Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

மயிரு

நண்பர் யாத்ராவின் இந்த நூலைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியது நூலாக்கம்.  மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.  நான் இதுவரை பார்த்த அகநாழிகை வெளியீடுகளிலேயே இதுதான் சிறந்தது என்பேன்.  அட்டைப்படம், அச்சாகியிருக்கும் முறை, கவிதைகளின் வரிசைக் கிரமம் என நிறையச் சொல்லலாம்.  பதிப்பாளர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது போல. + வாசுவுக்கும் யாத்ராமீதும், அவரது கவிதைகள் மீதும் மிகுந்த பிரியமுண்டு என்று தோன்றுகிறது.  வாசுதேவனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

பதிப்பாளர் கவிஞராய் இருப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன.  பின்னட்டை வாசகங்களைப் பாருங்கள் : காற்றை எட்டி உதைத்து விளையாடும் குழந்தையின் அறியாமையோடு, பித்தேறிய மனதோடு, பிராயத்தின் பிரியங்களோடு, வாழ்க்கையின் முரண்களோடு என எல்லா நிகழ்வுகளையும் ஆதார மையமாக்கி இணையிணை காட்சிகளாக நிகழ்த்திச் செல்கின்றன யாத்ராவின் கவிதைகள்.  ஸ்ஸ்ஸ்யப்பா! இந்த மாதிரி வரிகள் எனக்கு அலர்ஜி. அது இருக்கட்டும், ஆனால் இந்த இணையிணை காட்சிகள் அப்படிங்கற வார்த்தை நம்மை எப்படி மயக்குகிறது பாருங்கள். நல்ல பின்னட்டை வாசகங்கள். முடித்துவிட்டு, புத்தகத்தைத் திறந்தால், முதல் கவிதையே பின்னால் வரப் போவதற்கான கட்டியம் சொல்லிவிடுகிறது :

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா

அழைக்கும் பிம்பம்னு தலைப்பு வைத்திருக்கிறார்.  முதல் கவிதைலயே ஒரு அதிர்ச்சி கொடுத்துவிடுகிறார்.  இதை வாசிக்கும்போது எனக்கு கிணற்று நீர், ஆத்மாநாம் எல்லாம் ஞாபகம் வந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்த கவிதை இது.

இணையத்தில் பொருட்படுத்தக்கூடிய கவிஞர்கள் நிறைய பேர் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் எழுதுகிறார்கள்.  தனிமை, பிரிவு, சோகம் இத்தியாதிகள்.  யாத்ராவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில் எனக்கு முக்கியமாகிறார்.

அப்படியும் ஒரேயடியாக ஒரே மாதிரிக் கவிதைகள் என்றும் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு அதீத கற்பனையாக வரும் ஒரு பொழுதில் கவிதை (http://yathrigan-yathra.blogspot.com/2009/08/blog-post.html).

பட்டியல் போடும் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் எழுதியிருப்பார்கள்.  நகுலனோட உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி, கேசவ மாதவன் ஊரில் இல்லை, சிவனைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்பது மாதிரி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் கவிதைகளை ஒரு வசதிக்காகப் பட்டியல் கவிதைகள் என்கிறேன். நம் யாத்ராவும் அதை முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் கவிதையில் முக்கியமான அம்சம் என்பது கடைசி வரிகளில் வரும் திருப்பம். அது சரியா வந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த நகுலனோட கவிதையை கடைசி வரி, வெயிலில் வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன அப்படின்னு முடிப்பார். மனுஷ்யபுத்திரனோட பிரபலமான கால்களின் ஆல்பம் இன்னொரு சிறந்த உதாரணம். நடனம் ஆடுபவரின் கால்கள், கால்பந்து ஆடுபவரின் கால்கள் அப்படின்னு வரிசையா சொல்லிகிட்டே போய்க் கடைசில ‘யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவேன் என் போலியோ கால்களை’ன்னு முடிச்சிருப்பார்.

யாத்ரோவோட அந்த மாதிரியான கவிதைகளில் வெற்றியடைந்ததாகத் தோன்றுவது : மயிர் கவிதை. வரிசையா விதம் விதமான மயிர்களை, கூந்தல்களை விவரித்துக் கொண்டே போகும் கவிதை கடைசியில் போடா மயிரு செருப்பு பிஞ்சிடும்னு முடிஞ்சிருக்கும். நல்ல திருப்பம்.  அதனாலேயே இது வெற்றியாகிறது. ஆனால், இவருடைய இன்னொரு பட்டியல் கவிதையான எங்கெங்கோ தோல்வி முயற்சியாத்தான் தெரிகிறது.   ஒவ்வொருத்தி பெயரா சொல்லி, அவ அங்க இருக்கா, இவ இங்க இருக்கா எனச் சொல்லிச் செல்லும்போதே கடைசியில் தன்னோட காதலியைப் பத்திதான் சொல்லப் போகிறாரெனத் தெரிந்து விடுகிறது.  இவரும் அதே மாதிரி பார்கவி எங்க இருப்பாளோன்னு முடித்திருக்கிறார்.


