தடுக்கப் பட்ட நுழைவாயில் மரணம்

ராமிற்கு இனிப்புகள் என்றால் உயிர்.

கொடைக்கானலுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்ததில் இரண்டை எடுத்துக் கொண்டு படுக்கையறையினுள் நுழைந்தேன். மங்கிய விளக்கொளியில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் சென்ற என்னை இழுத்து அணைத்து மார்புகளைத் தடவினார். காதில் கிசுகிசுத்தார். உஷ்ணம் தகித்தது மூச்சில்.

தொலைக்காட்சியில் பிம்பங்கள் மாறிக் கொண்டேயிருந்தன.

படுத்த வாக்கிலேயே நைட்டியின் ஜிப்புகளை ஏற்றி விட்டுக் கொண்டேன். அவர்மேல் ஒரு கையைப் போட்டபடி, "முரளியும் கூட வந்தால் நல்லாயிருக்கும்ல," என்றேன்.

என் முகத்தை உற்றுப் பார்த்தார். ஏதாவது மாறுதல் தெரிகிறதா என ஆராய்கிறாரா என்ன.?

"யாரை ஏமாத்தப் பாக்கற நீ?" என்றார். அவர் குரலுக்கு என்ன ஆயிற்று? மிக்ஸியில் தேங்காய் அரைபடும் சத்தத்தை ஒத்திருந்தது அது.

அவரை ஆதுரத்துடன் பற்றிய என் கைகளை தூரப் போட்டார்.

"மறுபடியும் நடிக்க ஆரம்பிகாதே" என்றவர், 'தா தை தக்க தை' என்று அபிநயித்தார். வியப்பு மேலிட அவரைப் பார்த்தவாறிருந்தேன்.

தடக்கென்று எழுந்து படுக்கையின் மேல் நின்றார். கால்களின் மேல் ஏதோ ஊர்வது போல உதறினார். கீழே இறங்கி நின்று கொண்டார்.

பக்கவாட்டில் முகம் திருப்பி, "நீ பெற்ற பிள்ளையாய் இருந்தால் இப்படிச் செய்வாயா...?" என்றார்.

என்னவாயிற்று.? மதுவின் வாடைகூட வரவில்லையே...

"என்ன உளர்றீங்க? முரளியை நான் பெக்காம நீங்களா பெத்தீங்க...?"

"ஆமாம், நீதான் பெத்தே..." என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர் உரத்து "எல்லாம் தெரிந்துவிட்டது எனக்கு" என்றார்.

எழுந்து போய் அறையலாம் போலிருந்தது. என்னது எல்லாம் தெரிந்துவிட்டதாம்? படுக்கையிலிருந்து எழுந்தேன். விளக்கைப் போட்டேன். பிரகாசமானது அறை. நிசப்தத்தைக் கிழித்தபடி மின்விசிறியின் ஓசை இரைச்சலாய்க் கேட்டது.

"விளக்கைப் போடாதே..." அவரது அலறலில் என் முதுகுத் தடம் சிலிர்த்தது. "வெளிச்சத்தில் என்னை மூழ்கடித்துவிடலாம் என நினைக்காதே..." என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி "நல்ல இதயம் இருப்பவர்களை யாராலும் மூழ்கடிக்க இயலாது" என்றார். இதைச் சொல்லும்போது அழுதுவிடுவார் போலிருந்தது.

அழட்டும்; நன்றாக அழட்டும். இதைக் கட்டிக் கொண்டு படும் சிரமங்கள் கொஞ்சமா என்ன.

"ஆமாம், யாராலும் மூழ்கடிக்கத்தான் முடியாது."

"ஹா ஹா... இப்படியேதான் இருக்கப் போகிறாய் நீ. மாற்றமேயில்லை. ஹரியைச் சிறிது சிறிதாகக் கொன்றது போல், என்னையும் சாகடிக்கத்தான் பார்க்கிறாய் நீ..."

"துரோகத்தைச் செய்தது நீங்கள்..." என்றவள் ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டேன். அறையிலிருக்கும் காற்று எனக்குப் போதாது போலிருந்தது. இன்னும் கொஞ்சம் காற்று கிடைத்தால் இவரை ஊதியே தள்ளிவிடலாம். "என்னை அவனிடமிருந்து விலக்கியது நீங்கள்தானே. உங்கள் நண்பனையே ஏமாற்றிய நீங்கள் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது." எவ்வளவு காட்டமாக வார்த்தைகளை விசிறியெறிந்தேன் என்பது அவர் துள்ளியதிலிருந்து தெரிந்தது.

