சொரூப நிலை

மழையில் நனைந்த
தார்ச்சாலையை
சொட்டச் சொட்ட
நடக்கும் இளம்பெண்ணை
அவளின் கால்தடத்தை
கன்னத்தின் ஈரத்தைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையை
மரத்திலிருந்து சொட்டும் நீரின் சத்தத்தை
ரசிக்க எனக்கும் விருப்பம்தான்
இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்

(முதலில் செந்தூரம் ஏப்ரல் 1992ல் வெளியானது. நண்பர் நர்சிம்மின் வலைப்பூவில் அவருடைய ஐம்பதாவது இடுகையாக வெளியிடப்பட்டது).

பொலிடிக்கலி கரெக்ட்யாய் ஒரு கவிதை

தேவடியாள் என்றால்
வெகுஜனத்திற்குக் கரெக்ட்
பாலியல் தொழிலாளி என்றால்
அறிவுஜீவிகளுக்குப் பொலிட்டிகலி கரெக்ட்
யாராவது விளக்குங்கள்
எது எல்லோர்க்குமான பொலிட்டிகலி கரெக்ட்டென்று
இல்லையா குறைந்தபட்சம்
விளக்காவது பிடியுங்கள்

கஞ்சா பிடிப்பதும் காய் அடிப்பதும்
பலருக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
ஹூக்கா பிடிப்பதும் முலைதிருகுவதும்
கதை எழுதுபவர்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்

குண்டு போடுவது எதிர்வினை என்றால்
ஸ்ரீனிவாஸ்களுக்குப் பொலிடிக்கலி கரெக்ட்
அறம் அழிவென்றால் எல்லாமே கரெக்ட்
கரெக்ட் இன்கரெக்ட் கரெக்ட் இன்கரெக்ட்
கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட் கரெக்ட்

பொலிடிக்கலி கரெக்ட்டாகக் கவிதைஎழுத ஆசைப்படுகிறான் அரசியல் கலப்பை (முண்டக் கலப்பை அல்ல) விரும்பாத பொலிடிக்கலி கரெக்ட் பர்ஸன்.

(நண்பர் நர்சிம்மின் வலைப்பதிவில் அவரது ஐம்பதாவது இடுகைக்காக எழுதப்பட்ட கவிதை)

காமக் கதைகள் 45 (23)

அதீதனின் காதலி ரோகிணி மாற்றலாகி பெங்களூர் சென்றுவிட்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள் சந்தித்துக் கொண்டிருந்தது மாதமொருமுறையாகிவிட்டது. சந்திக்கும்போதெல்லாம் அவனையும் பெங்களூருக்கு வரச் சொல்வாள். ம்ஹூம், அது வேலைக்கு ஆகாது. ‘குளிர்ல போர்வையே வேண்டாம்டா...' எனக்கூடச் சொல்லிப் பார்த்தாள். அதீதன் மசிவதாயில்லை (தமிழ்நாட்டை விட்டுப் போகக்கூடாதென்ற கொள்கைப் பிடிப்பெல்லாம் ஒன்றுமில்லை, அவனுக்கு சைனஸ் தொல்லை, அவ்வளவுதான்!).

எஸ்டிடி கட்டணம் விஷம்போலிருந்த காலமது. வேறுவழி.. அஞ்சல்துறையே கதி!

தினமொரு கடிதமெழுதுவான் அவளுக்கு. முதலில் இலக்கியமாக ஆரம்பிக்கும் கடிதம். நடுவில் அவன் வாசித்த புத்தகங்கள், நடந்த சம்பவங்கள், அவன் நடக்கக்கூடாதா என ஏங்கிய விஷயங்கள் எனக் கலந்துகட்டி இருக்கும். ஆனால் முடிக்கும்போது விரகதாபத்தை வெளிப்படுத்துவதாகவே முடியும். இதை அவன் வேண்டுமென்று செய்யவில்லையென்றாலும் அப்படித்தான் ஆகிக்கொண்டிருந்தது.

ரோகிணி வேறு நினைப்பே இல்லையா உனக்கு எனக்கோபப்படுவாள். 'உன் லெட்டர யாராவது பார்த்துடப்போறாங்களேன்னு பயமாவே இருக்கு...' கையில் பிடித்துக்கொண்டு தூங்குவது அவளுக்கெங்கே தெரியப் போகிறது!

i would like to kiss you... especially 'there' என முடித்திருந்தான் ஒரு கடிதத்தை.

