  சுட்டல், சுடாதிருத்தல் இரண்டுமே கவிஞனின் முன்தீர்மானத்தின்படி அல்லாமல் கவிதையனுபவத்தின் கோரிக்கைகள் சார்ந்து நடைபெற முடியும்.

இயல்பான உணர்வெழுச்சிகளைப் பிரக்ஞைபூர்வமாகக் கட்டுப்படுத்தி, மிதமாகக் கூறும் போக்கு நவீனத்துவக் கவிதையில் உண்டு.  உங்கள் கவிதைகளிலும் அதைக் கேட்டேன்...

உணர்ச்சிநிலைகளை ஐயத்துடன் பார்த்துக் கட்டுப்படுத்தும் தருக்கநிலையை நான் முன்வைப்பதாகக் கூறினீர்கள்.  ‘உணர்ச்சி நிலைகள் அல்ல; அவற்றின் வெளிப்பாடுகள்தான் மிகவும் அகவயமானவை; (subjective) தனிநபர் சார்ந்தவை.’ அவற்றில் விகதாசாரம் மீறிய உக்கிரம் வெளிப்படும்போது பல சந்தர்ப்பங்களில் அவை கேலிக்குரியதாகிவிடுகின்றன.  மிகப் பிரசித்தி பெற்ற நெம்புகோல் கவிதையை நினைவுகூர வேண்டுகிறேன். அதிலிருக்கும் ஆதங்கம், அறக்கோபம் இவற்றை நாமிருவருமே மறுக்கமாட்டோம் இல்லையா? ஆயினும் அந்தக் கவிதையில் வாசகப் பங்கேற்பு, உள்ளோடும் இணைப்பிரதி (parallel text) ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த விசாரணை எதுவும் கிடையாது.

இதோ ‘இலக்கணம்’ வந்துவிட்டது...

இலக்கணம் அல்ல. எதிர்பார்ப்புதான்.  இவை இல்லாத சொல்முறைகள் வழியாகத் தகவல்கள் மட்டுமே பரிமாறப்படும்.  அந்தப் பணியை, தினசரி பத்திரிகைகள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கின்றன.  உண்மையில், தினசரிகளில் செய்திகள் பிரசுரிக்கப்படும் ஒழுங்கமைப்பிலேயே செய்திகளைத் தாண்டி பல்வேறு செல்வாக்குகளைச் செலுத்தும்போது, கவிதை என்ற பிரத்யேக வடிவில் இவற்றை எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே?

கனவுகள், ஆழ்மனநிலைகள் போன்றவை தம் நிகழ்தளத்தில், நிகழ்கணத்தில் கொண்டிருக்கும் அகப்பெறுமானத்தைச் சொல்லல் எனும் புறச்செயல்பாடு குறைத்துவிடுகிறது.  இவ்வகநிலைகள் சொல்லில் வனையப்படும்போது வெறுமே அடையாளப் படுத்தலாகச் சுருங்கியும் விடுகின்றன.  எனவே, கவிதை எனும் வடிவமே ஓர் அகண்ட பொருளில் அடையாளப்படுத்துவதுதான்.  மொழியின் தளத்தில் ஏற்கனவே புழங்கி பொதுத்தன்மையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சொற்களில் புதிய சேர்க்கைகளை உருவாக்குவதன் மூலம், பொதுத்தன்மைக்கும் அங்கீகாரத்திற்கும் அப்பால் பாயும் முயற்சியை மேற்கொள்ளும்போது, அடையாளப் படுத்தல் சற்று விரிவான எல்லைகளை உண்டாக்குகிறது.  ஆனால், ஆழ்மன அனுபவங்கள் எல்லைகளை மீறிப் பிறப்பவை.

கட்டுப்படுத்தப்படாத நேரடி வெளிப்பாடு என்று கவிதையில் எதுவுமில்லை.

அறிவார்த்தத்தால் அல்லது தத்துவத்தால் அரித்து வெளிவிடப்படுவது பற்றிக் கேட்டேன்.

