விவேக் ஷன்பேக்

சிறுகதைகளை இணையத்தில் படிப்பதில் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கிடையில் கதைகளைக் கவனமாகப் படிக்க முடியாது. ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வரும் தொலைபேசி அழைப்போ உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சலோ எரிச்சல் படுத்தும். அது அந்தக் கதையைத் மீண்டும் படிக்கும்போதும் தொடரும். அல்லது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் - அதுவும் பல சமயங்களில் முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுகதை நாவல்களைப் புத்தகங்களாகத்தான் படிப்பது. நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது :(

அப்படித்தான் ரீடரில் ஜெயமோகனின் பதிவில் வந்த விவேக் ஷன்பேக் எழுதி ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்த கதைகளைப் படிக்கவில்லை. பிறகு படிக்கலாமென்று விட்டுவிட்டேன். இன்று காலை சுரேஷ் கண்ணனின் (http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html) பதிவில் அதைச் சிலாகித்து எழுதியிருந்ததும் மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.

சமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான கதைகள் என்று நிச்சயம் சொல்வேன். நேரம் கிடைக்கும்போது உங்களையும் வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

1. http://www.jeyamohan.in/?p=5611 வேங்கைச் சவாரி

2. http://www.jeyamohan.in/?p=5659 அடுத்தவர் குடும்பம் (இந்தக் கதையின் இடையில் வரும் ’ஒரு வார்த்தைகூடப் பேசாமல் செயல்மூலம் பேச்சின் வலிமையைக் காட்டுவது’ என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு முழுக் கதையை எழுதியிருக்கும் சாமர்த்தியம் + ஒரு கதையை ஆரம்பித்துவிட்டு சாவகாசமாக இன்னொரு கதையைச் சொல்லி முடிப்பது இரண்டும் என்னைக் கவர்ந்தது )

3. http://www.jeyamohan.in/?p=5752 கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது (சாதத் ஹாசன் மாண்டோவின் கதையொன்றின் முடிவை ஞாபகப் படுத்தினாலும், இந்தக் கதையும் பிடித்திருந்தது.)

நிச்சயம் விவேஷ் ஷன்பேக்கின் கதைகள் வித்தியாசமானவை. இதற்கு முன் இவரை வாசித்ததில்லை - இனி முயற்சி செய்து வாசிக்க வேண்டும். வேறு ஒரு பதிவு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தியிருந்த எரிச்சலில் ஜெயமோகனின் நூல் வெளியீட்டிற்குச் செல்லாதது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன் - குறைந்த பட்சம் இவர் பேச்சைக் கேட்பதற்காவது சென்றிருக்கலாம்.

இரண்டு புத்தகங்கள்

சென்ற வாரம் அகநாழிகை புத்தக வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றிருந்தேன். நர்சிம்மின் சிறுகதைத் தொகுதி, விநாயக முருகன், லாவண்யா மற்றும் இன்னொருவரின் கவிதைத் தொகுதிகள் வெளியாயின. நர்சிம்மின் சிறுகதைத் தொகுதியையும், பா ராஜாராமின் கவிதைத் தொகுதியையும் வாசித்தேன். இனிதான் விநாயக முருகனின் தொகுதியை படிக்க வேண்டும். (லாவண்யா + இன்னொருவரின் புத்தகங்கள் வாங்கவில்லை).

நர்சிம் : பல கதைகளைத் தனித் தனியாக அவரது தளத்தில் ஏற்கனவே வாசித்ததுதான். ஆனால் சிறுகதைகளை ஒட்டு மொத்தமாக ஒரு தொகுதியாகப் படிக்கும்போது கிடைக்கும் மனப்பதிவிற்கும் தனித் தனியாக அவற்றை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தவிர, சில கதைகளைக் கொஞ்சம் மாற்றியும் உள்ளார்.

ஆற்றொழுக்கு நடையில் அனாயசமாகக் கதைகளைச் சொல்லிச் செல்கிறார். வெகுஜனக் கதைகளின் முக்கியத் தேவை சுவாரசியம். அது இவருக்கு இயல்பாக வருகிறது.

கதைகளில் வரும் எல்லா வரிகளும் அதன் மைய உணர்வுக்கு ஒட்டியே இருக்க வேண்டுமென்பது மரபான கதைகளுக்கு ஒரு விதி. அது இந்தத் தொகுதியில் பல இடங்களில் தவறியிருக்கிறது. வாசிக்க நன்றாயிருந்தாலும் தேவையற்ற வர்ண்னைகள் கதையோடு ஒட்ட விடாமல் தடுக்கின்றன.

வாசிப்பு சுவாரசியத்திற்காகவே இவரது கதைகளைப் படிக்கலாம். இன்னும் தீவிரமான கதைகளை எழுதுவார் என நம்புகிறேன்.

ராஜாராமின் தொகுதி 1995-96 வாக்கில் வர இருந்தது. எனக்குத் தெரியாத காரணங்களால் அது முடியாமல் போய் இப்போது பல வருடங்கள் கழித்து வந்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.

கவிதையைப் பற்றித் தமிழில் ஆயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன. எது கவிதை, எது உயர்வான கவிதை, கவிதையின் வடிவம்... என்று பலவாறாகப் பலர் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய முன் - தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்டு கவிதைகளை அணுகி அந்த வரையறைகளுக்குள் கவிதை அடங்கினால் சிலாகிப்பார்கள், மீறினால் நிராகரிகரிப்பார்கள்.

கவிதையைக் கசக்கித் துவைத்துக் காயப்போடுவதுடன் எனக்கு உடன்பாடில்லை. கவிதை விமர்சனம் என்ற பெயரில் சிலர் ருப்பி ருப்பி எழுதுவதைப் பல சமயம் படிப்பதுகூட இல்லை.

இந்தத் தொகுதி சிறிய தொகுதிதான். மொத்தமுள்ள 64 பக்கங்களில் முதல் எட்டு பக்கங்கள் வேறு விஷயங்களுக்குப் போய்விட மீதமுள்ள 56 பக்கங்களில் கவிதைகள். எல்லாக் கவிதைகளுமே புத்தகமாவதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது (உதா : மஞ்சுவிரட்டு). வாடகை வீடு போன்ற கவிதைகளில் வாழ்க்கை விசாரங்களும் தத்துவங்களும் துருத்திக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில கவிதைகளில் கடைசி வரித் திருப்பங்களுக்காக வலி்ந்து எழுதப் பட்டது போலிருக்கின்றன. பிரதானமான குற்றச் சாட்டாக இவர் ஒரே மாதிரிக் கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார் எனலாம் (ஆனால் பலர் - வெற்றி பெற்ற, எனக்குப் பிடித்தமானவர்களும் சேர்த்தி - அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பது வேறு விஷயம்!). ஒரே விதமான மொழியில் நடையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எழுதுபவனுக்கு போரடித்துவிடும் (வண்ணநிலவனின் கதை மொழி போல் விதம் விதமாக இருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட விருப்பம்).

எனக்குத் தெரிந்தே இவருடைய வேறு சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் சேர்க்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

எனக்கு ’என்ன சொல்லட்டும் முத்தண்ணே’, ‘சரசு அத்தை’ மாதிரியான கவிதைகள்தாம் முக்கியமாகப் படுகிறது. அதற்காகவே பா ராஜாராமின் கவிதைகளை நேசிக்கிறேன்.

வெளியீட்டு நிகழ்விற்குப் பிறகு நண்பர்கள் என்னைச் சாரு நிவேதிதாவிற்கு அறிமுகப்படுத்தினர். அவருடன் சில முறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், பல பொது இடங்களில் நான் பார்த்திருந்தாலும், நேரில் பேசுவது இதுதான் முதல் முறை. நிறைய பேர் இருந்ததால், மிகக் கொஞ்ச நேரமே பேச முடிந்தது. கூட்டம் என்றால் அலர்ஜி என்பதாலும் அதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் மலேரியா காய்ச்சல் சரியாகியிருந்ததாலும் சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவரிடம் விரிவாகப் பேச நிறைய இருக்கிறது.

சேருமிடம்

எரிச்சலாக இருக்கிறது
ஆரத்தழுவ
யாரையாவது அடிக்க வேண்டும்
குத்திக் கிழிக்க வேண்டும்
எலி பாஷாணம், கயிறு, தூக்க மாத்திரை
எதுவும் தேவையில்லை
அன்பை வெறுப்பை எல்லாவற்றையும்
நிராகரிக்கிறேன்
எனக்கில்லை
நெடிய தீஜூவாலைகள்
உடல் திறனற்றுப் போனேன்
புதுமைப் பித்தன் குபரா பாரதி
பல உதாரணங்கள் உண்டு
அழகானவர்கள் சாதித்தவர்கள்
சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் -
எதையும் உருவாக்கவில்லை
அசிங்கத்தைத் தங்கள்
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது
கிழங்கள் பூங்காக்களில் நடை பழகிக் கொண்டிருக்கட்டும்
வாய்பிளந்து குறட்டை விட்டுத்
தூங்குபவன் தலையில் ஓங்கிப் போடு
பிறகு குளிப்பது உனக்குப் பிடித்திருக்கலாம்
காலம் என்னை முடித்துவிட்டது
கடவுளோ அல்லது வேறு யாராவதோ
தயவுசெய்து என்னை ஆசிர்வதியுங்கள்

குழப்பம்

அவசர கை நகர்த்தலில்
கோப விட்டெறிதலில்
அடியிலிருக்கும் பேப்பரை உருவுகையில்
எப்படியோ உடைந்து விடுகிறது
மரப்பாச்சி பொம்மைகள்
சும்மா இருப்பதா ஏதாவது செய்வதா
படைப்பதா உருவாக்குவதா
ஒன்றும் புரியாமல்
எழுதியிருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை

சும்மா இருத்தல்

சும்மா இருக்காதே
ஏதாவது செய்துகொண்டே இரு என்றான் மாரி
idle mind is devil's paradise -
ஆங்கில மேற்கோள் காட்டினான்
ஏதாவது செய் ஏதாவது செய்
என்ற ஆத்மாநாமின் கவிதையைச் சொன்னான்
சும்மா இருப்பதற்கும் ஏதாவது செய்வதற்குமான
இடைவெளிக் குழப்பத்தில்
செய்திருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை

சென்னையில் நாளை பதிவர் சந்திப்பு

தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்

சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :

யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824

செய்தல்

எதையும் செய்யாமல்
சும்மா இருக்கச் சொன்னான் மாரி
சும்மா இருந்து எனத் துவங்கும்
சுந்தர ராமசாமியின்
கவிதையை மனப்பாடமாக ஒப்பித்தான்
செய்தலுக்கும் உருவாக்குதலுக்குமான
வித்தியாசக் குழப்பத்தில்
உருவாக்கியிருக்கிறேன்
இந்த ஒன்பது வரிகளை

இரண்டு கவிதைகள்

காலையில் (அ) பு.பி.

குளியல் தொட்டியில்
சோப்பு நுரையினூடாக
தொலைபேசியில் பேசும்
புஷ்டியான நடிகையை
நினைத்துக் கொண்டு
பிளாஸ்டிக் வாளியிலிருந்து
சொம்பில் நீர் மோந்து
குளிப்பது சுகமானது


நினைத்தல் (அ) பு.போ.

மதியம் பார்த்த படத்தின்
நாயகியை நினைத்தபடி
(she was oozing sex)
புணர்கையில்
(i would like to cum on you)
தவறிப்போய் அவள் பெயர் உச்சரித்து
பயந்து போய் இவளைப் பார்த்தேன்
கண்கள் கிறங்க
எந்த நாயகனையோ நினைத்துக் கொண்டிருந்தாள்
வரிகள் வேறு மாதிரி இருக்கலாம்

புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்

பலநாட்கள் கழித்து சந்தித்தேன்
பழைய காதலியை
இடுப்பசைத்து நடனமாடி அவள்
சூடேற்றினாள்
கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி

குதூகலமாகவே கழிந்த இரவில்
சரியாகச் செய்தோமோ என
மனம் அல்லாடிக் கொண்டிருக்க
புரண்டு படுத்து
உறங்கத் துவங்கியவள்

கைகொட்டிச் சிரிக்கிறாள்
கனவில்

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_23.html)

தற்காப்பு

என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை

எனக்கான அழைப்பு

அதிகாலையில்
ஒலிக்கிறது தொலைபேசி
இழுத்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் சாவு
நின்று போன வண்டி
மாமா பெண்ணிற்குக் குழந்தை
கலால்துறையின் ரெய்டு
உத்திராபதிக்கு ஹார்ட் அட்டாக்
(சே, எவ்வளவு கேவலமானவண்டா நீ!)
குலுக்கலில் பரிசு
ப்ரீதாவின் கொஞ்சல்
எதுவாகவும் இருக்கலாம்
முக்கியமானது
நிற்பதற்குள் எடுத்துவிட வேண்டும்
தொலைபேசி அழைப்பை
நிற்பதற்குள் நிற்பதற்குள்

இலக்கடைதல்

எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_30.html)

முடியாத இரவு

முன்பின் தெரியாத ஊரில்
கட்டிங் கட்டிங்காக அரை போத்தல் குடித்துவிட்டேன்
வழக்கம் போல்
போதையில் என் அறை
இருக்குமிடம் மறந்துவிட்டது
சரியாகக் காயாத ஜட்டிகளும் பனியன்களும்
அலங்கோலமாகக் கிடக்கும் அறையது
அருகிலிருக்கும் வைன் ஷாப்பில் நுழைந்து
கட்டிங் ரம் வாங்கினேன்
தண்ணீர் கலந்திருப்பான் போல ராஸ்கல்
இன்னொரு கட்டிங் வோட்கா வாங்கினேன்
பாழாய்ப்போன கடையில் லிம்கா இல்லை
200 மில்லி செவன் அப் ஊற்றிக்
குடித்துக் கொண்டிருக்கையில்
வருகிறாள் என் ஆதர்சக் காதலி
வாயில் எடுத்துக் கொள்ள
200 ரூபாய் கேட்கிறாள்
அவள் அணிந்திருந்த
நைட்டி போன்ற ஆடையிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது
தொட்டுக் கொள்ள இருந்த வேர்க்கடலையை
அவளுக்குக் கொடுக்கிறேன்
பைத்தியக்காரனோ அல்லது கொலைகாரனோ
என என்னைப் பயமுடன் பார்க்கிறான் கடைப் பையன்
கடை அடைக்கும் நேரம் வேறு
இப்போது என் அறை ஞாபகம் வர
கடைப் பையனையும்
அவளையும் அங்கேயே விட்டுவிட்டு
தள்ளாடியபடி
என் அறைக்குத் திரும்புகிறேன்
வெளிநாட்டு நண்பன் கொடுத்திருந்த
ஃபிரெஞ்ச் வைன் இருக்கிறது மேசையில்
கொலைகாரக் காதலியுடன் நடனம் ஆடியபடி
மெல்லப் பருகுகிறேன்
சிரித்துக் கொண்டே காதல்
இறந்து போனது

(ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி - மொழிபெயர்ப்பில்லை -எப்போதோ எழுதிவைத்தது; இப்போது பதிவிடுகிறேன்)

காமக் கதைகள் 45 (31)

சொல்வதற்குச் சங்கடப்பட்டான் அதீதன். ‘இல்ல, இந்தக் கதையைச் சொல்லலாமான்னு தெரியல’ என்றான். ‘ஏன் யார்கிட்டயாவது உதை வாங்கின கதையா... இப்படி எல்லாம் இமேஜ் வச்சுக்காத’ என்றேன். ‘போடா முட்டாள்’ என்றுவிட்டு, நிதானித்து கதையை ஆரம்பித்தான்..

’அப்ப எனக்கு 19 வயசிருக்கும். மண்டை முழுக்க செக்ஸ்தான் இருக்கும். எப்படியாச்சும் பொம்பள உடம்ப பார்த்துட துடிக்கும். எவ்வளவோ கேவலமான காரியங்களைப் பண்ணியிருக்கேன்’

’நீ மட்டுமா, எல்லாரும்தான் பண்ணியிருப்பாங்க... தைரியமாச் சொல்லு’

’என்னோட தூரத்து சொந்தக்காரப் பொண்ணு. பேரு ஸ்ரீவாணி. என்னைவிட நாலு வயசு பெரியவ. வீட்டுக்கு வந்திருந்தவ நேரமாயிட்டதால ராத்திரி தங்கிட்டா. படுக்கறதுக்கு ஒரே ரூம்தான். நான், அம்மா, அவ மூணு பேரும் படுத்திருந்தோம். காலையில எழுந்து பார்த்தா, அம்மா சமையல் ரூம்ல இருந்தாங்க. வெளிச்சம் வராம இருக்க இந்த ரூம் கதவு சாத்தியிருந்துச்சு. ஸ்ரீவாணி தூங்கிகிட்டிருந்தா. அவளோட பாவாடை முட்டி வரைக்கும் வந்திருந்துச்சு.

அவளோட உடம்ப தொட்டுப் பாக்க என் மனசுல ஆசை. ஆனா அவ முழுச்சுகிட்டா என்ன செய்யறதுன்னும் பயம். மனசு கிடந்து தள்ளாடிச்சு. ஆனாலும் ஆசைய அடக்க முடியல.

நைஸா அவளோட பாவடைய கொஞ்சமா தூக்கி அவ தொடைய தொட்டேன்.

டக்குன்னு முழிச்சுகிட்டா ஸ்ரீவாணி. எனக்கு ஷாக் அடிச்சா மாதிரி வெலவெலத்துப் போயிட்டேன். கண் முன்னாடி உலகமே சுத்துது. எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியல... அப்படியே நின்னவன் தலைய குனிஞ்சுகிட்டு ரூம விட்டு வெளிய வந்துட்டேன்.

தெரு முனைக் கடைக்குப் போய் அடுத்தடுத்து ரெண்டு சிகரெட் வாங்கிப் பிடிச்சேன். போச்சு, வீட்ல அம்மாகிட்டயோ இல்லாட்டி அவளோட சொந்தக்காரங்ககிட்டயோ சொன்னா நான் அவ்வளவுதான், காலி. காலியாகறத விடு, எவ்வளவு பெரிய அவமானம் - மூஞ்சி மேலயே காறித் துப்புவாங்க எல்லாரும்.

டிஃபன் முடிச்சுட்டு அவ கிளம்பினா. பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு விட சைக்கிள எடுத்தேன். யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்னு வாய்விட்டு கேக்கவும் கூச்சமா இருந்துச்சு. அவ பின்னாடி கேரியர்ல உக்காந்துகிட்டு, இந்த மாதிரி விஷயம் நடந்தா மாதிரியே காட்டிக்கல. வேற எதையோதான் பேசிகிட்டு வந்தா.