கடைசிக் கவிதையான எப்படி இருக்கீங்க? (http://yathrigan-yathra.blogspot.com/2010/07/blog-post.html) கவிதையையெல்லாம் நான் கொண்டாடுவேன்.  அந்தக் கவிதை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  அந்த அளவுக்குப் பிடித்து விட்டது.  அவருடைய  பதிவில்  அந்தக் கவிதை வந்தபோது கூட நான் எதுவும் பின்னூட்டம் போடவில்லை மிகப் பெரிய பாதிப்பை அது எனக்கு ஏற்படுத்தியது. போலவே சாவைப் பற்றிப் பேசும் இவருடைய கவிதையான சாசனம் http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html).

பாராட்ட, மகிழ, கொண்டாட நிறைய கவிதைகள் இருக்கின்றன இந்தத் தொகுப்பில். T Shirtற்கு தேனீர்ச்சட்டை,  கவிதை தர்க்கத்திற்குள் அடங்க மறுக்கும் ‘இவள்’ கவிதை மாதிரியான ஒன்றிரண்டு தடுமாற்றங்களும் உண்டு.  ஆனால் பெரும்பாலும், மன நிறைவைத் தரும் கவிதைகள்தான்.

இந்தக் கவிதைகள் அவை எழுதப் பட்ட காலத்திலேயே வலைப்பதிவில் வாசித்திருக்கிறேன்.  ஆனால் அதற்கும், முழுத் தொகுப்பாக இப்போது படிப்பதற்குமான மனப் பதிவு வேறு மாதிரியா இருக்கு.

மிகப் பிரியமான மனுஷன் யாத்ரா. அவருடைய கவிதைகள் தொகுப்பாக வருவது மன மகிழ்ச்சியைத் தருகிறது.  80 பக்கங்கள் கொண்ட, நேர்த்தியான அச்சமைப்பு, அழகான அட்டை உடைய புத்தகத்திற்கு வெறும் 60 ரூபாய்தான் விலை வைத்திருக்கிறார்கள்.  நண்பர்களை இவரது கவிதைத் தொகுதியை வாங்கிப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

(29/12/2010 அன்று யாத்ராவின் ’மயிரு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது).

சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்

முதல் முறை படித்தபோது இந்த நாவல் சில குறைகளுடன் என்னைக் கவரவே செய்தது.  ஆனால் யோசித்துப் பார்க்கும்போது நிறைய குறைகளே தெரிகின்றன. இது ஏதோ நாவல் வெளியிட வேண்டுமே என்று அவசரத்தனமாக எழுதப்பட்ட ஒரு நாவல் என்று தோன்றுகிறது.

 தேகம் நாவலில் எனக்குத் தெரியும் சில குறைகள் :

கத்துக்குட்டித்தனமான முயற்சிகள். தர்மா, நீதி என்று குறியீட்டுப் பெயர்கள் வைத்திருப்பது (remember, அன்னைவயல், தாய்வாசல்!).

ஒழுங்காக எடிட்டிங் கூடச் செய்யாதது.  கந்தவேல் என்ற பெயர் அடுத்த
பக்கத்தில் கந்தசாமியாக மாறுவது.

ஒரே விதமான வரிகள் திரும்பத் திரும்ப வருவது. உதா : உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது... (இந்த இடத்தில் அம்பை சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது : சினிமால தொட்டாலே ஆர்கசம் வந்தா மாதிரி உணர்ச்சி காட்டறாங்களே, அப்ப முத்தம் கொடுத்தா காக்கா வலிப்பு வந்துடுமா?)

ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்ற கேள்விக்கு செலின் பதில் சொல்லியிருப்பாள். ஆனால் இரண்டு அத்தியாயங்கள் கழித்து நான் அப்ப சொல்லலை, இப்ப சொல்றேன் என்றுவிட்டு அதே காரணத்தை மறுபடியும் சொல்வாள்.  நூலாக்கும் போது இதையெல்லாம் கூடவா கவனிக்காமல் விடுவார்கள்?

ஏற்கனவே எழுதி உயிர்மையில் / சாரு ஆன்லைன் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் பக்க நிரப்பிகளாக மறுபடியும் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.  தனிப்பட்ட அளவில் சில கவிதைகள் நன்றாயிருந்தாலும், நாவலுடன் முழுத் தொடர்பும் கொண்டவை எனச் சொல்ல முடியவில்லை.

வேதங்கள் / சங்க இலக்கியத்திலிருந்து எதையாவது தொடர்பே இல்லாததை (அல்லது தொடர்பு இருப்பது போன்ற தோற்றம் தருவதை) எடுத்து
அங்கங்கே பொன் தூவலாகத் தூவுவது ஒரு ஃபேஷனாகிவிட்டது போல. அது இந்த நாவலிலும் அப்படியே இருக்கிறது.  என்ன எழவோ இந்த மாதிரி மோஸ்தர்களைக் கண்டாலே எரிச்சலாகிவிடுகிறது.

