ஆலகாலம்

வானவில்லின் தோளேறி வந்து
ரசவாதக் குணப்படுத்தலுக்குக் காத்திருக்கும்
உயர் ரத்த அழுத்தத்திற்கு
டெல்ஸார்டன் 40 மி.கி.
இதயப் பாதுகாப்பிற்கு
எகோஸ்ப்ரின் 75 மி.கி.
மூத்திரத்தில் அல்பமின் அளவு கூடியதற்காய்
டெல்ஸார்டன் மாறி டெல்ஸார்டன் H 40 மி.கி.
கொழுப்பிற்கு ஒரு எழவு
கால் கை எலும்புகள் திடமாக இன்னொன்று
குடிக்காதே புகைக்காதே
அறிவுரைகள் கூடவே
மாத்திரை வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி

காமக் கதைகள் 45 (28)

வாழ்க்கையில் எந்தக் காதலியுமில்லாமல் வறண்டிருந்தபோது அதீதன் தன் நண்பன் குமாரிடமிருந்து வினிதாவின் அலைபேசி எண்ணை வாங்கியிருந்தான்.

'என் ஆள்தான், பரவாயில்லை, நீ வச்சுக்கோ' எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டான் குமார்.

வினிதாவிடம் நாளொன்றிற்கு 4 மணிநேரம் மொக்கை போட ஆரம்பித்தான் அதீதன். அவள் மிஸ்ட் கால்தான் கொடுப்பாள், இவன்தான் அழைக்க வேண்டும்.

மெதுவாக டிரைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தான். அவளைக் கல்லூரியில் சென்று விடுவது, அழைத்துக் கொண்டு வருவது என. அப்புறம், காஃபி ஷாப், சினிமா, மகாபலிபுரம் ரிசார்ட் என வளர்ந்தது.

அவளுக்குத் திரைத்துறை விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தன. அந்தப் பழைய பிரபல மா வரிசை நாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் கதாநாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்தைச் சொன்னாள். ஒரு ரூபாய் நாணயத்தை முலைக்கடியில் வைப்பாராம். நாணயம் விழுந்து விட்டால், அந்த நடிகை தேர்ந்தெடுக்கப்படுவாள். முலை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாணயம் கீழே விழாவிட்டால் ரிஜக்டட்! வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பான் அதீதன். தன் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம் நாயகன் + பிரபல நாயகியின் வீடியோவைக் காண்பிப்பாள், அல்லது இன்னொரு (இப்போழுது திருமணமாகிவிட்ட) நாயகியும் அவளது காதலனும் இணைந்திருக்கையில் எடுத்த வீடியோவை.

அதீதனின் செல்ஃபோனில் ப்ளூடூத் இல்லாததால் இதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்கு வருத்தமே.

சில மாதங்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் ‘எனக்கு செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. நிறையப் படிக்கணும், அதனால நாம இனிப் பழக வேண்டாம்' என்றாள். அதீதனுக்கோ வியப்பு.

குமாரிடம் சொன்னான். ‘அவளுக்கும் போரடிக்காதா... அதான் மேட்டர் முடிச்சிட்ட இல்ல, அப்புறம் என்ன லூஸ்ல விடு' என்றுவிட்டு பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வினிதாவின் எண்ணைக் கொடுத்தான்.

‘பாஸ்கர் பாவம், நாலஞ்சு தடவை கேட்டுட்டான்...' என்றான்.

எக்ஸாம் போன இடம் தெரியவில்லை. இப்போது பாஸ்கரனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அதீதனும் வேறு ஒருத்தியைத் தேடத் துவங்கிவிட்டான்.

இரண்டு வலைப்பதிவுகள்

அவ்வப்போது நான் வாசிக்கும் எனக்குப் பிடித்த பதிவுகளை அறிமுகம் செய்து எழுதி வருகிறேன். அப்படிச் சமீபத்தில் என்னைக் கவர்ந்தவர் யாத்ரா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர். இவரது வலைப்பூ முகவரி :
http://www.yathrigan-yathra.blogspot.com/

இவரது சில கவிதைகள் அட போட வைக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று :

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமன்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

(http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_14.html)

புதிதாக வலையுலகத்திற்கு வந்தவர் எனத் தெரிகிறது. ஒரு மாதத்தில் 25 பதிவுகள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து அவர் இயங்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இவரை வாசித்துப் பாருங்கள்; உங்களுக்கும் பிடிக்கலாம்.

***

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் வா மு கோமு. எனக்குத் தெரிந்து இருபது வருடங்களாக சிறுகதை, நாவல், கவிதை என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். (1990களின் ஆரம்பத்தில் இவர் நடத்திய நடு கல் என்ற சிறுபத்திரிகையின் சில இதழ்களில் என்னுடைய கவிதைகள் வந்திருக்கின்றன). இவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் வலைப்பதிவிலும் எழுதுகிறார் என்பது தெரிந்திருக்காது. முகவரி : http://www.vaamukomu.blogspot.com/

இவரது 1/2 பியருக்கு வந்த மப்பு கவிதையை ஏற்கனவே இந்தப் பதிவில் ஏற்றியிருக்கிறேன் (எ-கவிதை என்ற லேபிளில் பார்க்கலாம்).