நாளாக நாளாக தெரிஞ்சது - அவ யார்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொல்லவேயில்ல. அப்ப எனக்கு எவ்வளவு ஆசுவாசமா இருந்துச்சு தெரியுமா?

இப்ப அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. அதுக்கப்புறம் அவளை நிறைய தடவை சந்திச்சிருக்கேன் - ஒரு தடவைகூட ஏண்டா அப்படிப் பண்ணினேன்னு அவ கேட்டதேயில்ல.

இப்ப அவள நினைச்சா கூட ரொம்ப நெகிழ்வா இருக்குடா’

என்றபடி கதையை முடித்தான் அதீதன். யோசித்தபடி இருந்த எனக்கு ஏனோ கதை அங்கே முடிந்த மாதிரி தோன்றவில்லை. நான் ‘அவ உன்மேல பரிதாபம் பார்த்து விட்டாளோ இல்லாட்டி அவளுக்கே நீ தொட்டது பிடிச்சிருதுச்சோ’ என்றேன். திடுக் திருப்பமென்றால் கதை இங்கேயாவது முடிய வேண்டும். ஆனால், அதீதன் பிரியப்பட்டபடி அவன் சொன்ன இன்னொரு வாக்கியத்துடன் முடிகிறது.

’சே, உன் புத்தி ஏண்டா இவ்வளவு வக்கிரமாகிடுச்சு?’

மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும்

வார்த்தைகளில் கண்ணியம் வேண்டுமாம் - யார் சொல்கிறார்கள்? - பத்தாம் நம்பர் செருப்பால் அடிப்பேன் என்பவர்களும், மன நோயாளிகள் எனத் தலைப்பு வைப்பவர்களும், சூப்பர்டா அய்யரே என்பவர்களும், போலி செக்யூலரிஸ்டுகள் என நக்கலடிப்பவர்களும்தான் - வேறு யார் சொல்வார்கள் - எல்லாம் இவர்கள்தான் - எழுத்திலே கூடாதாம், ஆபாசமாம்!

அடப் போங்கய்யா! அரசியல் படத்தைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை முன்வைத்தால், எனக்கு இடைவேளையில் கிடைக்கும் சமோசா மற்றும் படம் முடிந்ததும் எனது வண்டி கீறல் இல்லாமல் இருக்குமா என்பதுதான் முக்கியம்; ஏனெனில் நான் ஒரு அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட காமன் மேன் என்கிறார் பரிசல். அது சரி, எல்லா காமன் மேன்களும் அரசியல் பார்வையுடைய கமல் மாதிரி போலீஸ் கமிஷனர் கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடியுமா என்ன? அப்படி கமல் முன் வைக்கும் அரசியல்தான் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது எனச் சொன்னால் தவறா?

திரும்பத் திரும்ப வெண்பூ (மற்றும் சிலர்) படத்தை ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏன் அப்படி? படத்தில் ஒளிந்திருக்கும் மௌனங்களைப் பேசச் செய்வதே விமர்சனமாயிருக்க முடியும். நீங்கள் சொல்வது மாதிரி, ஆஹா, ஓஹோ, வாராது போல் வந்த மாமணி இந்தப் படம் எனச் சொல்லத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே... எல்லாரும் அதே திருப்பணியைத்தான் செய்ய வேண்டுமா என்ன? இதில் சென்னையில் நடக்கும் கதையை ஏன் ஹைதையில் படம் பிடித்திருக்கிறார்கள் என்ற வெளங்கா வெட்டி கேள்வி வேறு! நல்லா பண்றாங்கய்யா விமர்சனம். இப்படி ஆபத்தில்லாமல் தயிர் வடை ஆராய்ச்சியை யார் செய்தாலும் பரவாயில்லை, இவர்களும் கலந்து கொண்டு கோஷ்டி கானம் பாடுவார்களாம். ஆனால், படத்தில் இருக்கும் ஹிந்துத்வா அரசியலைப் பற்றி மட்டும் பேசக் கூடாது! அப்போது படத்தை ரசிக்கத்தான் வேண்டும் என்று நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்.

சரி, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா எனத் தேடித் தேடிப் பார்த்தேன்.. ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!). ஆசிஃப் மீரானின் அந்தக் கட்டுரை நகைச்சுவையாம் - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை - எனக்கு சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.

எனக்கு எப்போதுமே செல்வேந்திரன் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஒரு forward thinking person என நினைத்திருந்தேன் அவரை. ஆனால் அவர் கோட்பாடு என்ற பெயரில் முன்வைக்கும் விஷயம் மிக மிக ஆபத்தானது. இந்த எழவிற்கு ஆங்கிலப் பெயர்களெல்லாம் எதற்கு? வாந்தியெடுப்பதும் வன்மம் காட்டுவதும் தமிழுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்களா என்ன?

/ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார்.
/

இப்படிக்கூட அப்பட்டமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்க முடியுமா என ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது.

இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்!

கடைசியாக - ஆசிஃப் அண்ணாச்சி, இந்துத்துவ வெறியனாக இருப்பதைவிட மனநோயாளியாக இருப்பதையே நான் தெரிவு செய்கிறேன். உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!

(முதல் பத்தி, சி மணியின் பச்சையம் கவிதையை ஒட்டி எழுதப் பட்டது)

ரயில்(ப்) பயணங்கள்

நீண்டு கிடக்கும் தண்டவாளங்களில்
ஓடும் விரைவு ரயில்களின்
அவசரமான தடக் லடக் ஓசை பயமுறுத்துகிறது
hornகளின் கூக்குரலில்
உடம்பு பதறியோ அல்லது கால் தள்ளியோ
ரயிலில் வி்ழுந்து விடுவேன் என அச்சத்தை
எப்போதும் தந்து கொண்டேயிருக்கின்றன அவை
இறந்தவர் பிரேதத்தை vendors பெட்டியில்
அடிக்கடி பார்த்திருக்கிறேன் நான்
பழுப்பான வெள்ளைத் துணியில்
ரத்தம் தெரிய முகம் தெரியாது மூடப்பட்டிருக்கும்
பாடைகளை ஒத்திருக்கும் பெட்டியே
ரயிலில் சிக்கி மாண்டோர் கதையைக்
கூறாமல் இருந்திருக்கலாம் ஹரி
அவன் டிக்கெட் வாங்கி வரச் செல்லும்போது
ஆவடியில் ரயில் மோதிச் செத்தாளாம் அவனது பாட்டி
உடனிருந்த அவன் தம்பியும்
வேறொரு ரயிலில்
வேறொரு சமயத்தில்
முகம் நசுங்க அடிபட்டுச் செத்தவன்தான்
எனக்கான எட்டு ஐம்பத்தைந்து ரயில் வந்து கொண்டிருக்கிறது
இரண்டாவது நடைமேடையில்
ரயிலின்றி தீராது வாழ்வு
என் சாவும்

ஒரு மனதாக

நானொரு மனநோயாளி
விழித்திருக்கும் நேரமெல்லாம்
சலித்திருப்பேன்.
கோவில் கல்வெட்டு
பள்ளி சத்துணவு
திருமண வீடு, ஐயர் குடுமி
சமையல்காரர் வியர்வை
பேருந்து, எரியாத விளக்கு
கிழிந்த கைப்பை நடத்துனர்
மரண வீடு, மருத்துவமனை
சவக்கிடங்கு
சவரக்கத்தி, நிலைத்த பார்வை
நூலகம், மௌனி, காஃப்கா
பிரமிள், பிரளயம்
மனம் நோய்
நோயாள், நோயால்
யாழி, ஆழி
மனம் நோயாய்
நான்
ஒரு மன
நோயாளி

குமார்ஜி எழுதியது

அஸ்தமன வாசலில்

எதையும் இசைக்காத போதும்
உன்னிலிருந்து பீரிடுகிறது
உன்மத்தமான இசையின்
உயிர் ஒலி.
எல்லையில்லா வெளிகளில்
எரிந்து கொண்டிருக்கிறது
வெளிப்படுத்திய விசேடங்கள்.
சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்
தன் கை தேடி
சீழ்பிடித்த உடலுடன்
ஒரு சமூக அவலர்.
சட்டங்களெல்லாம் அறையப்பட்டுவிட்டன
மரச்சட்டங்களில்.
நலத்திட்டங்களுக்காக
நகராத வரிசைகளில்
நாட்கணக்கில்...
ஆனாலும்
மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு.

குமார்ஜி எழுதியது

என் குடிப் பிரச்சனை

குடி சிலருக்குப் பிரச்சனையாயிருக்கலாம். ஆனால் எனக்குக் குடிக்கும் இடம் பிரச்சனையாயிருக்கிறது.

யாராவது பேசினால் பதிலுக்குப் பேசுவது என்னுடைய வழக்கம். இது எல்லாருக்கும் பொதுவானதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவே சில சமயங்களில் என்னைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

சுங்க இலாகா அலுவலகம் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு (அரசு சாராய வியாபரத்தை கையிலெடுக்குமுன் அதன் பெயர் சதீஷ் வைன்ஸ்) தினமும் செல்வது என்னுடைய வழக்கம். இது பல வருடப் பழக்கம். அங்கு கொஞ்சம் சுமாராயிருக்கும் சூழலும் என்னுடைய அலுவலகம் அருகிலிருப்பதாலும் நானே ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.

ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை மாற்றுவது கடினமாயிருக்கிறது. பாரிமுனையில் சதீஷ் வைன்ஸ் என்றால் அம்பத்தூரில் லக்ஷ்மி வைன்ஸ். சிகரெட், பத்திரிகைகள் வாங்குவதுகூட ஒரே கடையில்தான். செக்கு மாட்டைப் போல் தடம் தவறாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

தினமும் ஒரே இடத்தில் குடிப்பதால் சிலருடன் முகப் பழக்கம் வந்துவிடும். நட்பாகச் சிரிப்பார்கள். தீப்பெட்டி, சிகரெட் மாற்றிக் கொள்வதும் நடக்கும்.

ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். அதாவது தண்ணீரோ அல்லது சோடாவோ சேர்க்காமல் முழுக்க முழுக்க கோலா. இல்லாவிட்டால் குடி தொண்டையில் இறங்காது, உமட்டிக் கொண்டு வரும். ஸ்மர்னாஃப் வோட்கா என்றாலும் கறுப்பு நாய் ஸ்காட்ச் விஸ்கியே ஆனாலும் செவன் அப் இல்லாமல் இறங்காது எனக்கு. அதனால், முழுக்க பெப்ஸியோ கோக்கோ விட்டுக் கொண்டு ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.

என்னுடைய இந்தப் பழக்கம் சிலருக்கு உறுத்தலாயிருக்கும் போல. அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவர் என்னைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தார். குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.

‘பழக்கமாகிடுச்சுங்க, மாத்த முடியல’
‘சரி, மாத்திக்கப் பாக்கறேங்க’
‘இல்லாட்டி குடிக்க முடியாது’
‘ரம்மை விடவா கோலா கெடுதல்’

என்று பலவாறு பதில் சொல்லிப் பார்த்தும் மனிதர் விடுவதாயில்லை.

நல்ல வேளையாக அவர் என்னைத் தினமும் பார்ப்பதில்லை. இல்லாவிட்டால், கடையையே மாற்றிக் கொண்டு எப்போதோ போயிருப்பேன். அவரிடமே நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லலாம்தான். ஆனால் சாதாரணமாகவே நான் யார் முகத்தையும் சுருங்கச் செய்ய மாட்டேன். என்னளவில் லலிதமான பழக்கங்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய நண்பர்களானாலும் அவர்கள் செய்யும் அசூயையான காரியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட மாட்டேன்.

அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது உடன் பணிபுரியும் கோபால் வருவான். குடிக்கும்போது திராட்சைப் பழங்களை மென்றுவிட்டு அங்கேயே கொட்டைகளைத் துப்புவான். பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டோ அல்லது வராண்டாவிற்கோ வந்துவிடுவேன். வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.

இதுகூடப் பரவாயில்லை, அலுவலக உணவு மேஜையில் முருங்கையைப் போட்டு கடித்து மென்று (அப்போது பசு மாட்டின் அசையும் அடி வாய்தான் ஞாபகம் வரும்) தட்டிற்கு அருகிலேயே துப்புவான் உதயா. நைஸாகத் தலையைக் குனிந்து கொள்வேன்.

(இப்படி என் கதைல நான் நல்லவன் நான் நல்லவன்னு நானே சொல்லிக்கறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யுது, ஆனாலும் எல்லாரும் பண்றதுதானே இது)

பழகிய நண்பர்களிடமே இப்படித்தான் என்பதால் இவரிடம் எப்படி நேரடியாகச் சொல்ல. சில சமயம் அவர் பேசுவதைக் கேட்காதது மாதிரி தலைத் திருப்பி வெளியில் பராக்குப் பார்ப்பேன். தொடர்ந்து அறுத்தால், ம்ம் என்று தலையைக் குனிந்து கொள்வேன்.

இவரிடமிருந்து தப்பிக்க அவர் தலையைப் பார்த்தாலே தினசரியை (Economic Times) பிரித்துப் படிப்பது மாதிரி பாவ்லா செய்ய ஆரம்பித்தேன். மனிதர் விடுவாரா... சப்ளையரிடம் பேச பத்திரிகையைத் தாழ்த்தினால், அந்த இடைவெளியில் பிடித்துக் கொண்டு விடுவார்... ‘பாஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் பெப்ஸி வேணாமே...’

’நீங்க குடிங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா தயவுசெஞ்சு தண்ணியோ இல்ல சோடோவோ மிக்ஸ் பண்ணிக்குங்க.. பாருங்க.. நான் அப்படித்தான் குடிக்கறேன்’

‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ என்று கத்த நினைப்பேன். போலியான மரியாதை காட்டித் தொலைய வேண்டியிருக்கிறது சாராயக் கடைகளிலும். மேலும், மேல வேறு சொல்லியிருக்கிறேன் என்னுடைய நற்குணத்தை.

வெளியில் அரை லிட்டர் பெப்ஸி விலை 20 ரூபாய். கோக் விலை 22 ரூபாய். இது வெளியில்தான். டாஸ்மாக் பாரில் பெப்ஸி விலை 28 ரூபாய். ஒரு க்வார்ட்டருக்கு அரை லிட்டர் பெப்ஸி அல்லது கோக் வேண்டும் எனக்கு. நிறைய டூப்ளிகேட் வேறு பாரில் ஓடும். அந்த எரிச்சலில் நான் இருக்க, இவர் வேறு ரம்பம்!

கொஞ்சம் கொஞ்சமாக அன்பரின் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் என் நினைவெல்லாம் ஒரே பெப்ஸி மயம். ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே... ஆனால் எனக்கோ கனவில் கூட அரை லிட்டர் பெப்ஸி பாட்டில்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்குமளவிற்கு சங்கடப் பட்டேன்.

அவரைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு முறைதான் என்பதாலும், அலுவலகத்தின் அருகில் வேறு எந்த நல்ல டாஸ்மாக் பார் இல்லை என்பதாலும், பெர்மிட் ரூமில் போய்க் குடித்தால் பாக்கெட் தாங்காது என்பதாலும், எழவு அதே பாருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நேற்று மறுபடியும் அந்த ஆசாமியைச் சந்தித்தேன். மறுபடியும் அதே புராணம்... இப்போது கூடுதலாக கோக், பெப்ஸி பற்றி மின்னஞ்சலில் எப்போதோ சுற்றுக்கு வந்த விஷயங்களைச் சொல்லிப் பயமுறுத்தினார். கழிவறைகளைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாமாம் கோக் மற்றும் பெப்ஸியை. அந்த அளவிற்கு அமிலமானது உங்கள் வயிற்றை என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பினார். எனக்கு வயிற்றை வலிப்பது மாதிரி தோன்றியது. மறுபடி மறுபடி தண்ணீரோ அல்லது சோடாவோ கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

எழவு, பெயர்கூடத் தெரியாத ஒருவர் நம்மை இப்படி இம்சிப்பதா?

நிச்சயம் நான் ஒரு கொலைகாரனாகத்தான் ஆகப் போகிறேன்.

உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன்.

காமக் கதைகள் 45 (30)


ஹலோ மை டியர் ராங் நம்பர்

அலைபேசி மணி அடித்தது. தெரியாத எண். தெரிந்தது தெரியாதது என்றெல்லாம் பார்ப்பதில்லை அதீதன். எடுத்தான். ‘ஹலோ'. உடனே
எதிர்புறமிருந்து : ‘ஹலோ, செல்லதுரையா...' ஆஹா, பெண்குரல்!

அதீதன் : இல்லீங்க, நான் அதீதன் பேசறேன்
பெண் : அதென்னங்க பேர், அதீதன்னு
அதீதன் : இல்லீங்க, அதுதான் என் பேரு
பெண் : அதுதாங்க, அது என்ன அதீதன்னு

இப்போது அதீதனுக்குச் சந்தேகம் வந்தது. யாராவது தெரிந்தவர்கள் விளையாடுகிறார்களோ என்று...

அதீதன் : நானே வச்சுகிட்ட பேர்தாங்க இது
பெண் : அதுதான், ஏன் வச்சுக்கிட்டீங்க?

(கீகீகீ என நடு நடுவில் அவள் சிரித்துக் கொண்டிருப்பதும் இவன் சத்தமெழுப்பாமல் இளித்துக் கொண்டிருப்பதும் கதைக்குத் தேவையில்லாததால் தவிர்க்கப்படுகிறது)

அதீதன் : அதுவாங்க.. எனக்கு எல்லாமே அதிகமா இருக்கும்ங்க
(சொல்லும்போது அவன் தன் பேண்ட் ஸிப்போடு சேர்த்து தன் குறியைத் தடவிக் கொள்கிறான்)
பெண் : எதுலங்க
அதீதன் : எல்லாத்துலயுங்க
பெண் : அத நாங்க இல்ல சொல்லணும்
அதீதன் : சொல்ல வாய் எழும்பாதுங்க உங்களுக்கு
பெண் : ஹலோ மிஸ்டர்...

