காமக் கதைகள் 45 (18)

அதீதன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குப் புதிதாக குடிவந்திருந்த மாலதியை பார்த்தான். அவளது வடிவான தோற்றம் அவனைக் கவர்ந்தது.

இப்போது நீங்கள் ஒரு பெண்ணைப் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அவளைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தான். அவளுடன் பழக விரும்பினான்.

நீங்கள் இப்போது பழக விரும்புகிறீர்கள்.

அவன் வீட்டிலிருந்து புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை படிக்க எடுத்துச் செல்ல அவள் வந்தபோது பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. மிகக் கண்ணியமாகப் பழகினான். அவனுடைய சுவாரசியாமான பேச்சும் உடல்மொழியும் மாலதிக்குப் பிடித்தன.

மோதலில் ஆரம்பிக்கும் சில சினிமா படங்கள் உங்களுக்கு இப்போது ஞாபகம் வராமல் இருக்கட்டும்.

முதலில் புத்தகங்களைப் பற்றிப் பிரதானமாகவும், பிறகு சிறிது நேரம் தனிப்பட்ட விவரங்களையும் பேசினர். அவனுக்குத் தெரிந்த பல எழுத்தாளர்களின் புத்தகங்களை அவளுக்கு அறிமுகம் செய்கிறான். அவள் அப்புத்தகங்களை வாசித்துவிட்டு அவனுடன் விவாதிக்கிறாள்.

உங்களுக்கு இப்போது உங்களுடைய காதலி நினைவிற்கு வருகிறாள். நீங்கள் அவளுடன் பழகிய ஆரம்ப நாட்களை அசைபோடுகிறீர்கள்.

சிறிது நாட்களில் தனிப்பட்ட விஷயங்கள் முக்கியமாகவும், புத்தகங்களைப் பற்றிய பேச்சு குறைகிறது.

நீங்கள் இப்போது நெருங்கத் துவங்குகிறீர்கள். இதற்கு அடுத்துவரும் வரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் கற்பனையின் மூலம் மீதிக் கதையை எழுதுகிறீர்கள்.

உங்களுடைய அந்தக் கதையில் அதீதனும் மாலதியும் காதலிக்கத் துவங்குகிறார்கள். வழக்கமாகக் காதலர்கள் போகும் இடங்களான கடற்கரைக்கும் சினிமாக்களுக்கும் பூங்காக்களுக்கும் போகிறார்கள். பப்களுக்கும் டிஸ்கொத்தேக்களுக்கும் செல்வது உங்களுக்குப் பிடிக்காததாகையால் அவர்கள் அவ்விடங்களுக்குச் செல்வதில்லை. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு முதலிரவை அனுபவிக்கிறார்கள். இப்போது நீங்கள் பார்த்த நீலப் படக் காட்சிகளையும் மனதிற்குள் கொண்டுவந்து அவர்களுடன் பொருத்திப் பார்க்கிறீர்கள். இத்துடன் உங்கள் கற்பனை முடிவிற்கு வருகிறது.

உங்கள் கற்பனையை என்னுடைய கதையுடன் சரிபார்த்துக் கொள்ள விழைகிறீர்கள். அதற்காக இக்கதையின் முதல் வரிகளிலிருந்து மீண்டும் வாசிக்கத் துவங்குகிறீர்கள்.

20 comments:

மணிவண்ணன் said...

அப்படி படிச்சிக்கிட்டே இருந்தா எப்போ பின்னூட்டம் போடுறது? :(

Athisha said...

ஆஆஆ அதிதனுக்கு கல்யாணமாகிடுச்சா

என்ன கொடுமை சுந்தர் அண்ணா இது

லக்கிலுக் said...

//இப்போது நீங்கள் பார்த்த நீலப் படக் காட்சிகளையும் மனதிற்குள் கொண்டுவந்து அவர்களுடன் பொருத்திப் பார்க்கிறீர்கள். //

க்ளாஸ்! :-)

கே.என்.சிவராமன் said...