"ஹா. நீ அவனை மறந்ததற்கு என்னைக் காரணம் காட்டாதே... பாவம் அவன். நீ அவனுக்கு விசுவாசமாயிருப்பாய் என்று நிம்மதியாக இப்போது உறங்கிக் கொண்டுருப்பான்...!"

அவர் குரலிலிருந்த ஏளனம் ஆத்திரமூட்டியது. என் உடல் அதிரத் துவங்கியது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் விசிறி அப்படியே கீழே வந்து ராமின் கழுத்தைச் சீவிப் போகக் கூடாதா...

"என்ன முறைக்கிறாய்? மின்விசிறி என் கழுத்தைச் சீவிப் போகவேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறாய்..."

கடவுளே - என்ன வந்தது இவருக்கு? எப்படித் துல்லியமாக என் மனதைப் படிக்க முடிகிறது. பயம் கனமான மேகத்தைப் போல் சூழ்ந்து கொண்டது என்னை.

"ஆனால்..." நிறுத்தினார். "ஆனால் நல்ல வேளையாக என் நண்பனின் ஆத்மா என்னுடனேயே இருக்கிறது எனக்குப் பக்க பலமாக... அவனில்லாவிட்டால் உன்னை நான் எதிர்க்க முடியுமா என்ன... கேட்டுக் கொள் -- சர்வநிச்சயமாக ஆண்டவன் உன் பிரார்த்தனைகளைக் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை."

"என்ன பிரார்த்தனைகள்?" என் குரலே எனக்கு அன்னியமாக ஒலித்தது. இந்த விளக்கை வேறு ஏன் தான் போட்டேனோ. எதிரே இருந்த கண்ணாடியைப் பார்த்தபோது அதிர்ந்தேன். நானா இது... கண்களின் கீழ் கருவட்டம் விழுந்திருக்க, கன்னச் சதைகளும் கழுத்துச் சதைகளும் தொங்கிக் கொண்டுருந்தன. அருகில் சென்று உற்றுப் பார்த்தேன். சூன்யக் கிழவியின் தோற்றம் வந்துவிட்டிருந்தது. வீலென்று அலறினேன்.

"நான் தான், நான் தான் உன் அழகை உறிஞ்சி எடுத்துவிட்டேன்." ராம் - என் கணவர் ராம் - எகத்தாளமாகக் கூவினார் : "ஹரியைப் போல், என்னைப் போல் இனி யாரும் உன்னிடம் ஏமாறாமல் இருக்கத்தான் உன்னை விகாரமாக்கினேன். இனி யாரும் உன் நிழலைக்கூட மிதிக்க மாட்டார்கள். பேருந்துகளில் நீ நின்றுகொண்டேதான் வர வேண்டும், பாவம்..."

நான் கட்டுப்பாட்டை இழந்தேன். பாய்ந்து சென்று தலையணைகளை ராமின் மேல் வீசினேன். அவர் சிரித்தார். குத்திக் கிழித்துவிடும் ஆவேசம் கொண்டு பலமனைத்தும் திரட்டித் தாக்கினேன். விடக்கூடாது எனக் கருவினேன்.

"இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் நீங்கள் புனிதராகிவிட முடியாது. உண்மையில் ஹரியைக் கொன்றது நீங்கள்தான். நீங்கள் என் மேல் வக்கிரமமாகக் காதல் கொண்டது ஊருக்குத் தெரியாதா என்ன.." நேரே சென்று அவர் மார்பில் கைவைத்து அழுத்தினேன். "ஆம். என் ஆசைக் கணவரே, உங்களது வக்கிரபுத்தி பற்றி எல்லாவற்றையும் ஹரி என்னிடம் சொல்லிவிட்டான்."

ராம் அதிர்ந்து பின் வாங்கினார்.

என் குரல் உயர்ந்து கொண்டேயிருந்தது.

"ப்ளீஸ் ராது, ப்ளீஸ்... அக்கம் பக்கமிருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்." வாலைக் குழைத்தபடி வரும் நாயைப் போல் கெஞ்சினார். இவர் விரும்பும்போது ஆரம்பிக்கவும் தோன்றும்போது நிறுத்தவும் நான் என்ன இவர் மாற்றா.?

