உங்கள் வீடுதேடி வருகிறது கோபிகிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் & தூயோன்

பதிவுலக நண்பர்களுக்கு,

அறிந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் அறியாத வாழ்க்கையை 'மழை' சிற்றிதழ் அறிய வைத்தது. நெகிழ்ந்த மனம் கொண்ட கோபியின் தன் வரலாறு, ஒருவகையில் முக்கியமான ஆவணம். இதற்கு காரணமான அன்பு நண்பர் யூமா வாசுகிக்கு நன்றி.

அச்சில் 2002ம் ஆண்டு கோபியின் செவ்வி வெளிவந்தபோது எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே வகையான பாதிப்பை இன்று வலையுலகிலும் ஏற்படுத்தியிருக்கிறது. மின்னஞ்சல் / பின்னூட்டம் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட நண்பர்கள் கோபியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று விசாரித்தார்கள்.

வரும் 2010ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் 'தமிழினி' பதிப்பகம் கோபி கிருஷ்ணனின் அனைத்து படைப்புகளையும் ஒரே நூலாக கொண்டு வர இருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

தவிர, தமிழின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் கோபி கிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்' , மற்றும் 'தூயோன்' சிறுகதைத் தொகுப்பை தேவைப்படும் வலையுலக நண்பர்களுக்கு இலவசமாகத் தர முன்வந்திருக்கிறோம். இப்படியொரு வாய்ப்பை வழங்கிய 'தமிழினி' வசந்தகுமாருக்கு நன்றி.

பிரதிகள் தேவைப்படும் நண்பர்கள், செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பைத்தியக்காரன் அல்லது ஜ்யோவ்ராம் சுந்தரின் இணைய முகவரிக்கு உங்கள் முழுவிலாசத்துடன் மெயில் அனுப்பினால் போதும். ஒரு வாரத்திற்குள், பிரதிகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு இரண்டு பிரதிகளும் தேவையா அல்லது இரண்டில் எந்தப் பிரதி வேண்டும் என்ற விவரத்தையும் அஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

வெளிநாடுகளில் வசிக்கும் வலையுலக நண்பர்கள், இந்திய முகவரியை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் jyovramsundar@gmail.com அலைபேசி : 98845 71371
பைத்தியக்காரன் sivaraman71@gmail.com அலைபேசி : 98409 07375

தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஜ்யோவ்ராம் சுந்தர்

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (நிறைவுப் பகுதி)

எப்படியிருந்தாலும் ஒரு நிரந்தர வேலைக்கான அவசியம் அதிகரித்து வந்தது. மனநிலை குன்றியவர்களுக்கான பள்ளி நடத்திய ஜலாலுதீன் எனும் நண்பரும், நந்தன் பத்திரிகையின் நண்பர் ஒருவரும் என்னை நக்கீரனில் சேர்த்து விட்டார்கள். ப்ரூஃப் ரீடர் உத்தியோகம். 11 மணிநேர வேலை. 2000 ரூபாய் சம்பளம். இடையிடையில் சில கிஃப்ட்ஸ் கிடைக்கும். போனஸ் உண்டு. இங்கே நான் காலந்தவறாமையை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. கோபால் மிகவும் தங்கமான மனிதர். கோபாலின் தம்பிதான் ஆர்ட் டைரக்டர். அவருடைய பிஹேவியர் சரியில்லை. எப்போதும் அதிகார தோரணை உண்டு. ஒத்துப் போக இயலவில்லை.

முதல் நாள் இரவு 9.30 வரை வேலை பார்த்துவிட்டுச் சென்றதால் அடுத்த நாள் 11.30க்குத் தான் அலுவலகம் வர முடிந்தது. தாமதத்திற்காக முன்கூட்டியே என்னால் ஃபோன் செய்து சொல்ல இயலவில்லை. காலையில் கொஞ்சம் தூங்கிவிட்டேன். ‘ஏன் லேட்டா வர்றீங்க, ஃபோன் பண்ண முடியாதா?' என்று கத்திப் பேசினார் ஆர்ட் டைரக்டர் பிறர் முன்னால். இரவுகளில் சில சமயம் அலுவலகத்திலேயே தங்கவேண்டியிருந்தது. நக்கீரனில் இருக்கும்போதுதான் என் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. (10 செப்டம்பர் 2000). ஒரு வருடம் 3 மாதம் நக்கீரன் வேலை. கோபாலிடம் நான் வாங்கிய கடன் 4060 ரூபாயை இன்னும் என்னால் திருப்பித்தர முடியவில்லை. எப்படியிருந்தாலும் அதைக் கொடுத்துவிடுவேன்.

அமோகமாக நடந்தது என் மகள் ராணிஸ்ரீயின் திருமணம். நண்பர்கள் உதவினார்கள். கேட்டதற்கு அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். 28,000 ரூபாய் செலவானது. பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூன்று தோழர் தோழியரின் பேருதவியால்தான் திருமணம் நடந்தது. அவர்கள் தர்மசங்கடமாக உணர்வார்கள் என்று கருதி, பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

1993ஆம் ஆண்டு டேபிள் டென்னிஸை எழுதிக் கொண்டிருந்தபோது எனது முன்னாள் மனைவி நான்ஸியை மீண்டும் பார்க்கவேண்டுமென்று தோன்றியது. சென்னையில்தான் அவர் இருந்தார். சந்தித்தேன். இரண்டு குழந்தைகளுடன் கணவருடனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார். கணவர் புள்ளிவிவரவியல் அதிகாரி. அந்தக் குழந்தைகள்மீது கொண்ட பிரியத்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினேன். நான்ஸி நெகிழ்ந்து போனார். நல்ல நிலைமையில் இருப்பதால் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டார். அவர் பெயர் அப்போதும் நான்ஸி கார்ல்ராஜன் என்றே இருந்தது. அவரது பழைய பெயருக்கே மீண்டும் மாறிக் கொள்வதற்காக விடுதலைப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த சந்திப்பு அது. விடைபெறும்போது, இப்போதாவது கடவுளை நம்புகிறீர்களா என்றார் நான்ஸி. இல்லை என்றேன்.

எந்தப் படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் எழுதுவதில்லை. பிறர் எழுதுவதையும் விரும்புவதில்லை. எழுத்து ஒரு உழைப்பு. அதற்கான மதிப்பென்று நிச்சயம் உண்டு. எந்த ரூபத்திலிருந்தாலும் குரூரத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை. விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்ராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது. 1993 பிப்ரவரியிலிருந்து மே வரை ஒரு வினோத மனநிலையிலிருந்தேன். அது மிகவும் பிரகாசமான நிலை. அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் ‘டேபிள் டென்னிஸ்'. அது ஒரு பறத்தல் போன்ற உணர்வு. அந்தப் பறத்தல் மனநிலையில் அறிவு பாதிக்கப்பட்டுவிடவில்லை. எம்.ஏ. நான்கு பேப்பர் பரிட்சை எழுதி மூன்றில் தேர்ச்சி பெற்றேன். வேறு எந்தப் படைப்பையும் பாதிப்பான மனநிலையில் எழுதியதில்லை.

என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி... என்பது போலத்தான். என் சில கதைகளில் அக்கிரமங்களையும் முறைகேடுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

உதாரணமாக உளவியல் துறை, சமூகப்பணித் துறை போன்ற தொண்டு நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை எழுதியிருக்கிறேன். மனநிலை மாறுபாடு என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக 59 மனநோயாளிகளைப் பேட்டி எடுத்து ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன்.

நான் வாசித்த எதிர் உளவியல் தொடர்பான எட்டு புத்தகங்களிலிருந்து முக்கியமான சில விஷயங்களை அதில் ‘சில செய்திகள் சில சிந்தனைகள்' எனும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். முஸ்லீம் ஹஸ்ரத்துகள், மலையாள மாந்திரீகர்கள், இந்து சுவாமிஜிகள், பாதிரியார்களைச் சந்தித்து பேட்டி எடுத்து மனநோய்க்கான சிகிச்சையாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் ‘இன்னும் தொடரும் பழமை' எனும் தலைப்பில் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து எழுதினால் பிரச்சினையாகிவிடும் என்று ஒரு நண்பர் கூறியதால் கோவையை மையமாக வைத்து அந்தப் புத்தகத்தை எழுதினேன்.

இந்தப் புத்தகத்தின் மீதான ஒரு நல்ல மதிப்புரையை பாவண்ணன் தினமணியில் எழுதியிருந்தார்.

இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாதீன நிலைக்கும் சுவாதீனமில்லாத நிலைக்கும் இடையில் உள்ள மெலிதான இழையை நீங்கள் அறுத்துவிட்டீர்கள் என்றார் யுவன்.

எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவதில்லை. முழுமையின் பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரையில் நான் எழுதியவை எனக்குத் திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி நான் எழுதமாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. நான் எழுதிய எல்லாக் கதைகளும் (சில கதைகளைத் தவிர) யதார்த்தக் கதைகள்தான். கற்பனையும் நிஜமும் கலந்தவை. ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை' என்ற கதை மட்டும்தான் சர்ரியலிஸக் கதை. இது சோதனை முயற்சி. ‘மிகவும் பச்சையான வாழ்க்கை' எனக்கு மிகவும் பிடித்த கதை; ‘காணி நிலம் வேண்டும்' செண்டிமெண்ட் கதை. எனக்கு ஆதவன் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்க அவரால் முடிகிறது. நகுலன், சுந்தர ராமசாமியையும் பிடிக்கும்.

என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. எனக்கு வாழ்க்கையே முக்கிய பிரச்சனையாக இருப்பதால் படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது. நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் இரவல் பெற்றே படிப்பேன். என் சேகரிப்பில் ஏற்கனவே ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

கோணங்கியின் கதையில் உள்ள ஓட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் புரியவிலை. அந்த ஓட்டம் தடைப்படாமல் நீண்டு கொண்டே போகும். ஒரு கதை முடிந்த பிறகும்கூட அதை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றும்.

சுந்தர ராமசாமி தங்கு தடையற்று நன்றாகப் பேசக்கூடியவர். அது பெரிய பலம் அவருக்கு.

சாமர்செட் மாம், ஆல்டஸ் ஹக்ஸ்லெ என் விருப்பத்திற்குரியவர்கள். சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன். எரிக்க யாங், பேர்ல் எஸ் பக், மேரி கோரல்லி, ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர், தாஸ்தாயெவெஸ்கி, மார்க்குவெஸ் ஆகியவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள்.

நான் இலக்கியத்திற்கு இதுவரை எந்தப் பரிசும் பெற்றதில்லை. பிரசுரிக்கத் தகுந்தவை என்றளவில் கணையாழில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இதுவரை மூன்றே மூன்று தடவைகள் இலக்கியவாதியாக இருப்பதற்காகக் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன்.

1. நண்பர் வே.மு. பொதியவெற்பன் அவர்கள் தன் பொன்விழாவில் ‘பொதிகை' பொன்விழா மலரை என்னை வெளியிடச் சொன்னார். நானும் இதற்கென்றே குடந்தை சென்றிருந்தேன். இது 30.4.2000 அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி. மிகவும் மனநெகிழ்வு தந்த ஒன்று.

2. திருப்பூர் தமிழ்ச் சங்கம் 20.1.2002 அன்று எனக்கு நன்கொடையாக ரூ 4000 கொடுத்தது.

3. National Folklore Support Centre நடத்திய விழாவில் 9.3.2002 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் கௌரவிக்கப் பட்டேன். இது எம்.டி.எம். எனக்குச் செய்த மறக்கவியலாத சிறப்பு.

இலக்கியக் கூட்டங்களுக்கு நான் அதிகம் போவதில்லை.

தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்து விடலாம். Will Durant எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி எனும் புத்தகம் மேற்கத்திய தத்துவங்கள் எல்லாவற்றையும் சொல்கிறது.

சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளத் தீர்மானித்தால் சமூக பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. அது பாதுகாப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும்வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயதுவரை வாழ்கிறான் என்றால் நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு. இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்று சொல்கிறேன். கற்பு எப்படிப் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தேவையற்றது. திருமணத்தை மீறிய உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன!

பெண் தான் விரும்புகிறபடி உறவு வைத்துக்கொள்ளக் கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும். பாலியல் சுதந்திரம் மிகவும் அவசியமானது. 9ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும்.

சக மனிதனை விரோதியாகக் கருதுவது மிககொடூரமான விஷயம். தனக்கும் சக மனிதனுக்குமான சமூக இடைவெளிதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அலுவலகங்களில் ஊழியரென்றும் அதிகாரி என்றும் வேறுபாடு இருக்கக்கூடாது. அப்போதுதான் சுமுகமாக இருக்கும். இந்திய நிலையை முதலாளிகள் புரிந்துகொள்ளவில்லையென்று தெரிகிறது. உதாரணமாக சரியான நேரத்திற்கு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இது நிச்சயம் நடைமுறையில் பலன் தராது. பஸ் சீக்கிரம் வராது. சில வேளைகளில் பஸ்ஸே இருக்காது. குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது. இது போன்ற காரணங்களால்தான் மிகவும் தாமதமாகிவிடும். இந்த விஷயம் நிறைய சிக்கல்களுக்குக் கொண்டுபோகும். இதையெல்லாம் கடந்து அலுவலகம் சென்றடைந்த ஊழியரை ‘ஏன் தாமதம்' என்று அதிகாரி கூச்சல் போட்டால் ஊழியர் அப்செட் ஆகிவிடுகிறார். அவரால் அன்று முழுதும் சரியாக வேலை செய்ய இயலாதபடியாகிறது. இதனால் அலுவலகத்திற்குத்தான் நஷ்டம். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணமாகச் சொன்னேன். இதைப்போன்று அனேக விஷயங்கள் உண்டு. இந்த நடவடிக்கைகளால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுவரை 17 நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணி அனுபவத்தில் நான் மூன்று நல்ல உயர் அதிகாரிகளைத்தான் பார்த்திருக்கிறேன்.

1. A S Kalyanaraman, Sr. Field Manager, IMRB
2. Cre-A: S. Ramakrishnan
3. Dr M Saradha Menon

எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மை இருக்கும். எழுத்தை மிக உணர்ந்துதான் எழுதுகிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது.

என் மனைவி என் கதைகளைப் படிக்க மாட்டாள். அவளுக்கு இலக்கியப் பழக்கம் குறைவு. பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலில் கதா காலட்சேபம் நடந்தால் போவாள். சுகி சுப்பிரமணியம் பேச்சிலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு.

நான் தனியன். எந்த அமைப்பையும் குழுவையும் சார்ந்து இயங்குபவன் அல்ல.