கதையின் நாயகனால் உடல்-ரீதியாக வதை செய்யப்படுபவர்கள் ரொம்பக் கெட்டவர்கள் என்பது வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதேச்சைத்தன்மையாகவோ அல்லது காரண காரியமற்ற ’வெறும்’ வதையாகவோ இவை மாறாததால், சாதாரண கிராஃபிக்கல் டீடெய்ல்ஸுற்கு மேல் மதிப்பளிக்க முடியவில்லை.  (இதை காம்யூவின் அந்நியன் நாவலில் வெயில் நேரத்தில் ஒருவனைச் சுட்டுக் கொல்லும் சம்பவத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்).

சாருவைப் பற்றிய முக்கிய குற்றச் சாட்டு அவர் கிசுகிசு பாணியில் தன்னுடன் பழகியவர்களைப் பற்றி எழுதுகிறார் என்பது. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் அதைக்கூட ஏற்கனவே எழுதியதை மறுபடி எழுதினால் என்ன செய்ய?  ஏற்கனவே சிறுகதைகளில், பத்திகளில், ராசலீலாவில் வந்த அதே நிகழ்வுகள் வேறு பெயர்களுடன் இந்த நாவலிலும் வருகின்றன (நீலாவதி என்ற பெண் பெயரில் வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள்).

இது மட்டுமில்லை.  ஏற்கனவே இவர் கதைகளில் வந்த அதே பாத்திரங்கள் அதே குணங்களுடன் இங்கேயும் உண்டு. ஆனால் வேறு பெயர்கள்.  ஆழ்வார், கிருஷ்ணா என்று. அடப் போங்கப்பா, போரடிக்குது.

அப்படியானால், நாவலில் நல்ல விஷயங்களே இல்லையா எனக் கேட்கிறீர்களா.. சில கவித்துவமான வர்ணனைகள், பித்த நிலையில் வரும் நேஹாவின் வரிகள்...

இது வதையைப் பற்றிய நாவல் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை.  பாலியல் சித்தரிப்புகளில் வதையெல்லாம் தெரியவில்லை (சாமான் எழும்பாததை எல்லாம் வதை லிஸ்டில் சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்).  எனக்குத் தெரிந்து இது, வதை + சாருவின் வழக்கமான பாலியல் சித்தரிப்புகள் + வழக்கமான சாரு சமாச்சாரங்கள் உள்ள நாவல்.

இரண்டு புத்தகங்கள்

சென்ற வாரம் அகநாழிகை புத்தக வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றிருந்தேன். நர்சிம்மின் சிறுகதைத் தொகுதி, விநாயக முருகன், லாவண்யா மற்றும் இன்னொருவரின் கவிதைத் தொகுதிகள் வெளியாயின. நர்சிம்மின் சிறுகதைத் தொகுதியையும், பா ராஜாராமின் கவிதைத் தொகுதியையும் வாசித்தேன். இனிதான் விநாயக முருகனின் தொகுதியை படிக்க வேண்டும். (லாவண்யா + இன்னொருவரின் புத்தகங்கள் வாங்கவில்லை).

நர்சிம் : பல கதைகளைத் தனித் தனியாக அவரது தளத்தில் ஏற்கனவே வாசித்ததுதான். ஆனால் சிறுகதைகளை ஒட்டு மொத்தமாக ஒரு தொகுதியாகப் படிக்கும்போது கிடைக்கும் மனப்பதிவிற்கும் தனித் தனியாக அவற்றை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தவிர, சில கதைகளைக் கொஞ்சம் மாற்றியும் உள்ளார்.

ஆற்றொழுக்கு நடையில் அனாயசமாகக் கதைகளைச் சொல்லிச் செல்கிறார். வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம். அது இவருக்கு இயல்பாக வருகிறது.

கதைகளில் வரும் எல்லா வரிகளும் அதன் மைய உணர்வுக்கு ஒட்டியே இருக்க வேண்டுமென்பது மரபான கதைகளுக்கு ஒரு விதி. அது இந்தத் தொகுதியில் பல இடங்களில் தவறியிருக்கிறது. வாசிக்க நன்றாயிருந்தாலும் தேவையற்ற வர்ண்னைகள் கதையோடு ஒட்ட விடாமல் தடுக்கின்றன.

வாசிப்பு சுவாரசியத்திற்காகவே இவரது கதைகளைப் படிக்கலாம். இன்னும் தீவிரமான கதைகளை எழுதுவார் என நம்புகிறேன்.

ராஜாராமின் தொகுதி 1995-96 வாக்கில் வர இருந்தது. எனக்குத் தெரியாத காரணங்களால் அது முடியாமல் போய் இப்போது பல வருடங்கள் கழித்து வந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.