காமக் கதைகள் 45 (27)

அரட்டைப் பெட்டியின் மூலம் அறிமுகமானவள் ப்ரீத்தி. மெயிலிலும் அரட்டையுமாக அவர்களது நட்பு வளர்ந்தது. அதீதன்மேல் பெருமக்கறை கொண்டிருந்தாள் அவள். அவசரத்திற்கு அறைவாடகை கட்டுவதிலிருந்து ஆடை வாங்கித் தருவது வரை பல செய்திருக்கிறாள். நடுவில் அவன் கேட்கும் புத்தகங்கள் வேறு.

நேர்ச் சந்திப்பில்லாமலேயே இத்தனையும் செய்துகொண்டிருந்தாள். அவனுக்குச் சந்தேகமாகவேயிருந்தது, இது வெறும் அக்கறை சார்ந்த ஒன்றா அல்லது காதலா என்று. அந்தச் சந்தேகம் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும். குழப்பத்திலேயே கழிந்தன நாட்கள்.

அரட்டைப் பெட்டியில் அதீதனின் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் மூலமாகவே அவர்கள் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.

குழப்பமாகக் காதலிப்பதைவிட தெளிவாகப் பிரிந்து போகலாம்.

பல மாதங்கள் கழித்தே இருவரும் நேரில் சந்தித்தனர். அதற்குமுன்பே புகைப்படங்களைப் பரிமாற்றிக் கொண்டிருந்தாலும், நேரில் பார்க்கும் கிளுகிளுப்பு இருந்தது. இருவரும் தங்கள் காதலைச் சொன்ன சில நாட்களில் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது லண்டனிலிருந்த அவள் சாதிப் பையனொருவனுடன்.

எவரிடமும் எதைச் சொல்லியும் விடைபெற்றிடலாம். அவளிடம் எதைச் சொல்லாமலும்.

அன்றிரவு மூக்குமுட்டக் குடித்துவிட்டுச் சலம்பிக் கொண்டிருந்தான் அதீதன். அதை படிக்க நீங்கள் வேறு கதைக்குச் செல்ல வேண்டும்.

எல்லாரிடமும் எதையாவது சொல்லி விடைபெறலாம். உன்னிடம் எதுவும் சொல்லாமலும்.

திருமணமாகி லண்டன் சென்ற பிறகும் அவனுடன் மின்னஞ்சல் தொடர்பிலிருந்தாள் ப்ரீத்தி. அவனைத் தொடர்ந்து காதலிப்பதாய்ச் சொன்னாள். அங்கிருந்து தொலைபேசி அரைமணிநேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவன் அவளைத் திரும்ப வர அழைத்தான். அது முடியாதென மறுத்தாள். அவனால் அவளது உறவைத் துண்டிக்கவும் முடியவில்லை, தொடரவும் முடியவில்லை.

சொசைட்டின்னு பார்த்து இனிமே எந்த முடிவும் எடுக்க மாட்டேன், இனிமே எனக்காக மட்டும்தான் யோசிப்பேன்.

விடுமுறைக்கு ப்ரீத்தி இந்தியா வந்திருந்தபோது மீண்டும் சந்தித்தார்கள். முதல் முறையாக உடலுறவு கொண்டார்கள்.

பிறகு அவள் மறுபடியும் லண்டன் சென்றுவிட்டாள்.

புதிதாக வந்தனா அதீதனின் வாழ்வில் வந்தாள். அவளுடன் பழக்கமேற்பட்ட பிறகு, அதீதன் ப்ரீத்தியைத் தவிர்க்க ஆரம்பித்தான். ஆனாலும், யாரையோ ஏமாற்ற இந்தச் செய்தியை வைத்திருந்தான் :

என் விஷம் உண்ணும் பெண் நீலகண்டம் நீ.

காமக் கதைகள் 45 (26)

இந்தப் பெண்கள் எவ்வளவு சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்!' என்று புலம்ப ஆரம்பித்தான் அதீதன். அதுவும் உன்னை மாதிரி ஆளுங்களை நம்பவே கூடாதென்றான். எனக்கு திடுக்கென்றது என்னைப் பெண்ணாகப் பார்க்கிறானே என்று. இல்லையாம், அவன் சொல்ல வந்தது என்னைப் போன்ற ஊமைப் போல இருக்கும் பெண்களை. சரி, போய்த் தொலையட்டும் என விட்டுவிட்டேன். ஒருமுறை குடிபோதையில் என்னை ஒம்போது என்றுகூடத் திட்டியிருக்கிறான்.

