கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகுதி 1)

(குறிப்பு : மழை சிற்றிதழுக்காக கோபிகிருஷ்ணனை யூமா வாசுகி எடுத்த நேர்க்காணல் இது. என்னைப் பற்றி நானே சொல்லிவிடுகிறேன்; கேள்விகள் வேண்டாம் என்று கோபிகிருஷ்ணன் பேட்டியின் ஆரம்பித்திலேயே சொல்லிய பேட்டி! மழை சிற்றிதழுக்கு நன்றியுடன் இதை நான்கு பகுதிகளாகப் பதிவிடுகிறேன். இதழைத் தேடிக் கொடுத்துதவிய பைத்தியக்காரனுக்கு எப்போதும் போல் என் அன்பு).


நான் 23 ஆகஸ்ட் 1945ல் மதுரையிலே ஜடாமுனி கோயில் தெரு, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பிறந்தேன். எனக்கு இப்போ வயசு 56. முதல் தம்பி பெயர் நாகராஜன். எம்.எஸ்ஸி., எம்.எட்., படித்திருக்கிறான். அவன் திருவொற்றியூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அடுத்து தங்கை மீரா. தங்கை கணவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் (parkinsons disease). கழுத்து, கைகள் ஆடிக்கொண்டே இருக்கும். அதனால் அவர் எந்த வேலைக்கும் போக இயலவில்லை. மீரா தன் மகனிடமிருந்து பண உதவி பெற்று வாழ வேண்டியிருக்கிறது. மீராவுக்குப் பிறகு ஹம்ஸா. திருவ்ண்ணாமலையில் எய்ட்ஸ் ப்ராஜக்டில் வேலை செய்கிறாள். அவளுக்கு வயது 50. அடுத்த தங்கை இந்திராவின் குடும்பம்தான் இருப்பதிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். பிளாட்பாரத்தில் கண்ணாடி வளையல் போட்டு வியாபாரம் செய்கிறார். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கிறது அவர்களின் கடை. இந்திராவுக்குப் பிறகு உள்ள தங்கை கீதா பி.எஸ்ஸி ஸூவாலஜி படித்தவர். காஞ்சிபுரத்தில் நல்ல வசதியான நிலையில் வசிக்கிறார். அவர் கணவர் உதயகுமார், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தில் வேலை செய்கிறார். கீதாவுக்குப் பின்னுள்ள தம்பி தேவராஜன் பி.டெக்., எம்.எஸ் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். மிகவும் வசதியான குடும்பம் இவர்களுடையதுதான். தேவராஜன் மனைவி அமுதாவும் எம்.எஸ். கம்ப்யூட்டர் படித்தவள்.


பள்ளியிறுதி வரையிலும் மதுரை வாசம். படித்தது சௌராஷ்ட்ரா ஹைஸ்கூல். அது 1961ம் ஆண்டில். அப்பாவின் பூர்வீகம் பரமக்குடி.


சென்னையில் துணிக்கடை ஒன்றில் அப்பாவுக்கு வேலை. தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. மதுரை எம்.எஸ். சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் தங்களை பிராமணர்கள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் பெயரின் பின்னால் பிராமண ஓட்டுக்களைப் போட்டுக் கொள்கிறார்கள். என் அப்பா பெயர் என்.பி. கிருஷ்ணமாச்சாரி, மாமனார் பெயர் கோபால் ராவ், தாத்தாவின் பெயர் சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். அம்மாவழித் தாத்தா இவர். நிலம் நீச்சுடன் மிகவும் வசதியாக வாழ்ந்தவர் தாத்தா. சொந்தமாக கதர்க்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார். கதர்க்கடையை தாத்தா மூடிவிட்ட பிறகு அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யுமளவு பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அம்முயற்சியிலிருந்து காப்பற்றப்பட்டார். பாட்டிக்கு மதுரைதான். அப்பா அம்மா மட்டும்தான் சென்னையோடு தொடர்புடையவர்கள். தாத்தாவின் மனநோயின் பொருட்டு பாட்டி அவரைக் குணசீலத்தில் சேர்த்தாள். ஒரு மண்டலத்திற்கு, தாத்தாவின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு ஆட்கள் அவருடன் இருந்து அப்போது பார்த்துக் கொண்டார்கள். ஒரு மண்டலம் முடிந்து வீட்டிற்கு வந்த உடனே தாத்தா இறந்து போனார். அவர் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. உடல் வெகுவாக மெலிந்திருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில் பி.ஏ. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். பிரசிடென்சி காலேஜ். பி.ஏ. சைக்காலஜி. 1962லிருந்து 65 வரை. முதலாமாண்டு படிக்கும்போது அம்மா அப்பாவுடன்தான் இருந்தேன். கணக்கில் மிகவும் பின்தங்கியவன் நான். எஸ்.எஸ்.எல்.சி.யில் கணக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது. பால்யத்தில் நான் நன்றாகப் படித்ததினால் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு முன்னேற்றப்பட்டேன். நான்காம் வகுப்பு கணக்குப் பாடம் படிக்க முடியாமல் போய் அந்தப் பிரச்சனை இன்றும் தொடர்கிறது.