லைன் துண்டிக்கப் படுகிறது. மறுபடி இவன் அழைக்கிறான் :

பெண் : சொல்லுங்க, இப்பத்தானே பேசுனோம்
அதீதன் : ஏன், வேலையா இருக்கீங்களா
பெண் : வேலையெல்லாம் ராத்திரிலதாங்க
அதீதன் : ஏன், பகல்ல செஞ்சா சரியா வராதா
(மறுபடியும் கீகீகீ, மறுபடியும் இளிப்பு இரண்டும் தவிர்க்கப்படுகிறது)

சில நாட்கள் கழித்து இவன் கூப்பிட்டான் :

அதீதன் : இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்க
பெண் : ஏன், கேக்கறீங்க
அதீதன் : பேசறப்ப அப்படியே நீ எப்படியிருப்பன்னு கற்பனை செஞ்சுக்கத்தான்
பெண் : ப்ளூ சுடி... நீங்க
அதீதன் : வெறும் லுங்கிதான்
பெண் : வெறும் லுங்கின்னா
அதீதன் : உலகத்துலயே ஃபிரீயான விஷயம் ஜட்டி போடாம லுங்கி போடறதுதான்
பெண் : வெறும் லுங்கியோட இருந்தா தொந்தரவா இருக்காது
அதீதன் : நேர்லதான் சொல்லணும்
(கீகீகீ, இளிப்பு தவிர்க்கப்படுகிறது)

மறுபடியும் சில நாட்கள். தினமும் அவள் பேசா அழைப்புகளாக விட, இவன் தான் கூப்பிடுவது.

அதீதன் :
பெண் :.

அடுத்து இன்னொருமுறை இவன் கூப்பிட :

பெண் :
அதீதன் :

பெண் : ஆஃபீஸ்ல வேலையில்லயாக்கும்
அதீதன் : வேலைக்காகத்தானே உன்கிட்ட பேசிகிட்டிருக்கேன்

கதை இப்படியே போய்க் கொண்டிருக்க, இதற்குமேல் விரிவாக எழுத விருப்பமில்லாததால், நடுவில் நான் நுழைய வேண்டியதாயிருக்கிறது. பொருத்தருள்க.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆணாயிருக்கும் பட்சத்தில், கதையில் பெண் என்று வரும் இடத்தில் நீங்கள் மோகிக்கும் பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்ளவும்; அதீதன் என்ற இடத்தில் உங்கள் பெயரையும்.

பெண் மற்றும் ஆண் பேசும் இடங்களில் இரண்டை வெற்றிடமாக விட்டிருக்கிறேன்; அதை நீங்கள் நிரப்ப வேண்டாம் - அதீதன் கதையை நான் எழுதுவது போல உங்கள் கதையை வேறொரு நண்பர் எழுதுவார்.

நீங்கள் பெண்ணாயிருக்கும் பட்சத்தில் .....

இருள் சூழ்ந்த புதர்

தலையில் பாதி வழுக்கையும்
தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த
அவன் பெயர் பார்த்திபனாம்
அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்
எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்
பன்னிரெண்டாவது வரை
ஒன்றாகப் படித்தோமாம்
என் ஞாபக அடுக்குகளில்
மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்
பள்ளி - மதிய உணவு
ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி
பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை
இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்
இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்
வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது
பேருந்தில் செல்லும் ராதிகாவை
சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது
பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்
மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி
அவசரமாய் ரயிலேறிப் போனான்
இரவில் மனைவியிடம் தன் பால்யகால
நண்பனைச் சந்தித்ததை
அவன் விவரித்து மகிழக்கூடும்
என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை
என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_13.html)

என் விநாயக முருகன் கவிதைகள்

என் விநாயக முருகன் மே மாததிலிருந்து வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதானமாக கவிதைகள். நவீன விருட்சம், கீற்று, திண்ணை, உயிரோசை தளங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இவரைப் படித்திருக்கலாம்.

தொடர்ந்து ஒரு தளத்திற்கு மேலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நுட்பமான பார்வையுடன் சிறுசிறு விஷயங்களையும் கவனித்து கவிதையாக்குகிறார் விநாயக முருகன். ஹோட்டல் வாஷ் பேசினில் கைகழுவும் சம்பவத்தைக் கவிதையாக்குகிறார் (பார்க்க : http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html). இந்த இடத்தில் இது குறித்த முகுந்த் நாகராஜனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது!. நேற்று பதிவிட்ட இவரது ஒரு மழை இரவில் நடந்தவை கவிதையும் நன்றாக இருக்கிறது. நமது வசதியை மனதில் வைத்துத்தானே நாம் மழை வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ சொல்கிறோம்!.

பல கவிதைகள் எளிமையான நேரடிக் கவிதைகள். மீன் தொட்டியைப் பார்க்கிறார். அதன் விவரங்களையும் சௌகர்யங்களையும் விற்பனையாளன் விவரிக்கிறான். எல்லாம் சரிதான். ஆனால் மீன்களுக்கும் அந்த மீன் தொட்டி பிடிக்குமென்பது இவரைக் குழப்புகிறது (http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html).

இவரது சற்று முன் வந்த மின்னஞ்சல் கவிதையைக் கீழே தருகிறேன் :
 
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.

(http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html)

இவருடைய பல கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.

என் விநாயக முருகனின் வலைப்பதிவு முகவரி : www.nvmonline.blogspot.com

 
 

ஆழி சூழ் உலகு

ஆழி என்பது கடலில் அலைகள் பொங்குமிடம் என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 குறிப்பிடத்தக்க நாவல்கள் இருக்குமா?

இந்தத் தலையணை சைஸ் புத்தகங்கள் என்றால் (ஜெமோ புண்ணியத்தில்) எனக்கு அலர்ஜி. பின் தொடரும் நிழலின் குரலைப் படித்தவன் இன்னும் விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.

கென், தமிழில் வந்த முக்கியமான நாவல்களுள் ஒன்று, படித்துப் பாருங்கள் என்று போன வருடம் சொன்னார். இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.

எட்டு மாதங்கள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். படித்து முடிக்க கிட்டத்தட்ட 10 நாட்கள் அகிவிட்டன. காரணம் என்னுடைய சோம்பேறித்தனமும் வேலைகளும்தானே தவிர, நாவல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவுமே சென்றது.

மீனவர்களைக் களமாகக் கொண்டது இந்நாவல். பெரிய நாவலுக்கே உரிய குணமான பலதரப்பட்ட மனிதர்கள், சிக்கல்கள், வாழ்க்கைப் பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறது. இந்த நாவலில் முக்கியமான அம்சமாகத் தெரிவது மரணம் - கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு ஒரு மரணம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித் தனியாகவும் செத்துக் கொண்டே இருக்கின்றனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை முன்னிறுத்தும் நாவலோ என்றுகூடத் தோன்றுகிறது. மரணத்திலிருந்து தப்பிக்க தியாகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர் (’நண்பர்களுக்காக உயிர் விடுவது ஆகப் பெரிய தியாகம்’). பங்குத் தந்தை காகு சாமியாரைப் பற்றி விரிவாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜோ டி குரூஸ்.

ஆழியில் சிக்கி மரணத்திற்கெதிரான மூவரின் போராட்டத்துடன் நாவல் துவங்கி, அதில் ஒருவன் ஜெயிப்பதுடன் முடிகிறது. நடுவில் முன்பின்னாக காலத்தில் நகர்ந்து விரிவாகவும் ஆற அமரவும் ஆமந்துறை மீனவர்களின் கதையைச் சொல்கிறது. கூடவே நாடார்களின் கதைகளையும், பங்குத் தந்தைகளின் கதைகளையும்.

இதைத் தவிர ஜோ டி குரூஸ் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் இந்த நாவலில் அமெச்சூர்த்தனம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. நல்ல எடிட்டர் கிடைத்திருக்கலாம்! அடிபட்டிருக்கும் ஜஸ்டினை வசந்தா தைலம் தேய்த்து மயக்குவது, குளிக்கும்போது உடல் அழகைக் காட்டி சுந்தரி டீச்சர் சூசையை மயக்குவது என மலையாள பிட் பட ரேஞ்சிற்கு மேல் யோசிக்க மறுக்கிறார் ஆசிரியர்!

மீன்களைப் பற்றி, மீன் பிடிப் படகுகள் பற்றி, வலைகளைப் பற்றி, கடலைப் பற்றி, கடலில் புயலைப் பற்றி எனப் பல நுட்பமான தகவல்கள் நாவலின் கதைப் போக்கில் வருகின்றன. அவை வெற்றுத் தகவல்களாகத் துருத்திக் கொண்டிருக்காமல் கதையின் போக்கோடு இணைந்திருக்கின்றன.

1933ல் துவங்கி 1985 வரை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விரிவாகப் பேசியிருக்கிறது நாவல். முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உட்புக கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் அது ஆரம்பத்தடைதான், சில பக்கங்களிலேயே பழகிவிடும்.

ஆகச் சிறந்த நாவலென்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழில் வந்த முக்கியமான நாவல்தான் என்று தோன்றுகிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.

கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உன்னதம் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். சில வருடங்களுக்கு முன்பு காத்திரமான சிறுபத்திரிகையாக வெளி வந்த இதழ்தான் உன்னதம். இப்போது இடை நிலை இதழ்களின் கை ஓங்கிவிட்ட காலத்தில் சிறுபத்திரிகைகள் வருவது இன்னும் சிரமமாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்திலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். புதுவித எழுத்து முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். சிறுகதைகள் குறித்து கறாரான பார்வைகள் உடையவர். ஆகஸ்ட் மாத உன்னதம் இதழில் அவர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 1

... தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுகிறார்கள்.

அதாவது, புதுமைப் பித்தன் காலத்தை சிறுகதைத் துறையின் பொற்காலம் என்று கொள்ளலாம். அந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம், அதுவரை உரைநடையிலும், வடிவ நேர்த்தியிலும் மரபார்ந்த பாணியில் இயங்கி வந்த கதையாடலை முற்றிலும் புதிய வடிவிலான நவீனதளத்திற்குத் தள்ளினார் பித்தன். அவர் ஒரு புதிய பாணியை (trend setting) உருவாக்கியவர். அவரது சுவடொற்றி வந்த மற்ற ஆளுமைகளும் தங்களது எழுத்து வன்மைகேற்ப இயங்கினர். இதை நவீன காலகட்டை 1 என்று குறிக்கலாம்.

இதற்குப் பின்னால் வந்த பி எஸ் ராமையா இந்த இலக்கிய மனப்பான்மையை (mood) கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் (அவரது இலக்கிய லாபி கொஞ்ச காலம் மட்டுமே கை கொடுத்தது). அதன் பின்னால் வந்த ஒரு வரிசை (வ.ரா., சிட்டி, மீ.ப.சோமு, கி.ரா. சங்கு சுப்ரமணியன், றாலி, கரிச்சான் குஞ்சு...) கானல் நீராக மங்கிப் போய்விடுகிறது.

சிறுகதைகளின் நவீன காலகட்டம் 2

அடுத்து வந்த வரிசை பித்தன் காலத்து நவீனத்துவப் போக்கை அப்படியே பின்பற்றாது வாழ்வியலின் அகம் சார்ந்த தரிசனத்தோடு முற்றிலும் நவீனத்துவமாகிறது. மௌனி சார்ந்து பிரமிளிடமிருந்து கவித்துவமாகத் துவங்கும் இவ்வரிசை கசடதபற நா கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம ராஜாராம் போன்றவர்களின் தீவிரத்தில் ஆரம்பித்து சா கந்தசாமி, ந முத்துசாமி, அம்பை.. என ஒரு புதிய பாணி உருவாகிறது. இந்த வரிசை தமிழ்ச்சூழலில் நிராகரிக்க முடியாத கதைகாரர்களாகப் பதிவாகியிருக்கிறார்கள்.

இங்கும் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பி எஸ் ராமையாக்கள் இருந்தார்கள். இதை நவீன காலகட்டம் 2 என்று குறிக்கலாம்.

சிறுகதைகளின் யதார்த்தவாதக் காலகட்டம்

... யதார்த்தவாதம் என்னும் அழகியலை தமிழின் மண்ணோடு இணைத்து அதன் செழுமை மிக்க கதையாடலை உருவாக்கத் தொடங்கியவர்களில், கி. ரா சார்ந்து பா செ., பூமணி, வண்ணநிலவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களுக்கு நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

இதற்கடுத்த வரிசை (பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி வகையறாக்கள்) இந்தப் பிரபலமான யதார்த்தப் பாணியை அப்படியே பின்பற்றி தாங்களும் நீர்த்துப் போய் சிறுகதைத் துறையையும் நீர்த்துப் போக வைத்தது...

சிறுகதைகளின் பின்நவீனத்துவ காலகட்டம்

ஆக, புதிதாக ஒரு பாணியை உருவாக்காமல் லாபியை வைத்தே குதிரை ஏறிக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ, அடுத்த வந்த வரிசை (கௌதம சித்தார்த்தன், கோணங்கி, எம் டி முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், எஸ் ராமகிருஷ்ணன்...) அப்பொழுது உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பின்நவீனத்துவம் என்னும் பாணியை உருவாக்கியது...

... இந்தக் கட்டத்தில் உருவான பி எஸ் ராமையாக்களாக பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், கார்த்திகா ராஜ்குமார் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களிடமிருந்து மேலெழுந்து வந்தவர்தான் ஜெயமோகன்.

ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு இந்தக் கதையாடலின் தீவிரம் சரிய ஆரம்பித்திருக்கிறது. புதுமைப் பித்தன் காலத்துக் கதையாடல்களின் தீவிரத்தன்மையை கல்கி மடை மாற்றி விட்டாற் போன்றதொரு சூழல் உருவானது. பத்திரிகைகளில் காலச்சுவடு கண்ணனின் பிரவேசம், சிறுபத்திரிகைகளின் தீவிரத்தன்மை மங்கி இடைநிலைப் பத்திரிகைகளின் தோற்றம், ஜெயமோகனின் கத்தடாய்கள் (ஜெயமோகனின் கதைகளைப் பற்றிய பிரமிளின் விமர்சனச் சொற்றொடர்) பற்றிப் பாராட்டும் வாசகர் கடிதங்கள்.

இந்தச் சரிவு இத்தோடு நிற்காமல், ஜெயமோகனின் கத்தடாய்களில் ராமகிருஷ்ணனும் சேர்ந்து கொள்ள, ரமேஷ் பிரேம் மெதுவாக அவர்களை நோக்கிப் பின் நகர...

எனச் செல்கிறது கட்டுரை. சிறுகதைகளின் தலித் இலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என அலசுகிறார். இறுதில் தன்னுடைய பார்வையாக தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அரசியல் மொழியாகத்தானிருக்கும் என்கிறார்.

உன்னதம் இதழைப் படிக்க விரும்புபவர்களுக்காக :

உன்னதம் - தனி இதழ் ரூ 20, ஆண்டுச் சந்தா ரூ 200. தொடர்புக்கு :
உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638 455, ஈரோடு மாவட்டம். அலைபேசி : 99407 86278

தெரியாதது

யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
இருக்குமென்று
இறந்து போன மாமாவின்
இரண்டாவது அத்தை
கட்டித் தொங்கவிடப்பட்டது
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
பெரிய தம்பியின் சின்ன வீட்டு
விஷயம் பெற்றோருக்கே தெரியாது
வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது
கங்கை கொண்டான் பேருந்தின்
கடைசி இருக்கையில்
வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை
எச்சரித்தார் எவருமில்லை
நான் உட்காரும்வரை
எவரும் குறிப்பிடவில்லை
இசக்கியம்மன் சாமியாடி
வேண்டியவருக்கு மட்டும்தான்
குறிசொல்வாள் என்பதை
சபை நடுவே சப்தமில்லாக்
குசு போடும் நாசூக்கு
நவின்றார் எவர்
எனினும்
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று

குமார்ஜி எழுதியது

குடிகாரர்கள் நிரம்பிய ஊர்

மாலைநேரத் தார்ச்சாலையில்
கட்டிடங்களின் நிழலில்
போதையில் கிடக்கிறது வண்ணத்துப் பூச்சி
பறக்க எத்தனிக்கிறதா
புரண்டு படுக்கிறதா
சரியாகத் தெரியவில்லை
சிக்னலை நோக்கி விரையும் வாகனங்களின்
ராட்சசச் சக்கரங்களிடமிருந்து
எப்படித் தப்பிக்குமோ
மனசு கிடந்து அடித்துக் கொள்ள
அதன் மஞ்சள் நிறத்தைக் கையிலேந்தி
பொத்திப் பாதுகாத்துப்
பறக்க விடுகிறான்
தடுமாறியபடி
முகம் மழிக்காத குடிகாரனொருவன்
தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை
ஊருக்குக் காட்டியபடி
பறந்து கொண்டிருக்கிறது
வண்ணத்துப் பூச்சி
போதையில்

(ரமேஷ் வைத்யாவிற்கு)

வழமையாக

முன் அறிவிக்கப்படாத
கணமொன்றில் நிகழ்ந்தது அது

அழகற்றது
உணர்ச்சிக் குவியல்
ஏற்கனவே சொல்லப்பட்டதன்
சரியாய்த் தெரியாத நகல்
உயிரற்றது பாசாங்கானது
தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி
ஆபாசச் சிரிப்பு
பொருளற்ற வார்த்தை ஜாலம்

அற்புதமானது அழகானது உண்மையானது

முன் அறிவிக்கப்படாத கணங்களில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது

(மீள் பதிவு. பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/08/blog-post.html)

பைத்தியக்காரன் பதிவிற்கு ஒரு விளம்பரம்

பைத்தியக்காரன் ஒரு இடுகை எழுதியிருக்கிறார் உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு சார்ப்பாக நடந்த சிறுகதைப் போட்டியைப் பற்றி. என்ன காரணத்தினாலோ அது தமிழ்மணத்தில் தெரியவில்லை. அதனால் இந்த விளம்பரப் பதிவு.