மகேஷ் பிரபல நிறுவனமொன்றில் பெரிய பதவியில் இருப்பவன். அரட்டைப் பெட்டியில் ஒருநாள் மாதங்கி வந்து மகேஷின் மின்னஞ்சல் முகவரி கேட்டிருக்கிறாள். இவனும் எதார்த்தமாகக் கொடுத்திருக்கிறான். அன்று வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் மகேஷிடம் அடுத்த வாரம்தான் பேசமுடிந்திருக்கிறது. பேச்சு வாக்கில் மாதங்கியிடமிருந்து மெயில் வந்ததா எனக் கேட்டிருக்கிறான். மகேஷ் சொன்ன பதில் அவனைத் தூக்கி வாரிப் போட்டது. 'ம்ம், நேர்லகூட ரெண்டு வாட்டி மீட் பண்ணிட்டோமே...' அடிப்பாவி. தான் பழகிய இந்த ஆறுமாத காலத்தில் ஒரே முறைதான் சந்தித்திருக்கிறாள், ஆனால் மகேஷுடன் அதற்குள் இரண்டு முறையா... ம்ம், நடக்கட்டும்.. இந்தப் பயல் மகேஷ் அவள் பின்னாடியே சென்றிருப்பான், அதனால்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டான். அடுத்த குண்டைப் போட்டான் மகேஷ். ‘நேத்து ஃபோன் பண்ணி உங்க வீட்டுப் பக்கம்தான் இருக்கேன், வரட்டுமா என்றாள்.. சரி என்று வரச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தேன்' என்றான்.

நல்லா வேணும் அதீதனுக்கு.

திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆனதால் போரடித்தது எனக்கு. நைஸாக ஏதாவது சின்ன வீடு செட்டப் செய்யலாமா என்றுகூடத் தோன்றியது. ஒருமுறை அதீதனிடம் அவனது பெண் நண்பர்கள் யாரையாவது எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கச் சொன்னேன். ‘உனக்காவது பெண்டாட்டி இருக்கா.. நானே கையில பிடிச்சுகிட்டு அலையறது எனக்குத்தான் தெரியும்' என்றுவிட்டான்.

நானே பிறகு ஒரு பெண்ணை கஷ்டப்பட்டு தேற்றினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் என் ராசி, அவளும் கொஞ்ச நாட்களிலேயே போரடித்துவிட்டாள்.

இதற்கு நடுவில் நானும் அவளும் ஒரு கதையில் ஹோட்டலில் ரூம் போட்டது என் மனைவிக்குத் தெரிந்து ஒரே ரகளை. எல்லாமே கதைதான் என்பதை நிரூபிக்க அவள் எனக்கு எழுதியிருந்த கற்பனைக் கடிதத்தை என் மனைவியின் கனவில் வாசித்துக் காட்டினேன். நானும் அதீதனும் நெருங்கிப் பழகுவதைப் பார்த்து சிலர் என்னை கே எனக்கூடச் சொல்வார்கள், நம்பாதே எனச் சொல்லியிருக்கிறேன் அவளிடம். 45வது கதையில் வரும் என் காதலியை முடிந்தால் அடித்து விரட்டிவிட்டு ஒப்புக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறாள்.

'இன்னும் ஒரு வாரம் அவங்க பழகினா நிச்சயம் மகேஷ் மேட்டர முடிச்சுடுவாண்டா' என்றான் அதீதன். உன் பிரச்சனை என்ன, நீ செய்யாததா அல்லது வேறொருவன் செய்வதா என்றேன். ‘பெரிய புடுங்கி மாதிரி பேசாதே..' எனச் சொல்லி ஃபோனை வைத்துவிட்டான்.

மாதங்கியைப் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான். ‘என்னா ஸ்ட்ரக்சர்.. எப்படியாவது அவளை முடிச்சுடணும்' என்பான். ஆனால் நான் அப்படியெல்லாம் பேசுவதில்லை. எழுத்தாளனுக்கென்று ஒரு சமூகப் பிரக்ஞை இருக்கிறதல்லவா. பொலிட்டிக்கலி கரெக்டாக வேறு இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.

'இந்த எழுத்தாள புண்டா மவனுங்கள நிக்க வச்சு ஒதைக்கணும்' என்றான் ஒருநாள். அவனது கதைகளில் வந்த மதுமிதாவை அவனுக்குத் தெரியாமல் ஆட்டையைப் போட்டுவிட்டேன், அந்தக் கோபம்தான். ஆனாலும் பாருங்கள்.. ஒரே முறைதான் அவளுடன் உடலுறவு கொண்டேன். சாதாரணமாக ஒழுங்காக வேலை செய்யும் என் சாமான் அன்று பார்த்து மக்கர் செய்துவிட்டது. அதற்குப் பிறகு அவள் என்னைச் சந்திக்கவேயில்லை (இதையே திலீப்குமாரின் ஒரு சிறுகதையைப் போல விலாவரியாக எழுதினால் இலக்கியம் என்பார்கள், இப்படி எழுதினால் ஆபாசமென்பார்கள்.. ம்ஹூம், என்ன செய்ய..).