பி.ஏ. ஆன்ஸிலரி புள்ளிவிவரவியலும் லாஜிக்கும். புள்ளிவிவரவியல் பாஸ் பண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே, எஸ்.எஸ்.எல்.சி. காலத்திலிருந்தே சைக்காலஜியில் ஆர்வம். தாத்தா இறந்த பிறகு அந்த ஆர்வம் கூடுதலாகியது.


கோ-எஜூகேஷன் கல்லூரி அது. இயல்பிலேயே கூச்ச சுபாவமுடையவன் நான். பெண்களிடம் பழகுவதில் கூச்சம் மிக அதிகமாயிருந்தது. இதற்குக் காரணம் என் பாட்டிதான். பாட்டி வீட்டிலேயே பஜனை மண்டலி வைத்திருந்தாள். வீட்டில் சிறு கோயிலும் இருந்தது. எல்லா தெய்வ விக்ரகங்களும் உள்ள கோயில். தினமும் காலையில் பூஜை நடக்கும். பூஜையை நான்தான் செய்ய வேண்டும். மாலைகளில் பஜனை நடக்கும். எட்டாம் வகுப்பு வரையிலும் பூஜை செய்வதில் பாட்டிக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பூஜைக்கு, பஜனைக்கு வரும் எல்லாப் பெண்களையும் உறவு முறையில் மாமி, அக்கா, அத்தை என்றுதான் அழைப்பேன். இதனாலெல்லாம் கூச்சம் உருவாகிவிட்டது. பாட்டியினுடையது பெரிய வீடு. சுமார் இருபது பெண்களுக்குமேல் வழிபாட்டிற்கு வருவார்கள்.


அரசு கலைக் கல்லூரியிலிருந்து எகனாமிக்ஸ் படிக்கவும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவும் மாநிலக் கல்லூரியில் உளவியலுக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நான் உளவியலையே தேர்வு செய்தேன். சீட் கிடைப்பது அப்போது மிகவும் எளிது. நன்கொடைகளோ சிபாரிசுகளோ தேவையில்லை. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஒரு பெண்ணுடன் மானசீகக் காதல் ஏற்பட்டது. அந்தப் பெண் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நான் மாலை நேரத்தில் ஹிந்தி டியூசன் எடுத்தேன். அந்தப் பெண்மீது எனக்கு முழு ஈடுபாடு இருந்தது. அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு, காதல், உணர்ச்சி வேகம். இதைத்தான் calf love என்று சொல்வார்கள்.


என் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு வீடு வறுமையினால் சூழப்பட்டு விட்டது. என்னை வேலைக்குப் போகச் சொல்லி அப்பா தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். நான் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ‘நீ படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போ. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்' என்று சொன்னவர்தான் அப்பா. நான் விடாப்பிடியாகப் படித்தேன். படிப்பை முடிப்பதற்கு எனக்கு மூன்று நண்பர்கள் உதவினார்கள். ஹிந்தி டியூசனிலிருந்து எனக்குக் கொஞ்சம் பணம் வந்தது.


மெட்ராஸ் எஜூகேஷனல் ரூல்ஸ் (92 எம்.இ.ஆர்) படி ஆஃப் ஃபீஸ் கன்ஸஷன் கொடுத்தார்கள். அதன்படி நான் பாதியளவு பணம் கட்டினாலே போதும். அரிஜன் வெல்ஃபேர் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. என் அம்மாவின் தம்பியாகிய மாமா வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார். 5 ரூபாய் அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகை. அதை வைத்துச் சமாளித்துப் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு டி ஷர்ட் மட்டும்தான் இருந்தது. மூன்று வருடமும் இதே நிலைதான்.


பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது என்.எம்.பதி அறையில் தங்கியிருந்தேன். காலையில் 2 இட்லி சாப்பிடுவேன். மதியச் சாப்பாடு பெரும்பாலும் கிடையாது. மாலையில் நான் ஹிந்தி டியூசன் எடுக்கும் பெண் (அவள் பெயர் அனுராதா) வீட்டில் ஒரு கப் காபி கொடுப்பார்கள். அதுதான் சாப்பாடுபோல. இரவு திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அரை கிளாஸ் பால் மற்றும் 2 பன்கள். அதோட சரி.


1965ல் மூன்றாமாண்டு படிக்கும்போது சமூக உளவியலாளர் ஒருவரிடத்தில் அவரது ஆராய்ச்சிக்குத் தரவுகள் சேகரித்துத் தரும் வேலையை இரண்டு மாதம் செய்தேன்.


ரிசல்ட் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் 'மீட் த சேலஞ்ச்' (இந்திய பாகிஸ்தான் போர் பர்றிய கண்காட்சி)ல் கண்காட்சி விருவுரையாளராக ஐந்து நாட்கள் வேலை பார்த்தேன். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 5 ரூபாய் சம்பளம்.


பிறகு பாரத் சேவக் சமாஜத்தின் சார்பாக வீடு வீடாகப் போய், வாங்கும் மளிகை சாமான்களின் விலையைப் பற்றி - எவ்வளவு ரூபாய்க்கு என்ன பொருள் வாங்குகிறார்கள் - தகவல் சேகரிக்கும் வேலையை இரண்டு மாதங்கள் செய்தேன். இதில் மாதம் ரூ 100 சம்பளம்.


ஓரியண்டல் ஃபயர் அண்டு ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-இல் குமாஸ்தா உத்தியோகம் ஒரு வருடம் ஏழரை மாதங்கள் பார்த்தேன். இங்குதான் நான் டேபிள் டென்னிஸ் கற்றுக் கொண்டேன். இரண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன் - அரசு மருத்துவமனை மனமகிழ் மன்றத்தில் singles-ல் runner ஆகவும் doubles-ல் winner ஆகவும். டேபிள் டென்னிஸ் ஓர் அற்புதமான விளையாட்டு. எல்லா அலவன்சும் சேர்த்து மாதச் சம்பளம் 253 ரூபாய். இந்த வேலை தற்காலிகம்தான்.


அடுத்து ஒரு அரசு வேலை கிடைத்தது. லோயர் டிவிஷன் கிளார்க். ஆல் இந்தியா ஹேண்டிகிராஃப்ட்ஸ் போர்டில். சென்னையில்தான். 67லிருந்து 69 வரையில் ஒரு வருஷம் நான்கு மாதங்கள். மாதச் சம்பளம் ரூ 300. அப்போது மாலை வகுப்பில் டிப்ளமோ இன் ஆந்த்ரோபாலஜி (மானிடவியல்) மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் சேர்ந்தேன். இது இரண்டு வருடப் படிப்பு. புரபேஷன் பீரியடிலேயே அரசு வேலையை ரிஸைன் செய்து விட்டேன்.


அரசு பொது மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் நிலையம் - புனர்வாழ்வ்ய் மையத்தில் அடுத்த வேலை. அது கைகால் இழந்தோருக்கான புனர்வாழ்வு மையம். என்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு வேலையை அங்கே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மார்க்கண்டேயன் என்பவர்தான் இந்த ப்ராஜக்டின் தலைவர். அவர் என் கல்லுரியில் வகுப்புத் தோழராயிருந்தவர். என்னைவிட ஓர் ஆண்டு மேல் வகுப்பில் படித்தவர்.


அரசு வேலையை 11-4-69ல் ரிஸைன் செய்துவிட்டு 12-4-69ல் இந்தப் புது வேலையில் சேர்ந்தேன். 69ல் 23 அல்லது 24 வயது இருக்கும் எனக்கு. இந்த வேலை திருப்திகரமாக இருந்தது.