அவனிடமிருக்கும் ஒரு நல்ல குணம் அந்தக் கடிதங்களை அவள் வீட்டிற்கு அனுப்ப மாட்டான். அலுவலக முகவரிக்கே அஞ்சல் செய்வான்.

ஒருமுறை அவனுடைய கடிதமொன்றைக் காட்டினான் எனக்கு :

'மின்விசிறிச் சத்தம் தெளிவாய்க் கேட்கும் அமைதி. இருளில் இருக்கிறது இரவின் அழகு. அறைக்குள்ளோ டியூப்லைட்டின் வெள்ளை வெளிச்சம் தழுவியிருக்கிறது. தூரத்து நாய்க்குறைப்பொலிகூட சங்கீதமாய்க் கேட்கிறது இப்போது உனக்கான இக்கடிதத்தை ஆரம்பிக்கையில்...

என்ன காரணத்தினாலோ இன்று மதியத்திலிருந்து உன் நினைவுகளே என்னைச் சூழ்ந்துள்ளன.

பார்வதி உன்னை விசாரித்ததாய் எழுதச் சொன்னாள். பெரிய நித்யாவும் ரியாஸும் உன்னுடனான என் தொடர்பு பற்றி விசாரித்தார்கள். பகலுக்கும் இரவுக்குமான இடைவெளிதான் உனக்குத் தெரியுமே. நம் காதலை - உன் விருப்பப்படி - நட்பென்றே சொல்லிவருகிறேன். எனக்கு நெருக்கமான அவர்களிடமும்.

ஒவ்வொரு மிடக்காக மது அருந்தியபடி வளர்கிறது இக்கடிதம்..'

என ஆரம்பித்திருந்தவன் கடைசி பத்திகளில் அவளை எப்படியெல்லாம் சம்போகிக்க வேண்டுமென்பதை விலாவரியாக விவரித்துவிட்டு, ‘எனக்கு இப்பொழுதே உன்னைக்கூட வேண்டும் போலிருக்கிறது. ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே... ' என முடித்திருந்தான்.

அவள் ஒற்றைவரியில் பதில் எழுதியிருந்தாள்.

'நாம் மாதமொருமுறைகூட இனி சந்திக்கத் தேவையிருக்காதென நினைக்கிறேன். நீதான் முழு சம்போகத்தையும் கடிதத்திலேயே முடித்துவிடுகிறாயே...'

பதிவரசியல்

லக்கி லுக்கிற்கு வந்த சில பின்னூட்டங்களை அவர் வெளியிடவில்லையென கொஞ்ச நாட்களாக பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கந்த அனுபவமில்லை.

நான் பதிவெழுத வருமுன்பே அவருடைய கருத்துகளை மறுத்து எழுதிய பின்னூட்டங்களை அவர் வெளியிட்டே உள்ளார்.

ஆனால் வெளியிடவில்லை எனச் சொன்னவர்களுக்கு அவரது பதில்கள் ஆணவத் தெறிப்புகளாயுள்ளது. என்னுடைய பெயரை உபயோகிப்பதால் அவர்களுக்கு போணி ஆகிறது, மப்பில் வேறு எங்காவது போட்டிருப்பார்கள் என்பதெல்லாம் ஆணவமன்றி வேறென்ன??

லக்கி லுக்கின் எழுத்துகளிள் எனக்குப் பிடித்தது அவரது அரசியல் நிலைப்பாடு.

வால்பையனின் ஞாநி பற்றிய பதிவில் சில விஷயங்கள் ஏற்புடயவையே. ஆனால் அவர் ‘நான் இந்தியன்' ‘ஜாதி வித்தியாசங்கள் இல்லை' மாதிரியான பிரகடனங்கள் எரிச்சலூட்டுகின்றன. அவர் அரசியல் - நீக்கம் செய்வதாய் நினைத்துக் கொண்டு செய்யும் சில காரியங்களும். அவ்வளவு சிம்பிள் இல்லை வால்பையன்.

இருவரும் எனது நண்பர்களே. இப்படி எழுதுவதால் கோச்சுக்காதீங்க மக்கா...!!