நிறுவனங்களில் வேலை பார்ப்பது இதுவரை சிக்கலாகவே இருந்திருக்கிறது. இதனால் நான் ஒரு எதிர் நிறுவன ஆளுமை என்று என்னைப் பற்றி நினைக்கிறேன். இதைப்பற்றி ‘தூயோன்' தொகுப்பில் ‘பரிணாமம்' என்ற கதையில் சொல்லியிருக்கிறேன். அனேக சிரமங்கள் இருந்தாலும் மன நிறைவான தருணங்களும் உண்டு. நண்பர்களாலும் தோழியராலும் நிறைந்தது என் வாழ்க்கை.

வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை எப்படி மாற்றவேண்டுமென்று தெரியவில்லை.

ஒன்பது மாதம் முன்பு, தொடர்ந்து மூன்று வாரங்கள் சுய நினைவில்லாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். டாக்டர் சாரதா மேனன் ‘மூன்று வாரங்கள் உங்கள் மெமரி இரேஸ் ஆகியிருந்தது' என்றார்கள். இது எப்படி நடந்தது, என்ன காரணமென்று தெரியவில்லை.

தற்சமயம் சில மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது உடனடித்தேவை - ஒரு வேலை.

(மழை ஜூலை 2002ல் வெளியானது)

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகுதி 3)

திருமணம் முடிந்து வந்த முதல் சிக்கல் - ஏன் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்று என் மனைவி தொடர்ந்து கேட்ட கேள்விகள். எனக்குத் தலைவலி, தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று ஒருவாறு சமாளித்தேன். வாழ்க்கை தன்போக்கில் நடந்து கொண்டிருந்தது. நீங்கள் அலைந்து திரிய வேண்டாம் க்ரியாவுக்கே வந்துவிடுங்கள் என்று சொன்னார் ராமகிருஷ்ணன். அதை ஏற்று க்ரியாவுக்கே வேலைக்குப் போக ஆரம்பித்தேன். க்ரியா அப்போது ராயப்பேட்டையிலிருந்தது.

பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கும் போது ‘ராணி' எனும் பெயர் பொருத்தமாகத் தெரிந்தது. 'ராணிஸ்ரீ'ன்னு வச்சிட்டேன். 1983 முடிவில் குழந்தை பிறந்த பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். இதற்கு முன்பு ஒரு முயற்சியாக 73ல் தூயோன் எனும் சிறுகதை எழுதியதைச் சொல்ல வேண்டும். அதை ஞானக்கூத்தனிடம் காட்டினேன். நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார் அவர். அந்தக் கதையை பிரசுரிக்கத் தோன்றவில்லை. அதை 86ல் திரும்பவும் எழுதினேன். அது விருட்சம் இதழில் பிரசுரம் ஆனது. 78ல் ராமராவ் பாலிகிளினிக்கில் வேலை செய்தபோது கிடைத்த தோழியைப் பற்றி (அவள் என்னை டாடி என்று அழைப்பாள்) ஒரு கதை எழுதினேன். அது ‘மையம்' பத்திரிகையில் 84 ஜனவரி - மார்ச் இதழில் வெளியானது. இதுதான் முதல் வெளியீடு. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து எழுதினேன். நிறைய கதைகள் சேர்ந்தன. கதைகள் நன்றாயிருக்கின்றன என்றார் ஆனந்த். நகுலனிடம் கதைகளைக் காட்டச் சொன்னார். இரு தினங்கள் கழித்து க.நா.சு தங்கியிருந்த அறைக்கு நகுலன் வந்திருந்தார். ஆனந்தும் நானும் சேர்ந்து என் ஏழு கதைகளை நகுலனிடம் கொடுத்தோம்.

அடுத்தநாள் கடற்கரையில் நகுலனை ஞானக்கூத்தனோடு பார்த்தோம். ‘இந்தக் கதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னிடம் பணம் இருந்தால் புத்தகமாகப் போடுவேன்' என்றார் நகுலன். நகுலன் சொன்னதை ஜெயதேவன் (வி.ராஜகோபால்) மனதில் வாங்கி அவரே பதிப்பித்தார். "ஒவ்வாத உணர்வுகள்" மார்ச் 86ல் வெளியானது.

தொகுப்பு அச்சில் இருந்த நிலையில் மிகத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. என் மனைவி, வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஏதேனும் வேலைக்குப் போகிறேன் என்றாள். நான் இந்த விஷயத்தை திலீப்குமாரிடம் சொன்னேன். ராயப்பேட்டை முத்தமிழ் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை இருப்பதாகப் பரிந்துரைத்தார் திலீப். என் மனைவியின் கல்வித் தகுதி 7ம் வகுப்பு. ஒரே மாதத்தில் கம்பாசிடர் வேலையைக் கற்றுக் கொண்டாள். அவளிடமுள்ள வினோத வழக்கம் என்னவென்றால் கையில் காசில்லை என்றால் முழுக்கவும் அப்செட் ஆகிவிடுவாள்.

அவள் வசதியான வீட்டில் நல்லபடியாக வளர்ந்தவள். என் கையில் காசு தீர்ந்து போனால் நண்பர்களிடம் கடன் வாங்கியாவது வைத்துக் கொள்வேன். ஒருதடவை சுத்தமாகக் காசில்லாமல் போய்விட்டது. நான் இரண்டு பித்தளைப் பாத்திரங்களை எடுத்து அடகு வைக்கப் போனேன். அன்றைக்குப் பார்த்து அடகுக்கடை லீவு. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் திரும்பவும் பாத்திரங்களை வீட்டில் வைத்துவிட்டு க்ரியாவுக்குப் போய்விட்டேன். நண்பர்கள் சினிமாவுக்குப் போகிற மனநிலையில் இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நானும் சேர்ந்து கொண்டேன்.

நாங்கள் அலங்கார் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.என்ன படமென்று இப்போது நினைவில்லை. திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு ‘க்ரியா கோபிகிருஷ்ணன் வான்டட் இம்மீடியட்லி. ஃபிரெண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்' என்று சிலைடு போட்டார்கள். கீழே போனேன். ‘உன் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்' என்று தகவல் கிடைத்தது.

உடனடியாக அவளைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஓடினேன். என் மாத்திரைகளை எடுத்துச் சாப்பிடிருப்பாளோ என்று எனக்குச் சந்தேகம். வீட்டில் பரிசோதிக்கையில் அதுதான் நடந்திருந்தது. முதலில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொள்ள முயன்றிருக்கிறாள். குழந்தை கிரஷ்ஷில் இருந்தது. குழந்தையைப் பக்கத்து வீட்டுப் பாட்டி அழைத்துக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.

இந்த மாத்திரைதான் சாப்பிட்டிருக்கிறாள்; இதற்கு சரியான மாற்று கொடுத்து சரி செய்து விடுங்கள் என்று நான் டாக்டரிடம் சொன்னேன். போலீஸ் கேஸாகிவிட்டது. என்னை உள்ளே வைத்து விட்டார்கள். லாக்கப்பில் அல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குள். அந்த வளாகத்திற்குள்தான் நான் இருக்க வேண்டும். கேஸ் புக் செய்யப்பட்டது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர், ‘நான் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பதால் அடிக்க மாட்டேன். அடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. உண்மையைச் சொல்லிவிடு' என்றார்.

நான் எல்லாவற்றையும் அவரிடம் விளக்கிச் சொன்னேன். என் மனைவியின் இயல்பை தெளிவாக எடுத்துக் கூறினேன். போலீஸ்காரர்கள் நம்பவில்லை. அநாகரிகமான அசிங்கமான பல கேள்விகளைக் கேட்டார்கள். ‘உன் நண்பர்கள் எவரிடமாவது உன் மனைவிக்குத் தொடர்பு உண்டா?' என்றெல்லாம் கேட்டர்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 1986 புத்தாண்டு அன்று அந்த இன்ஸ்பெக்டர் ‘ஹேப்பி நியூ இயர்' என்று எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்.

நான் பித்தளைக் குடங்களை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்குப் போனதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து என் மனைவியிடம் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. என் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள். என்னைக் கண்டித்துப் பேசி அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவள்மீது கேஸ் ஆகிவிட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு நானும் அவளும் சென்றோம். தற்கொலைக்கான முதல் முயற்சி என்று தண்டனையில்லாமல் விட்டு விட்டார்கள். கடைசியாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வரும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் நன்றி சொன்னேன். ‘நீ நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். உன் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அது போதும்' என்றார் அவர். எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் இதைப் பற்றிப் பேசினேன். ‘டாக்டர் இல்லாத இடத்தில்' எனும் புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்த புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் முதலான எல்லா செலவுகளையும் க்ரியா ராமகிருஷ்ணன்தான் பார்த்துக் கொண்டார். நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நான்கு நாட்களும் க்ரியா ஸ்தம்பித்து விட்டது. அதன் பிறகு தனி ரூம் எடுத்துத் தங்கினேன். கொருக்குப்பேட்டையில் இருந்த என் மாமியாரிடம் குழந்தையின் படிப்பு தடைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். 3.30 மணிக்குக் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டுபோய் மாமியார் வீட்டில் விடுவேன். குழந்தை ராணிஸ்ரீ எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தாள். ஒரு மாதம் கழித்து என் வீட்டிலிருந்து சாமான்களை மாமியார் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.

மார்ச் 86ல் ஒவ்வாத உணர்வுகளுக்கும், க.நா.சு.வின் கவிதைப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா. சிட்டாடல் பதிப்பகம் - மையம் வெளியிட்டிருந்தது.

க்ரியா டிக்‌ஷனரி ப்ராஜக்ட் 2.6.86ல் தொடங்கியது. நானும் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் ஆரம்ப கட்ட வேலைகளுக்காகச் சிதம்பரத்தில் மறைமலை நகரில் இருந்தோம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் என்.குமாரசாமி ராஜா அவர்களின் உதவி டிக்‌ஷனரிக்குத் தேவைப்பட்டதால்தான் சிதம்பரத்தில் இருக்க வேண்டி வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதை நிச்சயமாகக் கூற முடியாது. Policy decisions பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

முனைவர் பா.ரா.சுப்பிரமணியனின் வீடு தஞ்சாவூரில் இருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரத்திலிருந்து அவர் தஞ்சாவூர் புறப்படுவார். நான் சென்னை வருவேன். திங்கட்கிழமை சிதம்பரத்தில் சேர்ந்து கொள்வோம். 87ல் வேலையைச் சென்னையில் செய்ய இங்கு வந்தேன். சென்னையில் ப்ராஜக்ட் ஆபிஸ் அண்ணாநகர் (வெஸ்ட் எக்ஸ்டென்ஷன்)லிருந்தது. நான் கொருக்குப் பேட்டையிலிருந்து வருவது சிரமம். எனவே பாடியில் வீடு எடுத்தேன். 86லிருந்து மனைவி ஜனசக்தியில் கம்பாசிடராகப் பணியில் சேர்ந்தாள். சிறிய கருத்துவேற்றுமை காரணமாக 29-7-89ல் நான் க்ரியாவிலிருந்து வெளியேறினேன்.

1992ல் டிக்‌ஷனரி வெளியான பிறகு நான் மீண்டும் க்ரியாவின் நண்பனானேன். ஒன்றே ஒன்று இங்கு சொல்லத் தோன்றுகிறது. ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலக வேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு தார்மீகமான செயல் என்றே கருதுகிறேன். அப்பொழுதுதான் சூழலுக்கு வெளியேயாவது நட்பு நிலைக்கும். எனக்கு நட்பு மிக மிக முக்கியம்.

வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டாக இருந்த 3000 ரூபாயில் செலவுகளைப் பார்த்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் கழித்து வேலை கிடைத்தது. டாக்டர் சாரதா மேனனிடம் வேலை. இவர் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்தார். சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க்கர் பணி எனக்கு. அவருடைய மாலை நேரத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை நேர்கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குதலும், குழு சிகிச்சையும் செய்ய வேண்டும். அது பகுதி நேரப் பணி.

அங்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே Guild of Service-ல் நண்பர் ஒருவரின் சிபாரிசினால் உதவு சமூகப் பணியாளர் வேலை கிடைத்தது. இந்த வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அங்கு முக்கியமான நெருக்கமான ஒரு தோழி இருந்தாள். ‘ஓட்டம்' கதையில் வருபவள். என்னுடன் எட்டு மாதங்கள் வேலை செய்துவிட்டு ஹாங்காங் போய்விட்டாள். அவளிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அங்கேயே அவளுக்குத் திருமணம் முடிந்தது. ஒரு வருடம் கழித்து வந்தாள். வருடத்தில் மூன்று முறை அவளைப் பார்க்கப் போவேன். எனக்கு மனநலப் பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை. எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனந்த், நகுலன், க.நா.சு., ஜெயதேவன், சுந்தர ராமசாமி முதலானோர் நண்பர்களானார்கள். வெங்கட் சாமிநாதன் இண்டியன் எக்ஸ்பிரஸில் என் கதைகளைப் பற்றி Curving Downwards என்று மதிப்புரை எழுதினார். பிறகு Economic Timesஸிலும் குறிப்பிட்டிருந்தார். ஞானக்குத்தன், ஆர். ராஜகோபால், ரா. ஸ்ரீனிவாசன், அழகிய சிங்கர் ஆகியோருடனும் நெருக்கமான தொடர்பிருந்தது.

நான் பார்த்ததிலேயே மிகவும் நல்ல வேலை இது (Guild). ஒரு சொர்க்கம் போல. சகல சுதந்திரங்களும் உண்டு. 2500 ரூபாய் மாதச் சம்பளம். பதவி உயர்வு கிடையாது. நான் M.A. படிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். எம்.ஏ. படித்தால்தான் பிரமோஷன் எனும் நிலையில் தபால் வழியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சோஷியாலஜி சேர்ந்து அதை முடித்தேன். சான்றிதழ் வந்த உடனே பணி உயர்வு கேட்டதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அலுவலக சூழ்நிலை அடியோடு மாறியது.

படிப்பிற்காக 5000 ரூபாயாவது செலவழித்திருப்பேன். 60 நாட்களாவது இதற்காக விடுப்பு எடுத்திருப்பேன். நான் இழப்பீடு கேட்டேன். யாரும் உதவி செய்யவில்லை. அந்தச் சமயம் பார்த்து எனக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. என் உடல்நிலை பெரிதும் மோசமடைந்தது. மூச்சுவிட இயலவில்லை. மருத்துவச் செலவு பூதாகரமாய் நின்று அச்சுறுத்தியது. வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தேன். இதன்மூலம் கிடைத்த 28,000 ரூபாயில் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டேன். ‘கில்டி'ல் ஏழரை வருட காலம் வேலை பார்த்திருந்தேன்.