"முடியாது. இது என்றாகிலும் ஒரு நாள் பேசப்படத்தான் வேண்டும்." நிறுத்தி இன்னும் குரூரமாக, "அவன் எவ்வளவு ஆண்மையுள்ளவன் தெரியுமா, உங்களைவிட..." என்றேன். எதிர்பார்த்தைப் போலவே என் கணவர் உடைந்து போனார். அவர் நொறுங்கித் தளர்ந்து, மண்டியிட்டு அமர்ந்தார்.

"வேசியைத் திருமணம் செய்திருக்கக் கூடாதுதான்." சடக்கென்று நிமிர்ந்தார். எழுந்து ஆக்ரோஷமாய் அருகில் வந்தார். அடிக்கப் போகிறாரா என்ன ? எவ்விதம் எதிர்வினை ஆற்றுவது? நெருங்கி என் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு வந்தவர், "அதில்தான் நீ நிபுணத்துவம் பெற்றவளாயிற்றே. அதில் யார் ஒரு மாற்று உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் எனபதை உன்னால்தான் துல்லியமாகச் சொல்ல முடியுமே..."

நான் விக்கித்துப் போனேன். எனக்கேன் எல்லாமே இவ்விதம் ஆகிறது. எழப் பார்த்த கண்ணீரைச் சிரமப்பட்டு அடக்கினேன். உதட்டைக் கடித்து விசும்பலை விழுங்கினேன்.

சுவரில் ஓங்கி அறைந்தவர், "ஆம், நான் துரோகம் தான் செய்துவிட்டேன். ஆனால் நீ நினைப்பது போல் அல்ல... அவன் விருப்பத்திற்கு மாறாக உன்னைத் திருமணம் செய்திருக்கக் கூடாதுதான்..." என்றார்.

"ஆனால் நீங்கள்தானே சொன்னீர்கள், ஹரி உங்களிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதாக..." முறையிடும் குரலில் கேட்டேன்.

"ஆமாம்; அவன் தான் சொன்னான்." சுவரில் அப்படி என்ன ஆராய்கிறார்? சடக்கென்று திரும்பினார். லுங்கியை மடித்துக் கட்டி நடனமாட ஆரம்பித்தார். சுழன்று சுழன்று ஆடினார். வெறி பிடித்த மிருகத்தை ஒத்திருந்தது அவர் முகம்.

ஆவேசமாக ஆடியவர் தளர்ந்து படுக்கையில் விழுந்தார். அருகில் சென்று முகத்தை ஒற்றிவிட்டேன்.

"நான் சொன்ன மற்றவற்றை சந்தேகித்த நீ இதை மிட்டும் ஏன் நம்பினாய்? உண்மையில் நீ அவனிடமிருந்து தப்பிக்க நினனத்து காரணம் தேடிக் கொண்டிருந்தாய். நான் அகப்பட்டு விட்டேன்."

"இல்லை, நான் ஹரியை மறக்கவில்லை"

"நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஹரி இறந்து விட்டானென்று. உண்மையில் அவன் இறக்கவில்லை என்பது தெரியுமா...?"

உடைத்துக் கொண்டு பீறிட்டது அழுகை. ராம் நெருங்கி என் தலையில் கை வைத்தார். குலுங்கியபடி அவரது தோளில் சாய்ந்தேன். ராம் நெகிழ்ந்தார்.

"நம் கையில் என்ன இருக்கிறது ராது. ஹரி இறந்தது, நான் உன்னைத் திருமணம் செய்ததெல்லாம் முன் தீர்மானிக்கப்பட்டதா என்ன. சூழ்நிலையால் உந்தப்பட்டவர்கள் நாம். இன்னும் சொல்லப் போனால் மூலையில் மடக்கப்பட்டவர்கள் நாம்."

என்னைத் தூக்கி நிறுத்தினார். கண்களைத் துடைத்துவிட்டார். அவர் முகத்ததப் பார்க்க அழப் போகிறார்போல் இருந்தது. பிரியமுடன்
அணைத்துக் கொண்டேன். 'நானிருக்கும்வரை உங்களை மனக்கிலேசத்தில் விடமாட்டேன்' என நினைத்தபடி காதுகளில் முத்தமிட்டேன். என் வலது மார்பு அவர்மேல் அழுந்தியது.

என்னைக் கோபத்துடன் விலக்கினார். "இப்படித்தான் என்னை மயக்கினாய். உன் பெருத்த மார்பைக் காட்டி, அகண்ட இடுப்பைக் காட்டி... அதனால்தான் என் மனம் தடுமாறியது."