***

நிறைய எழுதுவதா குறைவாய் எழுதுவதா எனச் சிலருக்கு அவ்வப்போது சம்சயம் வந்துவிடுகிறது. கநாசு ஒரு நாளைக்கு 25 பக்கங்கள் எழுதுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் ஒப்பிட்டால் இங்கு பதிவில் 'நிறைய' எழுதுபவர்கள் குறைவாகவே எழுதுகிறார்கள். நிறைய எழுதவேண்டும், தேர்ந்தெடுத்து, நிறைவாய்ப் பதிவிட்டால் நலம்! சிலர் சினிமா விமர்சனங்களாகவும் மொக்கையான கருத்து உதிர்ப்புகளாகவும் எழுதித் தள்ளுகின்றனர். இன்னும் சிலர்... சொல்லவே வேண்டாம் கட் & பேஸ்ட்தான்!

***

ஆரம்பித்த சில மாதங்களிலேயே தமிழிஷ்.காம் (www.tamilish.com) நிறைய பேரால் பார்க்கப்படுகிறது. இது வழக்கமான திரட்டியல்ல. சிலர் வாக்களித்து பதிவுகளையோ அல்லது செய்திகள் / படங்களையோ பிரபலமாக்குகிறார்கள். அப்படிப் பிரபலாமக்கப்பட்டவை முதல் பக்கத்தில் சில மணிநேரங்கள் இருக்கின்றன. அலெக்ஸா ரேட்டிங்கில் இப்போது அது தமிழ்மணத்தைவிட முன்னேறியிருப்பது தமிழிஷின் சாதனையே.

***

என்னுடைய காமக் கதைகளுக்குப் பின்னூட்டங்கள் திரட்டப்படாதென தமிழ்மணம் அறிவித்திருந்தது முன்பு. ஆனால் போன கதைக்கு *** என வந்து பின்னூட்டங்கள் திரட்டப்பட்டிருந்தது. இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. *** பார்த்து ஆவல் தூண்டப்பட்டு அதிக வாசகர்கள் வந்துவிடுகிறார்கள். நம் மக்களின் செக்ஸ் வறட்சி அப்படி!

எப்படியும் பாண்டிச்சேரி பெண்கள் யாராவது தமிழ்மண நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப் போகிறார்கள். அதற்குமுன்பு அந்தக் காரியத்தை நாமே செய்துவிடலாமே என்றுதான் இக்குறிப்பு :)

***

திமுக சார்புப் பதிவுகளே அதிகமிருந்த நிலையில் இப்போது எதிர்ப்புப் பதிவுகளும் நிறைய வருகின்றன. இது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களின் மொழி வன்மத்தைக் கக்குவதாகவே இருக்கின்றன. கயவன் கருணாநிதி போன்ற வார்த்தைகளை அனாயசமாக வீசிச் செல்கிறார்கள். வார்த்தைகளல்ல, அவற்றின் பின்னிருக்கும் வன்மமே என்னைச் சங்கடப்படுத்துகிறது.

***

R P ராஜநாயஹம் இப்போது பதிவெழுதுகிறார். இவரது எழுத்துகளை அங்குமிங்குமாக 1990களிலிருந்தே படித்துவருகிறேன். இப்போது, அவரது பெயரை நாகார்ஜூனன் பதிவொன்றின் பின்னூட்டத்தில் பார்த்து கிளிக் செய்து அவரது பக்கத்திற்குப் போனேன். பிறகு ரீடரில் வைத்துத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். ராஜநாயஹம் என்றாலே சிலருக்கு மு தளையசிங்கம் / தொழுகை / ஊட்டி / ஜெமோ இந்தப் பெயர்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை! இவரது பதிவைப் பற்றி இதுவரை சாரு நிவேதிதா, பிரகாஷ், ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார்கள்.

இப்போது தமிழ்மணத்திலும் அவரது பதிவுகள் வருகிறது. அவருடைய sadism பதிவு தமிழ்மணத்தில் வந்ததா எனத் தெரிந்துகொள்ள ஆவல். எனக்கு அந்த இடுகை பிடித்திருந்தது. பாண்டிச்சேரியிலிருப்பவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை!!