நவீனக் கவிதைத் தத்துவத்தின் சோரபுத்திரி என்று ஒரு வரி முன்பே சொல்லப்பட்டது.  பதப்படுத்தப்படாத மிகையுணர்ச்சி பீறிடும் வரிகளை, ‘ஏன் மதவாத செய்யுட்களின் நவீன மாறுவேடம் என்று சொல்லக்கூடாது?’ தேவார - திருவாசகப் பாடல்களின் பக்தியின் உன்மத்தம் பாய்கிறது என்றால், இவ்வகைக் கவிதைகளில் தனி மனிதனின் உறவுநிலைகள் சம்பந்தமான உன்மத்தம் பாய்கிறது. களங்களும் காரணங்களும் வேறாயினும், உன்மத்தம் உன்மத்தம்தானே? விசாரணையற்ற உன்மத்த நிலையில் உள்ள அந்தரங்கத்தன்மை கவிதைக்கு அவசியமான பிரபஞ்சத்தன்மைக்கு எதிரானது.

கவிதை விவாதத்தில் உணர்ச்சிகரம், அறிவார்த்தம் என்று பிரித்து எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்க்கும்போது பல விஷயங்கள் விடப்படுகின்றன.  கவிதையானது உணர்ச்சி பீறிட வேண்டிய ஒரு வடிவம் என்ற மறைமுகக் கருதுகோளின் அடிப்படையில் பிறக்கும் நம்பிக்கை இது.  அறிவார்த்தம் நீட்டிச் செல்லும் பாதையில் விரையும் ஒருவன், ஒரு கட்டத்துக்குமேல் செயலற்றவனாகத் தன்னை உணரும்போது, அதீத உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாகிறான்.

    எப்பவாவது ஒரு
    கொக்கு பறக்கும்
    நகருக்கு மேலே என்
    கவசமும் வாளும்
    உருகி ஓடும்
    ஊருக்கு வெளியே,

என்ற தேவதச்சனின் கவிதையைப் படிக்கும் நகரவாசியான எனக்கு ஏற்படுவது அத்தகைய ஓர் அனுபவம்.  உணர்ச்சி, அறிவு என்று பேசிச் செல்லும்போது அடியில் உள்ள ஆழ்நிலை அறிதல் (understanding) கவனம் பெறாது போகிறது.

    எனது
    வீணையின் நரம்புகளுக்கு
    பாடத் தெரியாது
    நடனம்தான் தெரியும்
    அவை
    ஆடினால்
    பார்க்க முடியாது
    கேட்கத்தான்
    முடியும்

என்ற ஷாஅவின் கவிதையில் உள்ளது அறிவார்த்தத்தின் கருத்து நிலையா? உணர்ச்சிகரமான செயலறுநிலையா?

நான் உங்கள் கவிதைக்கு வருகிறேன்.  உங்கள் கவிதை அனுபவமாக இல்லை; அவ்வனுபவம் மீதான ஒரு கருத்தாக (idea) உள்ளது என்று கூறினால், என்ன பதில் கூறுவீர்கள்?

பதில் கூறியாகவேண்டும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.  கருத்து என்பதே ஒரு அனுபவம்தானே? அறிதலின் திறப்பு என்பது, அத்திறப்பின் பேரின்பம் என்பது ஏன் அனுபவமாகாது? அதை அனுபவத்தின் கீழான நிலை என்று கூறுவீர்களா என்ன?

அதேபோல, ‘உணர்ச்சி’ என்பதும் ஒரு வகை கருத்தேயாகும்.  கருத்துவடிவமாக அன்றி - மிருகங்கள்தவிர மனிதர்கள் - எப்படி உணர்ச்சிகளைத் தானுணரவோ, வெளிப்படுத்தவோ முடியும்?

என் கேள்வியை விரிவுபடுத்துகிறேன்.  அனுபவம், அவ்வனுபவம் மீதான ஒரு கருத்து, அதன் பிறகு அக்கருத்திற்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்பட்ட முதல் அனுபவம்.  இதுவே உங்கள் கவிதையின் இயல்பாக உள்ளது என்று கூறலாமா?