அவர் வார்த்தைகள் மறுபடியும் ஆத்திரமூட்டின. இவரா இப்படிப் பேசுவது. ஒவ்வொரு முறையும் ஐஸ் வைத்து காலில் விழாக்குறையாக அழைத்தவரா இவர். ஏளனமாகச் சிரித்தேன். முறைத்தார்.

"நீங்களா..." என்றேன். மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாறுபவளைப் போல சிரிக்க ஆரம்பித்தேன். அறை அதிரச் சிரித்தேன். எட்டி விளக்கை
அணைத்தவர் என்னைப் படுக்கையில் தள்ளினார்.

நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். தூண்டப்பட்டவராய் அவரது வேகம் அதிகரித்தது. மின்விசிறியின் சுழற்சிகூட சிரிப்பை உண்டாக்கியது.

மேகக் கூட்டங்கள் உடைந்து சிதறின.

குப்பென்று வியர்த்துவிட பக்கத்தில் படுத்து வாயைப் பிளந்து காற்றுக்காய் அலைந்தார் ராம். அவர் உடலைத் துடைத்துவிட்டேன். அவர் உடலில் பூத்திருந்த வியர்வைத் துளிகள் என்னைக் கிளறிவிட்டன. துடைத்துவிட்டபடி அவர் நடு மார்பில் முத்தமிட்டேன். கூரையைப் பார்த்திருந்த என் திறந்த மார்பை மூடினேன்.

அவர் தலையைத் தூக்கி என் மார்பில் வைத்துத் தூங்க முயற்சி செய்தார். முதுகை அணைத்தபடி நானும் கண்களை மூடினேன்.

ஏதோ ஞாபகம் வந்தவராய் முனங்கினார். "நாம் முரளியையும் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்வோம்..." அவரை மேலும் பேசவிடாமல் அவர் தலையை என்னுடன் இறுக்கினேன்.
(கவிதா சரண் - அக்டோபர் 1998ல் பிரசுரமானது)
(இது ஒரு மீள் பதிவு)
wi

9 comments:

Anonymous said...

I like your kavithaigal. Keep posting the good ones. Rather reading a lengthy stories, the kavithaigal is good (short).

முபாரக் said...

120 பீடா போட்ட மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு. ஜே.பி.சாணக்யாவ வாசிக்கிறா மாதிரியே இருக்கு ;-)

வேற கதை எழுதியிருந்தாலும் அதையும் பதிவிலிடுங்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முபாரக்.

இந்தக் கதை 1998ல் வந்தது. ஏற்கனவே பிரசுரமான கதை மூன்று / நான்கும் பிரசுரமாகாத கதை சுமார் ஐந்தும் இருக்கின்றன. தேடிப் பிடித்து பதிவிட வேண்டும்.

anujanya said...

சீக்கிரம் வந்து பின்னூட்டம் போட்டா ஒரிஜினலா இருக்கும்னு பார்த்தா, முபாரக் முந்தி விட்டார். 120 பீடா போட்டதில்ல. ஜெ.பி.சாணக்யாவும் படிக்கல. ஆனா 'ஜிவ்வுன்னு' இருக்கு. இது என்ன 'துரோகக் கதைகளா'?

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனுஜன்யா. இது மீள் பதிவு :)

மணிகண்டன் said...

நல்லா இருக்கு சுந்தர் இந்த கதை ! இதுவும் "அ" கதையா இருக்குமோன்னு லேபில் பாத்துட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன்.

சில சமயம் வேகமா மேயறபோது எழுதி இருக்கறது பதியாம வேற மனசுல பதியறது உண்டு. அதே மாதிரி உங்க கதைய முன்னாடி நிறைய படிச்சி இருக்கறதுனால

****** வெறி பிடித்த மிருகத்தை ஒத்திருந்தது அவர் முகம் *********** இந்த sentencela வருகிற "ஒத்திருந்தது" மனசுல பதியாம !

இரண்டாம் வாசிப்புல தான் சரியா படிச்சேன்.

மதன் said...

ஏதோ ஒன்று இழுத்துப் பிடித்து, சுவற்றிலறைந்து, முகத்துக்கு முன்னால், நட்சத்திரங்கள் பறக்க, கண்மூடி நானும் பறந்து விழுந்தேன். கதை முடிந்தபோது..!

Ayyanar Viswanath said...

120 லாம் பழக்கமில்லீங்கோ ஒரு மாதிரி சுறுசுறுன்னு இருக்கு :)
சுந்தர் உங்களின் ஏற்கனவே பிரசுரமான வற்றையெல்லாம் தொகுங்களேன்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மணிகண்டன், மதன், அய்யனார்... நன்றி.