***

காலச்சுவடு செய்யும் அலப்பறை தாங்கமுடியவில்லை. அவர்களது பத்திரிகையை நூலகங்களில் வாங்கவில்லையென்றால் அது கருத்துரிமையின் குரலை நெறிக்கும் செயலாம். இதுபற்றி வினவு விரிவாக எழுதியிருக்கிறார் (http://vinavu.wordpress.com). படித்துப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

காமக் கதைகள் 45 (22)

அதீதனின் பழைய காதலி ஆனந்தி தற்கொலை செய்துகொண்டாள்.

முற்றும்.

பி.கு :

அதீதன் தீவிரமாய்க் காதலித்துக் கொண்டிருந்தான் ஆனந்தியை. வாரத்திற்கு மூன்று நாட்கள் சந்திப்பார்கள். கடற்கரையிலிருந்து பேருந்து பிடித்து திருவான்மையூரிலிருக்கும் அவள் அலுவலகத்திற்குச் செல்வான். இருவரும் பேசிக்கொண்டே பேருந்தில் வள்ளுவர் கோட்டம் வருவார்கள். அங்கிருந்து ஆட்டோ பிடித்து வடபழனியில் அவளை விட்டுவிட்டு தான்மட்டும் வீட்டிற்கு மறுபடியும் பேருந்து பிடித்துச் செல்வான். கடற்கரை - திருவான்மையூர் - வள்ளுவர் கோட்டம் - வடபழனி - அவன்வீடு - மொத்தம் ஐம்பது கிலோமீட்டர் இருக்கும். பேருந்துகளையே வெறுக்கும் அதீதன் அதில் 45 கிலோமீட்டர் பேருந்திலேயே பயணம் செய்வான்.

வீட்டை அடைந்ததும், கடிதமெழுத ஆரம்பித்துவிடுவான். முழுநீளத் தாளில் நான்கு பக்கங்கள், சில சமயம் ஐந்து பக்கங்கள்கூடப் போகும் கடிதம்.

அடுத்த நாள் அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பான். அடுத்த முறை அவளைப் பார்க்கும்போது அந்தக் கடிதத்தைப் பற்றி விசாரிப்பான். சில சமயம் அடுத்தநாளே பார்க்கும்படி இருந்தால் அவள் கையிலேயே அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுவான். அவளும் அவனுடன் பேருந்தில் வரும்போது அக்கடிதத்தைப் படித்தபடி வருவாள்...

அதீதன் வண்ணதாசன்மேல் பித்தாயிருந்த காலமது. அவரது எழுத்துகள்போலவே அவனது கடிதங்கள் இருக்கும். 'அச்சோ இவ்வளவு எழுதறீங்களே, விரல் வலிக்காதா' என அவள் கொஞ்சலாய்க் கேட்பது கவிதையாயிருக்கும்.

அந்தக் கடிதங்களில் என்ன எழுதினான், அவளுடன் என்னவெல்லாம் பேசினான் என்பது அவனுக்கு நினைவிலேயே இல்லை.

முடிந்தது.

மேலும் சில குறிப்புகள் :

(1) வந்தனாமூலம் அறிமுகமானவள் ஆனந்தி - அப்போது அவள் சந்தோஷுடன் இருந்தாள். அதீதன் ஆனந்தியைக் காதலித்தது வந்தனாவிற்குத் தெரியாது. போலவே ஆனந்திக்கும் அதீதனின் வந்தனாவுடனான பழைய உறவு பற்றித் தெரியாது.

(2) அதீதனுக்கும் ஆனந்திக்கும் உடல்-ரீதியான தொடர்பிருந்ததில்லை. அதற்கான முயற்சியில்கூட அவன் இறங்க விரும்பியதில்லை.

(3) ஆனந்தியின் மரணத்தை அவனுக்குச் சொன்னதும் வந்தனாதான். குடும்பப் பிரச்சனை காரணமாயிருந்திருக்கலாமென அபிப்ராயப்படாள். அவளிடம் ஒரு மாதம்முன்பே வேறொரு நண்பர் சொல்லியிருக்கிறார் ஆனந்தி சரியான மனநிலையில் இல்லையென. வந்தனாவும் தொலைபேசியில் பேசியிருக்கிறாள். அவள் நன்றாகத்தான் இருப்பதாகச் சொல்ல, இவளும் விட்டுவிட்டாள். 'நான் நேர்ல பாத்து பேசியிருக்கணும், தப்பு பண்ணிட்டேண்டா' என அதீதனிடம் புலம்பினாள் வந்தனா.