அவரோட குறிப்பிட்ட இடுகையைப் படிக்க :

http://naayakan.blogspot.com/2009/08/blog-post.html

மயிரின் மாண்பு

மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்
என்னைத் திட்டும் சாக்கில்
ஏன் மயிரை இழிவு படுத்தினீர்
பயிர் வளர்ப்பதைவிடவும்
அதிக அக்கறையுடன்தானே
மயிர் வளர்க்கிறீர்
ஏழுவித எண்ணை
எட்டுவித ஜெல்
பதிமூன்று வித ஷாம்பு
இருபது வகை சீப்புகள்
என மயிர் வளர்த்துவிட்டு
ஏன் மண்டை காய்கிறீர்
மொட்டை தலையிலும்
முடி பயிரிடும்
சிகிச்சை முறை தேடித்தானே
சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்
என் கவிதையைத் திட்டுங்கள்
காரி உமிழுங்கள்
இயன்றால்
எதிர்கவிதை எழுதுங்கள்
இல்லையேல்
வலையை மூடிவிட்டு
கொசுவலை போர்த்திப் படுங்கள்
ஏழு மலையான் வருமானத்தில்
ஏழு சதவீதம்
மயிரென்று அறிவீரோ
மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்

‘தலைஇப்பு நீண்ட’ என்ற கவிதையை அனானி நண்பரொருவர் ’மயிரு’ என்று திட்டியதற்கு குமார்ஜியின் எதிர்வினை :)

ஆடிச்சாமிகள் அல்லது கொடைகாலம்

வாடிக்கிடந்த சாமிகளுக்கு
ஆடிக்காலம் கொண்டாட்டம்
சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் பூஜைக்குத் தயாராவர்
கூரையில்லாக் கூத்தனுக்கும்
குறைவில்லாப் படையலுண்டு
கொட்டு மேளம் குறவை
நையாண்டி கணியன் வில்லுப்பாட்டு
கும்பம் குமரி குட்டைப் பாவாடை
செவியடைக்கும் டென்ஷனில்
செல்லப்ப வாத்தியார் இடுப்புக் கச்சுடன்
வாங்கிய காசுக்கு
வராத சாமிக்காக
வயிறு எக்கி வாசிப்பான்
வட்டக் கோட்டை நாதஸ்வரம்
சுடலையை கடைசிவரை
தாமிரபரணி தாண்டாமல்
பார்த்துக் கொள்வாள்
சுசீந்திரம் வில்லுக்காரி
காது பொத்திப் பாடும்
கணியான் பாட்டு காற்றில்
வார்த்தைகளற்று கரையும்
கடன்காரன் எதிர் வரா
தைரியத்தில்
மயான வேட்டைக்குச் செல்லும்
மாசானத்திற்கு
மத்திய அமைச்சரின் மிடுக்கு
அறுப்பவன் கத்தியையே
பார்த்துக் கொண்டு ஓசைக்கு
அஞ்சிக்கிடக்கும்
உருண்டு திரண்ட கிடாக்கள்
இறுதியில் கிடைக்கும் கிடாக்கறி
ஊர்ப் பெரிய கிடாக்களுக்கு மட்டும்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எப்போ அடுத்த ஆடி
என்றிருப்பான்
எல்லைச் சாமி

குமார்ஜி எழுதியது

Signs and Symbols - நபக்கவ் (3)

III

புழங்கும் அறையிலிருந்து அவள் கணவர் முனகுவதைக் கேட்டபோது நடுநிசிக்கு மேலாகியிருந்தது. அவர் தடுமாறியிடபடி உள்ளே நுழைந்தார். தன்னுடைய இரவு உடைக்குமேலே பழைய அஷ்ட்ரகன் காலரோடுகூடிய ஓவர்கோட் அணிந்திருந்தார் - இதைத்தான் அவர் தன்னுடைய அழகான நீலநிற குளியலறை ஆடையைவிட விரும்பி அணிவார்.

”என்னால் தூங்கமுடியவில்லை” என்று அவர் கதறினார்.

”ஏன், எதனால் தூங்க முடியவில்லை... நீங்கள் களைத்துப் போயிருக்கிறீர்களே...”

“நான் செத்துக் கொண்டிருப்பதால், என்னால் தூங்க முடியவில்லை...” என்று சொன்னவாறு இருக்கையில் படுத்தார்.

“வயிறு பிரச்சனை செய்கிறதா? டாக்டர் ஸோலாவை அழைக்கட்டுமா..?”

”டாக்டர்கள் வேண்டாம்...” என்று முனகியவர், “நாசாமாய்ப் போன டாக்டர்கள். நாம் உடனே அங்கிருந்து அவனைக் கொண்டுவந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நாம்தாம் பொறுப்பாளிகள். பொறுப்பாளிகள்!” திரும்பத் திரும்பச் சொல்லியபடி, தரையில் சுருண்டு அமர்ந்து கொண்டார். முஷ்டியால் தன் நெற்றியில் அடித்துக் கொண்டார்.

“சரி, நாளைக் காலை அவனைக் கொண்டு வந்துவிடுவோம்...” என்றாள் மெதுவாக.

”எனக்குக் கொஞ்சம் டீ கொடேன்..:” என்றபடி பாத்ரூமிற்குச் சென்றார்.

இருக்கையிலிருந்து கீழே விழுந்திருந்த சில சீட்டுக்கட்டுகளையும், ஒன்றிரண்டு படங்களையும் அவள் கீழே கஷ்டப்பட்டு குனிந்து எடுதாள் - நேவ் ஆஃப் ஹார்ட்ஸ், ஸ்பேட் ஒன்பது, ஸ்பேட் எஸ் மற்றும் எல்ஸாவும் அவளது அருவருப்பான சொகுசுக்காரனும். அவர் உற்சாகமாகத் திரும்பி, உரக்கச் சொன்னார் :

”நான் எல்லாவற்றையும் தீர்மானித்து விட்டேன். படுக்கையறையை அவனுக்குக் கொடுத்துவிடுவோம். நாம் இருவரும் மாறி மாறி இரவை அவனருகிலும் இந்த இருக்கையிலுமாகக் கழிப்போம். வாரத்தில் இரண்டு தடவை மருத்துவரை வந்து அவனைப் பார்க்கச் செய்யலாம். இளவரசன் என்ன சொல்வான் என்பது பிரச்சனையில்லை - அப்படி அவன் எதுவும் சொல்ல வாய்ப்பில்லை, இந்த ஏற்பாடு சிக்கனமாகவும் இருக்கிமில்லையா...”

தொலைபேசி ஒலித்தது - அவர்களுக்கு அது வேளையற்ற வேளை. அவரது இடது கால் செருப்பு கழன்றுபோயிருந்தது. குதிகால்கள் மற்றும் விரல்களால் அதைத் துழாவியவாறு நடுஅறையில் அவர் நின்று கொண்டு, குழந்தைத்தனமாக, பொக்கை வாயைக் காட்டியபடி மனைவியைப் பார்த்தார். அவரைவிட ஆங்கிலம் அதிகம் தெரியுமென்பதால், அவள்தான் தொலைபேசி அழைப்புகளை எடுப்பது.

“சார்லியிடம் நான் பேச முடியுமா” ஒரு பெண் சோம்பலாக, மெல்லிய குரலில் கேட்டாள்.

”என்ன நம்பர் உங்களுக்கு வேண்டும்.. மன்னிக்கவும், இது ராங் நம்பர்”

ரிஸீவரை மெதுவாக வைத்த அவள் கரம் தனது முதுமையான இதயத்தைத் தொட்டது.

அவர் சட்டென்று புன்னகைத்துவிட்டு, தனது கிளர்ச்சியான தனிமொழியைத் தொடர்ந்தார். விடிந்ததும் அவனைக் கூட்டி வருவார்கள். கத்திகள் பூட்டிய இழுப்பறைக்குள் வைக்கப்பட வேண்டும். அவன் தன் மோசமான நிலையிலும்கூட யாருக்கும் பயத்தைக் கொடுத்ததில்லை.

தொலைபேசி மணி இரண்டாம் முறையாக அடித்தது. அதே தொனியற்ற ஆர்வமான குரல் சார்லியைக் கேட்டது.

”நீங்கள் தவறான எண்ணை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்கிறேன் : பூஜ்ஜியத்திற்குப் பதிலாக O என்ற எழுத்தை அழுத்துகிறீர்கள்...”

அவர்கள் முன் தீர்மானிக்கப்படாத நள்ளிரவு டீ பார்டியில் அமர்ந்தனர். பிறந்தநாள் பரிசு மேஜை மேல் இருந்தது. அவர் சத்தமாக உறிஞ்சினார்; முகம் சிவந்துவிட்டது; சர்க்கரை நன்றாகக் கரைய அவ்வப்போது கோப்பையை மேலுயர்த்தி சுழற்றினார். அவரது வழுக்கைத் தலையின் பக்கவாட்டிலிருந்த அந்த மச்சமிருக்கும் இடத்தின் எலும்பு எடுப்பாகத் தெரிந்தது. அன்று காலையில்தான் மழித்திருந்தார் என்றாலும், வெள்ளி ரேகைகள் அவரது முகவாயில் தெரிந்தன. அவள் இன்னொரு கோப்பை தேனீரை ஊற்றியபோது, அவர் தனது கண்ணாடிகளை அணிந்து கொண்டு, மஞ்சள், பச்சை, சிகப்பில் பிரகாசமாகத் தெரிந்த சிறு ஜாடிகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்.அவரது தடுமாறும் ஈர உதடுகள் அவற்றின் பிரதானமான லேபிள்களை உச்சரித்துப் பார்த்தன : ஆப்ரிகாட், கிரேப், பீச் பிளம், க்வின்ஸ். அவர் ஆப்பிளைக் கையிலெடுக்க முயன்றபோது, தொலைபேசி மணி மறுபடியும் அடித்தது.

(முற்றும்)

முதல் இரண்டு பாகங்களை இங்கு வாசிக்கலாம் :

http://jyovramsundar.blogspot.com/2009/07/signs-and-symbols.html
http://jyovramsundar.blogspot.com/2009/07/signs-and-symbols-2.html

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கு வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

Signs and Symbols - நபக்கவ் (2)

II

இரைச்சலும் நாற்றமுமாய் இருந்த பாதாள ரயில் நிலையத்தைவிட்டு அவர்கள் வெளியே வந்த போது, பகலின் மிச்ச வெளிச்சம் தெரு விளக்குகளுடன் கலந்துவிட்டிருந்தது. இரவு உணவுக்கு மீன் வாங்க வேண்டியிருந்ததால் அவள் தன் கையிலிருந்த பழப்பாகு கூடையை அவரிடம் கொடுத்து வீட்டிற்குப் போகச் சொன்னாள். மூன்றாவது தளம் வரை நடந்தபின் தான் அவருக்கு, தான் காலையிலேயே அவளிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தது ஞாபகம் வந்தது.

படிகளில் மௌனமாக அமர்ந்தவர், பத்து நிமிடங்கள் கழித்து அவள் வந்தபோதும் மௌனமாகவே எழுந்தார். அவள் தன் முட்டாள்தனத்தை நினைத்து தலையை உதறியபடி அசட்டுச் சிரிப்புடன் வந்தாள். மிகுந்த பிரயாசையுடன் மாடிக்குச் சென்றனர். இரண்டு அறை கொண்ட அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் கண்ணாடி எதிரில் சென்றார். கட்டைவிரல்களால் வாயின் இருபுறமும் இழுத்து மோசமான இளிப்புடன் அசௌகரியமான பல் தகட்டை நீக்கினார். தகட்டோடு சேர்ந்து வந்த எச்சிலைத் துடைத்தார். அவள் உணவு மேசையை தயார் செய்து கொண்டிருக்கையில், தன்னுடைய ருஷ்ய மொழி செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தார். படித்துக் கொண்டே, பல் தேவைப்படாத நொய்மையான உணவைச் சாப்பிட்டார். அவருடைய மனோநிலையை அவள் அறிந்தவள் என்பதால், அவளும் ஒன்றும் பேசவில்லை.

அவர் படுக்கச் சென்ற பின்பும் தன்னுடைய அழுக்கான சீட்டுக் கட்டுகளோடும் பழைய ஆல்பங்களோடும் அதே அறையில் அவள் இருந்தாள். குறுகலான வழிக்கு அப்பால் இருளோடு கலந்து பெய்த மழை சாம்பல் கேன்களில் பட்டு எதிரொலித்தது. மங்கலாகத் தெரிந்த ஜன்னல் ஒன்றின் வழியாக கருமையான பேண்ட் அணிந்த ஒருவன், மேலாடையற்ற தோள்களை உயர்த்தியபடி, சீரற்ற படுக்கையின் மேல் சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. கர்ட்டனை மூடிவிட்டு புகைப்படங்களை ஆராய்ந்தாள். ஒரு குழந்தை என்ற வகையில் மற்ற குழந்தைகளைவிட ஆச்சரியப்படுபவனாக அவன் இருந்தான். ஆல்பத்தின் மடிப்பிலிருந்து அவர்கள் Leipzigல் வைத்திருந்த ஜெர்மன் தாதியும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குண்டு முகமுடையவனும் விழுந்தனர். மின்ஸிக், புரட்சி, லிப்ஸிக், பெர்லின், லிப்ஸிக், அவுட் ஆஃப் ஃபோகஸில் சரிவான வீடு. நான்கு வயதான அவன் பூங்காவில் : இறுக்கமும் கூச்சமுமாய், சுழிந்த முன்நெற்றியுடன், மற்ற அந்நியர்களிடம் நடந்து கொள்வதைப் போல் தன்னிடம் ஆசையாக வரும் அணிலிடமிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டு. Aunt ரோசா தடபுடலான, அகன்ற கண்களை உடையவள். அவளுடைய உலகம் மோசமான செய்திகள், மஞ்சள் கடுதாசிகள், ரயில் விபத்துகள், நோய்க்கூறான வளர்ச்சிகளால் நிறைந்தது - ஜெர்மானியர்கள், அவள் கவலைப்பட்ட மற்றவர்களைப் போல் அவளையும் கொல்லும்வரை திகிலான வாழ்க்கை வாழ்ந்தவள். ஆறு வயது : மனிதர்களைப் போல் கால்களும் கைகளும் கொண்ட அழகான பறவைகளை அவன் வரைந்ததும், வளர்ந்த மனிதர்களைப் போல் தூக்கமின்மை வியாதியால் அவதிப்பட்டதும் அப்போதுதான். அவனது அத்தை மகன் இப்போது பிரபலமான சதுரங்க விளையாட்டுக்காரன். எட்டு வயது : அவன் புரிந்து கொள்ள சிரமமானவனாய் இருந்தான். சுவர்க் காகிதங்களைக் கண்டாலும் பயப்பட்டான். புத்தகத்தில் உள்ள ஒரு படம் - நிலப்பகுதி, பாறை தொங்கும் மலைகள், இலைகளற்ற மொட்டையான மரத்தின் கிளையில் தொங்கும் வண்டிச் சக்கரத்தைக் காட்டும் படம் - அதற்குக்கூட பயப்படுபவனாய் இருந்தான். பத்து வயதில் அவன் : அது ஐரோப்பாவை விட்டு அவர்கள் வெளியேறிய வருடம். அவமானம், பரிதாபம், வெட்கமூட்டும் துன்பங்கள், அழுக்கு, விஷமம், பின் தங்கிய சிறுவர்களுடன் அவன் படித்த சிறப்புப் பள்ளி. அதற்குப் பின்புதான் அந்தக் காலம் வந்தது - நிமோனியாவிலிருந்து மீண்டு வந்த காலத்துடன் இணைந்தது அது. அவனது சின்ன ஃபோபியாக்களை, தங்களுடைய மகனின் மேதைமையினால் விளைந்தது என்று அவர்கள் திடமாக நம்பியது அவனை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியது. சராசரி மனங்களுடன் இணைய முடியாததாகிவிட்டது.

இதையும் இன்னும் பலவற்றையும் அவள் ஏற்றுக் கொண்டாள் - ஒவ்வொரு மகிழ்ச்சியாய் இழந்து வருவதுதான் வாழ்க்கை என ஒப்புக் கொள்ளப்பட்டபின் வேறு வழி? - அதுவும் அவளுடைய விஷயத்தில் மகிழ்ச்சிகள்கூட இல்லை - முன்னேற்றத்திற்கான சாத்தியங்கள் மட்டுமே. அவள் மனம் யோசனைகளில் ஆழ்ந்தது : ஏதேதோ காரணங்களுக்காய் அலையலையாய் அடித்த துன்பங்களை அவளும் அவள் கணவரும் அனுபவித்தது; கண்களுக்குப் புலப்படாத சாத்தான்களால் கற்பனைக்கப்பாற்பட்டு தன் மகன் துன்புறுத்தப்படுவது; கணக்கிட முடியாத அளவிற்கு இந்த உலகம் கொண்டுள்ள அன்பு - ஆனால் அது நசுக்கப்பட்டோ அல்லது வீணடிக்கப்பட்டோ அல்லது பைத்தியமாகவோ மாறியிருப்பது; உதாசீனப்படுத்தப்பட்டு மூலையில் தங்களுக்குள் பாடியபடி இருக்கும் சிறுவர்கள்; விவசாயிகளிடமிருந்து ஒளிந்து கொள்ள முடியாத விதைகள், பூதாகரமான இருட்டு சமீபிக்க, அவனது கூன்விழுந்த நிழல் கசங்கிய மலர்களை விட்டுச் செல்வதைப் கையறு நிலையில் பார்க்க வேண்டிய கட்டாயம்.


(தொடரும்)

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கு வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

Signs and Symbols - நபக்கவ்

1899ல் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர் நபக்கவ். 1919 போல்ஷ்விக் புரட்சிக் காலத்தில் அவரது குடும்பம் ஜெர்மனிக்குத் தப்பித்து சென்றது. டிரினிட்டி கல்லூரியில் பிரஞ்சு, ருஷ்ய இலக்கியம் கற்ற நபக்கவ், பெர்லினிலும் பாரிசிலும் வசித்தார். பாரிசிலிருந்தபோது Sirin என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 1940ல் அமெரிக்காவுக்கு வந்தார். கல்லூரிகளில் இலக்கியம் போதித்தார். 'லோலீதா' (1955) நாவலின் மகத்தான வெற்றிக்குப் பின் முழுநேர எழுத்தாளரானார். ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து 1977ல் அங்கேயே மறைந்தார்.

அவரது முக்கியமான சிறுகதை Signs and Symbols. இதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்தக் கதையை கால சுப்ரமணியம் தன்னுடைய லயம் இதழில் 1995ல் மொழியாக்கம் செய்திருந்தார். பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது. நான் அவருடைய மொழிபெயர்ப்பையே guideஆகக் கொண்டு இம்மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். சந்தேகம் ஏற்படும் இடங்களில் அவருடைய மொழிபெயர்ப்பையே refer செய்தேன். இதுதான் நான் முதல்முறையாகச் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சி. எப்படி இருக்கிறது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

சங்கேதங்களும் குறியீடுகளும் - விளாடிமிர் நபக்கவ்

I

மனநிலை குன்றிய இளைஞனுக்கு பிறந்த நாள் பரிசாக என்ன தருவது என்ற பிரச்சனை இந்த நான்கு வருடங்களில் நான்காவது முறையாக அவர்களுக்கு வந்திருக்கிறது. அவனுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் கிடையாது. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அவனால் மட்டுமே உணரக்கூடிய தீமையாகவோ அல்லது அவனது சூட்சும உலகத்தில் எந்த அர்த்தமுமற்ற சொகுசகளாகவோ தோன்றின. அவனைப் பயமுறுத்தக்கூடிய அல்லது அவனைக் காயப்படுத்தக்கூடிய பொருட்களை நீக்கிவிட்டு (உதாரணத்திற்கு கூர்மையான எல்லாப் பொருட்களும் விலக்கப்பட்டவை), அவன் பெற்றோர்கள் சுவையானதும் எளிமையானதுமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள் : பத்து சிறிய ஜாடிகளில் பத்து பழப்பாகுகள் கொண்ட கூடை.