கவிதையைப் பற்றித் தமிழில் ஆயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன. எது கவிதை, எது உயர்வான கவிதை, கவிதையின் வடிவம்... என்று பலவாறாகப் பலர் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய முன் - தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்டு கவிதைகளை அணுகி அந்த வரையறைகளுக்குள் கவிதை அடங்கினால் சிலாகிப்பார்கள், மீறினால் நிராகரிகரிப்பார்கள்.

கவிதையைக் கசக்கித் துவைத்துக் காயப்போடுவதுடன் எனக்கு உடன்பாடில்லை. கவிதை விமர்சனம் என்ற பெயரில் சிலர் ருப்பி ருப்பி எழுதுவதைப் பல சமயம் படிப்பதுகூட இல்லை.

இந்தத் தொகுதி சிறிய தொகுதிதான். மொத்தமுள்ள 64 பக்கங்களில் முதல் எட்டு பக்கங்கள் வேறு விஷயங்களுக்குப் போய்விட மீதமுள்ள 56 பக்கங்களில் கவிதைகள். எல்லாக் கவிதைகளுமே புத்தகமாவதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது (உதா : மஞ்சுவிரட்டு). வாடகை வீடு போன்ற கவிதைகளில் வாழ்க்கை விசாரங்களும் தத்துவங்களும் துருத்திக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில கவிதைகளில் கடைசி வரித் திருப்பங்களுக்காக வலி்ந்து எழுதப் பட்டது போலிருக்கின்றன. பிரதானமான குற்றச் சாட்டாக இவர் ஒரே மாதிரிக் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார் எனலாம் (ஆனால் பலர் - வெற்றி பெற்ற, எனக்குப் பிடித்தமானவர்களும் சேர்த்தி - அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பது வேறு விஷயம்!). ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும் (வண்ணநிலவனின் கதை மொழி போல் விதம் விதமாக இருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட விருப்பம்).

எனக்குத் தெரிந்தே இவருடைய வேறு சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் சேர்க்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

எனக்கு ’என்ன சொல்லட்டும் முத்தண்ணே’, ‘சரசு அத்தை’ மாதிரியான கவிதைகள்தாம் முக்கியமாகப் படுகிறது. அதற்காகவே பா ராஜாராமின் கவிதைகளை நேசிக்கிறேன்.

வெளியீட்டு நிகழ்விற்குப் பிறகு நண்பர்கள் என்னைச் சாரு நிவேதிதாவிற்கு அறிமுகப்படுத்தினர். அவருடன் சில முறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், பல பொது இடங்களில் நான் பார்த்திருந்தாலும், நேரில் பேசுவது இதுதான் முதல் முறை. நிறைய பேர் இருந்ததால், மிகக் கொஞ்ச நேரமே பேச முடிந்தது. கூட்டம் என்றால் அலர்ஜி என்பதாலும் அதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் மலேரியா காய்ச்சல் சரியாகியிருந்ததாலும் சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவரிடம் விரிவாகப் பேச நிறைய இருக்கிறது.

ஆழி சூழ் உலகு

ஆழி என்பது கடலில் அலைகள் பொங்குமிடம் என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 குறிப்பிடத்தக்க நாவல்கள் இருக்குமா?

இந்தத் தலையணை சைஸ் புத்தகங்கள் என்றால் (ஜெமோ புண்ணியத்தில்) எனக்கு அலர்ஜி. பின் தொடரும் நிழலின் குரலைப் படித்தவன் இன்னும் விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.

கென், தமிழில் வந்த முக்கியமான நாவல்களுள் ஒன்று, படித்துப் பாருங்கள் என்று போன வருடம் சொன்னார். இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.

எட்டு மாதங்கள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். படித்து முடிக்க கிட்டத்தட்ட 10 நாட்கள் அகிவிட்டன. காரணம் என்னுடைய சோம்பேறித்தனமும் வேலைகளும்தானே தவிர, நாவல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவுமே சென்றது.

மீனவர்களைக் களமாகக் கொண்டது இந்நாவல். பெரிய நாவலுக்கே உரிய குணமான பலதரப்பட்ட மனிதர்கள், சிக்கல்கள், வாழ்க்கைப் பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறது. இந்த நாவலில் முக்கியமான அம்சமாகத் தெரிவது மரணம் - கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு ஒரு மரணம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித் தனியாகவும் செத்துக் கொண்டே இருக்கின்றனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை முன்னிறுத்தும் நாவலோ என்றுகூடத் தோன்றுகிறது. மரணத்திலிருந்து தப்பிக்க தியாகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர் (’நண்பர்களுக்காக உயிர் விடுவது ஆகப் பெரிய தியாகம்’). பங்குத் தந்தை காகு சாமியாரைப் பற்றி விரிவாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜோ டி குரூஸ்.