‘கில்ட்'ல் இருக்கும்போது 93ல் நானும் சஃபி மற்றும் லதா ராமகிருஷ்ணனும் ‘ஆத்மன் ஆலோசனை மையம்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதன் முக்கியமான செயல்பாடு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோசனை வழங்குவது. மையம் மூன்றரை வருடங்கள் இயங்கியது. ஆரம்பக் கட்டத்தில் நிறைய கிளையன்ட்ஸ் வந்தார்கள். என்னுடைய மனநல பாதிப்பினாலும், பிரமோஷனுக்காக எம்.ஏ. படித்துக் கொண்டிருந்ததாலும் தொடர்ந்து அதில் செயல்பட முடியவில்லை.

கில்ட் ஆஃப் சர்வீஸில் ஒரு ஃபால்ஸ் ரிப்போர்ட் எழுதப் பணித்தார்கள். ஒவ்வொரு சோஷியல் ஒர்க்கருக்கும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி வசதி, மருத்துவ வசதி, வீட்டின் - வீட்டுக் கூரையின் நிலை என்ன என்பது பற்றியெல்லாம் கண்காணிக்க வேண்டும். வீட்டுக் கூரை பிரிந்தோ சேதமுற்றோ இருந்தால் அதைச் சரி செய்ய உதவ வேண்டும். லண்டன் ப்ராஜக்ட் இது. நாங்கள் டெல்லி கில்ட் ஆஃப் சர்வீஸ் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.

ஒரு சமூகப் பணியாளர் சுமார் 250 குடும்பங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இது அவ்வளவு சுலபமில்ல. ஆகவே பணியாளர்கள் ஆய்வு செய்யாமலேயே அலுவலகத்தில் இருந்தபடி அறிக்கைகளைத் தயார் செய்தார்கள். நானும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டேன். பார்க்காமல் ஆராயாமல் பொய்யாக என்னால் அறிக்கை எழுத முடியவில்லை. ஆனால் இதை நான் செய்தே தீர வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாமல் பணியில் நீடிக்க இயலாது. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காது.

இந்தப் பீதியினால் 3250 மில்லிகிராம் வீரியம் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். தடயங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. கதவைத் தாழ் போடாததால் திறந்து பார்த்த என் மனைவி உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து கே.எம்.சி.க்குக் கொண்டு சென்றாள். அங்கே என்னைச் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தார்கள். ஆட்டோ டிரைவரும் என் மனைவியும் வற்புறுத்திக் கெஞ்சியதன் பேரில் சேர்த்துக் கொண்டார்கள். ஏழு நாட்கள் சுத்த மயக்க நிலையில் கிடந்தேன். இதனாலும் என்னால் ஆத்மனைக் கவனிக்க இயலவில்லை. முழுதுமாக சஃபிதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில குறிப்பிட்ட கேஸ்களை லதா ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டார். இதனால் கில்ட் ஆஃப் சர்வீஸ் வேலைக்குப் பாதகம் ஏற்படவில்லை. டாக்டர் சாரதா மேனன்தான் சிகிச்சை கொடுத்தது. போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டார்கள். டிஸ்சார்ஜ் ஆன நாளன்று மாலையில் டாக்டர் சாரதா மேனனைப் பார்த்தேன். மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள். இந்த விஷயம் நிறைய நண்பர்களுக்குத் தெரிந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

எழுத்து தொடர்புடையது, அல்லாதது என்று பல இடங்களில் சிறிய சிறிய ஃப்ரீலான்ஸ் வேலைகள் பார்த்தேன். மனநிலை குன்றிய பையனை அழைத்துச் சென்று கம்ப்யூட்டர் செண்டரில் விட்டு வருதலும் அவற்றில் ஒன்று.

ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் இண்டெக்ஸர் வேலை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்தது. 4320 ரூபாய் சம்பளம். இதுவரை வாங்கியதிலேயே அதிக சம்பளம் இதுதான். இங்கு வேலை பார்த்த காலம் ஒரு வருடம் மூன்று மாதங்கள். என்னுடைய உற்ற சக-ஊழியர் ஒருவரை உதவி இயக்குனர் ஒருவர் அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் அந்த நல்ல வேலையைத் துறந்தேன். பொருளாதார பலகீனம் தற்போதும் நீடிக்கிறது. அடிக்கடி நண்பர்களின் உதவி தேவைப்படுகிற நிலை. இரண்டு மனநோய்க் குறிகள் இன்னும் இருக்கின்றன.

1. Obsessive ruminations 2. Obsessive Depression போன்ற பிரச்சினைகள் எனக்கிருந்தன.

முதலாவது தாறுமாறான எண்ணங்கள். நான் நினைக்காமலேயே தானாகவே எண்ணங்கள் வருகின்றன. மோசமான எண்ணங்கள் அதிகம் வரும். இது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த மோசமான எண்ணங்கள் என்னுள் அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இரண்டாவது, ஆட்டிப்படைக்கும் மனச்சோர்வு. இதற்கான சிகிச்சையை டாக்டர் சாரதா மேனனிடம் சமீபகாலம் வரை பெற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது ESI ல் சிகிச்சை எடுத்து வருகிறேன். மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான் எழுதுவதில்லை. என் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான நிலையிலிருந்தது என் மகளின் திருமணத்தின் போதுதான்.

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகுதி 2)

பிறகு அவளுக்கும் எனக்கும் பிரச்சினைகள். ஒருமுறை ராமநாதபுரம் சென்று அவள் வீட்டிலேயே 17 மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதீத எரிச்சலினாலும், மாத்திரை சாப்பிடுவது தொடர்பான கேள்விகள் பெரிதும் இரிட்டேட் செய்ததாலும் அப்படிச் செய்தேன். நான் மாத்திரைகள் விழுங்கியிருப்பது தெரியாமல், சினிமாவுக்குப் போகலாம் என்றாள் அவள். மாலை நேரம். சரி என்று கிளம்பிவிட்டேன். அவள் தோழி ஒருத்தி எங்களுடன் வந்தாள்.

மாத்திரை சாப்பிட்டதனால் என்னால் நேராக நடக்கமுடியவில்லை. பக்கவாட்டில் சாய்ந்து தட்டுத்தடுமாறி நடந்தேன். ஏதோ சிக்கல் என்று அவளுக்குப் புரிந்து விட்டது போலிருக்கிறது. உடனே ராமநாதபுரம் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்து சிகிச்சையளித்தாள். குணமாக மூன்று நாட்களானது. நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தினால்தான் நாம் சேர்ந்து இருக்க முடியும் என்றாள் நான்ஸி. சரி என்று ஒத்துக் கொண்டேன்.

உண்மையில் மாத்திரை சாப்பிடுவதை நான் விடவில்லை. விடக்கூடாது. அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்கு ஒன்று எனும்படி எங்களிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. அவள் சென்னை வந்து என்னுடன் தங்குவதற்காக அவளது டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அவள் சென்னை வருவதில் அக்கறையில்லாமலிருந்தாள். அது எனக்கு உடனே புரிந்தது. ராமநாதபுரத்தில் அவள் பணியிடத்தில் அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். குறிப்பாக ஒரு டாக்டருடன் அவளுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. சந்தேகத்திற்குரிய தொடர்பு அது.

இந்த விவகாரத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வெறுமையும் குழப்பமும் வெறுப்புமான அலைக்கழிப்பு. அல்லாட்டம். இனி வாழமுடியாது என்று தோன்றிவிட்டது. திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. ‘நீ சென்னைக்கு வா. நம் முதலாமாண்டு திருமணநாளைக் கொண்டாடுவோம்' என்று அவளை அழைத்தேன். அவள் வந்தாள். நான் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினோம். அந்த வீட்டு எண் 13. நான்கு நாட்கள் கழிந்தபிறகு நான் சொன்னேன் ‘நீ யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள். அதைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதே' என்றேன்.

என் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை அவள். அடிக்கடி அவள் அந்த டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததும் மற்ற ஆண் பணியாளர்களைப் பற்றி மிகவும் நெருக்கமாகப் பேசியதும் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. இதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிலைமை பொறுக்க முடியாமல் போனது.

திருமண முதல் ஆண்டு நிறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்ஸி பிடித்து வெளியே சென்று நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டினுள் தண்ணீர் குடித்தால் அந்த ஓசையில் அவள் விழித்து சந்தேகிக்கலாம் என்ற யோசனையில் மாத்திரைகளைக் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு விழுங்கினேன்.

‘என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்' என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை. நான்ஸி என்னைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தாள். அங்கே என்னைப் பரிசோதித்த டாக்டர் எனக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் உடனடி மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துவிட்டார். தலையிலிருந்து கால் வரை துணியால் மூடிவிட்டார்கள். முற்றும் பிரக்ஞை கெட்டுப் படுத்திருக்கிறேன் நான். அங்குள்ள வேறு டாக்டர் எனக்கு ஏற்கனவே நண்பராயிருந்தவர். லேசாக அவருக்குச் சந்தேகம் தட்டியிருக்கிறது. மூடிய துணியை விலக்கி என்னைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். சன்னமாக உயிர் இருப்பது தெரிந்தது அவருக்கு. அந்த நண்பர் LASIX இன்ஜக்‌ஷன் கொடுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தேறினேன்.

மருத்துவமனையில் கிடந்தபோது என்னைப் பார்க்க வந்தாள் என் மாமியார். ‘உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். வெளியே விட்டு வைக்கக் கூடாது. எங்களை மிகவும் அவமானப் படுத்திவிட்டாய். பெருங் கேவலத்தைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டாய். உன் முகத்தில் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது' என்று வசவுக் கூச்சல் போட்டு கலங்கடித்தாள் அவள்.

என் மனைவி பார்ப்பதற்கு வருவாள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு சிறப்பாக வருவாள். என்னை உதாசீனம் செய்து மற்ற நோயாளிகளுடன் அரட்டையடிப்பாள். அவளும் அவளது பழைய சினேகிதனும் நான் படுக்கையில் கிடந்து போராடிக் கொண்டிருக்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என் நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். அவளிடம் ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்' என்று முடிவாகச் சொல்லி விட்டேன். அத்துடன் அந்தச் சாப்டர் முடிந்தது. இந்த தற்கொலை முயற்சிக்குப் பிறகு LARGACTYL மாத்திரைகளை உட்கொள்ளுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

என் மனைவி என்னை விட்டுப் போன நான்கே மாதங்களில் சென்னைக்கு மாற்றலாகி வந்தாள். ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டாள். இவை இரண்டும் அவள்மீதான என் சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தின. ஆனால் மனநல மருத்துவர்கள் இது கற்பனைச் சந்தேகம் என்று schizophrenia paranoid என்ற மனப்பிணிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறபோது மாலை நேர வகுப்பில் சேர்ந்து போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் கிரிமினாலஜியும் ஃபேரன்ஸிக் சயின்ஸும் ஒரு வருட கோர்ஸில் படித்திருந்தேன். 1974ல் எங்கள் ப்ராஜக்ட் முடிந்துவிட்டது. அது அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ப்ராஜக்ட். நிதியுதவி நின்றவுடன் எல்லோருக்கும் வேலை போய்விட்டது. பி.எல்.480 நிதி என்று பெயர். அமெரிக்காவிலிருந்து வரும். எங்கள் சீஃப் தவிர எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போனோம்.

எனக்குக் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. பல விதங்களிலும் கடன் வாங்கி நான்ஸிக்கு மிக அதிகம் செலவு செய்தது பெருந் தொல்லையாகி விட்டது கடைசியில். திருமண முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பெண் வந்து தங்கிய நான்கு நாட்களும் செலவு மிக அதிகம். என் நண்பர் சொன்னார். ‘இங்கே இருக்காதே. வேறு எங்காவது சென்றுவிடு. முக்கியமாகச் சென்னையில் இனிமேலும் நீ இருக்காதே.'

வேலை போன அடுத்த நாளே வடக்கே புறப்பட்டேன். சில புத்தகங்களும் சில சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டேன். இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தேன். மகாராஷ்டிராவில் உள்ள சேவாக்கிராம் காந்தி மெடிக்கல் காலேஜ்-ல் கிளாக்காகப் பணிபுரிந்தவர் என் உயர்நிலைப் பள்ளி நண்பர். அவரிடம் எழுதிக் கேட்டதற்கு ‘சரி! நீ வா' என்று பதிலளித்திருந்தார். வார்தாவில் இறங்கி சேவாக்கிராம் சென்று அங்கு ஒரு மாதம் இருந்தேன்.

அந்த நண்பர் போதிய பணவசதி இல்லாதவர். திரும்பத் திரும்ப என்னைச் சென்னைக்கே சென்றுவிடும்படி கூறிக்கொண்டிருந்தார். பி.ஜி.பிரகாசன் அவர் பெயர். நான் சென்னை செல்லாமல் மகாராஷ்டிரா மாநிலம் புசாவலுக்குச் சென்று அங்கிருந்து பாம்பே சென்றேன். எல்லாமே டிக்கெட் இல்லாத பயணம்தான்.

பாம்பே ரயிலில் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் அகப்பட்டுக் கொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றி விசாரித்து ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டு போனார். பாம்பேயில் இறங்கி டிக்கெட் கேட் கடக்கும்போது இன்னொரு பரிசோதகர் பிடித்துக் கொண்டார். ‘நான் இங்கே பிழைப்பதற்காக வந்திருக்கிறேன். எனவே என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனமிரங்கி விட்டுவிட்டார். ஏதாவது சாப்பிட்டாக வேண்டியிருந்தது. ஒரு ஹோட்டலுக்குச் சென்று வேலை வேண்டினேன். அந்த ஹோட்டலில் வேலை எதுவும் காலியாக இருக்கவில்லை.

இரவில் எங்கே தங்குவது என்று பிரச்சினையாகிவிட்டது. தாராவிக்குப் போய் அங்கு ஒருவரிடம் என் சிரமங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் வீட்டுப் பரணில் படுத்துக் கொள்ளும்படி அனுமதித்தார். தங்க மட்டுமே இடம். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. எடுத்து வந்திருந்த சில புத்தகங்களை எடைக்குப் போட்டு ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டேன். மொத்தமாக மூன்று நாட்கள்தான் பாம்பேயில் இருந்திருப்பேன். சோர் பஜாரில் என் துணிகளை விற்றதன்மூலம் கொஞ்சம் சில்லறை தேறியது சாப்பிடுவதற்கு.

அடுத்த நாள் வேறு ஒரு ஹோட்டலில் வேலை கேட்டேன். விண்ணப்பம் எழுதிக் தரும்படி சொன்னார், அங்கு பொறுப்பிலிருந்தவர். நான் எழுத முயற்சித்தேன். கை நடுங்கியது. எழுத்து சரியாக வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வேலை தர இயலாது என்றும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் கூறினார். ‘வேலை தந்தால்தான் சாப்பிடுவேன்' என்றேன் நான். ‘இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். சும்மா சாப்பிடுங்கள்' என்று அவர் கேட்டுக் கொண்டபிறகு மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டேன்.