அவன் பிறக்கும்போது அவர்களுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியிருந்தன. அதற்குப் பிறகும் பல வருடங்கள் கடந்து போனதில் அவர்களுக்கு மிகுந்த வயதாகிவிட்டது. அவளது நரைத்த கூந்தல் கலைந்துகிடக்கிறது. மலிவான கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தாள். அவள் வயதையொத்த மற்ற பெண்களை (உதாரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் - முகம் முழுக்க பிங்க் சாயம் பூசிக் கொண்டும், தொப்பியில் ஓடைப் பூங்கொத்துகளைச் சூடிக் கொண்டிருக்கும் திருமதி ஸோல்) போலில்லாமல் வசந்த காலத்தின் குறைந்த வெளிச்சத்திற்கு தன்னுடைய பூச்சுகளற்ற வெளுத்த முகத்தை அளித்தாள். அவளுடைய கணவர் - பழைய கிராமத்தில் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி - இப்போது பச்சை அமெரிக்கனான 40 வயதுடைய தன்னுடைய சகோதரன் ஐஸக்கைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் அவனை அரிதாகவே பார்க்க முடிந்தது. அவனுக்கு ‘இளவரசன்’ என்ற பட்டப்பெயரை வைத்திருந்தார்கள்.

அந்த வெள்ளிக் கிழமை எல்லாமே தவறாய்ப் போயிற்று. மின்சாரம் தடைப்பட்டு பாதாள ரயில் இரண்டு நிலையங்களுக்கிடையில் நிற்கவேண்டியதாகிவிட்டது. கால் மணிநேரத்திற்கு இதயத் துடிப்புகளையும் தினசரிகளின் சடசடப்பையும் தவிர வேறொன்றும் கேட்கவில்லை. அவர்கள் அடுத்து ஏறிச் செல்ல வேண்டிய பேருந்து வெகுநேரம் காத்திருக்கச் செய்தது. அது வந்த போது தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்கும் உயர் நிலைப் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தை அடைத்திருந்தனர். சானிடோரியத்திற்குச் செல்லும் பழுப்பு நிறப்பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது கடுமையான மழை பெய்தது. அங்கே அவர்கள் மறுபடியும் காத்திருந்தனர். வழக்கமாக இருக்கும் அறையில் அவன் இல்லை (அவனுடைய சோகமான முகம் சவரம் செய்யப்படாமல், பருக்களுடன், ஊதிப்போய், குழப்பங்களுடன் இருக்கும்). அவர்களுக்குத் தெரிந்த ஆனால் பொருட்படுத்தாத தாதி ஒருத்தி ஒருவழியாகக் கடைசியில் வந்தாள். அவன் மறுபடியும் தற்கொலைக்கு முயன்றதை பிரகாசமாக விவரித்தாள். இப்போது அவன் நன்றாக இருந்தாலும் அவனைப் பார்ப்பது இடைஞ்சலாக இருக்கலாம் என்றாள். அந்த அலுவலகம் கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் இருந்தது. அங்கே பொருட்கள் தவறிவிட வாய்ப்பிருப்பதால், தாங்கள் கொண்டுவந்த பரிசை அங்கே அலுவலகத்தில் வைக்காமல் அடுத்த முறை வரும்போது மறுபடி எடுத்து வர முடிவு செய்தனர்.

அவள் தன் கணவர் குடையை விரிக்கக் காத்திருந்து, பிறகு அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். மனது சரியில்லாதபோது ஒருவிதமாக தன் தொண்டையை செருமும் பழக்கமுடைய அவர் இப்போதும் அப்படியே செருமிக் கொண்டிருந்தார். தெருவின் எதிர் சாரியிலுள்ள பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் தன் குடையை மூடினார். சில அடிக்களுக்கு அப்பால், ஆடி அசைந்து கொட்டிக் கொண்டிருந்த மரத்தின் அடியில், சேற்றில், சிறகற்ற சிறிய பறவையொன்று, பாதி உயிர் போய், பரிதாபமாக துடித்துக் கொண்டிருந்தது.

பாதாள ரயில் நிலையத்திற்கான நீண்ட பயணத்தில் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. குடையைப் பிடித்திருந்த - வீங்கிய நரம்புகளும் பழுப்பு நிறப் புள்ளிகளும் உடைய - அவரது வயதான கரத்தைப் பார்க்குப்போதெல்லாம் அவளுக்கு அழுகை முட்டியது. மனதை மாற்ற சுற்று முற்றும் பார்த்தபோது லேசான அதிர்ச்சி அடைந்தாள். கருத்த கூந்தலோடும் அழுக்கான சிகப்பு கால் நகப் பூச்சுகளுடன் ஒருத்தி வயதான பெண்மணியின் மீது சாய்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இவளுக்கு பரிதாபமும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவள் யாரைப் போலிருந்தாள்? அவள் ரெபக்கா போரிஸோவானை நினைவூட்டினாள். அவளுடைய மகள் மின்ஸ்கில் சோலோவிசிக் ஒருவனை பல வருடங்களுக்கு முன் மணந்திருந்தாள்.

சென்ற முறை அவன் தற்கொலைக்கு முயற்சித்த போது - டாக்டரின் வார்த்தைகளில் சொன்னால் - அவனது உத்தி ஆகப் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. அவன் பறக்க முயற்சிக்கிறான் என்று பொறாமை கொண்டு பக்கத்து நோயாளி தடுக்காமலிருந்திருந்தால் அவன் முயற்சியில் ஜெயித்திருக்கக்கூடும். உண்மையில் தன்னுடைய உலகத்திலிருந்து ஒரு ஓட்டையைப் போட்டு அதன்மூலம் தப்பிவிட அவன் நினைத்திருந்தான்.

அவனது மனக் கற்பித முறைமைகள் ஒரு அறிவியல் மாத இதழில் விரிவான கட்டுரைக்கான விஷயமாகியிருந்தது. ஆனால் அதற்கு வெகு காலம் முன்பே அவளும் அவள் கணவரும் அந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்திருந்தனர். ஹெர்மன் பிரிங்க் அதை Referential Mania என்றார். இம்மாதிரி அரிதான கேஸ்களில் நோயாளி தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தும் தன்னுடைய ஆளுமையும் இருப்பையும் மறைமுகமாகக் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறான். தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகக் கருதிக் கொள்வதால் மற்ற நிஜ மனிதர்களை இந்தச் சதியிலிருந்து விலக்கிவிடுவான். அவன் எங்கு சென்றாலும் அதீதமான இயற்கை அவனை நிழல்போல் பின் தொடருகிறது. வெறித்த வானில் மேகங்கள், சிறிய சங்கேதங்களால், அவனைப் பற்றிய மிக விரிவான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனுடைய மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகள், அகர வரிசைக்கிரமமாக, இரவு நேரத்தில் சைகை செய்யும் மரங்களால் விவாதிக்கப்படுகின்றன. குமிழ்களும், கறைகளும், ஒளிப்புள்ளிகளும் அவன் இடைமறித்தாக வேண்டிய பயங்கரச் செய்திகளை, வடிவ மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன. எல்லாமே சங்கேத மொழி. எல்லாவற்றிலும் அவனே மையம். கண்ணாடி தளங்கள், அசைவற்ற குளங்கள் போன்ற ஒற்றர்கள் பற்றற்ற பார்வையாளர்களாக இருக்கின்றன. மற்றவை - கடை ஜன்னலில் இருக்கும் கோட்டுகள் போன்றவை - பாரபட்சமான சாட்சிகள், மனதளவில் இரக்கமற்று கொலைசெய்யத் துடிப்பவை. மறுபடியும் மற்றவை (ஓடும் நீர், புயல் போன்றவை) பைத்தியங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வெறிகொண்டவை. அவனைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டவை, அவனது செயல்களுக்கு புனைவான அதீத அர்த்தம் சொல்பவை. அவன் எப்போதும் கவனமாக இருந்தாக வேண்டும். அவனது வாழ்வில் ஒவ்வொரு கணமும் சங்கேதங்களை விடுவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவன் சுவாசிக்கும் இந்தக் காற்றும் அட்டவணைப்படுத்தப்பட்டு கோப்பிடப்பட்டது. அவனது தூண்டக்கூடிய ஆர்வம் அவனைச் சுற்றியிருப்பவைமீது மட்டுமே இருக்குமானால் - உண்மையில் அப்படியில்லை! - தூரம் அதிகரிக்க அவனைப் பற்றிய மோசமான அவதூறுகளும் எண்ணிகையிலும் சத்தத்திலும் அதிகரிக்கின்றன. அவனது ரத்த அணுக்களின் நிழலுருவங்கள், பல லட்சம் முறை பெரிதாக்கப்பட்டு, பரந்த வெளியெங்கும் இடம்மாறியபடி பறந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தொலைவில், நெடிதுயர்ந்த மலைகள் கிரானைட் கற்களாக இறுகியிருக்க, அவனது இருப்பின் மாற்ற முடியாத உண்மையைப் ஃபிர் மரங்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கே வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html

தலைஇப்பு நீண்ட...

அம்மா அப்பா ஆட்டு உரல்
ஆரம்பக் கல்வி இடைநிலைக் கல்வி
தொலைதூரக் கல்வி
நிற்றல் நகர்தல் நகர்த்துதல்
வாசிப்பு கருத்தரங்கம்
கருத்தில்லா அரங்கம்
இட்லி சாம்பார் நாண்
சரவணபவன் சாலையோரக்கடை
சுந்தர் சுந்தர ராமசாமி
பிரபாகர் கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை
வேலை வேலை இல்லாமை
இல்லாமை
பணம் பதவி தேர்தல்
இடை இடைத் தேர்தல்
கலவி கல்யாணம்
குமுதம் குழந்தை குற்றம்
பீர் பிராந்தி விஸ்கி
காக்டெயில் கூட்டணி
தனிமை தவம் தவிப்பு
தற்பெருமை நொடி நோய்
மாத்திரை லவங்கம் கற்பூரம்
தாமிரபரணி காவேரி காவிரி
தலைவிரிந்து நடந்தாய்
வாழவில்லை சக்தி
வைத்தியம் ஜானகி ராமன்
நகுலன் மௌனி அபி
தர்மு சிவராமு லாசரா
அம்மா அப்பா நான்
நீ பைத்தியம்
தவிர்க்க முடியவில்லை
அச்சமும் கவிதையும்
மிச்சம் ஒன்றுமில்லை
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
எப்படியும் இரு சாமி
சாமிகள் சாத்தான்கள்
ஒன்றுமே இல்லாதவன்
எங்கேயும் இல்லை

நண்பர் குமார்ஜி சமீபத்தில் எழுதியது. இத்தனைகாலம் எழுதாமல் இருந்தது குறித்து :

பொழுது போகாமல்
எழுதத் துவங்கினேன்
இப்
பொழுது போதாமல்
எழுதாமலிருக்கிறேன்
இடைப்பட்ட காலத்தில்
அவிந்து
போகாமலிருக்கிறது
ஆரம்ப காலத்தின்
அடி ஊற்று

இன்னொரு தலைப்பில்லாத கவிதை :

இடக்கையில் தூக்கு
வலக்கையில் வாளி
வரப்புச் சேற்றில்
கால்கள் புதைய
அப்பாவுக்குச் சோறு
வார் அறுந்த
நிக்கரின் சொறுகல்
அவிழ்ந்து கொண்டிருக்கும்
அடிக்கு அடி

போர்ஹேவும் நானும் (தமிழில் : தர்மு சிவராம் பிரமிள்)

1986ம் ஆண்டு போர்ஹேவின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. அதனையடுத்து வெளிவந்த 'லயம்' இதழில் 'போர்ஹேயும் நானும்' என்னும் போர்ஹேவின் சிறுகதையை பிரமிள் தமிழாக்கம் செய்தார். நண்பர் கால சுப்பிரமணியம் அனுமதியுடன், அந்த தமிழாக்கம் இங்கே வெளியிடப்படுகிறது. ஆர்வமுள்ள பதிவர்களுக்காக இந்த தமிழாக்கத்தின் கீழேயே, ஆங்கில ஆக்கமும் வெளியிடப்படுகிறது. ஆனால், இங்குள்ள ஆங்கில ஆக்கத்தை வைத்துதான் பிரமிள் தமிழாக்கம் செய்தார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்த ஆங்கில ஆக்கம் வெளிவந்தது 1999ம் ஆண்டு. இனி பிரமிளின் தமிழாக்கத்தை வாசிப்போம்.

போர்ஹேவும் நானும்

போர்ஹே என்றழைக்கப்படுகிற மற்றவனுக்குத்தான் எல்லாம் நிகழ்கின்றன. போனஸ் ஏரஸ் நகரின் தெருக்களூடே நடக்கும் நான், இப்போதெல்லாம் யந்திரத்தனமாக நின்று ஒரு கட்டிடத்தின் வாசல் வளைவை அல்லது கேட் ஒன்றின் இரும்பு வேலைப்பாட்டைப் பார்க்கிறேன். கடிதங்கள் மூலமோ, புரபஸர்களின் பட்டியல் ஒன்றிலோ, வரலாற்று அகராதியிலோ இருந்துதான் போர்ஹே பற்றி எனக்குத் தெரிகிறது. மண் ஒழுக்கு மூலம் நேரம் காட்டும் கண்ணாடி ஜாடிகள், தேசப்படங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்செழுத்துக்கள், காபியின் ருசி, ஸ்டீவன்ஸனின் உரைநடை ஆகியவை எனக்குப் பிடிக்கும். அவனுக்கும் இவை எல்லாம் பிடிக்குமெனினும் ஒரு நடிகனின் பாவனைகளாக இவற்றை ஆக்கிவிடுகிற பெருமைக் குண்த்துடந்தான் இவற்றை அவன் விரும்புகிறான். எங்களிருவரிடையே உள்ள உறவு விரோத ரீதியானது என்றால் அது மிகைப்பட்ட கூற்று. நான் என்னை வாழ அனுமதிக்கிறேன். இதன் காரணம் போர்ஹே தனது இலக்கியத்தைச் சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். அவனது இலக்கியம் என்னை நியாயப்படுத்துகிறது. அவன் சில அர்த்தமுள்ள பக்கங்களைச் சாதித்திருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்வது கடினமல்ல. ஆனால், அந்தப் பக்கங்கள் என்னை ரட்சிக்கமாட்டா. ஏனெனில் நல்லது எதுவும் எவருக்கும் உரியதல்ல, அவனுக்கும் கூட. அவை மொழிக்கும் பாரம்பரியத்துக்கும் உரியவை. மேலும், என் விதி நான் அழிவடைய வேண்டும் என்பதுதான். அவனிடத்தில் எனது ஒரு கணம் மட்டுமே ஜீவிக்க முடியும். எல்லாவற்றையும் பொய்யாக்கிப் பெரிதுபடுத்துகிற அவனது வக்ரமான நடைமுறை எனக்குத் தெரியுமெனினும் கொஞ்சம் கொஞ்சமாக யாவற்றையும் அவனுக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

தனது ஸ்திதியிலேயே ஒவ்வொரு வஸ்துவும் நீடிக்க நாடுகிறது என்பது தத்துவவாதி ஸ்பைனோஸாவுக்குத் தெரிந்திருந்த ஒன்று. கல் கல்லாகவே இருக்க விரும்புகிறது. புலி புலியாக. (நான் இருப்பது உண்மையானால்) என்னில் அல்ல, போர்ஹேயிலேயே தங்கிவிட வேண்டும். ஆனால், அவனுடைய புத்தகங்களில் என்னை நான் காண்பதை விட அதிகமாக நான் என்னைக் காண்பது மற்றவர்களின் புத்தகங்களிலும் பெரு முயற்சியுடன் மீட்டப்படுகிற ஒரு கிட்டாரின் இசையிலும்தான்.

பல வருஷங்களுக்கு முன்னால் அவனிடமிருந்து விடுபடுவதற்கு எடுத்த முயற்சியில் நான் புறநகர்ப் பிராந்தியப் புராணங்களிலிருந்து விடுபட்டு, காலத்துடனும் காலாதீதத்துடனும் விளையாடக் கிளம்பினேன். ஆனால், இப்போது அந்த விளையாட்டுகள் போர்ஹேக்கு உரியவை ஆகிவிட்டன. நான் புதியவற்றை இனி உருவாக்க வேண்டும். இப்படியே எனது வாழ்வு ஒரே பறந்தோடலாக இருக்கிறது, நான் எல்லாவற்றையும் இழந்தபடியே பறந்தோடுகிறேன், எல்லாவற்றையும் மறப்புக்கு அல்லது அவனுக்கு இழந்தபடி.

எங்களிருவருள் யார் இந்தப் பக்கங்களை எழுதியவன் என்று எனக்குத் தெரியவில்லை.


Borges and I

It's Borges, the other one, that things happen to. I walk through Buenos Aires and I pause - mechanically now, perhaps - to gaze at the arch of an entryway and its inner door; news of Borges reaches me by mail, or I see his name on a list of academics or in some biographical dictionary. My taste runs to hourglasses, maps, eighteenth - century typefaces, etymologies, the taste of coffee, and the prose of Robert Louis stevenson; Borges shares those preferences, but in a vain sort of way that turns them into the accoutrements of an actor. It would be an exaggeration to say that our relationship is hostile - I live, I allow myself to live, so that Borges can spin out his literature, and that literature is my justification. I willingly admit that he has written a number of sound pages, but those pages will not save me, perhaps because the good in them no longer belongs to any individual, not even to that other man, but rather to language itself, or to tradition. Beyond that, I am doomed - utterly an inevitably - to oblivion, and fleeting moments will be all of me that survies in that other man. Little by little, I have been turning everything over to him, though I know the perverse way he has of distorting and magnifying everything. Spinoza believed that all things wish to go on being what they are - stone wishes eternally to be stone, and tiger, to be tiger. I shall endure in Borges, not in myself (if, indeed, I am anybody at all), but I recognize myself less in his books than in many other's, or in the tedious strumming of a guitar. Years ago I tried to free myself from him, and I moved on from the mythologies of the slums and outskirts of the city to games with time and infinity, but those games belong to Borges now, and I shall have to think up other things. So my life is a point - counterpoint, a kind of fugue, and a falling away - and everything winds up being lost to me, and everything falls into oblivion, or into the hands of the other man.