ஆழியில் சிக்கி மரணத்திற்கெதிரான மூவரின் போராட்டத்துடன் நாவல் துவங்கி, அதில் ஒருவன் ஜெயிப்பதுடன் முடிகிறது. நடுவில் முன்பின்னாக காலத்தில் நகர்ந்து விரிவாகவும் ஆற அமரவும் ஆமந்துறை மீனவர்களின் கதையைச் சொல்கிறது. கூடவே நாடார்களின் கதைகளையும், பங்குத் தந்தைகளின் கதைகளையும்.

இதைத் தவிர ஜோ டி குரூஸ் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் இந்த நாவலில் அமெச்சூர்த்தனம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. நல்ல எடிட்டர் கிடைத்திருக்கலாம்! அடிபட்டிருக்கும் ஜஸ்டினை வசந்தா தைலம் தேய்த்து மயக்குவது, குளிக்கும்போது உடல் அழகைக் காட்டி சுந்தரி டீச்சர் சூசையை மயக்குவது என மலையாள பிட் பட ரேஞ்சிற்கு மேல் யோசிக்க மறுக்கிறார் ஆசிரியர்!

மீன்களைப் பற்றி, மீன் பிடிப் படகுகள் பற்றி, வலைகளைப் பற்றி, கடலைப் பற்றி, கடலில் புயலைப் பற்றி எனப் பல நுட்பமான தகவல்கள் நாவலின் கதைப் போக்கில் வருகின்றன. அவை வெற்றுத் தகவல்களாகத் துருத்திக் கொண்டிருக்காமல் கதையின் போக்கோடு இணைந்திருக்கின்றன.

1933ல் துவங்கி 1985 வரை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விரிவாகப் பேசியிருக்கிறது நாவல். முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உட்புக கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் அது ஆரம்பத்தடைதான், சில பக்கங்களிலேயே பழகிவிடும்.

ஆகச் சிறந்த நாவலென்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழில் வந்த முக்கியமான நாவல்தான் என்று தோன்றுகிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.

சில பதிவுகள் சில விமர்சனங்கள்

தமிழ் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் புனைவு / பத்தி எழுத்துகளில் என்னைக் கவர்ந்த சிலரது எழுத்துகளைப் பற்றிய விமர்சனம் இது :

பரிசல்காரன் (http://www.parisalkaaran.com/)

எல்லாவற்றையும் சுவாரசிய எழுத்தாக்கும் திறமை இவருக்கிருக்கிறது. அது சினிமா பற்றியதானாலும் சரி, சிகரெட் பற்றியானாலும் சரி. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலே ஒருமாதிரி சுவாரசிய நடை வந்துவிடும் என்பது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. பலருக்கு அதுவும் வாய்க்கவில்லை எனும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.

தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. இதைச் சிலர் மறுத்தாலும் என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். இன்னொன்று, பத்தி எழுத்துகள் எவ்வளவுதான் சுவாரசியமாக இருந்தாலும், நினைவில் நிற்பதில்லை. முதல்படியாக, பத்தி எழுத்துகளைக் கட்டுரைகளாக உயர்த்தமுடியுமா எனப் பார்க்கலாம். இதைப் பரிசலும் யோசித்துப் பார்க்கலாம்.

ஸ்ரீதர் நாராயணன் (http://www.sridharblogs.com/)

இவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது :(

நல்ல கதைமொழி இவருக்கிருக்கிறது. இன்னும் ஆழமான விஷயங்களை எழுதினால் மகிழ்வேன். இவர் நிறைய நல்ல சினிமா பார்ப்பவர்; திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்பது interesting!

நர்சிம் (http://www.narsim.in/)

வெகுஜன நடையில் பழந்தமிழ்க் கவிதைகளை இவர் கொடுக்கும் விதம் அழகு. அதற்குநான் தொடர் வாசகன். எப்படியாவது அவற்றைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.

சரளமான நடையில் வெகுஜனக் கதைகள் எழுதுகிறார். ஆனால் முடிவுகளில் முத்தாய்ப்பு வைப்பது போல் எழுதுவது கொஞ்சம் அபசுவரமாக இருக்கிறது. கதை வடிவத்தில் இவர் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல வெகுஜனக் கதைகளை இவரால் தரஇயலும்!

அனுஜன்யா (http://www.anujanya.blogspot.com/)

சமீபத்திய வலைப்பதிவு கவிதைகளில் இவருடையது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. விருட்சம், கீற்று, உயிரோசை என கலந்துகட்டி இவரது கவிதைகள் வருகின்றன. தர்க்க-ரீதியான சிந்தனைகள் தேவைதான்; ஆனால் அவற்றைக் கவிதை ஆக்கத்தின்போது தவிர்த்துவிடுவது நலம்.

போலவே இவர் கவிதைகளுக்குப் பின்னூட்டங்களில் விளக்கம் தருவதையும் தவிர்க்கலாம். அவை அக்கவிதைகளுக்கு ஒற்றைப் பரிமாணத்தன்மையைத் தந்துவிடுகின்றன. கோடிட்டுக் காட்டலாம், ஆனால் நோட்ஸ் வேண்டாமே... இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது. மகிழ்ச்சி.