அப்படியே நடந்து கொண்டிருந்தபோது சென்னை திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப்பில் டேபிள் டென்னிஸ் விளையாடும் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். இரண்டு இட்டிலி வாங்கிக் கொடுத்து கையில் கொஞ்சம் காசு கொடுத்து சென்னைக்குப் போய்விடும்படி சொன்னார் அவர்.

பாம்பேயிலிருந்து டிக்கெட் இல்லாமல் ஹைதராபாத் போனேன். அப்போது என்னிடம் ஒரு சட்டையும் பேண்டும் மட்டுமே இருந்தது. ஹைதராபாத்தில் எனக்கு நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட் இருந்தார். அவரிடம் ஊர் திரும்புவதற்கு உதவும்படி கேட்டேன். 'நீ இங்கிருந்து கடிதம்போட்டு உன் அப்பா அம்மாவிடமிருந்து பணம் வாங்கிப் புறப்பட்டு போ. நான் பணம் தரமாட்டேன்' எனக் கறாராகக் கூறினார் அவர். இது சிக்கலான ஏற்பாடாகத் தெரிந்தது. ரயில் ஏறிவிட்டேன். இப்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கித் தப்பினேன். ஓங்கோல் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்க வேண்டும். கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஏறியபோது எதிர்பட்டார் டிக்கட் பரிசோதகர். நான் என்ன செய்வதென்று நிதானிப்பதற்குள் ரயில் வேகமெடுத்துவிட்டது. வேறு வழியின்றி குதித்துவிட்டேன். முழங்காலில் பலமாக அடிபட்டு விட்டது. வலியினால் நகர முடியாமல் விழுந்த இடத்திலேயே வெகுநேரம் கிடந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தேன். யாரோ ஒருவர் பேச்சுக் கொடுத்தார். தெலுங்குக்காரர். தமிழை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு லாரி டிரைவரிடம் என்னை சென்னைக்குக் கொண்டுபோய் சேர்த்து விடும்படி சொன்னார். லாரி இரவில்தான் கிளம்பும். என்னிடம் பணமில்லாததால் என் சட்டையையும் கைலியையும் வாங்கிக் கொண்டார் டிரைவர். அடுத்த நாள் காலை லாரி போரூர் வந்து சேர்ந்தது. ‘இதுதான் சென்னை. நீ இங்கேயே இறங்கு' என்றார் டிரைவர். நான் அவர் சொன்னபடி செய்தேன். கையில் கொஞ்சம் சில்லறையும் கொடுத்து இறக்கிவிட்டார் அவர். நான் கொசப்பேட்டையிலிருந்த என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமே என்னை எதிர்கொள்ளவில்லை.

தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதையெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றிவிட்டது. நண்பர் பாலகிருஷ்ணன் மூலமாக (கிளினிகல் சைகாலஜிஸ்ட்) அரசு மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.

1974ல் 45 நாட்கள் அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அங்கே சூப்பிரிண்டெண்டெண்ட் ஆக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்தது மருத்துவமனைச் சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது.

போக்கிடமென்று எதுவும் இல்லாமலாகிவிட்டது. பாட்டிக்குக் கடிதம் எழுதினேன். பாட்டி கடிதமும் பணமும் அனுப்பியிருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி மதுரைக்கு என் பாட்டியிடம் புறப்பட்டுப் போனேன். வேலை தேடியபடி 9 மாதங்கள் அங்கேயே இருந்தேன்.

அந்தச் சமயத்தில் மதுரை அதீனத்தின்மூலம் மறுபடி இந்து மதத்திற்கு மாறி என் இயற்பெயரைப் பெற்றேன்.

மேற்கொண்டு மருத்துவச் செலவு செய்ய பாட்டி விரும்பவில்லை. ‘நீ சென்னைக்கு போ'வென்று பாட்டி சொன்னதால் திரும்பவும் சென்னை வந்தேன்.

ஒரு நண்பரின் வீட்டுத் திண்ணையில் இரவில் படுக்கை. தெருக்குழாயில் காலைக் குளியல். சமயங்களில் கட்டணக் கழிப்பறையில். வேலை தேடுவதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன்.

நண்பர் ஒருவர் மூலமாக ராமாராவ் பாலிகிளினிக்கில் 1975ல் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ 200. அங்கு வேலை பார்த்த காலம் இரண்டரை வருடங்கள். பாலிகிளினிக்கில் ஒரு தோழி கிடைத்ததுதான் சந்தோஷம். அவளோடு தந்தை மகள் மாதிரியான உறவு. அவளுக்கும் தலைமை மருத்துவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவள் காஞ்சிபுரத்திற்குப் போனாள். நான் பாலிகிளினிக்கிலேயே தொடர்ந்தேன். நான் தொடர்ந்து மனநல மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். பெரிய ஜாப் எதுவும் என்னால் செய்ய இயலாதபடி மனநிலை பாதிப்படைந்திருந்தது. சில காலத்திற்குப் பிறகு பெரிய வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். எனக்கு வேலை தரும்படி வேண்டினேன்.

ராமகிருஷ்ணன் IMRB (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ) வில் வேலை வாங்கித் தந்தார். அவர் என் நண்பரின் கல்லூரித் தோழர். இங்கே ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். வீடு வீடாகப் போய் சிகரெட் - பேட்டரி - கார்பெட் இவை பற்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.

மே 1980ல் திரும்பவும் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் மாய ஒலிகள் காதில் கொடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன. ‘நீ எதற்கும் தகுதியில்லாதவன்... நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டாய்... இனிமேலும் நீ உயிருடன் இருக்க முடியாது...' இப்படி. அலுவலகம் மூலமாகவே அரசு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன்.

சேர்ந்து ஐந்தாம் நாளிலேயே சரியாகிவிட்டது. ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் கொடுக்காமல் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். வேலைக்குப் போனேன். என்னை உடனே வேலையில் சேர்க்காமல் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி ஒரு மாதச் சம்பளமும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஐம்ஆர்பி யில் முழுநேரமாகவும், க்ரியாவில் பகுதிநேரமாகவும் வேலை செய்தேன்.

இந்தக் காலத்தில் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக்காரர்கள்' புத்தகத்தையும், ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை' (ஹிந்தியிலிருந்து சரோஜா மொழிபெயர்ப்பு செய்தது) எனும் புத்தகத்தையும் கிரியா ராமகிருஷ்ணன் கொடுத்தார். இதற்கு முன்னால் மு. வரதராசன், ஹேமா ஆனந்ததீர்த்தன், சா. கந்தசாமி இவர்களை மட்டும் படித்திருந்தேன்.

மீண்டும் எனக்குப் பெண் துணை அவசியப்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா புரோக்கர் மூலம் இப்போதிருக்கிற என் மனைவியைப் பெண் பார்த்தார். திருவொற்றியூர் திருமண மண்டபத்தில் 20-10-80ல் திருமணம் நடந்தது. ஐ எம் ஆர் பி நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முன் லாட்ஜில் தங்கியிருந்தேன். பிறகு மைலாப்பூரில் தனிக்குடித்தனம்.

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகுதி 1)

(குறிப்பு : மழை சிற்றிதழுக்காக கோபிகிருஷ்ணனை யூமா வாசுகி எடுத்த நேர்க்காணல் இது. என்னைப் பற்றி நானே சொல்லிவிடுகிறேன்; கேள்விகள் வேண்டாம் என்று கோபிகிருஷ்ணன் பேட்டியின் ஆரம்பித்திலேயே சொல்லிய பேட்டி! மழை சிற்றிதழுக்கு நன்றியுடன் இதை நான்கு பகுதிகளாகப் பதிவிடுகிறேன். இதழைத் தேடிக் கொடுத்துதவிய பைத்தியக்காரனுக்கு எப்போதும் போல் என் அன்பு).


நான் 23 ஆகஸ்ட் 1945ல் மதுரையிலே ஜடாமுனி கோயில் தெரு, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பிறந்தேன். எனக்கு இப்போ வயசு 56. முதல் தம்பி பெயர் நாகராஜன். எம்.எஸ்ஸி., எம்.எட்., படித்திருக்கிறான். அவன் திருவொற்றியூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அடுத்து தங்கை மீரா. தங்கை கணவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் (parkinsons disease). கழுத்து, கைகள் ஆடிக்கொண்டே இருக்கும். அதனால் அவர் எந்த வேலைக்கும் போக இயலவில்லை. மீரா தன் மகனிடமிருந்து பண உதவி பெற்று வாழ வேண்டியிருக்கிறது. மீராவுக்குப் பிறகு ஹம்ஸா. திருவ்ண்ணாமலையில் எய்ட்ஸ் ப்ராஜக்டில் வேலை செய்கிறாள். அவளுக்கு வயது 50. அடுத்த தங்கை இந்திராவின் குடும்பம்தான் இருப்பதிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். பிளாட்பாரத்தில் கண்ணாடி வளையல் போட்டு வியாபாரம் செய்கிறார். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கிறது அவர்களின் கடை. இந்திராவுக்குப் பிறகு உள்ள தங்கை கீதா பி.எஸ்ஸி ஸூவாலஜி படித்தவர். காஞ்சிபுரத்தில் நல்ல வசதியான நிலையில் வசிக்கிறார். அவர் கணவர் உதயகுமார், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தில் வேலை செய்கிறார். கீதாவுக்குப் பின்னுள்ள தம்பி தேவராஜன் பி.டெக்., எம்.எஸ் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். மிகவும் வசதியான குடும்பம் இவர்களுடையதுதான். தேவராஜன் மனைவி அமுதாவும் எம்.எஸ். கம்ப்யூட்டர் படித்தவள்.


பள்ளியிறுதி வரையிலும் மதுரை வாசம். படித்தது சௌராஷ்ட்ரா ஹைஸ்கூல். அது 1961ம் ஆண்டில். அப்பாவின் பூர்வீகம் பரமக்குடி.


சென்னையில் துணிக்கடை ஒன்றில் அப்பாவுக்கு வேலை. தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. மதுரை எம்.எஸ். சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் தங்களை பிராமணர்கள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் பெயரின் பின்னால் பிராமண ஓட்டுக்களைப் போட்டுக் கொள்கிறார்கள். என் அப்பா பெயர் என்.பி. கிருஷ்ணமாச்சாரி, மாமனார் பெயர் கோபால் ராவ், தாத்தாவின் பெயர் சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். அம்மாவழித் தாத்தா இவர். நிலம் நீச்சுடன் மிகவும் வசதியாக வாழ்ந்தவர் தாத்தா. சொந்தமாக கதர்க்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார். கதர்க்கடையை தாத்தா மூடிவிட்ட பிறகு அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யுமளவு பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அம்முயற்சியிலிருந்து காப்பற்றப்பட்டார். பாட்டிக்கு மதுரைதான். அப்பா அம்மா மட்டும்தான் சென்னையோடு தொடர்புடையவர்கள். தாத்தாவின் மனநோயின் பொருட்டு பாட்டி அவரைக் குணசீலத்தில் சேர்த்தாள். ஒரு மண்டலத்திற்கு, தாத்தாவின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு ஆட்கள் அவருடன் இருந்து அப்போது பார்த்துக் கொண்டார்கள். ஒரு மண்டலம் முடிந்து வீட்டிற்கு வந்த உடனே தாத்தா இறந்து போனார். அவர் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. உடல் வெகுவாக மெலிந்திருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில் பி.ஏ. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். பிரசிடென்சி காலேஜ். பி.ஏ. சைக்காலஜி. 1962லிருந்து 65 வரை. முதலாமாண்டு படிக்கும்போது அம்மா அப்பாவுடன்தான் இருந்தேன். கணக்கில் மிகவும் பின்தங்கியவன் நான். எஸ்.எஸ்.எல்.சி.யில் கணக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது. பால்யத்தில் நான் நன்றாகப் படித்ததினால் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு முன்னேற்றப்பட்டேன். நான்காம் வகுப்பு கணக்குப் பாடம் படிக்க முடியாமல் போய் அந்தப் பிரச்சனை இன்றும் தொடர்கிறது.


பி.ஏ. ஆன்ஸிலரி புள்ளிவிவரவியலும் லாஜிக்கும். புள்ளிவிவரவியல் பாஸ் பண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே, எஸ்.எஸ்.எல்.சி. காலத்திலிருந்தே சைக்காலஜியில் ஆர்வம். தாத்தா இறந்த பிறகு அந்த ஆர்வம் கூடுதலாகியது.


கோ-எஜூகேஷன் கல்லூரி அது. இயல்பிலேயே கூச்ச சுபாவமுடையவன் நான். பெண்களிடம் பழகுவதில் கூச்சம் மிக அதிகமாயிருந்தது. இதற்குக் காரணம் என் பாட்டிதான். பாட்டி வீட்டிலேயே பஜனை மண்டலி வைத்திருந்தாள். வீட்டில் சிறு கோயிலும் இருந்தது. எல்லா தெய்வ விக்ரகங்களும் உள்ள கோயில். தினமும் காலையில் பூஜை நடக்கும். பூஜையை நான்தான் செய்ய வேண்டும். மாலைகளில் பஜனை நடக்கும். எட்டாம் வகுப்பு வரையிலும் பூஜை செய்வதில் பாட்டிக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பூஜைக்கு, பஜனைக்கு வரும் எல்லாப் பெண்களையும் உறவு முறையில் மாமி, அக்கா, அத்தை என்றுதான் அழைப்பேன். இதனாலெல்லாம் கூச்சம் உருவாகிவிட்டது. பாட்டியினுடையது பெரிய வீடு. சுமார் இருபது பெண்களுக்குமேல் வழிபாட்டிற்கு வருவார்கள்.


அரசு கலைக் கல்லூரியிலிருந்து எகனாமிக்ஸ் படிக்கவும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவும் மாநிலக் கல்லூரியில் உளவியலுக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நான் உளவியலையே தேர்வு செய்தேன். சீட் கிடைப்பது அப்போது மிகவும் எளிது. நன்கொடைகளோ சிபாரிசுகளோ தேவையில்லை. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஒரு பெண்ணுடன் மானசீகக் காதல் ஏற்பட்டது. அந்தப் பெண் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நான் மாலை நேரத்தில் ஹிந்தி டியூசன் எடுத்தேன். அந்தப் பெண்மீது எனக்கு முழு ஈடுபாடு இருந்தது. அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு, காதல், உணர்ச்சி வேகம். இதைத்தான் calf love என்று சொல்வார்கள்.


என் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு வீடு வறுமையினால் சூழப்பட்டு விட்டது. என்னை வேலைக்குப் போகச் சொல்லி அப்பா தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். நான் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ‘நீ படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போ. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்' என்று சொன்னவர்தான் அப்பா. நான் விடாப்பிடியாகப் படித்தேன். படிப்பை முடிப்பதற்கு எனக்கு மூன்று நண்பர்கள் உதவினார்கள். ஹிந்தி டியூசனிலிருந்து எனக்குக் கொஞ்சம் பணம் வந்தது.


மெட்ராஸ் எஜூகேஷனல் ரூல்ஸ் (92 எம்.இ.ஆர்) படி ஆஃப் ஃபீஸ் கன்ஸஷன் கொடுத்தார்கள். அதன்படி நான் பாதியளவு பணம் கட்டினாலே போதும். அரிஜன் வெல்ஃபேர் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. என் அம்மாவின் தம்பியாகிய மாமா வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார். 5 ரூபாய் அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகை. அதை வைத்துச் சமாளித்துப் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு டி ஷர்ட் மட்டும்தான் இருந்தது. மூன்று வருடமும் இதே நிலைதான்.


பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது என்.எம்.பதி அறையில் தங்கியிருந்தேன். காலையில் 2 இட்லி சாப்பிடுவேன். மதியச் சாப்பாடு பெரும்பாலும் கிடையாது. மாலையில் நான் ஹிந்தி டியூசன் எடுக்கும் பெண் (அவள் பெயர் அனுராதா) வீட்டில் ஒரு கப் காபி கொடுப்பார்கள். அதுதான் சாப்பாடுபோல. இரவு திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அரை கிளாஸ் பால் மற்றும் 2 பன்கள். அதோட சரி.


1965ல் மூன்றாமாண்டு படிக்கும்போது சமூக உளவியலாளர் ஒருவரிடத்தில் அவரது ஆராய்ச்சிக்குத் தரவுகள் சேகரித்துத் தரும் வேலையை இரண்டு மாதம் செய்தேன்.


ரிசல்ட் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் 'மீட் த சேலஞ்ச்' (இந்திய பாகிஸ்தான் போர் பர்றிய கண்காட்சி)ல் கண்காட்சி விருவுரையாளராக ஐந்து நாட்கள் வேலை பார்த்தேன். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 5 ரூபாய் சம்பளம்.


பிறகு பாரத் சேவக் சமாஜத்தின் சார்பாக வீடு வீடாகப் போய், வாங்கும் மளிகை சாமான்களின் விலையைப் பற்றி - எவ்வளவு ரூபாய்க்கு என்ன பொருள் வாங்குகிறார்கள் - தகவல் சேகரிக்கும் வேலையை இரண்டு மாதங்கள் செய்தேன். இதில் மாதம் ரூ 100 சம்பளம்.


ஓரியண்டல் ஃபயர் அண்டு ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-இல் குமாஸ்தா உத்தியோகம் ஒரு வருடம் ஏழரை மாதங்கள் பார்த்தேன். இங்குதான் நான் டேபிள் டென்னிஸ் கற்றுக் கொண்டேன். இரண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன் - அரசு மருத்துவமனை மனமகிழ் மன்றத்தில் singles-ல் runner ஆகவும் doubles-ல் winner ஆகவும். டேபிள் டென்னிஸ் ஓர் அற்புதமான விளையாட்டு. எல்லா அலவன்சும் சேர்த்து மாதச் சம்பளம் 253 ரூபாய். இந்த வேலை தற்காலிகம்தான்.


அடுத்து ஒரு அரசு வேலை கிடைத்தது. லோயர் டிவிஷன் கிளார்க். ஆல் இந்தியா ஹேண்டிகிராஃப்ட்ஸ் போர்டில். சென்னையில்தான். 67லிருந்து 69 வரையில் ஒரு வருஷம் நான்கு மாதங்கள். மாதச் சம்பளம் ரூ 300. அப்போது மாலை வகுப்பில் டிப்ளமோ இன் ஆந்த்ரோபாலஜி (மானிடவியல்) மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் சேர்ந்தேன். இது இரண்டு வருடப் படிப்பு. புரபேஷன் பீரியடிலேயே அரசு வேலையை ரிஸைன் செய்து விட்டேன்.


அரசு பொது மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் நிலையம் - புனர்வாழ்வ்ய் மையத்தில் அடுத்த வேலை. அது கைகால் இழந்தோருக்கான புனர்வாழ்வு மையம். என்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு வேலையை அங்கே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மார்க்கண்டேயன் என்பவர்தான் இந்த ப்ராஜக்டின் தலைவர். அவர் என் கல்லுரியில் வகுப்புத் தோழராயிருந்தவர். என்னைவிட ஓர் ஆண்டு மேல் வகுப்பில் படித்தவர்.


அரசு வேலையை 11-4-69ல் ரிஸைன் செய்துவிட்டு 12-4-69ல் இந்தப் புது வேலையில் சேர்ந்தேன். 69ல் 23 அல்லது 24 வயது இருக்கும் எனக்கு. இந்த வேலை திருப்திகரமாக இருந்தது.


உளவியல் பரிசோதனை நடத்துதல்தான் வேலை. நோயாளிகளை பேட்டி கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். மாதம் 550 ரூபாய் சம்பளம். வேலை முடியும்போது தோராயமாக, 1974 வரையில் 5 வருடங்கள் இந்த வேலையில் இருந்தேன். இந்த வேலைதான் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. எப்படியென்றால் முதலில் ஒன் இயர் ரிசர்ச் அண்டு டெமான்ஸ்ட்ரேஷன் ப்ராஜெக்ட் ஆக இருந்தது. அதில் ஒரு கிறிஸ்துவப் பெண். என் வயதுதான் இருக்கும். அவள் என்னுடன் நெருங்கிப் பழகினாள். பிரதி ஞாயிறு எங்கள் வீட்டிற்கு வருவாள். அவளுக்கு நான் ஆங்கில இலக்கணம் டியூசன் எடுப்பேன். அவள் ரொம்ப அழகு. என்னைவிட உயரம். அந்தக் காலத்து கே.ஆர்.விஜயா சாயல்ல இருப்பா. ஒன் இயர் ப்ராஜக்ட் முடிந்தவுடன் அவள் போய் விட்டாள். நான் தொடர்ந்தேன். அவள் மேல் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருந்தது. அதைக் காதல் என்று சொல்ல முடியாது. அவள் சென்று வெகுநாட்களான பிறகு அவளிடமிருந்து ஒரே ஒரு லெட்டர் வந்தது. இந்தச் சமயத்தில் அடுத்த ப்ராஜக்ட் தொடரும்போது என் கல்யாணத்திற்கான ஆயத்தங்களை என் பெற்றோர்கள் 72-ல் செய்தார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தக் கிறிஸ்தவப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தாள். நான் அவளிடம் ‘என் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள்' என்றேன். அவள் ‘இனி நாம் பழைய மாதிரி பழக முடியாதே' என்றாள். இதுதான் இண்டிகேஷன். இதன் மூலம்தான் அவளுக்கு என்மீது காதல் இருப்பது எனக்குத் தெரிகிறது. அவள் பெயர் நான்ஸி.


அந்தக் கிறிஸ்தவப் பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு காதல் ஏற்பட்டு அதில் அவள் தோற்றிருந்தாள். எனக்கும் ஒரு காதல் தோல்வி முன்பே இருந்தது. நான் வேலை செய்துகொண்டிருந்த அரசு பொது மருத்துவமனையில் (ஒரு வருட ப்ராக்டிஸ் முடிந்து நான்ஸி சென்ற பிறகு) ஒரு ஃபிஸியோதெரபிஸ்டும் வேலை பார்த்டு வந்தாள். அவள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள். அவளுக்கு தன் கணவனைத் தவிர வேறு தொடர்பு இருந்ததுதான் விவாகரத்திற்கான காரணம். அவளுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உண்டு. ஃபிஸியோதெரபிஸ்டின்மீது ஆழமான காதல் கொண்டிருந்தேன். என் திருமணத்திற்கு முன்பு நடந்தது இது. காதல் வேகத்தால் உந்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடுத்தேன். அந்தக் கடிதம் பாலுணர்வின் வேகத்தில் எழுதப்பட்டது. மிகவும் கொச்சையானது. அதை அவள் மட்டும் படிக்காமல் சக ஊழியரான ஆண் ஃபிஸியோதெரபிஸ்டிடமும் படிக்கக் கொடுத்துவிட்டாள். அது மட்டுமின்றி அவள்பால் ஏற்பட்ட பாலுணர்வு எழுச்சிக்கான வடிகால் என்ன என்று புரியாமல், நான் ஓர் அருவருப்பானவன் என்று கருதிக்கொண்டு மிகவும் குழம்பிய நிலையிலும் குற்ற உணர்விலும் உருக்குலைந்திருந்தேன். அவளுக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இது எனக்குப் பெரிய மனப் பிரச்சினையாகிவிட்டது. என் கடிதத்தை எல்லா ஃபிஸியோதெரபிஸ்டுகளும் மற்றவர்களும் படித்துவிட்டது போலவும் எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது போலவும் ஒரு மாய உணர்வால் பீடிக்கப்பட்டேன். முதன் முதலாக மனதளவிலான பாதிப்பு இதுதான். இந்த மாய உணர்வு என் காதுகளில் மாய ஒலியாகக் கேட்க ஆரம்பிதுவிட்டது. ‘நீ மிகவும் மோசமானவன்... நீ மிகவும் பச்சையானவன்... நீ ஒரு காமுகன்... நீ அசிங்கம் பிடித்தவன்...' என்று என்னை எல்லோரும் திட்டுவதுபோல; கெட்ட வசவுகளால் என்னைத் துன்புறுத்துவதுபோல. என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு சைக்யாட்ரிஸ்டை பார்க்கும்படி அறிவுறுத்தினார்.


டாக்டர். தைரியம் என்பவரைப் போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் சீனியரான பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் பிரிவில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் என் பிரச்சினைகளைச் சொன்னபோது, அவர் என்னை டாக்டர் சாரதா மேனனிடம் அழைத்துச் சென்றார்.


இந்த உளவியல் சிகிச்சையில் முக்கியமானது என்னவென்றால் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இது அவசியமானது. நல்லபடியாகக் குணமாகிக் கொண்டு வருகிறது என்று தெரிந்தால் மாத்திரைகளின் வீர்யத்தைக் குறைத்துக் கொடுப்பார்கள்.


இந்தச் சமயத்தில்தான் அந்தக் கிறிஸ்தவப் பெண் நான்ஸி வந்து என்னை மீட்டாள். சாந்தோம் தமிழ் சர்ச் பாண்டியன் பாதிரியார்தான் எனக்கு ஞான ஸ்னானம் கொடுத்தது. உண்மையில் நான் கடவுள் நம்பிக்கையாளன் அல்ல. என் கிறிஸ்தவப் பெயர் கே. கார்ல் ராஜன் என்றானது.


12-7-72 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட் சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு என் நண்பர்கள் யாரும் வரவில்லை. என் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திடீரென்று நான் புறப்பட்டுப் போய்த் திருமணம் செய்துகொண்டேன். நான்கு நாட்கள்தான் இதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டேன். மணப்பெண்ணிற்கு மதுரைதான் பூர்வீகம். சென்னை வந்து வீட்டிற்குப் போகாமல் நண்பர்கள் விட்டில் தங்கினேன். என் தந்தை என்னைத் தேடி வந்து ‘நீ எங்கேயும் போகவேண்டாம். நம் வீட்டிலேயே வந்து இரு' என்றார்.


மாதம் ஒருதடவை நான் ராமநாதபுரம் போய் அவளைச் சந்திப்பேன். அல்லது அவள் சென்னைக்கு வருவாள். அவள் இங்கு வரும்போது நண்பர்கள் வீட்டில்தான் சந்தித்துக் கொண்டோம். நான் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதைக் கவனித்த அவள் ‘எதற்கு மாத்திரை சாப்பிடுகிறாய்' என்று கேட்டாள். நான் ஒன்றுமில்லை என்று மறைத்தேன். இதனால் நான்ஸிக்கும் எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆயினும் எப்படியோ உறவு தொடர்ந்தது.

மரணம்

இறந்து போன உடல்
கிடக்கிறது கூடத்தில்
செத்துப் போன தன் மனைவியை
நினைத்து அழுகிறார் பெரியவர்
இன்னமும் மரணம் சம்பவிக்காத
தன் கணவனைக் கொல்ல வழி தெரியாமல்
தவிக்கிறார் (வேறொரு) இளம் மனைவி
இறந்து போன தந்தையும் தாயும் நினைவில்வர
அடித்துக் கொண்டு கதறுகிறார் சற்றே வயதான பெண்மணி
சாலை விபத்தில் இறந்துபோன மகனை நினைவிலே
கொண்டு வந்து அழ முயற்சி செய்கிறார் இன்னொருவர்
மதுச்சாலையில் தன்னை அடித்தவனை திரும்ப
அடிக்கமுடியாததால் கருவிக் கொண்டு அழுகிறார் ஒருவர்
சொத்து சேர்க்காத அப்பனை நினைத்து அழுகிறார் இளையவர்
அலைவரிசை மாற்ற
அபி தேவயானியும் அழுது கொண்டிருக்கிறார்

எல்லாரையும் பார்த்தபடி இருக்கிறது பிணம்

உங்களுக்கு நடந்த கதை

இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே
- விக்ரமாதித்யன் -

இன்றைக்குச் சனிக் கிழமை. நீங்கள் மதுவருந்தும் நாள்.

இது உங்களுக்கு நடந்த விஷயம் என்பதால் உங்கள் பார்வையிலேயே எழுதுகிறேன். வசதிக்கென ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன் : இந்தக் கதையில் அடைப்புக் குறிக்குள் () வருவது உங்கள் மனம் நினைப்பது.

கதையைத் துவங்குமுன், உங்களைப் பற்றிய சில குறிப்புகள் :வயது 26. பெயர் அவ்வளவு முக்கியமில்லை; உயரம் 5'8”. சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறீர்கள். இரண்டு முறை காதலித்து, தோற்றிருக்கிறீர்கள். தற்சமயம் காதலி இல்லை; அது பற்றி சிறு வருத்தமுண்டு. நிற்க. இந்தக் கதை உங்கள் காதலைப் பற்றியதல்ல.

வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் அருகிலுள்ள sea farers club பாருக்குச் சென்று தனியாக அமர்ந்து யோசித்தபடி மதுவைப் பருகுவது உங்களுக்குப் பிடித்தமானது. நான்கு அல்லது ஐந்து பெக்குகள் ஓல்ட் மாங்க் ரம், கலந்து கொள்ள பெப்ஸி அல்லது கோகோ கோலா. தொட்டுக் கொள்ள அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் மிக்சர், சுண்டல், வெள்ளரிப் பிஞ்சு வகையறா.