I am not sure which of us it is that's writing this page.

(Jorge Luis BORGES, Collected Fictions (Page No. 324), Translated by ANDREW HURLEY, Penguin Classics Deluxe Edition, 1999 Edition)

அடிக்குறிப்புகள்:

1. பிரமிளின் தமிழாக்கத்தில் வெளிவந்த போர்ஹேவின் மற்றொரு சிறுகதையை வாசிக்க http://naayakan.blogspot.com/2009/07/1_21.html

2. ஒரு அறிமுகத்துக்குப் (டிரெய்லர்) பின் நண்பர் பிரேமின் தமிழாக்கத்தில் வெளிவந்த போர்ஹேவின் முக்கியமான சிறுகதையான 'லோன், உக்பார், ஓர்பிஸ் தெர்த்துய்ஸ்', (Tlon, Uqbar, Orbis Tertius) 'சிதைவுகளில்' (http://naayakan.blogspot.com/) வெளிவரும். உலகின் குறிப்பிடத்தகுந்த பல நாவல்களுக்கு உந்துதலாக இருந்தது போர்ஹேவின் இந்த சிறுகதைதான் என்கிறார்கள்.

3. அடுத்தவாரம், 'மொழி விளையாட்டில்' (http://jyovramsundar.blogspot.com/) நண்பர் கால சுப்பிரமணியம் தமிழாக்கம் செய்த நபக்கோவின் சிறுகதையொன்று (உலகின் முக்கியமான நாவல்களில் ஒன்றான 'லோலிதா'வை எழுதியவர்) இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளிவரும்.

தெரிந்தது

நாயன்மார் கதைகளும் தசரத சோகமும்
ஆச்சி சொன்னது
ஆற்று மணல் பரப்பி
விரல்களில் ரத்தம் கசிய
அம்மா சொன்னது
உயிர் எழுத்தின் சுழிவுகள்
கல் சிலேட்டை விடவும்
தகர சிலேட்டின் உழைப்பு
அப்பா சொன்னது
கடிதம் எழுதக் கற்றுத் தந்தது
கல்யாண்ஜியும் மாதவனும்
மோகமுள், பொய்த்தேவு
முதல் சரோஜாதேவி ரமணி சந்திரன்
வரை நண்பர்கள்
இன்னும் இருக்கிறது
இவள் வந்து சொன்ன
இலக்கணமில்லா இரவுகள்
நானாய்த் தெரிந்தது என்ன
காலையில் காபி நுரையில் கண்விழிப்பதும்
விளம்பரம் பார்த்து ஷேவிங் க்ரீம் மாற்றுவதும்
தவிர

(நண்பர் குமார்ஜி 1990களின் ஆரம்பத்தில் எழுதியது. நண்பர் மறுபடியும் எழுதத் துவங்கியிருக்கிறார்!)

பூங்காக்களின் தொடர்ச்சி - ஹுலியோ கொர்த்தஸார்

இணைய வாசகர்கள், நேரம் கிடைக்கும்போது வாசிப்பதற்காக அவ்வப்போது லத்தீன் அமெரிக்க சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் 'சிதைவுகளிலும்', 'மொழி விளையாட்டிலும்' மாறி மாறி வெளியிடலாம் என நினைக்கிறோம். அந்தவகையில் முதல் சிறுகதையாக, மெக்சிகோவை சேர்ந்த ஆல்பெர்தோ சிம்மல், எழுதிய சிறுகதையை 'சிதைவுகளில்' (http://naayakan.blogspot.com/2009/07/1_16.html ) வெளியிட்டோம். இப்போது இரண்டாவதாக ஹுலியோ கொர்த்தஸார் எழுதிய பூங்காக்களின் தொடர்ச்சி' சிறுகதையை 'மொழி விளையாட்டில்' வெளியிடுகிறோம். இந்தச் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தவர் நண்பர் ராஜகோபால்.

பூங்காக்களின் தொடர்ச்சி

சிலநாட்களுக்கு முன்புதான் அவன் அந்த நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவசர வியாபாரச் சந்திப்புகளின் நிமித்தம் அதை அவன் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. அவனுடைய எஸ்டேட்டிற்குத் திரும்பும் வழியில் ரயிலில், அதை அவன் மீண்டும் திறந்தான். கதை நிகழ்வில், கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் மெதுவாக ஆர்வம் வளார்வதற்குத் தன்னை அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், அவன் சார்பாகச் செயலாற்றும் அதிகாரத்தை வழங்கும் ஒரு கடிதத்தை எழுதினான். கூட்டு உரிமை பற்றி எஸ்டேட் மேனேஜரோடு விவாதித்த பிறகு, ஓக் மரங்கள் நிறைந்த பூங்காவைப் பார்த்தவாறிருந்த படிப்பறையின் அமைதியில் புத்தக வாசிப்பிற்குத் திரும்பினான்.

அவனுக்கு விருப்பமான, கைகளை வாகாக வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட நாற்காலியில் - அதன் முதுகு கதவை நோக்கி இருந்தது - சிறிய குறுக்கீட்டின் சாத்தியம் கூட அவனுக்கு எரிச்சல் ஊட்டிவிடும், அதை அவன் முன்பே யோசித்திருந்தான் - பச்சை நிற வெல்வெட் துணியை இடது கையால் அலட்சியமாக வருடியபடி நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படிக்க முனைந்தான். பாத்திரங்களின் பெயர்களையும், அவை பற்றிய அவனுடைய மனச் சித்திரத்தையும் எளிதாக நினைவு கூர்ந்தான். நாவலின் வசீகரம் சட்டென்று அவனைப் பற்றியது. ஒவ்வொரு வரியாகப் படிக்கத் தொடங்கும்போது அவனைச் சுற்றியிருந்த விஷயங்களிலிருந்து அவன் விலகுவதை உணர்ந்ததோடு விபரீத இன்பத்தையும் சுவைத்தான். அதேசமயம் உயரமான நாற்காலியின் பச்சை நிற வெல்வெட்டில் அவனுடைய தலை செளகரியமாகச் சாய்ந்திருப்பதையும் உணர்ந்தான். கைக்கு எட்டும் தூரத்தில் சிகரெட்டுகள் இருக்க, பெரிய சாளரங்களுக்கு அப்பால், பூங்காவில் ஓக் மரங்களுக்கிடையில் மதிய நேரக் காற்று நடமாடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு வார்த்தையாக, கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் இழிவான இரண்டக நிலையை ரசித்தவன், கற்பனை முடிவடைந்த நிகழ்வும் நிறமும் எங்கு தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றான்.

மலை மீதிருந்த வீட்டில் நடக்கும் இறுதிப்போராட்டத்திற்கு அவனே சாட்சி. முதலில் அச்சத்தோடு அந்தப் பெண் வந்து சேர்ந்தாள். ஒரு கிளை வளைந்து தாக்கியதாய் முகத்தில் வெட்டுப்பட்ட அவளுடைய காதலனும் இப்போது வந்து சேர்ந்தான். வழியும் குருதியை அவள் முத்தத்தால் நிறுத்த முயன்றாள். அவன் அதை அலட்சியப்படுத்தினான். உலர்ந்த இலைகளாலும், வனத்தின் இரகசிய வழிகளாலும், திமிறும் இச்சைகளாலும் ஆன சடங்கை நிகழ்த்துவதற்கு அவன் திரும்ப வரவில்லை. இதயத்திற்கு எதிரே இருந்த குறுவாள் வெதுவெதுப்பை அளித்தது. அடியூடாக இருந்த சுதந்திர உணர்வு நொறுக்கியது. வேட்கை மிகுந்த திணறலான வசனங்கள் பாம்புகளின் சிற்றாறு போல் அப்பக்கங்களில் ஓடியது. இவையெல்லாம் முடிவின்மையிலிருந்து தீர்மானிக்கப்பட்டவையாக இருக்கலாம். வேதனையில் அல்லலுறும் காதலனின் உடலை அன்பால் அமர்த்தவோ அல்லது அதிலிருந்து அவன் மனதை திசை திருப்பவோ அவளால் முடியவில்லை. வெறுப்புக்குரிய மற்றொரு உடம்பை அழித்தொழிப்பதற்கான தேவை அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அதன் சட்டகத்தை வரைந்தார்கள். எதுவும் மறக்கப்படவில்லை. அத்தாட்சி, எதிர்பாராத இடர்கள், தவறுகளின் சாத்தியம். எல்லாம் கணக்கிடப்பட்டாயிற்று. அந்நேரத்திலிருந்து ஒவ்வொரு கணமும் அத்திட்டத்திற்கு என்றே ஒதுக்கப்பட்டது. விவரங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அநேகமாக ஒன்றும் மீறப்படவில்லை. ஒரு கரம் கன்னத்தை வருடியது. அப்போது இருட்டத் தொடங்கியது.

இப்போது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அவர்களை எதிர்நோக்கி இருந்த வேலையில் கவனத்தைச் சிதறாமல் பொருத்தி வீட்டின் வாயிலில் பிரிந்தார்கள். வடக்கில் இட்டுச் சென்ற பாதையை அவள் தொடர வேண்டியிருந்தது. எதிர்ப்பக்கம் ஓடிய பாதையில், அவள் ஓடுவதைப் பார்க்க அவன் ஒரு கணம் திரும்பினான். அவளுடைய கூந்தல் கட்டவிழ்ந்து பறந்தது. அரையிருட்டில் மரங்களுக்கு இடையிலும் புதர்களுக்கு இடையிலும் பதுங்கியபடி அவன் ஓடினான். மரங்கள் அடர்ந்த வீட்டுக்கு இட்டுச் செல்லும் பாதையை அவனால் அடையாளம் கண்டுக் கொள்ள முடிந்தது. நாய்கள் குரைத்துவிடக் கூடாது என்று நினைத்தான். குரைக்கவில்லை. அந்தநேரம் எஸ்டேட் மேனேஜர் அங்கிருக்கமாட்டார். அவரும் அங்கில்லை. மூன்றே எட்டில் வாசலை அடைந்தான். உள்ளே நுழைந்தான். குருதி ஒழுகுவது போல் அப்பெண்ணின் வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தன. முதலில் நீலநிறக் கூடம். பிறகொரு பெரிய அறை. அதன் பிறகு தரைவிரிப்புகளோடு கூடிய படிக்கட்டு. மேலே இரண்டு கதவுகள். முதல் அறையில் யாரும் இல்லை. இரண்டாவது அறையிலும் ஆட்கள் இல்லை. வரவேற்பறையின் கதவு, கையில் கத்தி, பெரிய ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சம், கையை வாகாக வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட பச்சை நிற வெல்வெட் உறையிட்ட நாற்காலியின் உயர்ந்த பின்புறம், நாவலைப் படித்துக்கொண்டிருக்கும் அம்மனிதனின் தலை.

நன்றி: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்), தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ராஜகோபால், நிழல் வெளியீடு, 31/48, ராணி அண்ணா நகர், கே. கே. நகர், சென்னை - 78, விலை: ரூ. 80.

குறிப்பு : ஹுலியோ கொர்த்தஸாரின் 'இரவு முகம் மேலே' என்ற சிறுகதையை நண்பர் நாகார்ஜுனன், 4 பகுதிகளாக தன் வலைத்தளத்தில் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆர்வமுள்ள நண்பர்கள் அந்தச் சிறுகதையையும் வாசிக்கலாம் :

http://nagarjunan.blogspot.com/2009/07/1.html

பறக்கும் அனுமார்

பறத்தல் என்பது நீச்சலடிப்பதைப் போலத்தான் என்றான் ராஜா. சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு அனுமார் பறக்கும் காலண்டரை அதற்கு உதாரணமாகச் சொன்னான். டீவியில் வரும் ராமாயணத்தில் பறக்கும் காட்சிகளும் அப்படியாகவே இருந்தன. அந்தக் காலத்தில் நெடிதுயர்ந்த அடுக்குமாடி வீடுகளோ அல்லது மின் கம்பங்களோ கேபிள் டீவி வயர்களோ இல்லையே என்றேன். மலையைத் தூக்குபவனுக்கு மாடிகள் தூசு என்றான் ராஜா. இப்போதும் அவற்றை அனாயசமாகக் கடக்கலாம் எனச் சொல்லி பூமியை உதைத்து மேலேறினான். நேரந்தவறி கத்தியால் பிணத்தைக் கூறுபோட்டு உண்ணக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் சின்னச் சின்னத் தேசங்களுக்கு. கோகோ கோலா பிடித்திருந்த என் கைகளில் ரத்தக் கறை. கண்ணீருடன் உணவருந்த துவங்கியிருந்த என் கைகளைப் பிடித்தபடி அவன் பறந்தபோது எளிமையாகவே இருந்தது. எனக்கும் நீச்சல் தெரியுமென்றபடியால் கைகளால் நீரைத் துளாவியபடியே பறந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் கிளஸ்டர் குண்டுகளை மறந்து பறக்கலாம் நீச்சல் தெரியுமானால். அனுமாரும் அப்படித்தான் பறந்து கொண்டிருக்கிறார்.

ஆனால்

ஆனால்
நாற்காலியின் எதிரில்
கால் கேள் போட்டு
வெடிக்கும் வேட்டுக்களின்
சத்தம் நித்தம்
யோசிக்கையில்
தூள் தூள்
தலை ஆனது
பிரச்சனைகளின் நெருக்கடி
வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்
தினமும் பொழுது போக்கும்
கேபிள் டீவியே
போற்றி போற்றி

(இணையத்தில் எழுத வந்த புதிதில் பதிந்தது. பழைய பதிவையும் பின்னூட்டத்தையும் - ஆமாம், ஒரே பின்னூட்டம்தான், அதுவும் ஒரு வருடம் கழித்து 2008ல் வந்தது! - பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2007/12/blog-post_07.html)

நான் வளர்கிறேனே மம்மி!

நான் டுவிட்டரில் சேரவில்லை. வேறொன்றும் இல்லை - இந்த 150 வார்த்தைகளுக்குள் கதையெழுதுக, 200 வரிகளுக்குள் இந்திய சுந்தந்திர வரலாற்றைப் பற்றிய சிறு குறிப்பு வரைக போன்ற கட்டுப்பாடுகள் எனக்கு 9ம் வகுப்புப் பரிட்சைத் தாள்களையே நினைவுபடுத்துகின்றன. அப்போதே வகுப்புகளைக் கட் அடித்துவிட்டு அருகிலிருக்கும் சினிமா தியேட்டருக்குச் சென்றுவிடுவேன். அப்படிச் செய்யும் நான் சில சமயங்களில் அம்பத்தூரில் இருக்கும் அழகப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்களும் படித்துக் கொண்டிருப்பேன் (ஆனால் நிச்சயமாக கடினாமான கணக்குச் சூத்திரங்களை அல்ல).

உடனே.. ஆஹா, இவன் 9ம் வகுப்புதான் படித்திருக்கிறான், இவனுக்கெப்படி சிக்கலான கலை இலக்கியச் சூத்திரங்கள் புரியும் எனச் சிலர் கேட்கலாம். என்ன செய்ய, எனக்கிருப்பது குருவி மண்டைதான். நான் படித்ததே +2 வரை... அதுவும் தத்தக்கா பித்தக்கா என்றுதான் முடித்தேன்.

IIM, IITல் படித்தவர்களுக்கோ அல்லது ஜப்பானிலோ சான் ஃபிரான்ஸிஸ்கோவிலோ வாழ்ந்துகொண்டு கடினமான சூத்திர வாய்ப்பாடுகளை மனனம் செய்து திண்ணைப் பேச்சாகப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கோ சில விஷயங்கள் புரிவதில்லை. அதில் முக்கியமான ஒன்று : இலக்கியம் என்பது எளிமையானது என்பதுதான். இதற்கு பர்ரோஸிலிருந்து ஆரம்பித்து பாடம் நடத்தும் ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறென். தர்க்கங்களாலேயே தங்களது மூளையை / மனதை வடிவமைத்துக் கொண்டவர்களுக்கு இது சர்வ நிச்சயமாய்ப் புரியாது.

நண்பர் ஒருவர், இவன்சிவன், சுரேஷ் கண்ணன், ரோசா வசந்த் மற்றும் இன்னும் சிலரின் டுவிட்டரின் திண்ணை அரட்டைப் பேச்சுகளின் இணைப்பைக் கொடுத்தார். (முதலிலேயே வேறொரு அனானி நண்பர் ரோசா வசந்தின் டுவிட்டர் எழுத்தின் இணைப்பைக் கொடுத்திருந்தார்).

விஷயம் பெரிதாக எல்லாம் ஒன்றுமில்லை. நான் பதிவிட்டிருந்த மூன்றாவது வகுப்பும் ஏழாவது வகுப்பும் பதிவைப் பற்றித்தான் காரசாரமாக வெற்றிலை எச்சில் தெறிக்க ‘விவாதித்துக்' கொண்டிருந்தார்கள்.

ஐயா, மகாஜனங்களே, அது நான் எழுதியதில்லை என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். குறைந்த பட்சம் நான் எழுதிய ஏதாவது ஒன்றை எடுத்து வைத்துப் பேசியிருந்தாலும் கொஞ்சம் கெத்தாக இருந்திருக்கும் :). டுவிட்டரும் இணையத்தில்தான் இருப்பதால் அந்த 'விவாதங்களில்' பங்குபெறும் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்தால் எங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்ல ஏதுவாயிருக்கும்.

கழிவறை வாசகங்களை உயர்ந்த இலக்கியம் எனச் சொல்ல நான் ஒன்றும் மூடனில்லை. அதே சமயம், அப்படி யாரும் பாடுவதேயில்லை என்று சொல்ல முடியுமா என்ன? மூன்றாம் வகுப்பில் முதல் பாடலைப் பாடியது எவ்வளவு நிஜமோ அதே போல்தான் ஏழாம் வகுப்பில் பாடிய இரண்டாவது பாடலும். ஒரு சமூக ஆய்வாளனின் பார்வையோடுதான் அதைப் பதிவிட்டிருந்தேன். அதைப் பிறர் தங்களுக்கு விருப்பப்பட்டவாறு புரிந்துகொள்ளவோ அர்த்தப்படுத்திக்கொள்ளவோ செய்யலாம். அது பிரச்சனையில்லை.