யாரையும் அளவுக்கதிமாகப் பாராட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என்னளவில் நம்பிக்கையளிக்கும் வலைப்பதிவு எழுத்துகளை அறிமுகம் செய்வதும், அவர்களை இன்னமும் தீவிரமாக எழுதத் தூண்டுவதுமே என் விருப்பம்.

தனிப்பட்ட அளவில், பரிசல், நர்சிம் போன்றவர்களின் எழுத்து முறைமையை நான் நிராகரிப்பவனே. ஆனால், அவர்களிடம் தென்படும் தெறிப்பும் உழைப்பும் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதுவே பெரிய விஷயம்தானே!

லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர். டிஜிட்டல் டைரியாம்! கட்டற்ற சுதந்திரத்தில் ஒன்றும் செய்ய இயலாது!

கென் (http://www.thiruvilaiyattam.com/)

இதில் பெருந்தலைகளைப் பற்றி எழுதவேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் கென்னைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவரைச் சாரு நிவேதிதாவின் மூன்றாவது வாரிசாக வலையுலகம் அறியும்! மிகச் சிறு வயதில் (28 வயசுதானாம்) எப்படி இவ்வளவு அற்புதமாக எழுதுகிறார் என என்னை மலைக்கச் செய்யும் எழுத்து இவருடையது. இவரைப் புனைவிலக்கியத்திற்கு இழுத்துவந்த தல பாலபாரதிக்கு நன்றி.

இவரது ராபித்தும் பள்ளிவாசல் பாங்குச் சத்தமும் மற்றும் பல புனைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து கவனித்து வாசிக்கப்பட வேண்டியவர் கென்.

வார்த்தை பூதம்

(மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்; தேவி பாரதி, காலம் பதிப்பகம், 29, ஜீவா தெரு, சிவகிரி 638 109. முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1996, 124 பக்கங்கள், விலை ரூ 25/-)

தேவி பாரதியின் இத்தொகுப்பு ஒரு கட்டுரையையும், ஒரு நாடகத்தையும், இரண்டு சிறுகதைகளையும் கொண்டது. பின் அட்டை பறை சாற்றுவது போல, தீர்ப்பு முக்கியச் சிறுகதை.

சமீப காலத்தில் ஃபேண்டஸி தளத்தில் கதை எழுதுபவர்களில் முக்கியமானவர்கள் என கோணங்கி, ஜெயமோகன், கௌதம சித்தார்த்தன் போன்றவர்களைச் சொல்லலாம். எதார்த்தத்தை முற்றாகத் தவிர்த்த உள் - மன மொழி கோணங்கியினுடையது. வாசிக்க சுவாரஸ்யமானவர்கள் ஜெயமோகனும் கௌதம சித்தார்த்தனும். இவர்களுடன் இப்போது தேவிபாரதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளிப்பாட்டின் தீவிரத் தன்மையால் ‘தீர்ப்பு' முக்கியமாகிறது. மொக்கையான யதார்த்தத்தை இரு கதைகளும் புறக்கணிக்கின்றன. முதலில் ‘தீர்ப்பு'.

இறுக்கமான மொழியாலும் நெகிழ்ச்சியான உணர்ச்சிகளின் ஊடாகவும் கட்டப்பட்டிருக்கிறது தீர்ப்பு. பலவிதங்களில் காஃப்காவின் தீர்ப்பை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை. மிக லாவகமான மொழி நடையும் ஃபேண்டஸி தன்மையுமான கதைப் போக்கும் நல்ல வாசிப்பனுபத்தைத் தருகின்றன. மிஸ்டிக்-புதிர்த்தன்மை கதையின் கனத்தைக் கூட்டுகிறது.

"நாங்கள் சல்லாபித்திருந்த ரகசியமான இரவு நேரம் அது. அலறி கூச்சலிட்டான் சேது. பதறி எழுந்து அம்மணமாக ஓடி விளக்கைப் போட்டேன் நான். கடவுளே... என்ன கொடுமை.! சேதுவின் கழுத்தைப் பின்னி இறுக்கி உஷ்ஷென வன்மத்துடன் சீறிக் கொத்தத் தயாரானது பாம்பு... என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தது போல பிடியைத் தளர்த்திக் துவண்டது நாகம். சுதாகரதித்துத் துள்ளி உதறினான் சேது. சொத்தென என் காலடியில் விழுந்தது மதுவினுடைய ரப்பர் பாம்பு."

புனைவு தருக்கத்தை மீறி வார்த்தைகள் சீறிப் பாய்கின்றன. தனியறையில் அமர்ந்து இக்கதையை வாசிப்பவனை நாலாபுறத்திலிருந்தும் அவை சுற்றி வளைத்துத் தாக்குகின்றன. வார்த்தைகளின் தீவிரம் - சற்றே நீள் வாக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கதையின் முடிந்தவுடன் - வாசகனையும் தொற்றிக் கொள்கிறது.