இன்றைக்கு அலுவலகத்தில் அதிக வேலை; உடனடியாய் அனுப்பியாக வேண்டிய manifest, மற்றும், தலைமயக மாத இறுதி ரிப்போர்ட்களால் தாமதமாகிறது. முடித்து விட்டுக் கிளம்பும் போது மணி மதியம் 3.

20 நிமிடங்கள் நடக்க சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு, ஆட்டோ பிடிக்கிறீர்கள் (20 ரூபாய் தண்டம்). மொத்தமே நான்கு பேர்களே இருந்தார்கள் பாரில். வெற்றி சப்ளை செய்யும் மேசை காலியாக இருக்க அங்கு அமர்கிறீர்கள். அலைபேசி, சிகரெட் பாக்கெட் மற்றும் தீப்பெட்டியை மேசை மேல் வைத்து, கால் நீட்டி அமர்ந்து மூச்சை இழுத்து விடுகிறீர்கள். ரம்மிற்கு உங்கள் தொண்டை பரபரக்கிறது.

வெற்றி சிரித்தபடி வழமையாக நீங்கள் சாப்பிடுபவற்றை உங்கள் மேசையில் வைக்கிறான். கலந்து ஒரு மிடறு விழுங்குகிறீர்கள். தொண்டையில் இறங்குகையில் ஏற்படும் லேசான எரிச்சலில் கண்களை மூடிக் கொள்கிறீர்கள். வெள்ளரிப் பிஞ்சொன்றை எடுத்துக் கடிக்கிறீர்கள்.

நீங்கள் இரண்டாவது ரவுண்டில் இருக்கும் போது பாருக்குள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க கனவான் ஒருவர் நுழைகிறார். வரும் போதே போதையில் தள்ளாடியபடி வருகிறார். (கடவுளே என் மேசையில் அமர்ந்து விடக் கூடாதே). உயர்தர வெள்ளை வேட்டி, சட்டையில் கையில் தங்க வாட்ச், கழுத்தில் செயின் சகிதம் உங்கள் எதிரில் அமர்கிறார். அமரும் போது, மேசை ஆடுகிறது. நீங்கள் நிமிர்ந்து அவரை அசூயையுடன் பார்க்கிறீர்கள். முணகலாக மன்னிப்பு கேட்கிறார்.

(எழுந்து வேறு மேஜைக்குப் போயிடலாமா... முகத்துல அடிச்சது போல இருக்குமோ... சரி, பாப்போம்.)

வெற்றியிடம் இரண்டு லார்ஜ் சிக்னேச்சர் விஸ்கி கொண்டு வரச் சொல்கிறார். இரண்டையும் ஒரே தம்ளரில் விட்டு மேலாகக் கொஞ்சம் தண்ணிரை ஊற்றி, ஒரே மடக்கில் குடிக்கிறார். தண்ணீர் அவர் சட்டையில் வழிகிறது. துடைத்தபடி ‘பொறுமையில்லை, பொறுமையில்லை' எனச் சொல்லிக் கொள்கிறார்.

அவரை ஓரக் கண்களால் பார்க்கிறீர்கள். அழகான ஓவல் வடிவ முகத்தில், தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி காதுகளில் சேருமிடங்களில் நரை. அவர் தலையைக் கோதியபடி இன்னும் இரண்டு என்கிறார். நீங்கள் தலை கவிழ்ந்து உங்கள் தம்ளரில் கவனத்தைக் குவிக்கிறீர்கள். ஒரு லார்ஜை தம்ளரில் ஊற்றிய வெற்றி, மற்றொன்றை அதன் அருகில் வைத்து அகல்கிறான்.

சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியபடி, ‘ஐயா, கொஞ்சம் தீப்பெட்டி தர முடியுமா' என ஆங்கிலத்தில் வினவுகிறார். நீங்கள் லேசாக அவர் பால் நகர்த்துகிறீர்கள்.

(போச்சு, முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பானுங்க; அப்புறம் போட்டு அறுத்துத் தள்ளிடுவானுங்க).

வலக்கையில் கோப்பையை எடுத்தபடி, உங்களிடம், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா.?” என்கிறார். நீங்கள் ‘இது என்ன கேள்வி' என்ற பாவனையில் அவர் முகத்தைப் பார்க்கிறீர்கள்.

“ஆகவில்லையெனில், தயவு செய்து, செய்து கொள்ளாதீர்கள்... “ வாயில் கவிழ்த்துக் கொள்கிறார். மறுபடியும் சட்டையை மது நனைக்கிறது. காகித நேப்கினால் துடைத்துக் கொள்கிறார்.

பாக்கெட்டைத் தடவி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதிவியிலிருந்ததைப் பறை சாற்றியது அது. (பெரிய புண்ணாக்கு). அவர் அறியாமல் அதைக் கசக்கி எறிகிறீர்கள். நேரம் கிடைக்கையில் உங்களை வீட்டிற்கு அழைக்கிறார். அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைக்கிறீர்கள்.

“பெண்கள் எல்லாரும் ஏமாற்றுப் பேர்வழிகள்..”
(போச்சு, மற கழண்ட கேஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்)

‘அனுபவத்தில் சொல்கிறேன் நண்பரே... All women are bitches, fuckin' bitches"
(என்ன வுட்டுடேன்).

சிறிது நேரம் மௌனமாய்க் கழிகிறது. சிகரெட்டை ஆழ்ந்து புகைக்கிறார். முகம் லேசாகக் கோணுகிறது. தனக்குள் சொல்லிக் கொள்பவரைப் போல் “வேசி, அவள் ஒரு வேசி” என்கிறார்.

இடைவெளி விட்டு, “ஆம், அவள் வேசி தான்”
(யாரைச் சொல்றான் லூசு)

“எனக்குத் தெரியாதெனெ நினைத்தாளா அவள். எல்லாரும் என் முதுகுக்குப் பின் பேசுவது என் காதில் விழுகிறதே... என் கேட்கும் திறனை நிறுத்த வழி தெரியவில்லையே... ”

உங்களுக்கு எப்படி எதிர் வினை ஆற்றுவது எனத் தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தபடி இருக்கிறீர்கள்.

“எனதருமை மனைவி” மனைவியில் அழுத்தம் கொடுக்கிறார். உங்களுக்கு விளங்குவது போல் இருக்கிறது.
(பெண்டாட்டி காரி சரியில்ல; புருஷன் குடிகாரன்)

“அவளால் தான் நான் இவ்வாறு குடிகாரனானேன்...” நீண்ட இடைவெளியில் நீங்கள் உங்கள் கோப்பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.

“இப்படிப் பட்ட ஒரு மனைவி இருந்தால் புருஷன் என்னாவது... குறைந்தது ஐந்து பேருடனாவது அவளுக்குக் கள்ள உறவிருக்கும்.. இவள் தொல்லை தாளாமலேயே கோயமத்தூரிலிருந்துச் சென்னைக்கு வந்தேன். இங்கேயும் இதே பிரச்சனை தான்”

“பிரச்சனை இடத்திலல்ல; அவளிடம் தான்..”

இடைவெட்டு : இது உங்களுக்கு நடந்த விஷயம் தான் என்றாலும், எழுதுவது நானல்லவா. அதனால் சிலவற்றைச் சேர்த்து, சிலவற்றை விலக்கியிருப்பேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் நிறுத்தி என்னைக் கேட்கலாம்.

“இதோ வெளியில் இருக்கிறானே டிரைவர்; அவனுடன் கூட அவளுக்கு உறவிருக்கிறது...”
(என்ன மனுஷன் இவன் பிரதம மந்திரிலேர்ந்து வீட்டு வேலைக்காரன் வரைக்கும் தொடுப்பு இருக்குன்னு சொல்வான் போல).

“உங்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன் அல்லவா.. ” நீங்கள் தலையாட்ட, தொடர்கிறார் “வேண்டாம்; வர வேண்டாம். வந்தால் நீங்களும் அவளுடன் படுப்பீர்கள்...”
(எழுந்து ஓடிடலாமா).

சிறிது இடைவெளி விட்டு, “உங்களுக்கு எது சொந்த ஊர்.?” என வினவுகிறார். அப்பாடா வேறு விஷயத்திற்கு வருகிறாரே என்ற நிம்மதியுடன் நீங்கள் “தஞ்சாவூர்” என்கிறீர்கள்.

“தஞ்சாவூர்... தஞ்சாவூர்... அங்கு கூட அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்”
(வேதாளம் முருங்க மரம் ஏறி விட்டது).

அவளுடைய காதல் கதைகளை முழுமையாய் விவரிக்கிறார். Graphical Descriptionsஐத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை நீக்கிவிட்டேன். அவர் விவரித்ததின் சாராம்சம் : அவர் மனைவி வேசை. உங்களுக்குச் சங்கடமாயிருக்கிறது. அவர் குரல் குழற ஆரம்பிக்கிறது. அவர் முகத்தையும் உங்கள் கோப்பையையும் மாறி, மாறிப் பார்த்தபடி இருக்கிறீர்கள். அவர் உச்ச போதைக்குச் சென்று கொண்டிருக்கிறார். வெற்றியை அழைத்து பணம் கொடுக்கிறார்.

“சரி, நான் கிளம்புகிறேன்” என்றவாறு எழுந்திருக்கிறார். உடல் ஆடுகிறது. இரண்டடி சென்றவர் சாயப் போகிறார். வெற்றி அவரைத் தாங்கிப் பிடிக்கிறான். முடியாமல் தடுமாறுகிறான். நீங்கள் எழுந்து ஒரு பக்கம் அவரைத் தாங்குகிறீர்கள்.

“கொண்டு போய் கார்ல விட்டுறலாம் சார்” என்கிறான் வெற்றி. அவனுக்குப் பழக்கம் போல.

நீங்கள் அவரை அழைத்து வருவதைப் பார்த்ததும் டிரைவர் சிகரெட்டை அணைத்து, வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்கிறார். அவரைப் பின் இருக்கையில் அமர வைத்ததும், வெற்றி அகல்கிறான்.

இடைவெட்டு : இன்னும் இரண்டு பத்திகளில் கதை முடியப் போகிறது. நீங்கள் எனக்குச் சொல்லிய படி தான் கதையின் முடிவை எழுதியிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இது உங்களுக்கு நடந்த கதை; எனவே உண்மையில் என்ன நடந்ததோ அதைப் போலவோ அல்லது வேறு விதமாக மாற்றியோ நீங்கள் இந்தக் கதையை எழுதிக் கொள்ளலாம்.

முகம் கோணி, உங்களைப் பார்த்து இளிக்கிறார். உங்களை அருகில் அழைக்கிறார். உங்கள் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நீங்கள் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.

திரும்பவும் பாருக்குள் நுழைகையில் நீங்கள் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினீர்கள் என்பது ஞாபகம் வருகிறது. தொண்டையில் பாறாங்கல்லை அடைத்ததைப் போல் உணர்கிறீர்கள்.

(இது ஒரு மீள் பதிவு. பழைய பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/02/blog-post_13.html)

சி மணிக்கு அஞ்சலி

தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர் சி மணி. இவர் நேற்று இரவு இறந்துவிட்டதாக இன்று காலை அறிந்தேன்.

சி சு செல்லப்பாவின் 'எழுத்து' காலம்தொட்டு எழுதியிருக்கிறார் (சிசுசெ தொகுத்த புதுக்குரல்கள் தொகுதியிலும் இவரது கவிதைகள் இருக்கும்). தமிழில் நவீன கவிதையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர். வரும் போகும், ஒளிச் சேர்க்கை போன்ற கவிதைப் புத்தகங்கள் க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றன. வே மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். சந்தத்தோடு கூடிய நவீன கவிதைகளில் இவர் ஞானக்கூத்தனுக்கு முன்னோடி.

இவர் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது பச்சையம் கவிதையிலிருந்து சில பகுதிகளை ஒருமுறை பதிவிட்டிருக்கிறேன் (பார்க்க : http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_09.html)

இவர் எழுதிய நரகம், பச்சையம், வரும் போகும் போன்ற நீள் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. சி மணியின் வேறு சில சிறிய கவிதைகளைக் கீழே தருகிறேன்.

தீர்வு

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்,தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

சிக்கல்

பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டும் விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்

இடையீடு

1. சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை

2. எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

3. என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

4. எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று

மினியுகம்

சனி த்துவிட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும்மனிதர் கொற்றம்.
இனி
மினி மக்கள் காலம்
மனி தனைவிட்டு
மினி தனைப்பாடு போற்று
குனி என்பேச்சைக் கேள், ஏ
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை

எனக்குப் பிடித்த கவிஞனுக்கு அஞ்சலி.

ஃபிலிம் காட்டுதல் (அ) கடிதம் எழுதுதல் (பைத்தியக்காரன்)

'சிதைவுகளில்' வர வேண்டியது சில காரணங்களால் 'மொழி விளையாட்டில்' வருகிறது. சிரமத்துக்கு பதிவுலக நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இந்த தொடர் விளையாட்டை ஆரம்பித்த நண்பர் மாதவராஜுக்கும், என்னை தொடரச் சொன்னதுடன், தன் வலைப்பக்கத்திலேயே இதை வெளியிடவும் இசைந்த அன்பு சுந்தருக்கும் ஸ்பெஷல் உம்மா. லக்கி, இப்போது திருப்திதானே? சுந்தருக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் :-). உங்களால் பாவம் மாதவராஜும் என் உம்மாவை சகித்துக் கொள்கிறார் :--&( இனி -&


அன்பின் முத்தையா,

இது சாலமன். நலமா? நானும்.

ஒரு நூற்றாண்டு தனிமைக்கு பின், கொல்லனின் ஆறு பெண் மக்களுடன் மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன், மதினிமார்களின் கதைகளை சொல்ல ஆரம்பித்த இருபது ஆண்டுகளுக்குப் பின், பைத்தியக்காரனை சந்தித்தேன். ஆமாம், பதிவுலகில் எழுதிவரும் அதே பைத்தியக்காரன்தான். அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தான். ஒரு கோப்பை தேனீருக்குப் பின், ஏன் இப்போது பதிவுகளில் எழுதுவதில்லை என்று கேட்டேன். 'அலுவலகத்தில் ப்ளாக்கரை மூடிவிட்டார்கள். பின்னூட்டங்கள் மட்டுமே அதிரி புதிரியாக எழுத முடிகிறது' என்றான். ஆனால், குரலில் வேறு ஏதோவொன்று மறைந்திருந்தது. மெல்ல பேச்சுக் கொடுத்ததில் கொட்ட ஆரம்பித்தான். சிதறிய வார்த்தைகளில் காந்தி தாத்தாவின் புன்னகை சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.