ஒரு டுவிட்டர் (பதிவெழுதுபவர்கள் பதிவர், டூவிட்டர் எழுதுபவர்கள்? - தெரியாததால் டுவிட்டர் என்றே தொடர்கிறேன்), தன் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலாக எழுதுவார்களா என அறச் சீற்றம் கொண்டிருந்தார் (அவரது வெத்தலைக்குச் சுண்ணாம்பு கிடைக்காத கோபமோ என்னவோ). அப்படி என் குடும்பப் பெண்களின் பெயர்களை ஸ்ரீதேவிக்குப் பதிலீடாகச் செய்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை - ஆனால், பள்ளி மாணவர்கள் ஸ்ரீதேவி என்றுதானே பாடுகிறார்கள் என்று நானும் லாஜிக்கலாக மடக்கலாம்தான். ஆனால் எதற்கு வம்பு.. பிறகு டுவிட்டரை விட்டுவிட்டு துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு தம்வீட்டின் அகலக் கண்ணாடி முன்நின்று வெவ்வவ்வே காண்பித்தாலும் காண்பிப்பார்கள். யாராவது ஏதாவது சொல்லப் போனால், உன் வீட்டில் இருப்பது குறுகிய எளிமையான சுவர், உனக்கெல்லாம் கண்ணாடியின் அருமை தெரியாது எனலாம்!

இதில் ரோசா தான் செம காமெடி (எனச் சொல்ல ஆசைப் படுகிறேன்). அவர் சொல்லியிருந்தது எனக்குப் பின்னூட்டமாக வந்தது :

/ஜ்யோவ்ராம் சுந்தர் எனக்கு இலக்கிய சுகுணா திவாகராக தெரிகிறார்; அவருக்கு எளிய அரசியல் சூத்திரங்கள், இவருக்கு அதே போன்ற இலக்கிய சூத்திரம்./

பதிவுலகத்திலிருந்து VRS வாங்கிக் கொண்டு போய்விட்டவர் ரோசா. ஆனாலும் அவ்வப்போது பென்ஷன் வாங்கவோ அல்லது பழைய பாசத்தில் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்க்கவோ பதிவுலகிற்கு வந்து செல்பவர். அவருக்கென்ன பதில் சொல்ல என்று யோசித்தேன். நண்பரோ, ‘இப்படியெல்லாம் நீங்கள் இருக்கக்கூடாது, ஏதாவது பதில் சொல்லாவிட்டால் உங்களது புகழுக்கு ஹாரம் வந்துவிடும்' என்றார். இன்னொருவர், ரோசா கையில் கத்தியுடன் யாருடைய குறியையோ அறுக்க இணையப் பக்கங்களில் அலைந்ததைச் சொல்லிக் கிலியூட்டினார். ம்ஹூம்; எனக்குப் பயமாயிருக்கிறது - நான் ஒப்புக் கொள்கிறேன் - ரோசா சொன்னதெல்லாம் 100% உண்மையானதுதான். தொடருங்கள் ரோசா உங்களது இரண்டு வரித் தீர்ப்புகளை...

(பதிவின் தலைப்பில் மம்மி என்ற வார்த்தை இருப்பதால் மம்மி ரிடர்ன்ஸ் பார்ட் III என்று யாராவது வாசித்தால் நான் பொறுப்பல்ல. உடனே 'இதுவும் உம்பர்டோ ஈகோ உபயோகித்த உத்திதான், அதான் சொல்கிறேனே ஜ்யோவ்ராம் சுந்தருக்கு எல்லாமே எளிய சூத்திரங்கள்தாம்' என்று தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் சாமிகளா!).

நண்பர் பா ராஜாராம்

நேற்று இரவு 12 மணி வாக்கில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது பா ராஜாராமின் கவிதையொன்று தமிழ்மணத்தில் இருந்தது. ஏற்கனவே வாசித்தது போன்ற நினைவு.

என்னுடைய 20 வயதில் குமார்ஜியின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக தெய்வாவும் பா ராஜாராமும் பழக்கமானார்கள். வாரத்திற்கு இரண்டு முறை குமார்ஜிக்கும் பா ராஜாராமுக்கும் நீளமான கடிதங்களை எழுதுவது என் வழக்கம். பெரும்பாலும் படித்த புத்தகங்கள், கவிதைகள் தொடர்பாகத்தான் இருக்கும் கடிதங்கள். என்னிலும் 6 வயது மூத்தவர்கள் மூவரும் என்றாலும், அது துளியும் தெரியாமல் நட்புடன் பழகுவார்கள்.

1994ல் நான் ஒரு மன அழுத்தத்தில் இருந்தபோது (வேறு என்ன, எல்லாம் எழவெடுத்த காதல் தோல்விதான்), கிளம்பி வாடா சிவகங்கைக்கு என்றார். சிவகங்கைக்குப் போய் ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்.

டிவிஎஸ் 50 வைத்திருந்தார். அதில்தான் ஊர் சுற்றுவது. அப்போது அந்த ஊரில் பார் வசதி கிடையாது என்பதால் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர். ஆஹா, தனி அறையெல்லாம் எடுத்திருக்கிறார்களே, சரியான செட்தான் என்று சந்தோஷப்பட்டால்... எல்லாருமே 60 எம் எல் அல்லது 90 எம் எல் பார்ட்டிகள்! (நுரைகளற்ற 90 மில்லிக்கான காசு இருந்தது பாக்கெட்டில் என்ற ராஜாராமின் கவிதை வரி இப்போது ஞாபகம் வருகிறது).

ராஜாராமின் வீடும், பின்னாலிருந்த அவரது அறையும், தெருக்களும், ரயில்வே ஸ்டேஷனும் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்தக் குடி அறையின் வாசலில் இருந்த பெட்டிக் கடையில் வாங்கிய கோலி சோடாவும் கலரும்கூட. இன்னொரு முறை கோலி கலர் கலந்து ரம் குடித்தால் அந்தப் பழைய வாசனையைக்கூட கண்டுகொள்வேன் என நினைக்கிறேன்.

நிறைய கடிதங்களும் எப்போதாவது தொலைபேசி அழைப்புகளுமாக எங்கள் நட்பு இருந்தது. ராஜாராம் பழகுவதற்கு மிகப் பிரியமானவர்.

அவ்வப்போது அவரது கவிதைகள் சிறுபத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. கணையாழியில் சில கவிதைகள் வந்திருக்கின்றன. சுபமங்களாவின் கடைசி இதழில் (கோமல் இறந்த பிறகு ஒரு இதழ் வந்தது - வண்ண நிலவனை ஆசிரியராகக் கொண்டு) நடுப்பக்கத்தில் இவரது கவிதை வந்த நினைவு.

நாங்கள் எழுதும் கவிதைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம். அதிகமும் இவரது கவிதைகளைப் பாராட்டியதில்லை நான். அது சரியில்லை, இது சரியில்லை என்று நொள்ளை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்.

அவ்வளவு அன்பான மனிதருடன் 1996க்குப் பிறகு திடீரென்று தொடர்பு அறுந்து போய்விட்டது. எவ்வளவு முயன்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

எப்போதாவது குமார்ஜியிடமோ தெய்வாவிடமோ பேச நேர்கையில் ராஜாராம் பற்றிய பேச்சு வராமல் இருக்காது!

நடுவில்தான் நேற்று வலைப்பதிவில் அவரது கவிதையைப் படித்தது, அவர்தான் என்று பின்னூட்டத்தில் உறுதி செய்து கொண்டது, பிறகு அலைபேசியில் வெகுநேரம் பேசி, கடிதம் எழுதி என....

குமார்ஜி எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. வாசிப்பதுகூட அதிகபட்சம் ஆனந்த விகடன்தான். தெய்வா எப்போதுமே எழுதுவதில்லை - படிப்பதோடு சரி. இப்போது சவுதியில் இருக்கும் ராஜாராம் திரும்ப எழுத வந்திருக்கிறார். வலைப்பதிவில் தன்னுடைய கவிதைகளைப் பதிய ஆரம்பித்திருக்கிறார்.

மாதிரிக்கு ஒரு கவிதை :

குழந்தைகள் தூங்கியபின்பு
விளக்கணைத்துவிட்டு
பேசிக்கொண்டிருக்கிறாள்
இவள்.
திறக்கப்படாத கோயிலின்
கதவில்,
சுவற்றில்,
விட்டத்தில்,
பட்டுக்கொள்ளாமல்
அனுமதிக்கப்பட்ட
எல்கைக்குள்
பறந்துகொண்டிருக்கிறது
வவ்வால்.

அவரது வலைப்பதிவு முகவரி : www.karuvelanizhal.blogspot.com. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடிக்கலாம்.

ராஜாராம் நேற்று சொன்னது போல தேடித் தேடியும் தொலைந்த நட்பு பிறகு சடாரென்று எதேச்சையாகக் கிடைப்பது உன்னதமான கணம்தான். மிக மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

எழுதிக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து திருத்தப்படாத சில பகுதிகள்

அதிகாரம், அதிகாரமழிப்பு, மாற்று அதிகாரம் என விரியப் போகும் இந்தக் கதையை ஒதுக்கத் தேவையானவை : (1) கொஞ்சம் பெயர்கள் (2) கொஞ்சம் சிந்தனை (3) கொஞ்சம் கவிதை (4) நிறைய பாலியல் ஆசைகள் (5) ..... (... ல் பிறகு உங்களுக்கு விருப்பமானதை நிரப்பிக் கொள்ளலாம், இப்போது கதைக்குச் செல்ல நேரமாகிவிட்டது).

அதிகாரம் என்பதை நல்ல அதிகாரம், கெட்ட அதிகாரம் என இருமைகளுக்குள் வைத்துப் பார்க்க முடியாது. அதிகாரத்தில் வேண்டுமென்றால் சில நல்ல கூறுகள் இருக்கலாம். உரையாடலையும் அதிகாரமாகச் சொல்வது அதன் வீச்சை குறுக்குவதே ஆகும். தன்னினும் பெரிய வேதாளத்தைச் சுமந்தபடி முருங்கை மரம் ஏற விழைகிறான் விக்ரமாதித்யன். பிசின்களில் ஊறும் பூச்சிகளும் அவனுடன் சேர்ந்து கொள்கின்றன. இக்னேஷியசின் தட்டையான மார்பைத் தடவி குறி விரைக்கிறாள் பூங்கோதை.

மயிர்களடர்ந்த வலிய கைகளை இறுக்கிப் பிடித்து உச்சமடைகிறாள் மன்மோகனின் திசை தவறிய விந்து சிதறிக் கிடக்கிறது தெற்கே (மிக மிகத் தெற்கே). டெல்லி என்பது நகரம், நகரமானதன் நினைவுகளில் உறுபசி மிரட்ட ஓடி ஒளிகிறது - potency கேள்விக் குறியான காலம். ஒருவர் காட்டிக் கொடுக்கிறார், ஒருவர் கைதாகிறார், ஒருவர் சரணடைகிறார், ஒருவர் வன்புணரப்படுகிறார், ஒருவர், ஒருவர், ஒருவர், ஒருவரென எழுதிப் போகும் விரல்களுக்கு மோதிரம் வாங்கிப் போடுகிறார் இன்னொருவர். இப்போது எழுதும் விரல்களும், மோதிரம் போட்டும் விரல்களும் ஒரே படித்தானவைதானா?

ஆண் காமம் குறி விறைக்கத் துவங்குகையில் ஆரம்பித்து விந்து சிந்தியவுடன் சுருங்கி முடிகிறது - ஆண் காமம் லீனியர் வகையென்றால் படர்ந்து விரியும் பெண் காமம் பல உச்சங்களை உடைய நான் லீனியரா?

முட்டி வலிக்குதும்மா, கொஞ்சம் நகரேன்

தலைவலியென்று ஒதுங்கும் பெண்ணை அதிகாரத்தை நிராகரிப்பவள் என்றும், கால் அகட்டிப் படுப்பவளை அதிகாரத்திற்குத் துணை போகிறவள் என்றும், மேலேறிச் செய்யச் சொல்பவளை அதிகாரத்தை நிலைநாட்டுபவள் என்றும், மேலேறிச் செய்பவளை அதிகாரத்தைத் தலைகீழாகக் கவிழ்ப்பவள் என்றும், அதிகாரத்தை, அதிகாரப் படிநிலைகளை, நுண் அதிகாரத்தை, மாற்று அதிகாரியை, அதை இதை மற்றதை

நண்பா பாரதியைப் படித்தாயா படித்தாயா நண்பா பாரதியை பாரதியை படித்தாயா நண்பா என்ற வரிகளைப் படிக்கையில் நண்பன் கள்ளிச் செடிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இவன் நின்றுவிட்டான். நண்பன் கடற்கரை மணலில் பாதம் புதையப் புதைய நடந்து கொண்டிருந்தான். குள்ளமாகியபடி அலைகளில் விழுந்து மறைந்தான்.

மார்க்யூஸ் தொலைபேசினான். எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்வதில்லை அவன். என்னுடைய தொலைபேசி அழைப்புகள் இப்போது கண்காணிக்கப்படுகின்றன. எனது அசைவுகள் அத்தனையும் மேலிடத்திற்குத் தெரியப்படுத்த என்றே நவீன கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சொன்னால் பலர் சிரிக்கிறார்கள்.

இப்போதெல்லாம் நான் தொலைக்காட்சிகூடப் பார்ப்பதில்லை. எந்தெந்த நிகழ்ச்சிகள் பார்க்கிறேனென்பதும் கண்காணிக்கப்படலாம். அதன்மூலம் என்னுடைய மனநிலையை அவர்கள் கட்டமைக்க முயலலாம். அதில் சிறிதளவு வெற்றிபெற்றால்கூடப் போதும், என் கதை முடிந்துவிடும்.

பங்கர் மாதிரியான ஒன்றைச் செய்து அதற்குள் வசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

இதற்குமுன்னால் பெயர்தெரியா ஊர் ஒன்றில் என்னைச் சிறைபிடித்துவிட்டார்கள். விவரங்கள் சொல்லவேண்டிய கட்டாயங்கள் அந்த நாட்டில் இல்லைபோலும். புரியாமல் பேசினாலே சிறையடைக்கப் போதுமானதாயிருக்கலாம். எப்படியிருந்தபோதும், எனது குற்றப்பட்டியலை நீதிபதி வாசிக்கும்போது அடக்கமுடியாமல் தும்மல் வந்தது. தும்மிக் கொண்டே என்மொழியில் பேசினேன், குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவது புரியாமல். நீதிபதி தீர்ப்பை வழங்க ஆரம்பிக்கையில் அடக்க இயலாமல் எனக்கு வந்தது குசு. அதை அவர்கள் அதிகாரத்திற்கு எதிரானதாகப் புரிந்து கொண்டார்கள்.

இப்போதெல்லாம் இருமல் - அதுவும் கோழைகளுடன்கூடிய இருமல் - அதிகரித்துவிட்டட்து. இதைக்கூட இருமிக் கொண்டேதான் எழுதுகிறேன். வாயைமூடிக் கொண்டு இருமுகிறேன். சத்தம் வெளியில் கேட்டுவிடக் கூடாது. மற்றவர்களுக்கு என்னுடைய வியாதி தொற்றிவிடக் கூடாது.

புரியாமல் பேசுவதற்கே சிறையென்றால் இங்கு புரியும்படி பேசுவது அதைவிடவும் பெரிய தண்டனை கிடைக்கும்போலும். சைபர் கிரைம் போலீஸிடம் யாராவது புகார் கொடுத்துவிடப் போகிறார்களே என இதை எழுதிச் செல்லும் என் கைகள் நடுங்குகின்றன.

இப்போது கதை இங்கே மாறி, வேறொரு தலைப்பில் சொல்லப்படப் போகிறது. அந்தக் கதையின் தலைப்பு : விஜி என்கிற புறாவும் பாலு என்கிற சிறுவனும்

ஜெயனுக்குப் பறவைகள் என்றால் உயிர்; பாலுவுக்கும்.

அவனுடைய அப்பா சடசடவென மழை பெய்யும் ஒரு நாளில் வயர் கூடையில் மேல் துண்டு போர்த்தி எடுத்து வந்திருந்த இரண்டு புறாக் குஞ்சுகள் நடுங்கியபடி இருந்தன. அறைக்குள் எடுத்து வந்து மின்விசிறியைப் போட்டு கதகதப்பான போர்வையால் அவற்றை தலை மட்டும் வெளியே தெரியும்படி மூடினான். அப்பா மின்விசிறியையும் அணைக்கச் சொன்னார்.

ஜெயன் அருகிலிருந்த கான்வெண்ட் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பாலு கவர்மெண்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு - ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் இரண்டு. அவர்கள் இருவருக்கும் அடிப்படையில் ஒத்த விருப்பங்கள் இருந்தன. நாய்க்குட்டி வளர்ப்பதும் (அதனுடன் தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள்).

புறாக் குஞ்சுகளுக்கு ஸ்பூனால்தான் பாலூட்ட வேண்டியிருந்தது. அறை மூலையில் கோணியை விரித்து அதில் புறாக் குஞ்சுகளை விட்டு, தடுப்பு அரணாக இரண்டு அட்டைகளை வைத்தான். ஜன்னல் கதவுகளை அடைத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் பூனை வந்து புறாக் குஞ்சுகளை தின்றுவிடும் எனச் சொல்லியிருந்தார் அப்பா.

இரவு முழுவதும் அவை மெலிதாக சப்தம் எழுப்பியபடியே இருந்தன.

சாம்பல் நிறத்தில் இருந்தன புறாக்கள். கழுத்து மற்றும் உடலின் அடிப்பாகங்கள் வெள்ளையோடு கூடிய சாம்பல் நிறம் கொண்ட ஹோமர் வகைப் புறாக்கள் அவை. பெரிய புறாவுக்கு சுப்ரமணி என்றும் சின்ன புறாவுக்கு விஜி என்றும் பெயர் வைத்திருந்தார்கள்.

புறாக்கள் பறக்கத் துவங்கிய ஒரு நாள் இரவில் வீடு திரும்பவில்லை விஜி. கண்கள் கலங்க அவற்றை அண்டை வீடுகளிலும், தெருமுனைகளிலும் தேடினார்கள் ஜெயனும் பாலுவும்.

அடுத்த நாள் மதியம் சடாரென்று தோன்ற பக்கத்து வீட்டு மாடியில் தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்த்தான் ஜெயன். முன்னோக்கிப் பாய்வதைப் போல் இரண்டு சிறகுகளும் விரிந்து கிடக்க, தண்ணீரில் ஊறிப் போய் மிதந்து கொண்டிருந்தது. கடவுளே எனக் குதித்து அதைக் கைகளில் எடுத்தான். அடிவயிற்றின் துடிப்பு உயிர் இருந்ததைப் பறை சாற்றியது.