உளவியல் பரிசோதனை நடத்துதல்தான் வேலை. நோயாளிகளை பேட்டி கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். மாதம் 550 ரூபாய் சம்பளம். வேலை முடியும்போது தோராயமாக, 1974 வரையில் 5 வருடங்கள் இந்த வேலையில் இருந்தேன். இந்த வேலைதான் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. எப்படியென்றால் முதலில் ஒன் இயர் ரிசர்ச் அண்டு டெமான்ஸ்ட்ரேஷன் ப்ராஜெக்ட் ஆக இருந்தது. அதில் ஒரு கிறிஸ்துவப் பெண். என் வயதுதான் இருக்கும். அவள் என்னுடன் நெருங்கிப் பழகினாள். பிரதி ஞாயிறு எங்கள் வீட்டிற்கு வருவாள். அவளுக்கு நான் ஆங்கில இலக்கணம் டியூசன் எடுப்பேன். அவள் ரொம்ப அழகு. என்னைவிட உயரம். அந்தக் காலத்து கே.ஆர்.விஜயா சாயல்ல இருப்பா. ஒன் இயர் ப்ராஜக்ட் முடிந்தவுடன் அவள் போய் விட்டாள். நான் தொடர்ந்தேன். அவள் மேல் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருந்தது. அதைக் காதல் என்று சொல்ல முடியாது. அவள் சென்று வெகுநாட்களான பிறகு அவளிடமிருந்து ஒரே ஒரு லெட்டர் வந்தது. இந்தச் சமயத்தில் அடுத்த ப்ராஜக்ட் தொடரும்போது என் கல்யாணத்திற்கான ஆயத்தங்களை என் பெற்றோர்கள் 72-ல் செய்தார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தக் கிறிஸ்தவப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தாள். நான் அவளிடம் ‘என் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள்' என்றேன். அவள் ‘இனி நாம் பழைய மாதிரி பழக முடியாதே' என்றாள். இதுதான் இண்டிகேஷன். இதன் மூலம்தான் அவளுக்கு என்மீது காதல் இருப்பது எனக்குத் தெரிகிறது. அவள் பெயர் நான்ஸி.


அந்தக் கிறிஸ்தவப் பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு காதல் ஏற்பட்டு அதில் அவள் தோற்றிருந்தாள். எனக்கும் ஒரு காதல் தோல்வி முன்பே இருந்தது. நான் வேலை செய்துகொண்டிருந்த அரசு பொது மருத்துவமனையில் (ஒரு வருட ப்ராக்டிஸ் முடிந்து நான்ஸி சென்ற பிறகு) ஒரு ஃபிஸியோதெரபிஸ்டும் வேலை பார்த்டு வந்தாள். அவள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள். அவளுக்கு தன் கணவனைத் தவிர வேறு தொடர்பு இருந்ததுதான் விவாகரத்திற்கான காரணம். அவளுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உண்டு. ஃபிஸியோதெரபிஸ்டின்மீது ஆழமான காதல் கொண்டிருந்தேன். என் திருமணத்திற்கு முன்பு நடந்தது இது. காதல் வேகத்தால் உந்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடுத்தேன். அந்தக் கடிதம் பாலுணர்வின் வேகத்தில் எழுதப்பட்டது. மிகவும் கொச்சையானது. அதை அவள் மட்டும் படிக்காமல் சக ஊழியரான ஆண் ஃபிஸியோதெரபிஸ்டிடமும் படிக்கக் கொடுத்துவிட்டாள். அது மட்டுமின்றி அவள்பால் ஏற்பட்ட பாலுணர்வு எழுச்சிக்கான வடிகால் என்ன என்று புரியாமல், நான் ஓர் அருவருப்பானவன் என்று கருதிக்கொண்டு மிகவும் குழம்பிய நிலையிலும் குற்ற உணர்விலும் உருக்குலைந்திருந்தேன். அவளுக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இது எனக்குப் பெரிய மனப் பிரச்சினையாகிவிட்டது. என் கடிதத்தை எல்லா ஃபிஸியோதெரபிஸ்டுகளும் மற்றவர்களும் படித்துவிட்டது போலவும் எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது போலவும் ஒரு மாய உணர்வால் பீடிக்கப்பட்டேன். முதன் முதலாக மனதளவிலான பாதிப்பு இதுதான். இந்த மாய உணர்வு என் காதுகளில் மாய ஒலியாகக் கேட்க ஆரம்பிதுவிட்டது. ‘நீ மிகவும் மோசமானவன்... நீ மிகவும் பச்சையானவன்... நீ ஒரு காமுகன்... நீ அசிங்கம் பிடித்தவன்...' என்று என்னை எல்லோரும் திட்டுவதுபோல; கெட்ட வசவுகளால் என்னைத் துன்புறுத்துவதுபோல. என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு சைக்யாட்ரிஸ்டை பார்க்கும்படி அறிவுறுத்தினார்.