''பயமா இருக்குடா. சாட்ல யார் வந்தாலும் சரி, இல்ல புதுசா ஏதாவது பதிவுலக நண்பர் அறிமுகமானாலும் சரி, சட்டுனு கடனா பணம் கிடைக்குமான்னு கேட்க ஆரம்பிச்சிடறேன். சுந்தர், ஜமாலன், நர்சிம்... இப்படி யாரையுமே விடலை. எல்லார்கிட்டேந்தும் பணத்த வாங்கிட்டேன். ஆனா, இதுவரைக்கும் திருப்பித் தரலை. இப்பக் கூட பாரு, உன்கிட்ட ஏதாவது பணம் கிடைக்குமானுதான் உள்ளுக்குள்ள கணக்கு போட்டுட்டு இருக்கேன். என்னையே எனக்கு பிடிக்கலைடா. ஆனா, விடிஞ்சா 20 ஆயிரம் ரூபா வட்டி கட்டணுமே. நான் என்ன செய்யட்டும்? யோசிச்சேன். நண்பர்களை இழக்க விரும்பலை. அதான் மவுனமாகிட்டேன்...''

எனக்கு பாதசாரியின் 'காசி' நினைவுக்கு வந்தான்.

நேற்று குரோம்பேட்டையிலுள்ள சிவராமனின் வீட்டுக்கு சேஷையா ரவியுடன் சென்றிருந்தேன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். 14 வயதுதானிருக்கும். எட்டிப் பார்த்த சிவராமன், வரவேற்றான். அந்தப் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான். நிரஞ்சனா. அவனது அக்கா மகள். சுருள் சுருளான முடியுடன், நோஞ்சானாக பிறந்த குழந்தையை மொட்டை மாடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாட்டி வடை சுட்ட கதையை நீயும் நானும் மாறி மாறி சொன்னோமே, அதே குழந்தைதான். அதே சுருள்முடிதான். அதே அரிசிப் பற்கள்தான். ஆனால், இப்போது பூசினாற்போல் இருக்கிறாள். 'இழுத்துக் கட்டிய உடல்' என தி. ஜானகிராமன் என் செவியில் முணுமுணுத்தார். ஆச்சர்யத்தில் வாய் பிளந்துவிட்டேன். நம்மிடமிருந்து விலகிய வயதை எல்லாம், அந்தப் பெண்தான் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறாள். வாய் நிறைய அங்கிள், அங்கிள் என்று அவள் அழைத்தபோதும், சுடச்சுட காபி கலந்து கொடுத்தபோதும்... சொல்லத் தெரியவில்லை. மனதில் அப்படியொரு சந்தோஷம் ஊற்றெடுத்தது. நம் கண்முன்னால் ஒரு குழந்தை, குமரியாகியிருக்கிறாள். பரிணாம வளர்ச்சியின் அழகு, சொரூப நிலை.

வெளியில் வந்தோம். வெய்யில் தகித்தது. 'Rain Rain go away, Come again another day... என பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து நாம் மனப்பாடம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு இது', கர்சீப்பால் முகத்தை துடைத்தபடியே சேஷையா ரவி முணுமுணுத்தான். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

காரணம் கேட்காதே. இரண்டு நாட்களுக்கு முன் 'பணமா பாசமா' படத்தை திரும்பவும் பார்த்தேன். 'மும்பை'யில் அரவிந்த்சாமி, 'நீங்க சாகற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது...' என்பாரே, அதுமாதிரியான ஒரு வசனத்தை இந்தப் படத்தில் நடிகை சரோஜாதேவி, டி. கே. பகவதியிடம் சொல்கிறாள். போலவே 'சூர்யவம்சம்' படத்தில் வரும் பல காட்சிகள், இதிலும் இடம்பெற்றிருந்தன. ரமணிச்சந்திரனின் ஏதோவொரு நாவல். வளையோசையோ, எதுவோ பெயர் நினைவில் இல்லை. பெயரா முக்கியம்? ஒரே கதையைத்தானே தொடர்ந்து நாவலாக ரமணிச்சந்திரன் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறார்?

இரு இரு, மெளனி மட்டும் யோக்கியமா? அவரது 24 சிறுகதைகளும் ஒரே சிறுகதைதானே என நீ சொல்வது என் செவியில் ஒலிக்கிறது. மறுக்கவில்லை. உலகிலுள்ள மனிதர்களை எல்லாம் பலமற்ற, கனவு காணும் பதினெட்டுப் பிராயத்து காதலர்களாக... அப்படிப்பட்ட காதலர்களின் பலத்துடனும் பலஹீனத்துடனும் கற்பனை செய்து காட்டுவதே மெளனிக்கு வாடிக்கை. அதுவே வேடிக்கை. ஒப்புக்கொள்கிறேன்.

என்றாலும் 'படிகளில்' ஏறி, 'மீட்சி'யின் வழியே 'நிறப்பிரிகை'யை பிடித்து அவருக்கு சமாதி கட்டிவிட்டாலும் 'எவற்றின் நடமாடும் சாயலாகவோ' அவர் உலவிக் கொண்டுதானே இருக்கிறார்? அதனால்தான் சிலநேரங்களில் அவர் அழியாச்சுடர். புதுமைப்பித்தன் குறிப்பிட்டதுபோல் மெளனி, எழுத்தாளர்களின் திருமூலர்.

இடைச்செறுகலாக ஒரு விஷயம் முத்தையா. 'THOUGHT' ஆங்கில இதழில் 'Introducing Mouni' என ஒரு கட்டுரையை நகுலன் முன்பு எழுதியிருக்கிறார். எவ்வளவோ தேடிப் பார்த்துவிட்டேன். அந்தக் கட்டுரையும் சரி, அந்த இதழும் சரி கிடைக்கவில்லை. நகுலனின் 'மொத்த' தொகுப்பிலும் அது இடம்பெறவும் இல்லை. உன்னால் முடிந்தால் அந்தப் பிரதியை கண்டுப் பிடித்து ஜெராக்ஸ் எடுத்துக் கொடு. ஈரேழு ஜென்மத்திலும் உனக்கு புண்ணியம் கிடைக்க நான் வழிகாட்டுகிறேன். ஜெராக்ஸ் என்றதும் ஜ்யோராம் சுந்தரின் ஞாபகம் வருகிறது. ஒரே இதழுடன் நின்றுவிட்ட 'மழை' சிற்றிதழில் யூமா வாசுகி எடுத்த கோபிகிருஷ்ணனின் ஒரே முழுமையான நேர்காணல் வந்திருக்கிறது. அந்தப் பத்து பக்கங்களையும் பிரதி எடுத்து தருமாறு சுந்தர் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். தர வேண்டும்.

அதெல்லாம் கிடக்கட்டும். மெளனியும், ரமணிச்சந்திரனும் ஒன்றா என யாராவது முஷ்டியை மடக்கலாம். பூஞ்சை உடம்பு. பதிலுக்கு தொடை தட்டினால், என் கால் எலும்பு உடைந்துவிடும். எனவே ஒரே வாக்கியம்தான். சுந்தரராமசாமியின் எழுத்துக்களும், சாணித்தாளில் பிரசுரமாகும் சரோஜாதேவியின் ஃபோர்னோ எழுத்துக்களும் கூட ஒன்றுதான் என்பதில் தீர்மானமாகவே நானிருக்கிறேன்.

சரி, இப்போது ரமணிச்சந்திரனின் நாவலுக்கு வருவோம். அதில், நாத்தனாரின் வளைகாப்புக்கு, தன்னை காதலிக்காத கணவனுடன் நாயகி செல்வாள். முத்து வளையலை போடுவாள். சீமந்தத்துக்கு இந்தமாதிரியான முத்து வளையல் சீராக வேண்டும் என நாத்தனாரின் மாமியார் கட்டளையிட்டிருப்பாள். எனவே பரிசு போலவும், சீதனம் போலவும் அது அமையும். நாயகன் நெகிழ்வான். இதற்கு சமமான காட்சியும் 'பணமா பாசமா'வில் இருக்கிறது.

இவையெல்லாம், காபியா, இன்ஸ்பிரேஷனா? இதற்கு பதில் சொல்வதைவிட, பதில் அவசியம் தேவையா என்ற கேள்வியே முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியும், சங்கிலி போன்ற ஒருவகையான கோர்வையுமே அனைத்தின் அடிநாதமாக இருக்கிறது. நீ என்ன நினைக்கிறாய்?

தமிழ் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன், ஓலைச்சுவடிகளில் கவிதையை எழுதுவதற்கு முன், பாணர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்திருக்க வேண்டும். முகம் தெரியாத மூதாதையர்கள் உச்சரித்த வாய்மொழி பாடல்களே காற்றில் உலவியிருக்க வேண்டும். அதனால்தான் சங்கக்கால புலவர்களால் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் எழுத முடிந்திருக்கிறது. இன்ஸ்பிரேஷன் இன்றி இது சாத்தியமில்லை.

இப்படிப்பார். 'பொன்முடி' திரைப்படத்தில் பாரதிதாசன் வசனம் எழுதியிருக்காவிட்டால், 'பராசக்தி' படத்தில் கருணாநிதியால் அந்த நீதிமன்ற வசனங்களை எழுதியிருக்க முடியுமா? சிரமம்தான். காரணம், வரிக்கு வரி கருணாநிதி எழுதியது பாரதிதாசனின் வரிகளுடைய எக்ஸ்டென்ஷன்தான்.

அவ்வளவு ஏன், போர்ஹேஸ் எழுத்துக்களின் தாக்கம் உம்பர்ட்டோ ஈகோவிடம் அதிகமாக காணப்படுவதை தேர்ந்த வாசகனால் உணரமுடியுமல்லவா? இதையே இப்படியும் சொல்லலாம். போர்ஹேஸ் சிறுகதைகள் முடிந்த இடத்திலிருந்து உம்பர்ட்டோவின் எழுத்துக்கள் சீறிப்பாய்கின்றன. உம்பர்ட்டோ ஈகோவின் Foucault's pendulam வாசிப்பதற்கு முன்னால் போர்ஹேஸ் எழுதிய Tlon, Uqbar, Orbis Tertius சிறுகதையை வாசிப்பது நல்லதல்லவா? (இந்த சிறுகதையை ‘லோன், உக்பார், ஒர்பிஸ் தெர்துய்ஸ்’ என்ற பெயரில் எளிமையாக, தெளிவாக, முழுமையாக நண்பர் பிரேம் (ரமேஷ்) தமிழ்படுத்தியிருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மணல் பிரதி’ தொகுப்பில் இதனை காணலாம். நேரில் சந்திக்கும்போது இந்தப் பிரதியை உன்னிடம் தருகிறேன்.)

அதேபோல், கொரிய இயக்குநரான கிம் கி டுக்கின் 'The Bow' திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டா எழுதிய 'House of Sleeping Beauties' புதினம் ஏனோ கண்முன்னால் வந்து வந்து போகிறது. இரண்டுக்கும் தொடர்பில்லைதான். ஆனால், பிணைப்பு இருப்பதுபோலவே தோன்றுகிறது.

வேண்டுமானால் நீயே கவபட்டாவின் இந்த நாவலை வாசித்துப்பார். ஆங்கிலத்தில் கூட வேண்டாம். தமிழில் லதாராமகிருஷ்ணன், 'தூங்கும் அழகிகள் இல்லம்' என்ற பெயரில் இதை மொழிபெயர்த்திருக்கிறார். 'உன்னதம்' கெளதமசித்தார்த்தன் அதை வெளியிட்டிருக்கிறார்.

சித்தார்த்தன் என்றதும் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இனி மாதாமாதம் 'உன்னதம்' இதழ் வெளிவருமாம். சித்தார்த்தனை சந்தித்தபோது சொன்னார். அவரது நிலத்தை அடமானமாக வைத்து வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கிறாராம். அந்தத் தொகை தீரும் வரை இதழ் தவறாமல் வருமாம். சிறுபத்திரிகை வியாதி. செல்லப்பா, ஆத்மாநாம், 'இலக்கியவெளிவட்டம்' நடராசன் என தொடரும் பட்டியலில் கெளதம சித்தார்த்தனும் இடம்பெற நினைக்கிறார்.

ஷிட். எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டோம். இன்ஸ்பிரேஷன். ஆமாம், நாம் பேசி வந்தது இதைப்பற்றிதான். என்ன சொல்ல வருகிறேன் என்றால், வேர்களை அறிவது விழுதுகளை புரிந்து கொள்ள உதவும். அவ்வளவுதான். ஆனால், இப்போது விழுதுகளை மட்டுமே தொழுவுவது அதிகமாகிவிட்டது. தத்துவப் போக்கில் மட்டுமல்ல, இலக்கியப் போக்கிலும் இந்த நிலை நீடிக்கிறது. புதுமைப்பித்தன், மெளனி, கு.பா.ரா... என தொடரும் ஸ்கூல் ஆஃப் தாட், இன்றைய ஜே.பி. சாணக்யா வரை கிளை பரப்பி நிற்கிறது. பிரமிள், நகுலன்... என தொடரும் பட்டியல் இப்போதைய பின்னை நவீனத்துவ பிரதிகளில் மூச்சு வாங்க ஓய்வெடுக்கிறது. தமிழின் முதல் ஹோமோ செக்சுவல் நாவலான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' ஒருவகையில் இன்றைய 'ஜீரோ டிகிரி'க்கு முன்னோடி. டிக் ஷ்னரி ஆஃப் கஸார்ஸ் வாசித்தால் கோணங்கியின் புதினங்கள் ஓரளவு புரியும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வாழ்க்கையையும், தேவதாசிகளின் ரணங்களையும் அறிந்திருந்தால் முழுமையாகவே 'பாழி', 'பிதுரா'வுடன் உரையாட முடியும்.

அதாவது முத்தையா. பயிற்சியாக வாசிக்க ஆரம்பித்தால், எல்லாம் இன்பமயம். என்றாலும் புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நகரம்', கு. அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்', கு.பா. ராஜகோபாலனின் 'விடியுமா' போன்றவை என்றுமே மாஸ்டர் பீஸ்தான் என்பதை உரத்து சொல்வதில் வெட்கமேதும் இல்லை. இரு இரு. கோபித்துக் கொள்ளாதே. உட்கார். கடிதம் படிக்காமல் எங்கு கிளம்பிவிட்டாய்? சிகரெட் பிடிக்கவா? அட, மன்னித்து விடப்பா. ஆர்வக் கோளாறு. ஏதேதோ உளறிவிட்டேன். இப்போது அறுப்பதை நிறுத்திவிட்டு நேராக ரோஷினிக்கு வருகிறேன்.