சரி, இந்தக் கதையை இலக்கியமாக்கி விடுவோம்.. வட்டச் சுழலில் பாதியில் நிற்பதுபோல் இருக்கிறது என்றான் கேலிங்கன்.

சிதைவுகளின் ஊடே

அந்தச் சம்பவம் நடக்கும்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும். ஊர்சுற்றுவதும், வழியில் பார்க்கும் பெண்களைக் கிண்டல் செய்வதும், எலிமெண்ட்டரி ஸ்கூலில் உட்கார்ந்து தம்மடிப்பதும்தான் பொழுதுபோக்கு.

தெருவில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவைத்திருந்தோம். என் பக்கத்தில் வரதனும் திருமலையும் நின்றிருந்தார்கள். திருமலையின் கையில் கிரிக்கெட் ஸ்டம்ப் இருந்தது. திருமலையின் பட்டப்பெயரான ஆடு (அவனது தலையும் கழுத்தும் ஆட்டைப் போலவே இருப்பதால் அந்தப் பெயர்) என்பதைச் சொல்லிக் கிண்டல் செய்தபடி ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கையில் இருந்த ஸ்டம்பால் என் தலையில் ஓங்கி அடித்தான். கண்களில் பூச்சி பறக்க அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டேன்.

சிறிதுநேரம் கழித்து எழுந்தபடி ‘ஏண்டா அடிச்சே' என்றேன். அவன் ‘கிட்டே வராதே. வந்தா மறுபடியும் அடிப்பேன்' என்றான். எனக்குப் பயமாயிருந்தது. தலை வீங்கியிருந்தது. பயத்தை மறைக்க ‘ஏன்னு சொல்லு, பரவாயில்லை' என ஏதேதோ சொல்லியபடி அவனை நெருங்கிப் பாய்ந்தேன். அவனை அடிப்பதற்குள் வரதன் வந்து தடுத்துப் பிரித்துவிட்டான் எங்களை.


***


எழுத்து என்கிற செயல்முறை பற்றிப் பேசும்போது, மொழியின் தீவிர சாத்தியப்பாடுகளைப் புரிந்து கொள்ளும்போது, ஆசிரியனாகிய நபர் பற்றிய கருத்துகளே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அதாவது, "வாசித்துக் கொள்ளப்படுகிற எந்த ஒரு எழுத்துப் பிரதிக்கும் மூலமாக இருப்பவன், கர்த்தாவாக இருப்பவன் அதன் ஆசிரியன் என்கிற நபர்தான்" என்கிற மரபான புரிதல் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எழுதுபவனும் எழுத்துருவே. இன்னும் சொல்லப்போனால், குறியீடுகளைக் கட்டமைக்கிற சொல்லாடல்களத்தில் ஏதோ ஓரிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட எழுதுகிற நபர். அவ்வளவுதான்.
***
From : Ahilan (ahilan_1978@yahoo.com>;
Date : Saturday, March 07, 2009 10:23 AM
To : Pravin (los_pravin68@gmail.com>;
Subject : Hai

அன்புள்ள பிரவீன்,

நலமா? நான், அம்மா அனைவரும் நலம்.

இங்கு என்னுடைய நிறுவனத்தில் நான்கைந்து பேரை வேலையைவிட்டு எடுத்துவிட்டார்கள். அதனால் கடுமையான பணிச்சுமை. வாயைத் திறந்து அருகிலிருப்பவர்களிடம் பேசக்கூடப் பயமாயிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட தளங்களைத் தவிர பிறவற்றிற்குச் செல்ல முடியாது... இதை அனுப்புவதுகூடக் பிரௌசிங் செண்டரிலிருந்துதான். வேறு வேலைக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன்... பார்ப்போம்.

ராஜா சித்தப்பா வந்திருந்தார் முந்தா நேற்று. உன்னைப் பற்றி விசாரித்ததாக எழுதச் சொன்னார். எழுதிவிட்டேன் :)

நீ தொலைபேசியில் பேசுவதேயில்லை என அம்மா வருத்தப்பட்டார்கள். நேரம் கிடைக்கும்போது பேசேன். தாரணி வயதுக்கு வந்து விட்டாள். சீர் செய்ய வேண்டும், அதனால் உன்னைக் கூடுதலாகப் பணம் அனுப்பச் சொன்னார்கள் அம்மா.

சரி, பிற, பின்.

அன்புடன்,
அகிலன்.


***

சிதறல்கள்தான் ஒரே இலக்கிய வடிவம். கதை அமைப்பு என்பதுதான் கதையானதன் இறுதி அர்த்த தளம். செயல்ரீதியான பங்கு பெற்றலின்மூலம் வாசகன் எழுத்துப் பொருள் மாற்றியமைத்துக் கொள்கிறான். அதை அணுகி, தட்டி அதன் உள்ளிரைச்சல்களைக் காது கொடுத்துக் கேட்கிறான். அந்தப் பொருள் உடனடியாக தன்னைக் கொட்டிவிடுவதாக சௌகரியமாக இருந்து கொள்வதில்லை.