//இத்துடன் உங்கள் கற்பனை முடிவிற்கு வருகிறது.//

:)

அதன் பின் ஏன் கற்பனை செல்வதில்லை... அல்லது செல்ல முயல்வதில்லை... எது தடுக்கிறது அல்லது ஏன் தடுக்கிறது என்பது தொடரும் கேள்விகள்...

குட்...

narsim said...

ஜி,

காதலியையோ,மனைவியயோ நீலப்படத்தோடு கற்பனை செய்வது சற்று கடினம்.

manikandan said...

******பப்களுக்கும் டிஸ்கொத்தேக்களுக்கும் செல்வது உங்களுக்குப் பிடிக்காததாகையால் அவர்கள் அவ்விடங்களுக்குச் செல்வதில்லை*******

கற்பனைக்கு கூட தடையா ?

வளர்மதி said...

சுந்தர்,

வாசகரைக் கதைக்குள் இழுத்துக் கொண்டே அவர்களை கதைக்கு வெளியே நிறுத்திப் பார்க்கச் செய்யும் முயற்சி நன்று.

என்றாலும் உங்கள் முயற்சியிலுள்ள ஒரு பலவீனம், (சரியாகச் சொல்வதென்றால் அது உங்களது பலவீனம் அல்ல, கதை சொல்லல் குறித்த வாசகர்களது பழக்கப்பட்ட மனநிலை) உங்களது இந்த முயற்சியைப் புரிந்துகொள்ளாது, அதாவது உங்களது இக்கதை உத்தியைப் புரிந்துகொள்ளாது தமது சொந்த அனுபவங்களோடு பொருத்திப் பார்க்கச் செய்யவே வாசகர்கள் அதிகம் தள்ளப்படுவார்கள் என்று தோன்றுகிறது.

அப்படித் தள்ளப்பட்டாலும் தமது சொந்த அனுபவங்கள் எத்தனை முறை ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளாலும் வடிவமைக்கப்படுகிறது என்பதை உணர முயற்சிப்பாளர்களா?

நம்பிக்கையில்லை.

”சூப்பரு, கலக்கிட்டீங்க, உய் உய்” ரசனைகளைக்கு மத்தியில் இவை கவனிக்கப்படாமல் போவதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை எண்ணும்போது சற்றே சலிப்பாகத்தான் இருக்கிறது.

என்றாலும் பரிசோதனை முயற்சிகளைத் தொடருங்கள்.

அன்புடன்
வளர் ...

தமிழன்-கறுப்பி... said...

!!!!!!

தமிழன்-கறுப்பி... said...

\\\
ஆஆஆ அதிதனுக்கு கல்யாணமாகிடுச்சா

என்ன கொடுமை சுந்தர் அண்ணா இது
\\\
ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களின் பதிவையும் ஒரே தடவையில் படித்ததில் காமம் பல படிகளை கடந்திருப்பதை பரிய முடிகிறது அண்ணன்...

MSK / Saravana said...

அதீதன் கதைய முடிச்சு கேள்விபதில், மொழி விளையாட்டு, புனைவு என்று பயணிக்கிறதா??

நீங்க விளையாடுங்க..

MSK / Saravana said...

//அதன் பின் ஏன் கற்பனை செல்வதில்லை... அல்லது செல்ல முயல்வதில்லை... எது தடுக்கிறது அல்லது ஏன் தடுக்கிறது என்பது தொடரும் கேள்விகள்...//

அட.. ஆமாம்..

Sridhar V said...

படித்தேன். :-) உங்களின் கதைகளை விட பின்னூட்டங்கள் நிறைய யோசிக்க வைக்கின்றன. வளர்மதியின் இந்தப் பின்னூட்டம் போல...

//தமது சொந்த அனுபவங்கள் எத்தனை முறை ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளாலும் வடிவமைக்கப்படுகிறது//

Anonymous said...

Kalakeetinga thala...

http://varthaipithan.blogspot.com/

Anonymous said...