ஆ... ஹை. புன்னகையை பார். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ரோஷினி குறித்து பேச ஆரம்பித்ததுமே நீ உதடு கிழிய சிரிப்பாய் என்று தெரியும். முதலில் உன் வாயை துடைத்துக் கொள். வழிகிறது. நீ, நான், ராமச்சந்திரன் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு காதலித்த அதே ரோஷினியை ஏவிஎம் ஸ்டூடியோவில் சந்தித்தேன். சென்ற கடிதத்தில் அந்த நடிகை வரும் விளம்பரத்தை புகழ்ந்திருந்தாய் அல்லவா? அதை எடுத்தது அவள்தானாம். சொன்னாள். அந்த விளம்பரத்துக்கு காமிரா பிடித்தவர் அவளது கணவனாம். வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டேன். இருவரும் ராஜிவ்மேனனிடம் பயிற்சி பெற்றபோது காதல் அரும்பியதாம். நான்கு வயதில் பையன் இருக்கிறானாம்.

சட்டென ஏவிஎம் ஸ்டூடியோ மறைந்துவிட்டது. நாம் அலைந்து திரிந்த பள்ளிக்கூடமும், வயல்வெளிகளும், தோப்புகளும் அப்படியே சிஜியில் முளைத்தது. அரைக்கால் டிரவுசரில் நானும், பாவாடை சட்டையில் அவளுமாக நின்றுக் கொண்டிருந்தோம். மாங்காய் அடித்து நான் கொடுக்க, புளியம் பழத்தை அவள் பதிலுக்கு கொடுத்தாள். அதை சாப்பிடுவதற்காக என் வாயருகில் கொண்டு சென்றேன். யாரோ தோளைத் தொட்டார்கள். புளியம் பழம் நழுவி விழுந்தது.

'ஹி இஸ் மை ஹஸ்பண்ட்' என்றாள். கை குலுக்கினோம். இருவருமாக இணைந்து அடுத்தமாதம் படத்துக்கு பூஜை போடப் போகிறார்களாம். 'நீயும் முத்தையாவும் என்னை டாவடிச்சீங்களே... அதுதான் கதை' என்று சிரித்தாள். சிரித்தான். சிரித்தேன். கணவரிடம் அனைத்தையும் சொல்லி இருக்கிறாள். அவர்கள் நெருக்கமாகவும், சிநேகமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்காகவே அவளை நாம் சிறுவயதில் காதலித்திருக்கிறோம் போல.
''ஹீரோ கேரக்டர் பேரு என்ன தெரியுமா? ராமச்சந்திரன்!'' என அட்டகாசமாக ரோஷினியின் கணவன் சொன்னான். எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை. அவளும்/னும் சொல்லவில்லை.

சென்ற முறை நீ எனக்கு கடிதம் எழுதியபோது டாக்டர் ருத்ரன் உன்னிடம் கேட்ட கேள்வியை எனக்கு ஃபார்வேர்ட் பண்ணி இருந்தாய். i really would like to meet someone who had read the interpretation of dreams ( or being and nothingness)! இதில் interpretation of dreams குறித்து எனக்கு எதுவும் தெரியாது. செல்வேந்திரன் கேட்டதற்கு பதில் சொன்னது பைத்தியக்காரன். எனவே அவன்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அல்லது டாக்டரை போய் சந்திக்க வேண்டும்.

ஆனால், being and nothingness பற்றி ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். காரணம் அது சார்த்தர் எழுதிய புத்தகம். சிமோன் தி புவாவுடன் 20 ஆண்டுகளுக்கும் மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து, காதலுடன் வாழ்ந்தவரில்லையா? எந்தவொரு தத்துவ மாணவனையும் ஈர்க்கும் விஷயமல்லவா இது? தனக்கான சிமோன் தி புவாவை தேடுவது வரமா சாபமா? இதை The Nature of Second sex என்று சொல்வதைவிட, The Nature of First sex என்று சொல்லலாமா?

சார்த்தர் எழுதிய அந்த நூலை முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சார்த்தரை முழுமையாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் எஸ்.வி. ராஜதுரை அல்லது அந்தக் கால சாருநிவேதிதா. இருவரும் சார்த்தரின் படைப்புகளை தெரிந்த அளவுக்கு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சார்த்தரை ஒன்றுமில்லாமல் தெரிதா, ஆக்கியதும், சார்த்தரை படிப்பதை நிறுத்திவிட்டேன். அது தவறு என்று இப்போது புரிகிறது. அவரது காதல் வாழ்க்கையை மட்டுமல்ல, இருத்தலியல் கோட்பாடுகளையும் முழுமையாக கற்க வேண்டும். என்ன செய்ய, வேர்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதானே உதித்திருக்கிறது?

எப்படியோ டாக்டர் எனது நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார். யோசித்தபோது ஞாபக அடுக்கிலிருந்து being and nothingness குறித்து ஒரேயொரு பீஸ்தான் வந்துவிழுந்தது. அதுகூட முழுமையாக இல்லை. சாராம்சம் மட்டும் கொஞ்சம். கொஞ்சம்...

'ஒரு ஆணும் பெண்ணும் ஏன் பழகுகிறார்கள் என்று அந்த ஆணுக்கும் தெரியும், பெண்ணுக்கும் தெரியும். ஆனாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். ஆண் தன் விருப்பத்தை தெரியப்படுத்தியதும், அந்தப் பெண் திடுக்கிடுவது போல் நடிக்கிறாள்....'

இந்த பீஸ் சரியா என்பதை டாக்டரை கேட்டுச் சொல். இந்த இடத்தில் காரல் மார்க்ஸ் எழுதிய விஷயமும் தொடர்ச்சியாக வந்து விழுகிறது.

The Immediate, natural and necessary relation of human being to human being is the relation of man to woman. The relation of man to woman is the most natural relation of human being to human being... - KARL MARX, EPM

ஸ்ஸ்ஸ்... அப்பா... ரொம்ப எழுதிவிட்டேன். கை வலிக்கிறது. போதும் முடித்துவிடுகிறேன்.

தோழமையுடன்
சாலமன்.

இந்த தொடர் விளையாட்டில் அடுத்ததாக கடிதம் எழுத (அதாவது முத்தையா, சாலமனுக்கு எழுதும் மடல்) நண்பர் நர்சிம்மை அழைக்கிறேன்.

- பைத்தியக்காரன்

இல்லாத சாலமனுக்கு ஒரு கடிதம்

ப்ரியமுள்ள சாலமன்,

நீ உண்மையில் கிடையாது. ஒரு விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துரு. இதுவும் ஒரு வசதிதான். எனக்கு உவப்பான மற்றும் சில சமயம் நான் வெறுக்கும் என் நண்பர்களின் குணங்களை உனக்கு ஏற்றிப் பார்த்து இந்தக் கடிதத்தை எழுதலாம்.

எப்படி நீ வெறும் புனைவோ அப்படியே இந்தக் கடிதமும் ஆகட்டும். அதனாலேயே உனக்கு நான் பல வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தை இப்போது மறுபடியும் எழுதுகிறேன்.

இரு மக்கா, எதை எழுதுவதென்றாலும் கொஞ்சம் சரக்கு தேவைப் படுகிறது. மூடிய கதவுகளுக்குள்ளான என்னுடைய கோப்பையை நிரப்பிக் கொள்கிறேன். உன்னுடனான என் பிரிவு நிகழ்ந்தபோதும் (அது இருக்குமா ஒரு 15 வருசம்!), நான் வாசித்துக் கொண்டும் குடித்துக் கொண்டும்தான் இருந்தேன். முன்னது பாதியாகி, பின்னது இரு மடங்காகி... ஆனால் கடிதமெழுதுவது மட்டும் காணாமலே போயிருக்கிறது. இப்போதெல்லாம் அரட்டைப் பெட்டியில் எழும் நீள் சதுரங்களுடனான உரையாடல்கள் கடிதங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டன. நீயும் நானும் வாரத்திற்கு இருமுறை நான்கு முழுப் பக்கங்களில் கடிதம் எழுதிக் கொண்டது கனவாயிருக்கிறது சாலமன்.

சாலமன், சாலமன், சாலமன்... உன்னுடையே இந்தப் பெயர் உச்சரிப்பதற்கே எவ்வளவு இனிமையாயிருக்கிறது!

சரி, போன மாதம் உன்னதம் பத்திரிகையில் என்னுடைய கதையொன்று வந்திருக்கிறது. அதை நீ இங்கு வாசிக்கலாம் : http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_14.html. மணல்வீட்டில் வந்த என்னுடைய கவிதைக்கான சுட்டி எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

எதை எடுத்தாலும் சுட்டி குட்டி என்று பேசும் நிலையில் இப்போது இருக்கிறேன். இணையத்தில் இரண்டு வார்த்தை கதைகள், நான்கு எழுத்து கவிதைகள், ஒன்பது வரி நாவல்கள் என்று போட்டு படுத்தறாங்க மக்கா. இன்னொருத்தர் இரண்டு மூன்று வருடம் ஓடக்கூடிய மெகா சீரியல் நாடகத்தை ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருக்கிறார். தாங்க முடியலைப்பா. உடனே மற்றமையை அங்கீகரித்தல், ஏற்றுக் கொள்ளுதல்னு ஆரம்பித்துவிடாதே... எனக்கு உடம்பில் தெம்பில்லை.

கோணங்கியின் எழுத்துமுறை automatic writing வகையைச் சேர்ந்தது. முன் தீர்மானிக்காமல் சுய போதமின்றி எழுதிச் செல்லும் கை. அங்கே எழுதுபவனும் ஒரு கருவிதான். ஆனாலும் பார் நண்பா, நான்காவது வரியிலேயே தூக்கம் வந்துவிடுகிறது எனக்கு.

ங்கோத்தா... (கெட்ட வார்த்தை இல்லாட்டி இதை ஒரு புண்டா மவனும் இலக்கியமா எடுத்துக்க மாட்டான். அதுக்காகத்தான் இந்த வார்த்தை. நீ தப்பா எடுத்துக்காதே!).

வீட்டில் இருந்தே தீர வேண்டிய பத்து புத்தகங்கள்னு ஒருத்தர் பதிவு எழுதியிருக்காரு. இங்கே சுங்க அலுவலகத்திற்குப் பின்னிருக்கும் சாலையோரக் குடிசைகளைப் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது வீட்டில் இருந்தே தீர வேண்டியது புத்தகங்கள் அல்ல, கக்கூஸ்தான் என்று. இன்னொருத்தர் காந்தியின் சுயசரிதை படிச்சே ஆகணுமாம். யோவ், ஆட்டோ சங்கரோட சுயசரிதைகூட இன்னும் கொஞ்சம் உபயோகமாயிருக்கும்யா.

என்னைப் பொறுத்தவரை படித்தே தீரவேண்டிய புக்ஸ்னு ஒன்னுமேயில்லை. பைத்தியக்காரன், செல்வேந்திரன் பதிவுல முக்கியமான புத்தகம்னு interpretation of dreamsஐச் சொல்றாரு. உடனே எனக்கு சொப்பன ஸ்கலிதம் சேலம் சிவராஜ்தான் ஞாபகம் வர்றாருப்பா. தான் பெரிய புத்திசாலின்னு அடுத்தவன் நம்பணும்னு ஜெர்மன் ஐடியாலஜி, குடும்பம் தனிச் சொத்துன்னு ஃபிலிம் காட்டறாருப்பா பைத்தியக்காரன். (அந்தாளு நிஜாமவே பைத்தியக்காரன்தான் போல... இந்த மாதிரி name dropping யாருக்குத்தான் தெரியாது!). என்னைக் கேட்டா கீழே இருக்கற புக்ஸ்தான் பெஸ்ட் :

1. Umerto Eco - Foucault's Pendulam
2. James Joyce - Finnegans Wake
3. Friedrich Nietsche - Thus Spake Zarathustra
4. Michel Foucault - History of Sexuality
5. Allen Ginsberg - Fall of America

இன்னும் Marquis De Sade, Roland Barthes, William Faulkner, Sylvia Plathன்னு பல பேர் இருக்காங்கடா.

ஏன் தமிழில் எதுவும் சொல்லவில்லை என்கிறாயா? எல்லாரும் குடும்பக் கதைகள்தான் எழுதிகிட்டிருக்காங்க. கொஞ்சம் நல்லா நகுலன் எழுதிகிட்டிருந்தாரு, இப்ப நான் எழுதறேன்... வேற யார் இருக்காங்க சொல்லு பாக்கலாம். இப்பல்லாம் நான் தமிழ்ல படிக்கறதேயில்லை.

இரு, பெப்சி தீந்து போச்சு, போய் எடுத்துகிட்டு வந்துடறேன்.

(இந்த இடத்தில் காலச்சுவடு கண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகனையெல்லாம் திட்டி 10 வரிகள் எழுதியிருந்தேன். அது காணாமல் போயிருக்கிறது).

சரிடா.. என்ன பேர் அது சாலமன்ன்னு.. மண்ணு மாதிரி இருக்கு. இப்ப என்னோட பேரையே எடுத்துக்கோ, எவ்வளவு கவித்துவமா இருக்கு. வச்சிருக்கான் பார் பேர, சாலமன்னு.. சரியான முட்டாப் பையன்டா நீ.

பாத்துக்கடா, எப்படி நீ உண்மையிலேயே சாலமன் கிடையாதோ அப்படியே நானும் நான் ஒருத்தன் மட்டுமே கிடையாது. உடனே பலரோட குரல்ல பேசற தாமுவை நினைச்சுக்காதே.. இது பலகுரல் இல்ல, பலரின் குரல்கள்.

நீ நல்லா இருக்கியா, உன் மச்சினிச்சி கொழந்த சுகமான்னு எல்லாம் நான் ஏன் விசாரிக்கலைன்னு கேட்காதே. அதெல்லாம் மிடில் கிளாஸ் ஆளுங்க செய்யறது.

போதும்டா மச்சான், தூக்கம் வருது.. ஸீ யூ... முடிஞ்சா என்னோட எழுத்துங்களை படிச்சு எப்படி எழுதணும்னு கத்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்.

உனக்கெல்லாம் அன்புடன்னு முடிக்க முடியாதுடா பாடு.

முத்தையா

இந்த விளையாட்டிற்கு என்னை அழைத்த மாதவராஜூக்கு நன்றி. இதைத் தொடர நண்பர் பைத்தியக்காரனை அழைக்கிறேன். பாருங்கள், இதில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் என்று :

(1) சாலமன் என்று ஒருவரும் கிடையாது; போலவே முத்தையா என்றும்.
(2) பதிவு இருந்தாலும் அதில் பைத்தியக்காரன் எழுதுவது கிடையாது
(3) அவர் எழுதிக் கொடுப்பதை என் பதிவிலேயே போட்டுக் கொள்ளலாம்.
(4) இல்லாவிட்டால் இந்தப் பதிவுதான் பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி வேறு ஒருவரை விளையாட்டிற்கு அழைக்கலாம்.
(5) இப்படியாக, இப்படியாக.