***

எனக்குப் பணத்தட்டுப்பாடு வரும்போது நண்பர்களிடமிருந்து பணத்தைத் திருடிவிடுவேன். ஆனால் இதுவரை மாட்டிக் கொண்டதேயில்லை. போன வாரம்கூட குடிக்க வேண்டும் போல் தோன்றியது, கையில் பணமில்லை. அறை நண்பனின் சட்டைப் பையிலிருந்து 100 ரூபாய் பணத்தைத் திருடினேன். ஆனால் அன்றைய தினம் குடிக்கவில்லை. பிறகு மறுபடியும் பணத்தைத் திரும்ப வைக்க மனமில்லாமல் நானே வைத்துக் கொண்டேன்.


***

மேலே பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். குறுக்கே ஒரு நாய் ஓடியது. என்னைத் திரும்பிப் பார்த்ததது. அதன் கண்களில் குரூரம் என்னை பயம்கொள்ள வைத்தது. வேகமாக - கிட்டத்தட்ட ஓடியபடி - அந்தத் தெருவைக் கடந்தேன். அதன்பிறகுதான் யாராவது பார்த்திருந்தால் அசிங்கமாயிருக்குமே எனத் தோன்றியது. நாய்க்குப் பயந்தது கொஞ்சம் சிரிப்பாகக்கூட இருந்தது.


***

கடையில் சிகரெட் வாங்கினேன். சில்லறையைச் சத்தமெழும்படி தன் பெட்டியில் போட்டான் கடைக்காரச் சிறுவன். வேறு ஒருவரிடம் வியாபாரம் பேச ஆரம்பித்துவிட்டான்.


***

இந்தக் கதையில் உள்ள சில வரிகளை யார் எழுதியது எனச் சொல்லாமல் செல்வது அறமற்ற செயல் என்றார்கள் கதையை எழுதுவதற்குமுன்பே வாசித்துவிட்ட கிளிங்கோவிட்சும், கி பி ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையும் போன கதையில் வந்த காத்தவராயனும். மூலப் பிரதிகளைத் தொலைத்துவிட்டேன், அதனால் எழுதியது யார் எனத் தெரியவில்லை என்றேன். ஆனால் அது கதையில் இவ்வாறு வந்திருந்தது : ஆசிரியனை மட்டுமல்ல பிரதியையும் கொன்றுவிட்டேன் என்றேன். சிறிது யோசனைக்குப்பின், எனது இனக்குழுவில் கொலையும் ஒரு primordial sentiment தான் என்றேன்.


***

வேர்வையில் உடல் கசகசத்தது. அறைக்குச் சென்றதும் முதல் வேலையாகக் குளிக்கவேண்டும். பேசாமல் அறையிலேயே இருந்திருக்கலாம். என்னவோ ஆசைப்பட்டு இங்கு வந்து, வந்ததும் நடக்காமல் போனதில் கொஞ்சம் வெறுப்பாகக்கூட இருந்தது என்மீதே. சற்று தூரம் சென்றதும் மரங்கள் அடர்ந்த சாலை தெரிந்தது. மரங்கள் சாலைக்கு ஒரு அழகைத் தந்துவிடுகின்றன. மரங்களின்கீழ் நடக்கும்போது ஒருவித பாதுகாப்பு உணர்வும் பயமும் ஒருங்கே ஏற்படுவது புதிராகவே இருக்கின்றது.

அந்தச் சாலைக்குச் செல்லவில்லை நான்.

எனக்குப் பக்கவாட்டில் இடிப்பதுபோல் வேகமாக வந்து என்னை உராய்ந்தபடி சடன் பிரேக் அடித்து நின்றது ஒரு ஸ்கூட்டர். தெருவில் போக்குவரத்துகூட இல்லை.. ஒரே ஒரு சைக்கிள்தான் என்னருகில் சென்றுகொண்டிருந்தது. ஸ்கூட்டர்காரன் ஒரு மன்னிப்புகூடக் கேட்காமல் வண்டியை ஓட்டிச் சென்றான். மக்கள் ஏன் இப்படி அராஜகவாதிகளாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதிசயமாக நான் போகவேண்டிய பஸ் வந்தது. 100 ரூபாயைக் கொடுத்து டிக்கெட் கேட்டேன். ‘ஏன்யா இப்படி நோட்டைக் கொடுத்து கழுத்தறுக்கறீங்க... இறங்கிப் போய்யா...' என விசிலை ஊதி என்னை இறக்கிவிட்டார். தெருநாயைப் போல் உணர்ந்தேன்.