அறிவார்த்தம், உணர்வு தளம், கூறுமுறை எனும் மூன்றும் கலந்ததுதான் கவிதை.  இதன் பங்கீட்டளவும், முக்கியமானது.  அனுபவங்கள் மொழியினூடாக, மொழிப்பதிவுகளாக மட்டும்தான் நம்மால் அறியப்படுகின்றன.  முதலில் அனுபவத்தைப் ‘புரிந்து’ கொள்கிறோமா இல்லையா? அது என்ன? புரிந்து கொண்ட அனுபவத்தைத்தானே கூற முற்படுகிறோம்.  அனுபவம் அப்படியே கவிதையாக வருமா என்ன?

எல்லாச் சிந்தனை இயக்கமும் ‘நான்’ஐ விதவிதமாக கட்டமைக்கும் தொடர் இயக்கம்தான்.  இந்த ‘நான்’களுக்கு இடையே ஓர் ஒத்திசைவு இருக்கலாம், இல்லாமலும்கூட இருக்கலாம்.  நமது மனதில் ஓடும் சிந்தனைச்சரடு உண்மையில் என்ன? அனுபவங்களில் இருந்து ‘நான்’ஐத் தொடர்ந்து உருவியெடுக்கும் முயற்சிதானே? அதன் விளைவாகவே எல்லா அனுபவங்களும் மறு ஆக்கம் செய்யப்படுகின்றன.  அனுபவம் என்ற ஒன்று அறிதலுக்கு அப்பாற்பட்டது.  நான் பேசுவது ‘என்’ அனுபவத்தைப்பற்றி மட்டும்தான்.

கவிதை என்று வரும்போது, அப்படிச் சுயப்படுத்தப்பட்ட அனுபவத்தின் மேலும் செறிவான அம்சமே பதிவு செய்யப்படுகிறது.  அப்படி செறிவூட்டப்படும்போது அது, தான் சொன்னதைவிட பலமடங்கு உணர்த்த முற்படுகிறது.

இந்தப் பதில் எனக்கு முழுத்திருப்தி தருகிறது யுவன்.  ஆயினும் ஓர் ஐயம் மிச்சமுள்ளது.  தத்துவார்த்தமான கட்டுக்கோப்பு பல சமயம் வாழ்வனுபவத்தின் துளிகளைத் தவறவிடுகிறதல்லவா? அக்கட்டுக்கோப்பை வலுப்படுத்தக்கூடிய, அதனுடன் சம்பந்தப்பட்ட, விஷயங்கள் மட்டுமே அனுபவமாக ஏற்கப்படுகின்றன...

உறவனுபவங்களை மட்டும்தான் இங்கு நாம் சாதாரணமாக ‘அனுபவம்’ என்கிறோம்.  ஏன் ஒட்டுமொத்த அனுபவத்தை, பிரபஞ்சகரமான அனுபவத்தை நாம் அனுபவம் என்று சொல்வதில்லை? காலவெளி பற்றிப் பேசுவதைத் தத்துவமாகவோ விஞ்ஞானமாகவோ மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் அனுபவம்தானே? வானம் நோக்கி விரியும் மனிதத் தேடலின் தத்தளிப்பு மானுட அனுபவம் இல்லையா?  இதோ, இது நீர்த்துளி - ஆகவே, கடலும் ஒரு நீர்த்துளிதான்.  அனுபவ முழுமையின் பகுதியான சிற்றனுபவங்கள் மட்டுமே நமக்கு மானுட அனுபவங்களாகவும் சகஜமானவைகளாகவும் தோன்றுகிறன.