இந்தக் கதையைக் கட்டுடைத்து, தாக்கலாம். சார்ந்தோ எதிர்த்தோ எல்லாக் கதைகளையும் விமர்சிக்கலாம் தானே. ஆயின், அது விமர்சனமல்ல. கழைக் கூத்தாட்டம்.

சிறுகதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த / இது போன்ற எழுத்துகள் உதவும் எனச் சொல்கின்ற நேரத்தில், ‘தாஸ் என்பவனும், தாஸ் என்பவும்' சிறுகதை ‘போலச்' செய்ய முயன்ற தோல்விக் கதை என்றே தோன்றுகிறது. புதிர்த் தன்மையும் தேவதைக் கதைப் பாணியும் கைகூடாத கதை. (அப்படிச் சரியாகக் கைகூடாத கதையைக் கூடத் தன் கவித்துவ நடையால் ஈடு செய்து விடுவார் கோணங்கி). வெற்று வார்த்தைக் கூட்டங்கள் தரும் ஆயாசத்தையே இந்தக் கதை ஏற்படுத்துகிறது. சொல்லப்படும் விஷயத்தின் கனம், வியாபரக் கதைகளையே தூக்கி நிறுத்தக் கூடும்.

சடார் சடாரென்று மாறும் காட்சிப் பிம்பங்கள், நடனம், திரும்பத் திரும்ப உபயோகிக்கப்படும் ஒலிகள், வார்த்தைகள் என இருக்கிறது ‘மூன்றாவது விலா எலும்பும், விழுதுகளற்ற ஆலமரமும்' நாடகம். இது பிரதானமாய் நடனத்தையும், உடல் அசைவு மற்றும் ஒலிகளை முதன்மைப் படுத்தும் காட்சி ரூப நாடகம். அதனாலேயே எழுத்துப் பிரதி திருப்தி தராத தோற்றம் ஏற்படுகிறது. நிகழ்த்துதலில் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும் என நம்புகிறேன்.

இத்தொகுப்பில் முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டியது ‘வாழ்வு சார்ந்த கலையும், கலை சார்ந்த வாழ்வும்' கட்டுரை. இது சேர்க்கப் பட்டதற்கான காரணம் விளங்கவேயில்லை. மிகக் குறைந்தபட்சம், இது கட்டுரையாகக் கூட இல்லை. இரண்டு மூன்று இடங்களில் முன் தயாரிப்பின்றி பேசப்பட்ட பேச்சுகளும், அதற்கான எதிர்வினைகளும், எதிர்வினைகளுக்கான பதில்களும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை தாண்டி, ஒரு வாசகன், திறந்த மனத்துடன் மற்ற படைப்புகளை அணுகுவதைச் சாத்தியமற்றதாக்குகிறது, இது ரிப்போர்ட் செய்யப் பட்டிருக்கும் விதம்.

இப்புத்தகம் முக்கியமானது. ‘பலி' சிறுகதைத் தொகுதியின் மூலம் அறிமுகமான தேவிபாரதி தற்கால எழுத்தாள இளைஞர்களில் வலிமையுள்ள ஒருவராக வெளிவருகிறார். பலவித சலனங்களையும், சர்ச்சைகளையும், பாதிப்புகளையும் எற்படுத்த வல்லது இவரது எழுத்து. இதை அவர் தன் வரையில் நேர்மையாக வெளிப்படுத்துகிறார். இதுவே பெரிய விஷயம்தானே.

(குறிப்பு : இந்தப் புத்தக விமர்சனம் கவிதா சரண் ஃபிப்ரவரி 1998 இதழில் வெளியானது. இதில் நான் முன் வைத்திருக்கும் சில கருத்துகளோடு இப்போது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்)

கற்றது தமிழின் வன்முறை அரசியல்

(1. இந்தக் குறிப்புகளை எழுதிவிட்டு, பிறகு சில பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறேன். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்து முடிக்கலாம் அல்லது நிறுத்தலாம். 2. இப்படம் முன்வைக்கும் காட்சிப் பிம்பங்களின் வன்முறை வேறொரு சமயம் மடக்கிப் பிடிக்க வேண்டும்).
காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
(தேவதச்சன்)
இந்தப் படத்தில் பிரதானமாய் இரண்டு விஷயங்கள் இருப்பதாய் அவதானிக்கப் படுகிறது. ஒன்று கவித்துவம் மற்றது வன்முறை. எப்படிக் கவித்துமான வசனங்கள் வன்முறைக்கு உதவுகின்றன என்பதைப் பார்ப்போம்.

படம் ஆரம்பிக்கும்போது மேட்டுக்குடி நடனத்தில் கேட்கும் 'தா தித்தோம் தா' என்பது திரும்பத் திரும்ப வருகிறது.


பிரச்சனைகளை ஒற்றைப் பரிமாணமாக ஆக்க முயற்சிக்கிறது பிரதி. உதா :
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் எப்படி உயிர் வாழ முடியும்.?'
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் சாவதற்கு காரணமா பஞ்சம்.?'