டாக்டர். தைரியம் என்பவரைப் போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் சீனியரான பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் பிரிவில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் என் பிரச்சினைகளைச் சொன்னபோது, அவர் என்னை டாக்டர் சாரதா மேனனிடம் அழைத்துச் சென்றார்.


இந்த உளவியல் சிகிச்சையில் முக்கியமானது என்னவென்றால் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இது அவசியமானது. நல்லபடியாகக் குணமாகிக் கொண்டு வருகிறது என்று தெரிந்தால் மாத்திரைகளின் வீர்யத்தைக் குறைத்துக் கொடுப்பார்கள்.


இந்தச் சமயத்தில்தான் அந்தக் கிறிஸ்தவப் பெண் நான்ஸி வந்து என்னை மீட்டாள். சாந்தோம் தமிழ் சர்ச் பாண்டியன் பாதிரியார்தான் எனக்கு ஞான ஸ்னானம் கொடுத்தது. உண்மையில் நான் கடவுள் நம்பிக்கையாளன் அல்ல. என் கிறிஸ்தவப் பெயர் கே. கார்ல் ராஜன் என்றானது.


12-7-72 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட் சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு என் நண்பர்கள் யாரும் வரவில்லை. என் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திடீரென்று நான் புறப்பட்டுப் போய்த் திருமணம் செய்துகொண்டேன். நான்கு நாட்கள்தான் இதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டேன். மணப்பெண்ணிற்கு மதுரைதான் பூர்வீகம். சென்னை வந்து வீட்டிற்குப் போகாமல் நண்பர்கள் விட்டில் தங்கினேன். என் தந்தை என்னைத் தேடி வந்து ‘நீ எங்கேயும் போகவேண்டாம். நம் வீட்டிலேயே வந்து இரு' என்றார்.


மாதம் ஒருதடவை நான் ராமநாதபுரம் போய் அவளைச் சந்திப்பேன். அல்லது அவள் சென்னைக்கு வருவாள். அவள் இங்கு வரும்போது நண்பர்கள் வீட்டில்தான் சந்தித்துக் கொண்டோம். நான் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதைக் கவனித்த அவள் ‘எதற்கு மாத்திரை சாப்பிடுகிறாய்' என்று கேட்டாள். நான் ஒன்றுமில்லை என்று மறைத்தேன். இதனால் நான்ஸிக்கும் எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆயினும் எப்படியோ உறவு தொடர்ந்தது.

12 comments:

ரா.கிரிதரன் said...

கோபிகிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்' அற்புதமான புத்தகம்.ஆனால் அவர் வாழும் காலத்தில் பெயரே வெளியே தெரியாமல் வாழ்ந்தார்.

பல எழுத்தாளர்களுக்குத் தெரிந்தும் ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள்.transgressive எழுத்திற்கு பலவிதங்களில் வித்திட்டவர்.

ரா.கிரிதரன்.
http://beyondwords.typepad.com

பிச்சைப்பாத்திரம் said...

பதிவிற்கு நன்றி சுந்தர். நிதானமாகப் படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.

Anonymous said...

Thanks for a rare interview of a one of Tamil's most important but unsung writer.
The title of his collection 'Manuda Vazhu Tharum Anandham' indicates his love for life in the midst of all difficulties. It was the first book I read of him, and only then I came to know about him, by which time he was no more.

Sorry for writing in English since I am finding it difficult using a translator.

Anonymous said...

திண்ணையில் கோபிகிருஷ்ணன் பற்றி வந்துள்ளவற்றையும் படித்திருப்பீர்கள்.
அவற்றிலும் சில தகவல்கள் உள்ளன.

யாத்ரா said...

எப்போது வெளியிடுவீர்கள் என காத்திருந்தேன், இவர் கடைசியில் அம்பத்தூரில் வசித்ததாகவும் ஆத்மன் சேவை மையம் நடத்தி வந்ததாகவும் அறிகிறேன்,எனக்கு கோபிக்கிருஷ்ணன் எனும் பெயர் உள்ளூர ஓடும் போதெல்லாம் மனமும் கண்களும் பொங்கும்.