என் வினாவை தொடர்புறுத்திவிடுகிறேனே.  யுவன், பாரிஷாவின் கரு கவிதையில் ‘முடிவற்ற ஆழமுள்ள பானைநீரில் நிலா’ என்று ஒரு படிமம் வருகிறது.  அது நம்மை கால - இட - வெளி பற்றிய ஒரு துணுக்குறலுக்கு ஆட்படுத்துகிறது.  ஒரு ஸ்தம்பிதம்.  இதுவே, கவிதையில் உள்ள மீ அனுபவம்.  உங்கள் கவிதையில் அந்தத் துணுக்குறல் அனுபவம் கைகூடவில்லை.  அத்துணுக்குறல் குறித்த பல்வேறு கருத்து நிலைகள்தான் நுட்பமாகக் கூறப்படுகின்றன.  அவை, என் சிந்தனைத்தளத்தில் பிரச்சனைகளைக் கிளப்பிப் பலவாறாகச் சிந்தித்து விரிவடையவைப்பது உண்மை.  ஆயினும் துணுக்குறல் இல்லை...

தேவதச்சன் ஒரு வரி எழுதியிருக்கிறார். “வண்ணத்துப்பூச்சி தன் காலில் ஒரு காட்டை சுமந்து செல்கிறது...” ஒரு ரொமாண்டிக் கற்பனை என்று இவ்வரியை எளிதில் கடந்து சென்றுவிடலாம்.  ஆனால், உடனே உங்கள் மனம் விழிப்புற்று யோசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த வண்ணத்துப் பூச்சியின் மயிர் போன்ற கால்களில் மகரந்தத்துளி ஒன்று உள்ளது.  அது காய் ஆகலாம், கனியாகலாம். விதையாகி முளைத்துப் பரவி ஒரு பெரும் காடுகூட ஆகலாம்.  காலத்தில் இத்தனை தூரத்தை அதை வாசிக்கும் ஒரு கணத்தில் நீங்கள் பாய்ந்து தாண்டினால்தான் அந்தப் பிரமிப்பு அல்லது ஸ்தம்பிதம் ஏற்படுகிறது.  அதாவது, அது அவ்வரிகளை எதிர்கொள்பவனின் உக்கிரத்தைச் சார்ந்து தீர்மானிக்கப்படுவது.

நவீன உயர் பௌதீகம், முரண்பாடுகளின் மூலம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக ஐரோப்பிய அறிவுச்சூழலில் அதற்கிணையாக கீழை மரபில் உள்ள அரூபமான, முரண்பாடுகளைச் சார்ந்து இயங்குகிற ஞான மரபுகள்மீது ஒரு பரபரப்புமிக்க ஈர்ப்பு ஏற்பட்டது.  இதன் விளைவே ‘சென்’ மரபுக்கு மேற்குலகில் ஏற்பட்ட பிரபல்யம்.  எத்தனை வகையான ‘சென்’ நூல்கள்.  இவற்றின் பாதிப்பு பொதுவான சிந்தனையிலும் கவிதையிலும் ஏற்பட்ட மேலோட்டமான ஒரு கவர்ச்சி (infactuation) தான் என்பது என் எண்ணம்.  தமிழ்க் கவிதையானாலும் ‘ஆனந்த்’, ‘தேவதச்சன்,’ ‘ஷாஅ,’ உங்கள் கவிதைகளிலெல்லாம் உள்ளது இந்தக் கருதுதலின் கவர்ச்சி மட்டுமே என்று எண்ணுகிறேன்.  அசலான அனுபவத்தின் கணங்கள் அல்ல.

இது உங்கள் வாசிப்பின் பிரச்சினை.  எனக்கு இந்தப் பேரனுபவம் பெரும்பாலும் இசை சாந்தது.  நுஸ்ரத் ஃபத்தே அலிகான் பாடும்போது, என்னுள் பிரம்மாண்டமான அசைவின்மையை, கால-இட-வெளி முயக்கத்தின் உச்சநிலையைப் பலமுறை அடைந்துள்ளேன்.