கதாநாயகன் பெயர் பிரபாகர் (கவனிக்கவும் பிரபாகரன் இல்லை) - பெயர் பற்றி வரும் வசனங்கள் :

'பெயரே வில்லங்கமா இருக்கே'
'எனக்குத் தெரிஞ்சு ஒரு பிரபாகர் தான்; அவர் லங்காவில இருக்கார்'

(நாயகனின் பெயர் பிரபாகராய் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தலைவர் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இங்கு.!).

பிரபாகர் சிவனாகிவிடுகிறான். அதனால் யார் வாழலாம் யார் சாகலாம் என முடிவெடுக்கும் 'அதிகாரம்' அவனுக்கு வருகிறது (அந்நியனில் கருட புராணம் இதில் சிவன்).

அவன் செய்யும் சில கொலைகள் :

1. ரயில் பயணச் சீட்டு கொடுப்பவர். ஐந்து ரூபாய் மாற்றி எடுத்து வரச் சொல்வார்.
2. ரயிலில் RPF (போலிருக்கும்) ஒருவர். அவர் தூங்கிகொண்டிருக்கும் ஒருவரின் பையிலிருந்து பணம் எடுத்து விட்டு பிரபாகரிடம் வந்து பணம் கேட்பார்.
3. வைரம் பிடித்துப் போக பணம் இல்லாததால் வைர வியாபாரியைக் கொலை செய்வான் (இது பாடல் வரிகளில் வருவது)
4. 26 வயதாகியும் ஒரு பெண்ணும் கிடைக்காததால் கடற்கரையில் உள்ள காதல் ஜோடிகள்.
5. முதலில் இவனைத் துன்புறுத்திய போலீஸ் அதிகாரி (பழிக்குப் பழி.!).

கொலைகளை புணர்ச்சி இன்பத்துடன் இணைப்பது; அதை கவிதை வரிகளாகச் சொல்வதன் மூலம் திரும்பத் திரும்ப பிரதியின் ஆசிரியர் வன்முறையை கவித்துவத்துவத்தின் மூலம் நியாயப் படுத்த முயற்சித்திருப்பார்.

தந்தையை மறத்தல் : அப்பா தட்டாமாலை சுற்றுவது பிடிகாது என வசனம் வரும். அதையே தமிழ் ஆசிரியர் செய்யும்போது அந்தக் குரல் மவுனமாகிவிடும். இங்கு தந்தையை மறப்பதின் மூலமே (தன் வரலாற்றை அழிப்பதன் மூலமே) ஆசிரியர் பட்டையாக விபூதிப் பூச்சுடனும் பிரபாகர் விபூதிக் கீற்றுடனும் வரமுடிகிறது...

தமிழ் உயர் வகுப்பில் சேரும் காட்சி மிக மோசமான அரசியலை முன் வைக்கிறது. மாணவனொருவன் பேர் ஸார்ஜ் என, ஆசிரியர் திருத்துவார் ஜார்ஜ் என்று. வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எல்லோரும் கறுப்பு நிறத்திலிருக்க (அவர்கள் சரியாகப் படிக்காதவர்கள், கடன் கிடைக்குமென்பதால் படிக்க வந்தவர்கள்) பிரபாகர் சிகப்பாக இருக்கிறான். அதனாலேயே அவன் அதிக மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது பிரதிக்கு.

பிரபாகர் படம் முழுவதும் designer shirt, pant, உயர்தர shoe, மினரல் வாட்டர் சகிதமாகவே வருகிறான்.

அறையில் படுத்திருக்கையில் ஷு போட்டிருப்பவன் உறங்கி எழுந்து நண்பனின் அலுவலகத்திற்குச் செல்லும்போது செருப்பு போட்டிருப்பது உதவி இயக்குனர் கோட்டை விட்டதால் அல்ல; அப்போதுதானே நாயகனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசத்தைப் பெரிதுபடுத்திக் 'காண்பிக்க' முடியும்.?

தமிழ் படித்திருந்தாலும் நாயகன் அழகான் ஆங்கிலம் பேசத் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனது நண்பனுக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியாது எனக் காட்டும்போது ஏற்படுகிறது.

ஒரு பெண்ணின் டீ சட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்து (touch me if you can), அவள் மார்பகங்களைத் தொடுகிறான். மற்ற குற்றங்கள் செய்கையில் கலங்காத நாயகன் இந்தச் செய்கைக்கு வருந்தி கைகளில் சூடு வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு politically correct stand எடுப்பது ஏனோ.?

குடித்து விட்டு போதையில் ஒரு வாகனம் சேறடித்துவிட்டுப் போக அடுத்த வண்டியின் கண்ணாடியை உடைப்பான் நாயகன். ஒட்டி வந்தவனை அடிப்பான் (முதலில் போலீஸ் செய்வதையே இந்த இடத்தில் நாயகன் செய்கிறான்).