(4) எப்படித் தற்கொலை செய்துகொண்டாள் என்ற விவரங்கள் வந்தனா தெரிவிக்கவில்லை. அதீதனும் கேட்டுக் கொள்ளவில்லை.

(5) அவர்கள் பிரிந்ததற்குச் சாதிரீதியான காரணங்கள் இருந்தன. ஆனால் இது அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட பொலிடிக்கலி கரெக்ட் கதையென்பதால் அவ்விவரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

(6) அன்றிரவு போதையில் வெகுநேரம் அழுதுகொண்டிருந்தான் அதீதன். அவன் சொல்லியது / உளறியது :

‘தங்கமான பொண்ணுடா, புது சுடிதார் வாங்கியிருந்தா ரெண்டு கையிலும் இப்படிப் பிடிச்சுகிட்டு எப்படியிருக்குன்னு கேப்பா... அப்படியே கண்ணுல நிக்குதுடா, ராமக்ரிஷ்ணா லன்ச் ஹோம்ல பேசிகிட்டே இருப்போம்டா, மனசுல இருக்கற கஷ்டம்லாம் மறஞ்சுடும் அவளப் பாத்தாலே, கோவமா ஒரு வார்த்தைகூடப் பேசினதில்லடா, தேவதைடா.... .... '

அதற்குமேல் கோர்வையாயில்லாமலிருந்தது.

முற்றியது.

ரொம்ப அழகு

சீறிப் பாயும் மழை அழகு
கழுவி விடப்பட்ட சாலை அழகு
இருளாய் இருக்கும் வானழகு
வெளிச்சங்களைச் சிதறும்
சோடியம் விளக்குகள் அழகு
விளம்பரப் பலகைகளின்
நீல மஞ்சள் பச்சை
பிம்ப பிரதிபலிப்புகள் அழகு
எதிர்ச் சாரியில் விரையும்
ரெயின் கோட் கணவன் அழகு
இடுப்பை அணைத்து
முதுகில் முகம் சாய்த்த மனைவி அழகு
சுருண்டு அபத்தமாய் விழுந்திருக்கும்
கறுப்பு யமாஹா அழகு
ரத்தத்தை உறைய விடாமல்
அடித்துச் செல்லும் நீரழகு
கவிழ்ந்து விழுந்திருப்பவனின்
சிறு கட்டமிட்ட சிகப்புச் சட்டை அழகு
வேகத்தைக் குறைத்து ஒதுங்கி விரையும்
வாகனங்களின் டயர் ஒலி அழகு
அழகு அழகு அழகு

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

1/2 பியருக்கு வந்த மப்பு

நமஸ்காரம்!
சாலமன் கிரண்டி பார்ன் ஆன் மன்டே!
போஸ்டர் திங்கற கழுதை, அறியுமோ
இது ஜென்னும் இது ரஜினின்னும்?
எது எப்படியோ
பூனையும் பொடக்காலில சிரிக்குது.
கேரம் போர்டு விளையாடு பாப்பா
உன் வீட்டில் கேரம் போர்டு
இல்லாமல் இருக்கலாமா பாப்பா?
டப்பா டப்பா வீரப்பா எப்படா மேரேஜ்?
M.G.R. சண்டை
பானுமதி கொண்டை
கொண்டையில் என்ன பூ?
கூடையில் குஷ்பு
உனக்கென்னப்பா உங்கப்பா Father
உங்கம்மா Mother
நல்ல மாட்டுக்கு மூணு சூடு.
சாந்தாமணி சாராஜ் உன்னை
விசாரிச்சான் "காயடிக்கப்படுவான்"
சாந்தாமணி கூறிப்போயிற்று!
ஒன்னுக்கு வருது சந்தாமணி
ஊத்திகிட்டு கொஞ்சலாம்
நல்ல கதையாயிருக்கே! - இப்படி
எழுதினா நாங்கெட்ட பையனா?
நெலாவ பார்த்து நரி ஊளை உட்டா?
எல்லாம் சாந்தும்மாவுக்கு தெரியும்
அடியேன் பத்துமாத்து தங்கம்னு!
ரே கருப்பா!
சுருக்கா பீடி தீசிக்கினி ராரா ரே!