முதலில் உள்ளேயிருந்து சில குரல்கள் தான் படித்தேன் நூலகத்ததிலிருந்து எடுத்து வந்து.ஒரு வருடத்திற்கு அந்த புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவேயில்லை, மூன்று முறை முழுதாகவும், பலமுறை அங்கங்கும் வாசித்தேன், அதில் பல கேஸ் ஸடிகள் என்னை தூக்கமிழக்கச் செய்திருக்கிறது, அந்த சில அறிகுறிகள் என்னிடமும் இருந்திருந்தது, வெளிப்படையாக வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே இருக்கும், அவைகள் வெளிப்பட்டிருந்தால் முத்திரை குத்தப்பட்டிருப்பேன்,

எனக்கு அவருடைய தற்கொலையைத் தான் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை, அவர் ஆளுமை அவர் எழுத்துக்களின் வாயிலாக அறிந்திருந்ததால் அவரை நினைக்கையில் எல்லாம் என்னையுமறியாமல் கலங்கி விடுவேன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம், தூயோன், டேபிள் டென்னிஸ், இடாகினிப்பேய்கள்,,,,, ஆகியவைகளை வாசித்திருந்ததில் அவருடைய ஆளுமை என்னில் முழுமையாக படிந்திருந்தது, அவரின் சுயசரிதைத் தன்மையுள்ள கதைகளின்
அவரது வாழ்வின் நிகழ்வுளோடு என்னை எப்போதும் பொருத்திப் பார்த்துக் கொள்வேன்.அவர் பணிக் காலத்தில் அனுபவித்திருந்த அதிகாரத்தின் நுண்பிரயோகங்கள், அதனால் விட்ட வேலைகள், சுற்றத்தோடு எந்நேரமும் நாடியபடியிருக்கும் அவருடைய அன்பு, அது தரும் வலி, பிரிவு, டேபிள் டென்னிஸ்ன் மென்மையான மனதின் காமம், என எல்லாவற்றோடும் தொடர்ந்து நான் கரைந்து போயிருக்கிறேன், என் பத்து வருட பணிக்காலத்தில் பதினைந்து வேலைகளை விட்டிருக்கிறேன், இப்பொழுதும் கூட எதிலேயும் நிலைக்காத தன்மையே நீடிக்கிறது.

இப்படி என்னைப் போல் பலரின் உணர்வுகளோடும் கலந்திருக்கும் கோபிக்கிருஷ்ணன் அவர்களைப் பற்றி பதிவிட்ட தங்களுக்கும், மழை இதழை தந்துதவிய பைத்தியக்காரன் அவர்களுக்கும் மிக்க நன்றி,

இதை வாசிக்கும் தருணங்கள், அவர் மீண்டெழுந்து வந்து, அந்த அடர்ந்த நரையோடிய மீசைக்குள் வெளிப்படும் புன்சிரிப்போடு நேரடியாக அருகில் உரையாடிக்கொண்டிருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.

லேகா said...

அருமை சுந்தர்.எளிதில் கிடைக்காத தொகுப்பிது.

இறப்பிற்கு பிறகு அதிகம் விவாதிக்க படும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் கோபி.வாழ்ந்த காலத்தில் அடையாளம் பெறாமல் போனது பெரும் வருத்தம்.கோபியின் படைப்புகளையும் தேடி தேடி படித்து வருகின்றேன்.ஆதவனை போல ஒரு வித எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட பிறழ்வு மனநிலையை,பொய் முகங்களை,போலி வாழ்க்கையை வெளிப்படையாய் விவாதிப்பவை கோபியின் எழுத்துக்கள்.

தொடரட்டும் இப்பணி. மிக்க நன்றி.

மோகன் கந்தசாமி said...

நன்றி.

Maniz said...

I have already read this..I had pdf file format of this interview.
I somehow lost..
Thanks for sharing!!!!


(Sorry for English)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கிரிதரன், சுரேஷ் கண்ணன், அனானிகள், யாத்ரா, லேகா, மோகன் கந்தசாமி, மனிஸ்... நன்றி.

Anonymous said...

Thank you Sundar. I knew Gopi 20 years back for his peculier contents and narrations. Thanks to Charu too because of whom i got your link.

Seeni Mohan.

சீனி மோகன் said...

Dear Sundar,
Thank you very much for the rarest interview of Gopi. I knew him 25 years back for his peculiar contents and different narration. My sincere thanks to Charu too because of whom i got the link.
Seeni Mohan

Kandumany Veluppillai Rudra said...

சுயசரிதை எழுதுபவர்கள் கூடுதலாக,தங்களது ஒரு பக்கத்தை மட்டுமே,எழுதுவார்கள், ஆனால் திரு.கோபி கிருஷ்ணன்,தனது இருண்ட பக்கங்களை மனம் திறந்து சொல்லியிருக்கிறார்.