***


அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே... நான்காம் வட்டம் சார்ப்பாக அண்ணனுக்கு இந்த மலர்மாலையைப் பொன்மாலையாக, இந்தக் கதர்த் துண்டைப் பொன்னாடையாக அணிவிக்கிறேன்.. யோசித்துப் பாருங்கள் இந்த ஆட்சியில் விலைவாசியைத் தவிர வேறு ஏதாவது உயர்ந்திருக்கிறதா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மளிகைப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தருவோம், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம்... இந்த நாட்டை வல்லரசாக்குவோம்.

***

சிதறு தேங்காய்ச் சில்லுகளாக வார்த்தைகள் நாலாபுறமும் இறைந்து கிடக்கின்றன.

உய்விக்க வந்த நான் லீனியர்

சிறு பத்திரிகை மகாஜனங்களுக்கு வணக்கம் சொல்லி ஏன் ஒன்றும் சொல்லாமல் ஒரு நான் லீனியர் கதை முடிக்க நான் ஏதோ சொல்ல காரியம் முக்கியம் செயல் அதுவே சொல் எங்கள் தாரக மந்திரம் ஓம் ஹீரீம் க்ரீம் சட் புல்லட்லே என்ன ஸ்பீட் பீட் பீட் போலீஸ்னாலே தொப்பை பெல்ட் போட்டா வயிறு வலிக்கும் பசி பட்டினி ஒனக்கு இலக்கியம் மசிரு மட்டை எதுக்கு என்று கேட்க மாட்டான் இந்த மன்னன் ஏன்னா இவன்

ரஜினி கமல் சத்யராஜ் விஜயகாந்த் முக்கியமா குஷ்பூ போல உன்னால குண்டாக முடியுமா சினிமா படம் தியேட்டர் உனக்கு ஃபிரெஞ்ச் தெரியாது மிஷேல் ஃபூக்கோ உன்னை மன்னிக்க மாட்டான் எனக்கு உன்னை ஸ்டர்க்சுரலிசம் பிரம்மராஜன் ஒருவன் / ஒரு / உயிர் / 5 / 36 / 16 / 12 மேலே போன மாடிக்கு அக்னிக்கு ஏற்பட்ட கதிதான் அமெரிக்கா ரஷ்யா சோவியத் யூனியன் ஒலிம்பிக் ஹாக்கி நீ எதுக்கு விமன்ஸ் டென்னிஸ் பார்க்கிறாய் எனத் தெரியாது அதற்காக ஜேகேயிடம் வராதே போகாதே நிற்காதே படுக்காதே ஓடாதே நடக்காதே தே தே தெகார்த்தே

ஏன் ஞாபகம் வரணும் இது ஒரு நான் லீனியர் கவிதை என்று சொன்னாலே சினிமா தான் பாட்டு தான் வைரமுத்து மேத்தா வானம்பாடி நீங்கள் வல்லினங்கள் அல்ல ஒரு வானம்பாடிக் கும்பலுக்கு நல்ல கவி பிரமிள் தான் விமர்சகன் தான் சண்டை தான் நம்பியார் சண்டை பானுமதி கொண்டை எம்ஜியார் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புரட்சித் தங்கை புரட்சித் தம்பி புரட்சி புரட்சி

அடச்சீ வாயை மூடு கோபம் வருது அப்துல் ரகுமானா நீ எனக்கு எதிர் வீட்டு விளக்கு வெளிச்சத்தில் சைக்கிள் சாவி போட்டு உடைக்காதே மரக்கிளையைன்னு Roland Barthes உன்னை சுட மாட்டேன் அர்த்தமே இல்லைன்னு இப்போ பன்முக அர்த்தம்ன்றியே A.D. Nattal என்ற உன்னை ஹைடெக்கர் காட்டில் போடாமல் சூரியனில் சாடாமல் கடலில் வாடாமல் ரோட்டில் பாடாமல்

பாடாத பாட்டெல்லாம் பாடி வராதே இலக்கியம் பேசாமல் இருக்க என்னால் முடியும் you in the world and the world in you என்று நீட்ஷே நீட்ச்சே சொல்ல வில்லை அவன் anthologyயில் மௌனி இல்லை என்பது தெரிவதன் மூலம் வியாதி வராத ஒருவனைப் பார்க்க முடியுமா

இந்த ஜன்னல் வழியாகத் தெரியும் நினைவுப் பாதையில் ஒரு போரான சம்பவத்தைச் சொல்லு பார்க்கலாம் கண் காது மூக்கு வாய் வாயாடி பேயாடி ஆணாதிக்கச் சமூகம் வ. கீதா எஸ்.வி.ராஜதுரை போங்கடா புண்ணாக்குப் பசங்களா என அவர்கள் சொன்னால்