நான் அவ்வனுபவத்திலிருந்து விரித்தெடுக்கப்பட்ட உதிரி அனுபவங்களை எழுத முற்படுவதில்லை.  அந்த மூல ஊற்றையே சொல்ல முயல்கிறேன்.  அதை எந்த அறிவுத்துறை தொட்டாலும் சரி, ஏறத்தாழ ஒரே மொழியில் பேச ஆரம்பித்துவிடுகின்றன.  விஞ்ஞானமானாலும் கவிதையானாலும் அதை உருவக மொழியில்தான் கூற முடிகிறது.  உயர் பௌதீகம் கவிதையருகே வருவது இங்குதான்.

நான் வினாவை இப்படித் திருப்பிக் கொள்கிறேன் யுவன்.  கால - இட - வெளி மாற்றம் நிகழ்கையில் ஒரு பித்துநிலை கவிதையிலும் கலைகளிலும் உருவாகிறதே, அது உங்கள் கவிதைகளில் உள்ளதா?

மீறலின் குரல் ஒலிக்குமிடங்கள் எல்லாமே பித்தின் இடங்கள்தான்.  மொழியின் தருக்கத்துள் நின்று பார்க்க முடியாத நிலைதான் கவிதையின் பித்தநிலை என்பேன்.  இது என் கவிதைகளில் பரவலாக இருப்பதாகவே கருதுகிறேன்.

எனினும், “என் கவிதைகளில் என்னென்ன உண்டு; என்னென்ன இல்லை” என்று காண்பது நானே செய்ய வேண்டிய வேலை இல்லை.  ஒரு குறிப்பிட்ட வாசக மனம் கொள்ளும் அனுபவம் மட்டுமே அந்தந்தக் கவிதையைப் பொருத்தவரை மெய்யானது.

(மேலும்....)

நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் & சொல் புதிது

11 comments:

Unknown said...

//மீண்டும் உங்கள் பதிலில் இருந்து தொடங்குகிறேன். கவிதையனுபவத்தின் ‘மாயத்தருணம்’ பற்றிச் சொன்னீர்கள். நீங்கள் கவிதையை மர்மப்படுத்த முயல்கிறீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?

ஏன் நான் மர்மப்படுத்தக்கூடாது?//

Typical yuvan response. :))

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றிகள்

நர்சிம் said...

//பதில் கூறியாகவேண்டும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. கருத்து என்பதே ஒரு அனுபவம்தானே? அறிதலின் திறப்பு என்பது, அத்திறப்பின் பேரின்பம் என்பது ஏன் அனுபவமாகாது? அதை அனுபவத்தின் கீழான நிலை என்று கூறுவீர்களா என்ன?//

நன்றி

ராம்ஜி_யாஹூ said...

நன்றி நன்றி நன்றி , வேறு எந்த வார்த்தையும் தோன்ற வில்லை.

இனி வரும் பதிவர் சந்திப்புக்களில் (காந்தி சிலை கீழே) இது போன்ற பதிவுகளின் பிரிண்ட் அவுட் வைத்து கொண்டு விவாதிக்கலாமா. (சந்திப்பு சீரியஸ்ஸாக போய் விடுமோ, அடுத்த சந்திப்புக்கு கூட்டம் வராதோ,

Unknown said...

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

pichaikaaran said...

பகிர்வுக்கு நன்றி

விநாயக முருகன் said...

கவிதைப்பற்றிய யுவனின் கருத்துக்கள் எல்லாம் மிரட்சியூட்டுவதாக இருக்கின்றன. பகிர்விற்கு நன்றிகள்

யாத்ரா said...

பகிர்வுக்கு மிக்க நன்றி. அன்று சிறுகதைப்பட்டறையில் கேள்விப்பட்டதிலிருந்து ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன் இதை வாசிக்க.

தமிழ் said...

இந்த இடுகையை இப்பொழுது தான் படிக்கின்றேன்.

அருமை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சித்தார்த், நர்சிம், ராம்ஜி யாஹு, செல்வராஜ் ஜெகதீசன், பிச்சைக்காரன், விநாயகமுருகன், யாத்ரா, திகழ்... நன்றி.

Unknown said...

"எப்பவாவது ஒரு
கொக்கு பறக்கும்
நகருக்கு மேலே"

நல்ல பகிர்வு...