- ராஜமைந்தன் (வா மு கோமு என்ற பெயரிலும் எழுதுபவர்) எழுதி நடு கல் 13வது இதழ் 1994 ஜனவரியில் வெளியானது. எதிர் கவிதைக்கு நான் அடிக்கடி உதாரணம் காட்டுவது!

இருள் சூழ்ந்த புதர்

தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்.
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்,
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

(நண்பர் மோகன் கந்தசாமியின் வலைப்பூவில் வெளியானது)

அரிசியும் மின்வெட்டும் பொதுப் புத்திப் பார்வையும்

மக்கள் நல அரசுக்கு பொதுமக்களின் சுமைகளைக் குறைக்கவேண்டிய கட்டாயமுண்டு. அந்த வகையில் தமிழக அரசு இவ்வருடம் செப்டம்பர் 15லிருந்து கிலோ அரிசி 1 ரூபாய்க்கு கொடுப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் தமிழகத்தில்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி கொடுக்கப்படுவதாக அறிகிறேன்.

உணவிற்கு அத்தியாவசியத் தேவையான அரிசியை வசதிகுன்றியவர்களுக்கு அரசு மலிவுவிலையில் கொடுப்பதை சிலர் எதிர்க்கிறார்கள். அவர்கள் வைக்கும் காரணங்களில் சில :

வாக்குகளுக்காகச் செய்யப்படுவது. தேர்தல் - அரசியலில் இதில் ஒன்றும் பெரிய தவறில்லை. அடிப்படையில் இச்சலுகை தேவையா என்பதே முக்கியம். பிறர் வாக்குகளுக்காகக்கூட இதைச் செய்யமுடியவில்லை / மனமில்லை என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.

திசை திருப்புவதற்காக - குறிப்பாக மின்வெட்டு - செய்யப்படுவது. மின்வெட்டென்பது குறைந்தகாலமே இருக்கப்போவது. அதற்கென வருடம்முழுவதும் மலிவுவிலையில் அரிசி தருவதாகச் சொல்வது கொஞ்சம் இடிக்கிறது.

மக்களைச் சோம்பேறியாக்குவது. இது ஒரு டிஃபால்ட் விமர்சனம். எல்லாவிதமான மக்கள் நலத்திட்டங்களுக்கும் - பள்ளி மாணவர்கள் மதிய உணவிலிருந்து இலவச கால் செருப்புவரை - இதைச் சொல்லலாம்.

வேறு சிலர் மக்களால் இரண்டு ரூபாய்கூடக் கொடுத்து வாங்கமுடியாத அளவிலா இந்த அரசுகள் வைத்திருக்கின்றன என்று வக்கனையாகக் கேட்கிறார்கள். சிபொம / stp / மற்றும் பல பெரிய நிறுவனங்களுக்கு அரசுகள் சலுகைகள் தரும்போது கேள்வி எழுப்பாத மிடில் கிளாஸ் ஆசாமிகள், இப்படி வசதிகுன்றியவர்களுக்கு உதவும்போது மட்டும் நீட்டிமுழக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் புறநகரில் ஒரு அப்பார்ட்மெண்டும், வங்கிக் கணக்குகளில் ஏறும் பேலன்ஸுமே முக்கியமாகிப் போகிறது!

அரிசித் திருட்டு அதிகமாகும். இதற்குச் சோத்தனமாக பதில் சொன்னால், தவறாக உபயோகப்படுத்தப்படாத திட்டம் / சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?

திருட்டைக் குறைக்கவேண்டுமெனச் சொன்னால் பரவாயில்லை. அதைக் காரணமாகச் சொல்லி, திட்டத்தை ஒழிக்க நினைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

இப்போது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவையும் குடும்ப அட்டைகளுக்குத் தருகிறார்கள். இன்னும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் நலம்.

மின்வெட்டு

சென்னையிலும் அதன் புறநகர்களிலும் செப்டம்பர் 1 முதல் 6 வரையே மின்வெட்டு இருந்துள்ளது. முதன்முறை அறிவிக்கப்பட்டபோதும் இவ்வாறு குறைந்த நாட்களே இருந்தது. மற்ற இடங்களிலும் இன்றிலிருந்து மின்வெட்டு இருக்காதென்று தெரியவருகிறது. (இது வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும், தொழிலகங்களுக்கு அல்ல).