நீ வீட்டுக்கு வீடு காமிரா அகிரா குரசாவா அடூர் மம்முட்டி தகழி பஷீர் சரஸ்வதி ராம்னாத் ஒரு பாட்டு எங்கள் அலுவலகத்தில் ஒருவன் நன்றாக சத்தமாகப் பாடாதே அப்படிப் பாட வேண்டுமென்றால் அடுத்த அறைக்குச் சென்று டைப் அடி எனக்குக் காது கேட்காது காது போ கோபம் வரும்

மன நோய் கோபிகிருஷ்ணன் ஒவ்வாத உணர்வுகள் சிட்டாடெல் கநாசு என் கதையை எழுத என்ன செருப்பு காலில் இருந்தாலும் அந்தச் செடி போல் வருமா உன் தலை உள்ளாடை இல்லாத புரட்சி செய்யும் தலையைக் கண்டாலே ஏன் உனக்கு ஆத்திரம் ஆதிக்க பூர்ஷ்வா எல்லா எழவையும் ஒரே கதையில் சொல்லாதே

அடுத்த முறை பேசுவதற்கும் ரோட்டிலே பஸ் வரலாம் ரயிலில் போவேன் அதற்கு தண்டவாளம் போடணும் அதற்கு மின்சாரம் வேண்டும் அதற்கு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் போடணும் அதற்கு அதற்கு அதற்கு எல்லாரும் மண்டையைப் போடணும்

என் வீட்டு மாடியில் சிறு அறையில் நான் இருக்க மாட்டேன் ஏனெனில் இலக்கியக் கூட்டம் காகங்கள் நெய்தல் விருட்சம் கிழிச்சுப் போடு போய் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பாரு அதுதான் உனக்கு நாடகம் நவீன நாடகம் பார்க்காதே ஞாநி நிஜந்தன் புரியாமே ஏன் புரியணும் குறுக்கே பாய்ந்த நாயொன்று அடிபட்டு ஓடிவிட்டது

என் காலில் ரத்தம் இன்று காலை குளித்து விட்டு தண்ணீர் தட்டுப் பாடு நம் ஊரில் ஜப்பானில் ஜெர்மனியில் ரில்கே குளித்திருப்பானா அன்று நீ பேச முடியாது என்பதைச் சொல்ல முட்டங்கால் அளவே உள்ள தண்ணீரில் குதித்து மகிழ்கிற குமிளிகள் என்ற வலம்புரி ஜானின் வரிகளை கிழித்துப் போடு அதுதான் இலக்கியச் சேவை சமூகச் சேவை தேங்காய் சேவை எலுமிச்சை சேவை

மதர் தெரசா சாமுவேல் பெக்கட் waiting for godot நாடக விழாவில் ஏன் எஸ்.வி.சேகர் பேசணும் கூடாது குறுக்கே குறுக்கே குறுக்கே நர்மதா அணை கட்ட மேதா பட்கர் பிரச்சனை செய்தால் சிறையில் அடை தனிமைச் சிறை தான் சிறந்தது வலுவானது பைத்தியம் பிடிக்க வைப்பது ஜன நாயக பூர்வமானது இந்தியா அற வழியிலேயே சென்று

யாதும் ஊரே யாவரும் கேளிர் போங்க தமிழ் தான் என்னோட உயிர் மூச்சு உடல் மூச்சு கால் மூச்சு காற்று செடி மரம் கொடி அசையாமல் தசையாமல் பசையாமல் என்ன காண்டம் உபயோகிக்கிறாய் நீ பின் தரையெல்லாம் ஏன் பசை

மிச்சத்தை அப்புறம் எழுதிக்கோ சாப்பிட்டு விட்டு வரலாம் இப்படி எழுதினால் ஜெயமோகன் நாவல் மாதிரி 3000 பக்கம் எழுதலாமா முட்டாப் பசங்களா

நான் நீ சாரு நிவேதிதா ஸில்வியா நாகார்ஜூனன் de-construction கூறு படுத்தல் க்யூபிசம் ஆர்ஃபிசம் ஃபாவிசம் தெரியாமல் இருப்பதால் செத்து விட்டாய் மூன்று வருடங்களுக்கு முன்னால் தெரிதா உன்னைச் சாகடிக்க வில்லை சா சா சா புல் புடுங்கப் போங்கடா அறிவு கெட்ட முண்டங்களா என்ற அறிவுரை அறவுரை அறம் மறம் கற்பு கண்ணகி சிலை மாதவி முலை ரொம்ப ஜாஸ்தியாகி விட்டது சென்னை கடற்கரையில்

தண்ணி உப்பு விலையா அது கொலை என்ன எதுகை கை மோனை னை நான் பானை வாங்க மாட்டேன் ஃபிரிட்ஜ் வாங்க விற்க அணுகவும் பக்கத்திலுள்ள ரிலையன்ஸ் ஸ்டோர் அனைத்திலும் சிறந்தது ரிலையன்ஸே பொட்டிக் கடைகளை மூடிடுங்க வாங்க வாங்க எல்லாரும் வாங்க ரிலையன்ஸிற்கே கடை விலாசம் எனக்குத் தெரியும் சொல்ல மாட்டேன்