வளர்மதி எப்போதும் என் நெகட்டிவ்வாகவே கமெண்டு போடுகிறார்?

சுந்தரின் காமக்கதைகளுக்கு திரட்டி தணிக்கைகள் இருந்தாலும் வாசகர்கள் விரும்பி வாசிக்கிறார்கள். இதுவரை வந்த காமக்கதைகள் எதுவுமே மூன்றாந்தரமாக இல்லாமல் முதல்தரமாக இருக்கிறது. நியாயமாக பார்க்கப்போனால் வளர்மதி சுந்தரை பாராட்ட வேண்டும்.

Ramesh said...

மன்னிக்கவும் இது கதையின் முடிவல்ல, சுஜாதா கதை தான் ஞாபகம் வருது. நல்ல சுடல். உலடலகிடி.

வளர்மதி said...

அனானிமஸ் அன்பரே,

“சூப்பரப்பு” என்று எழுதினால்தான் பாராட்டுக் கமெண்டா என்ன?

இங்குள்ள எனது பின்னூட்டம் சுந்தரின் கதையில் உள்ள நுட்பத்தைக் கவனத்திற்குக் கொண்டுவரும் முயற்சியில் எழுதப்பட்டது.

மேலோட்டமான வாசிப்பில் மிகச் சாதாரணமான ஒரு கதையாகத் தோன்றினாலும் சற்றே கவனமாக வாசித்தால் இந்தக் கதை வாசகரை கதை சொல்லல் குறித்த சில அடிப்படையான முன் அனுமானங்களை யோசிக்கத் தூண்டும் வாய்ப்புள்ளது என்று சொல்லியிருக்கிறேன். (விளக்கத்திற்கு விளக்கம் ... கொடும சாமி!)

அதாகப்பட்டது, இது பாராட்டுக் கமெண்டுதான்.

அப்புறம் அது என்ன //வளர்மதி எப்போதும் என் நெகட்டிவ்வாகவே கமெண்டு போடுகிறார்? // அது எப்போதும்?

இப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லி அபிப்ராய உருவாக்கம் செய்யாதீர்கள்.

அய்யனார், டிஜே தமிழன், பைத்தியக்காரன், தமிழ்நதி, ஜமாலன் வலைச்சரத்தில் எழுதிய பதிவு, குசும்பன் என்று நான் எப்போதாவது பின்னூட்டமிடும் இடங்களைச் சென்று பாருங்கள் “எப்போதும்” நெகட்டிவ்” கமெண்டா அல்லது விமர்சனப்பூர்வமான appreciation - தானா என்பது தெரியும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிவண்ணன்.

நன்றி, அதிஷா. கவலைப்படாதீங்க, அதீதனுக்கு வாசகர்கள் கற்பனையில் எழுதிய கதையில்தான் திருமணமாச்சு.

நன்றி, லக்கிலுக்.

நன்றி, பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நரசிம், நன்றி. அடுத்தவனின் மனைவியையே அவர்கள் நீலப்படத்தோடு இணைத்துப் பார்க்கிறார்கள் :)

நன்றி, அவனும் அவளும். என்ன செய்ய, அப்படித்தானே இருக்காங்க :)

காத்திரமான பின்னூட்டத்திற்கு, நன்றி, வளர்மதி.

நன்றி, தமிழன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சரவணகுமார்.

நன்றி, ஸ்ரீதர் நாராயணன். புனைவின் கவர்ச்சியே அதுதானே...

நன்றி, பித்தன்.

நன்றி, அனானி.உங்களுக்கு வளர்மதி பதில் சொல்லிவிட்டார் :)

நன்றி, ரமேஷ். இது சுஜாதா மட்டுமல்ல, அதற்கு முன்னரும் பின்னரும் பலர் உபயோகித்த உத்திதான். இன்னொன்று, second personல் எழுதியிருப்பதும் நான் கண்டுபிடித்ததல்ல கார்லோஸ் ஃப்யுண்டஸ் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.