இதையும் கொஞ்சம் முன்கூட்டியே சரி செய்திருந்தால் கெட்ட பெயராவது வராதிருந்திருக்கும். ஏன் செய்யவில்லை என்பது ஆற்காட்டாருக்கே வெளிச்சம் :)

இப்பதில்களைப் பொதுப் புத்தி பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். சில சமயங்களில் அதுவும் தேவையானதுதானே :))

சி மணியின் பச்சையம் (அ) உடையாத பருப்புகள்

1

1. சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம் ;
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்

2. வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்

குறிப்பு :

காமக் கவிதை எழுத ஆசைப்பட்டேன். ஆனால் சி மணி, பிரமிள் எழுதாத என்ன எழவை நான் எழுதிவிட்டேன் என்ற கேள்வி வருமோ என பயம். அதனால் பேசாமல் சி மணியின் கவிதையையே பதிவிடத் துவங்கினேன்.

பருப்பு :

யார் யார் எதை எதை உடைத்துப் பருப்பைக் காட்டுகிறார்கள் எனப் பார்ப்பது என் வேலையில்லை. அதிகாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் நெம்புகோல் வேலையை என் கதைகளோ அல்லது கவிதைகளோ செய்வதில்லை.

அங்கலாய்ப்பு :

ஏன்யா எல்லாத்தையும் ஜி நாகராஜன் சொல்லிட்டான், சாரு சொல்லிட்டான், பிரமிள் சொல்லிட்டான் அப்படின்னா, நாங்க என்னதான்யா எழுதறது?? இந்த 38 வயதிற்குமேல் நான் யாரிடம் போய் எழுதக் கற்றுக் கொள்வது? முதியோர் இலக்கியக் கல்வித் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?!!

ஐயகோ, தட்டச்சும் வேலைதானா எனக்கு???

தெறிப்பு & முடிப்பு :

இப்போது மறுபடியும் சி மணியின் கவிதையிலிருந்து வேறொரு பகுதி :

3. 4. டிரைவர்கள் முன்னோடும்;
விழியோரம் பெண்ணாட
விழியோடும் பெண்ணோடு;
கரம்பூம்பூம் என்றாட்டும்.

வளைக்கரம் பிடித்து
கனல்விரம் எறுக்கி
உலறிதழ் நனைத்து
அவள்துடிப் பளப்பு.

தலைப்பு சரியவும்
முலைப்பு தெரியவும்
நாக்கிலே பாடம்
நோக்கிலே கூடல்.

பக்திக்கு முகம்காட்டி
சக்திக்கு மனம்நீட்டி
முக்திக்கு வழிகேட்டு
இச்சைக்கு வழிபாடு.

5. கவர்ச்சிக் கலப்பு
கடலில் உப்பு.

(இக்கவிதைப் பகுதிகள் சி மணியின் வரும் போகும் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. வெளியீடு : க்ரியா, வருடம் 1974).

பல / துல்லியம் / தூக்கு / 2,25,650

காலதாமதம்
காரணம்
குழந்தைகள் ஆர்ப்பரிப்பு
சீறிப்பாயும் விமானங்கள்
நவீனமயமாக்கப்படாத தொடர்புத் துறை
மாண்டவர் இன்னும் வேண்டுமென
எண்ணிக்கை
எண்ணிக்கை
தொலைக்காட்சிமுன்
பட்டினியால்
புது வசதிகள்
புழுதி கிளப்பும் பீரங்கிகள்
போதவில்லை
தகவல் சேகரிக்க எண்ணிக்கை
அறிய
அணுக்கதிர் வீச்சு
3ஜி ஸ்பெக்ட்ரம்
Ka band

பாரிய வித்தியாசங்கள் (அ) திரும்பத் திரும்ப

சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டிருக்கிறான் பைத்தியக்காரன்
பேசியதையே திரும்பத் திரும்பப்
பேசிக் கொண்டிருக்கிறான் மேடையில் அரசியல்வாதி
அதே துணையைத் திரும்பத் திரும்பப்
புணர்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச்
செய்துகொண்டிருக்கிறார்கள் குமாஸ்தாக்கள்
ஒரே கவிதையைத் திரும்பத் திரும்ப
எழுதிக் கொண்டிருக்கிறான் நகுலன்
ஒரே பிராண்டைத் திரும்பத் திரும்பக்
குடித்துக் கொண்டிருக்கிறான் அதீதன்