சொல் எழுத்து சொல் பொருள் எழுதாதே அது வியாபார இலக்கியம் நான் ஆனால் ஃபிரட்ஜிற்குப் பேனாவிற்கு மையிற்கு என எதற்காகவாவது பேன்ட் போட்டு பஞ்ச கச்சம் வேட்டி வரிஞ்சு கட்டு பாட்டை பாரதி போல் புதுமைப் பித்தன் போல் குபரா போல் எல்லாம் போல்தான் இது தான்

தத்துவ விசாரம் என்று சொல்லி இந்த நான் லீனியர் கதையை முடிப்பது உங்கள் ஊழியன் என்று யார் சொன்னது நடுவில் நடுவில் நடுவில் பேசாதே நானே உங்கள் உண்மைத் தொண்டன்

(பின் குறிப்பு : இந்தக் கதையில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக உபயோகப் படுத்தப் படாததால் இது சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித் தளத்தினை உடைக்கவில்லை; ஆகவே இது நான் லீனியர் எழுத்தாகாது - காத்தவராயன்)

(இது ஒரு மீள் பதிவு)

தேர்தலும் ஈழப் பிரச்சனையும்

மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈழப்பிரச்சனையை தேர்தல் அரசியலாக்கலாமா எனச் சிலர் வினவக்கூடும். ஆனால், தேர்தல் - அரசியலில் ஈடுபடும் கட்சிகள் இதைத் தேர்தல் பிரச்சனையாக்குவதே சரியானது.

தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் அணிகளே நீடித்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும். யோசித்துப் பாருங்கள்; வைகோ ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் இருந்து கொண்டு ஈழப்பிரச்சனையில் எங்கள் நிலைபாடுகளுக்கு வாக்களியுங்கள் என்றால் மக்கள் எதால் சிரிப்பார்கள்? இதேதான் வலது கம்யூனிஸ்டிற்கும். ராமதாசின் பாமக (காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும்) திமுகவுடன் இருந்தாலும் சரி, அதிமுகவிற்கு வந்தாலும் சரி, அவர்களாலும் இதைத் தேர்தல் பிரச்சனையாக்க முடியாது. திருமாவளவனுக்கும் இதே நிலைதான். விஜயகாந்தின் தேமுதிக ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளைப் பற்றி வாயே திறப்பதில்லை. சரத்குமாரின் கட்சி வாயைத் திறந்தாலும் மூடிக் கொண்டிருந்தாலும் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை!

ஆனால் குமுதம் மாதிரியான சில பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பில் ஈழம் என்பது முக்கியப் பிரச்சனையாக மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு வைகோ, ராமதாஸ், தா பாண்டியன், திருமாவளவன் ஓரணியாகத் திரண்டால் அவர்கள் ஈழப் பிரச்சனையை வாக்கு அரசியலாக முன்னெடுக்கலாம். அதற்கு தனி நபர் ஈகோ, தொகுதிப் பங்கீடு போன்ற பிரச்சனைகள் வராதிருக்க வேண்டும். இதைத் தங்கள் முன்னுள்ள ஒரு வரலாற்றுக் கடமையாக அவர்கள் பார்க்க வேண்டும்.

வெகுஜனத் தொலைக்காட்சி ஊடகங்கள் அழவைக்கும் தொடர்களிலும் ஆட்டங்களிலும் மக்களை மூழ்கடித்தாலும் பலரிடம் பேசுகையில் இலங்கையில் கொல்லப்படும் தமிழ் இனத்திற்கான அவர்களது கவலை புரிகிறது (1980களில் இருந்த மாதிரியான பெரிய எழுச்சி வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளே கனன்று கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்).

மத்தியில் காங்கிரசோ அல்லது அது ஆதரிக்கும் ஓர் அணியோ ஆட்சிக்கு வராத பட்சத்தில் இங்கிருந்து செல்லும் எம்பிக்கள், கறவை மாடுகளான அமைச்சரவைகளைக் கேட்காமல் (ஒரு மாறுதலுக்குத்தான்!) இலங்கையில் போர் நிறுத்தத்தை தங்கள் ஆதரவிற்கு முன் நிபந்தனையாக வைக்கலாம். போர் நிறுத்தம் நடைபெற்ற பிறகே தங்களின் கட்சிகள் அரசில் சேரும் என நிபந்தனை விதித்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கோ அல்லது மூன்றாவதோ அல்லது முப்பதாவது அணிக்கோ இருக்கும்.

இப்படி ஓர் அணி உருவாகாவிட்டால், திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே மக்களவைத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பேசப்படாமலேயே போகலாம். அது சோகமானது.

குறிப்பு : (http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே வாசிக்கலாம் : http://kalugu.com/2009/03/04/elections-and-the-sri-lanka-crisis/. மொழிபெயர்த்து வெளியிட்ட கழுகு.காமிற்கு நன்றி.