வீட்டிற்கு எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். டர்க்கி டவலில் உடலைத் துவட்டி, கம்பிளிப் போர்வையால் மூடி நெஞ்சருகே வைத்துக் கொண்டான். விஜி லேசாக கண்களை மூடி மூடித் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் அதனுடயே இருந்தான் ஜெயன்.

இரண்டாக இருந்த புறாக்கள் பல்கிப் பெருக ஆரம்பித்த பிறகுதான் சுப்ரமணி பெண் புறா என்றும் விஜி ஆண் புறா என்றும் தெரிய வந்தது அவனுக்கு. கூப்பிட்டுப் பழகியதை மாற்றவும் முடியவில்லை.

மாடியில் இருந்த ஓலைக் கொட்டாயில் புறாக் கூண்டுகள் அடித்துக் கொடுத்திருந்தார் அப்பா.

எல்லாப் புறாக்களுக்கும் பெயர் வைக்கவும் முடியவில்லை. நடுவில் வாங்கி வந்திருந்த கருத்த கர்ணப் புறாவிற்கு கருப்பி என்றும் ப்ரவுண் நிறப் புறாவுக்கு ப்ரௌணி என்றும் பெயர் வைத்திருந்தார்கள். மற்ற புறாக்களை ‘தோ தோ' என்றுதான் கூப்பிடுவது.

காலையில் எழுததும் மாடிக்கு ஓடுவார்கள் ஜெயனும் பாலுவும். தரையில் பிளாஸ்டிக் உறையை விரிக்கும்போதே புறாக்கள் கழுத்து வீங்க உறும ஆரம்பித்துவிடும். கோதுமையும் கம்பும் கலந்த தீனியை உறையில் கொட்டி கூண்டுகளைத் திறந்ததும் எல்லாமாக வந்து அமரும். கவாங் கவாங் என்று தின்றதும், பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைக் குடித்துவிட்டு ஒரு ரவுண்ட் பறக்க ஆரம்பிக்கும். விஜி காற்றில் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அறைக்குள் என்றால் விஜியும் கருப்பியும் பறந்து வந்து பாலு தோள் மீதுதான் அமர்வது. எவ்வளவுதான் ஜெயன் ஆசையாக அவற்றை எடுத்துத் தன் தோள்களின் மீது வைத்துக் கொண்டாலும், உடனே பறந்துவிடும். அதில் கொஞ்சம் வருத்தமிருந்தது ஜெயனுக்கு.

வயல்வெளியில் இருக்கும் பெரிய கிணறுகளில் மற்ற பையன்களுடன் குளிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் ஜெயனுக்கு. பாலு படிக்கட்டுகளில் அமர்ந்து கால்களை தண்ணீரில் உளப்பிக் கொண்டிருப்பான்.

முதல் முறை நீச்சல் கற்றுக் கொள்ள குதித்த போது மேலே வந்து படிக்கட்டைப் பிடிக்க முடியவில்லை. மூச்சு திணறிவிட்டது பாலுவுக்கு. அருகிலிருந்த சீனிதான் இழுத்து வந்து சேர்த்தான். அப்படி இழுத்து வந்தது மூன்று அடிகளுக்கு மேல் இருக்காது என்றாலும் பாலுவுக்குப் பிறகு நீச்சல் பழகவே பயம்.

வீட்டில் கூண்டுக் கிளிகளும் இருந்தன. இரண்டே இரண்டு கிளிகள். ஒன்று நோய் வந்து இறந்து போனது. இன்னொன்று, சிறகு முளைத்து பறந்து போனது. பிறகு அவர்கள் கிளி வளர்க்கவில்லை.

பந்தை எடுத்து கீழ்ப் படிக்கட்டின் அடியில் வைத்துவிட்டு வந்துவிட பிறகு வேறொருவன் சென்று தேடி எடுத்து வருவது ஒரு விளையாட்டு. ஒருமுறை அப்படிப் பந்தைத் தேடித் தண்ணீருக்கடியில் போகையில் பந்தைச் சுற்றி இருந்த பாம்பைக் கண்டு நடுங்கி மேலேறி, 'ஹோ' என பயத்தில் அலறினான் ஜெயன். பாலுவுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை.

மதியம் மொட்டை மாடியில் விஜியுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் அமளி ஏற்பட்டது. பாலு வயல் கிணற்றில் விழுந்து விட்டானாம்!

ஜெயன் ஓடினான். வயலில் இருந்த கிணற்றில், இரண்டு கைகளும் சிறகைப் போல விரிந்து கிடக்க, சற்றே முன்னோக்கி பாய்வதைப் போலத் தண்ணீரில் கிடந்தான் பாலு.

எல்லாப் புறாக்களையும் சைக்கிள் கடை முருகனுக்குக் கொடுத்து விட்டார் அப்பா.

மூன்றாம் வகுப்பும் ஏழாம் வகுப்பும்

அத்தை வீட்டுக்குப் போனேன்
ஐஸ்க்ரீம் கொடுத்தாங்க
வேணாம்னு சொன்னேன்
வெளியே போன்னு சொன்னாங்க
வெளியே வந்தா பாம்பு
பாம்படிக்க கொம்பெடுத்தேன்
கொம்பு ஃபுல்லா சேறு
சேறலம்ப ஆத்துக்குப் போனேன்
ஆறு ஃபுல்லா மீனு
மீன் பிடிக்க வலையெடுத்தேன்
வலை ஃபுல்லா ஓட்டை
ஓட்டையைத் தைக்க ஊசியெடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
உங்கம்மா ஒரு குள்ளி

*

ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்
ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை
அந்த சண்டையில கிழிஞ்சுதுடா
ஸ்ரீதேவி புண்டை
ஜிகுஜிக்காங் ஜிகுஜிக்காங் ஜிக்காங்

நகுலன் கவிதைகள்

http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html பதிவில் சொல்லியதைப் போல இந்த இடுகையில் சில நகுலன் கவிதைகள் :

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான். ஒன்றிலும்
நிச்சயமில்லாத மனிதர்கள், அல்குலின்
அசைவுகள், “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண்டிவிடும் ஸ்தாபனங்கள்
சில்லறை சில்லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள். காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங்கள், இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது


வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.


சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு


சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”


வரையறை

தலையும் வாலும்
இல்லாத பிழைப்பு
என்று
சொல்லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை


இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு


கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண்கள்
என்
உன்மத்த வேகம்


வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு


நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன

இரண்டு மூன்று வரிக் கவிதைகள் :

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?
அதுவும் உன் கைப்பாவை

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் என்ற தலைப்பில் இருக்கும் 10 கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை. இடமின்மை காரணமாக இங்கு பதியவில்லை.

கடைசியாக....

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

பூம் பூம் ஷக்கலக்க பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் பதிவைப் படித்ததும் சாரு ஒரு ஹிட்லரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு எழவில்லை. எதற்காக அந்தப் பதிவு என்றுதான் தோன்றியது.

அதற்காகச் சிலர் கேட்டது போல் முதல் பத்தியை நீக்கச் சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் மொத்தப் பதிவுமே கிசுகிசுக்களின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான். யார் அலெக்ஸ், யார் விஷால் என்பதைத் தெரிந்து கொண்டதைத் தவிர அதில் பெரிதாக வேறொன்றுமில்லை.

அந்த முதல் பத்திகூட சிறுபத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுவாக இருந்ததைத்தான் பைத்தியக்காரன் எழுதியிருக்கிறார். சாருவைப் பற்றிய சமீபத்திய வலையுலக (காமரூபக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வந்த) கிசுகிசுக்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாரோ தெரியவில்லை.

இதற்கு மாற்றாக நானும் மானாவரியாக கிசுகிசுக்களை அடுக்கிச் செல்லலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பதோடு நானும் பைத்தியக்காரன் செய்யும் தவறையே செய்தவனாவேன். அதனால், விபரங்களின் அடிப்படையில் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?

அவர் புதுமைப் பித்தனின் பல கதைகளை விரிவாக விமர்சித்து - கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு - கட்டுரை எழுதியிருக்கிறார். உடனே இலக்கு கால இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் ஜீரோ டிகிரி இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் என ஆரம்பித்து விடாதீர்கள். இந்தப் பிரஸ்தாபக் கட்டுரை வெளியாது 2002 இறுதியில். போலவே ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றி மார்ச் 2003ல் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய / லத்தீன் அமெரிக்க / அரேபிய எழுத்தாளர்களின் பெயர்களை (மட்டும்) சாரு உதிர்க்கிறாராம். மரியா வர்காஸ் யோசாவின் The Real Life of Alejandro Mayta, எல்ஃபிரெட் ஜெலனிக்கின் பியனோ டீச்சர், சார்லஸ் ப்யுகோவ்ஸ்க்கி, முகமது ஷூக்ரி பற்றியெல்லாம் விரிவாகவே சாரு எழுதியிருக்கிறார். இப்போது நான் கேட்கிறேன் - சாரு தமிழில்கூடப் படித்ததில்லை எனச் சொல்லும் நீங்கள் சாருவையே படித்ததில்லை என்று நான் சொல்ல முடியும்தானே?

அவருடைய வாசிப்பிற்கு அவரது எழுத்துகளே சாட்சி. அதை வைத்து நாம் உரையாடலாம். ஆனால் நீங்கள் அதையும் வேறு யாராவது எழுதிக் கொடுத்தது எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடக் கூடும். அதனாலேயே நான் அவரது ஆரம்ப கால எழுத்துகளை மேற்கோள் காட்டாமல் அவரது பிந்தைய - அதாவது 2002ற்குப் பிறகு எழுதிய விஷயங்களை மேலே எழுதியிருக்கிறேன். இல்லை, இவையும் வேறு யாராவது தவணை முறை நண்பர்கள் எழுதிக் கொடுப்பது என்று சொல்லிவிட்டால், தவணை முறையில் இல்லாமல் மொத்தமாகத் தீர்ந்தது விஷயம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் & ஜீரோ டிகிரி பிரேம் ரமேஷ் எழுதியதாம்! ஆபிதீன், எக்ஸிஸ்டென்ஷியலிசம் நாவலில் ஒரு பத்தி தான் எழுதியதாகச் சொன்னதிலிருந்து, இதுவரை எனக்குத் தெரிந்து அந்த நாவல்களுக்கு ஆறு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது இப்போது வரைக்குமான கணக்குதான். நாளையேகூட இன்னும் சிலர் வந்து அந்நாவல்களை தாம்தான் எழுதினோம் என்று சொல்லக் கூடும். இதெல்லாம் என்னய்யா விவாதமா - இதெற்கெல்லாம் ஒருவனால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

(இடைவெட்டு : மாலதி மைத்ரி ஜீரோ டிகிரியை சாரு எழுதவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அந்நாவலை எடிட்டிங் செய்தது ரமேஷ்தான் என்று எழுதியிருக்கிறார். நாவலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட்டவுடன், அதற்கு எடிட்டிங் அவசியமாகிறது. அந்த எடிட்டிங் பணிக்குச் சிலர் உதவியிருக்கலாம். மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக அந்தப் புத்தகத்தையே எழுதினது தான்தான் என்று சொன்னால் என்ன செய்ய?)

”ரோலான் பார்த் ரைட்டிங் டிகிரி ஜீரோ என்று எழுதியிருக்கிறார். அதனால் ஜீரோ டிகிரி என்று தலைப்பு வைத்தது சாருவாய் இருக்க முடியாது!” ஜீரோ டிகிரி எப்போது வந்தது? ரோலான் பார்த்தின் அந்தப் புத்தகம் வெளியானது 1953ல். தமிழிலேயே ஜீரோ டிகிரி வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் அறிமுகமாகிவிட்டார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பைத்தியக்காரன்.

சாருவுக்கும் பின் நவீனத்திற்குமான தொடர்ப்பு எத்தகையது என்பதை பிரேம் ரமேஷை விடுங்கள், நீங்கள் எழுதுங்கள். நான் எதிர்வினையாற்றுகிறேன். சும்மா சாருவுக்கு பின் நவீனம் தெரியாது, அமைப்பியல் தெரியாது என்பதெல்லாம் ஹம்பக்.

அவருடைய கட்டுரைகளை யார் எழுதிக் கொடுத்தார்கள், யார் பிழை திருத்தினார்கள் (எழுதறவனே பிழையையும் கொஞ்சம் திருத்திக் கொடுத்துடக் கூடாதா!) என அதே கிசுகிசு பாணியில் சொல்லிச் செல்கிறீர்கள். நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லும் அவர்களே இதை ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நீங்கள் பிரமிளுக்குச் சாரு எழுதிய குசு கடிதத்தையோ விமர்சன ஊழல்களில் பிரமிள் எழுதியதையோ சொல்வீர்களேயானால், பிரமிளைப் பற்றி சுந்தர ராமசாமி தொடங்கி அழகிய சிங்கர் வரை எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதும் யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய், எது புனைவு என்று ஒரு மயக்கம் ஏற்படலாம்! மட்டுமில்லாமல், எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க நாம் யார்?

சரி, சாருதான் இறந்த பிறகு பிரமிளையும் சுஜாதாவையும் பாராட்டுகிறார். ஜெயமோகன் என்ன செய்கிறார்? கமலாதாஸ் இறந்தவுடன் அவர் குரூபி, தன்னுடைய நிறைவேறாத காமத்தினால்தான் (பச்சையாகச் சொன்னால் படுக்க அலைந்தார் என எழுதியிருந்தார்!) எழுதினார் எனச் சொன்ன போது எங்கே போயிருந்தீர்கள். அப்போது உங்கள் அறச் சீற்றத்தை இப்படித்தான் காட்டினீர்களா?

விஷ்ணுபுரம்தான் முதலில் ஃபிரெஞ்சிற்குப் போக வேண்டுமாம்! உங்கள் மனச் சாய்வு தெளிவாகவே தெரிகிறது பைத்தியக்காரன். இப்போது சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலைக்கூட ஒரு முறை கஷ்டப்பட்டு படித்து விட்டேன், ஆனால் விஷ்ணுபுரத்தை இவ்வளவு வருடங்களில் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை! அவரது தலையணை புத்தகங்களின்மேல் ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது.

அடுத்த கண்டுபிடிப்பு : ஜீரோ டிகிரி ஐரோப்பிய வடிவ பாணி நாவலாம், அதனால் ஃபிரென்சில் மொழிபெயர்த்தால் செல்லுபடியாகாதாம்! நாளையே நாவல் என்கிற வடிவமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதானே, அதனால் ஆங்கிலம், ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கவே வேண்டாம் என்றுகூட நீங்கள் சொல்லக் கூடும் - அதற்குள் உங்கள் விருப்பப்படி விஷ்ணுபுரம் நாவலை ஃபிரெஞ்சில் மொழிபெயர்த்து விடட்டும்.

உங்களுக்கு ராசலீலாவில், ஜீரோ டிகிரியைப் போன்ற அடர்த்தியோ கட்டுடைப்போ தெரியவில்லை. அது உங்கள் அபிப்ராயம். ஆனால் எனக்கு ராசலீலா அவரது முந்தைய ஆக்கங்களை விட அதிகமாகப் பிடித்திருக்கிறது. இதெல்லாம் தனிப்பட்ட நபர்களின் கருத்து என்பதற்குமேல் ஒன்றுமில்லை. உடனேயே ஜீரோ டிகிரிவரை மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள், பிறகு இந்த நிலைமை என்று சொன்னால் எப்படி?

சாரு எவ்வளவு மோசமானவர் என்பதைக் காட்ட நீங்கள் ஜீரோ டிகிரிக்குப் பிரச்சனை வந்தபோது ஜெமோதான் ஆதரித்தார் என்கிறீர்கள். இது என்னய்யா புதுக்கதை என்றால் ஜீரோ டிகிரி நாவலின் ஒரு பதிப்பில் வெளியான ஜெமோவின் 5 வரிக் கடிதமாம்! அந்தப் பதிப்பில் அவரது கடிதம் மட்டுமா வந்தது? பலர் அந்நாவலைப் பாராட்ட ஜெமோ செய்திருந்தது கோஷ்டி கானமாகத்தான் தெரிகிறது எனக்கு.

எழுத்தாளன் என்பவன் தன் புத்தகங்களை வெளியிட பல பதிப்பகங்களை அணுகுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் தன்னுடைய புத்தகங்களை வெளியிடாததால், தமிழினி வசந்தகுமாரை எங்கே குறிவைத்துத் தாக்கினார் சாரு? தமிழினியில் புத்தகங்கள் எழுதுவதால் ஜெமோ உயிர்மையை எதிர்க்கிறார் என்று எழுதினால் அது தமிழினியைத் தாக்குவதா? பண்பாட்டைப் பேசுதல் என்ற கட்டுரையில் மற்ற எல்லாப் பத்திரிகைகளையும் மட்டம் தட்டி தமிழினி, வார்த்தை போன்றவற்றை ஜெமோ தூக்கிப் பிடித்ததற்கான எதிர்வினை அது. மனதாரச் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் கட்டுரை ஏற்புடையதுதானா?

இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது.

மற்றபடி ஒரு புத்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பெரிய தவறே இல்லை - இப்படி எவ்வளவு புத்தகங்களைப் பற்றி, எவ்வளவு சினிமாக்களைப் பற்றி வந்திருக்கிறது. என்னவோ தமிழ்கூறும் நல்லுலகமே சாரு சொல்லிவிட்டால் படிக்காமல் விட்டுவிடப் போகிறதா என்ன? அதற்கான எதிர்வினையையும் நாகார்ஜூனன் செய்துவிட்டார். எனக்கென்னவோ நீங்கள் அதற்காக உங்கள் பதிவை எழுதியது போல் தெரியவில்லை.

அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் அவராவது பதில் சொல்ல வாய்ப்பிருக்கும் மனிதரைப் பற்றி எழுதுகிறார். ஆனால் ஜெமோ அந்த வாய்ப்பில்லாத இறந்து போனவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார். நீங்கள் ஜெமோவை விட்டுவிட்டு சாருவிற்கு மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினை செய்கிறீர்கள். உங்களின் இந்தத் தேர்வுதான் என்னை உறுத்துகிறது. இன்னொன்று, சிறுபத்திரிகைக்காரர்கள் என்றாலே சண்டை (மட்டுமே) போடுபவர்கள் என்பதாகச் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், எழுத்து காலம் முதற்கொண்டு, படிகள், பரிமாணம், கசடதபற, பிரக்ஞை, மீட்சி, கல்குதிரை, நிறப்பிரிகை ஈறாக தமிழில் பல விஷயங்கள் சாத்தியமானது சிறுபத்திரிகைகளால்தான் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதற்கு உங்களின் இந்தப் பதிவும் துணை போவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.