Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகாரி) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் எனச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை - http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_21.html. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : http://madrasdada.blogspot.com)

அணு சக்தி தொடர்பாக சி ஜெயபாரதன், கனடா

ஜெயபாரதன் என்ற பெயரை நான் திண்ணையின் மூலமாகவே அறிந்தேன். அவர் ஒரு அணு விஞ்ஞானி (nuclear scientist) என்பதாய் எனக்கு ஒரு நம்பிக்கை. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதியிருந்த ஞாநிக்கு ஒரு ஓ போடுவோம் (http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_13.html) என்ற பத்திக்கு இரண்டு நாட்கள் முன்பு அவர் பின்னூட்டமிட்டார். தொடர்ந்து, நேற்று / இன்றும்கூட. அவரது பார்வைகள் முக்கியமானவை எனத் தோன்றுவதாலும், எனது பத்தி மிகப் பழையது அதனால் வாசிப்பவர்களின் கவனிப்பிற்கு ஜெயபாரதனது பின்னூட்டங்கள் வராமல் போகலாமென்பதாலும், இதைத் தனிப் பதிவாக இடுகிறேன்.

1.http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

(கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள்)

2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40305042&format=html

(ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்)

3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html

(மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்)

4. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310161&format=html

(கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்)

5. http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html

(கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்)

---

இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

+++++++++++++

திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துகளுக்குப் பிறகு உலகிலே பழைய அணுமின் நிலையங்கள் எல்லாம் சீர்மை செய்யப்பட்டுள்ளன. இந்தியா முதல் அநேக நாடுகளில் புதிய அணுமின் நிலையங்கள் தோன்றி பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.

அணுப்பிணைவு நிலையங்கள் வர்த்தக ரீதியாக வருவது வரை அணுப்பிளவு நிலையங்கள்தான் உலகில் பேரளவு மின்சக்தி அளிக்கும். ஜப்பான், பிரான்ஸ் அதற்கு உதாரணங்கள்.

இப்போது அமெரிக்காவும், கனடாவும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போகின்றன.

அணுமின் நிலையங்களை விட அனுதினம் பறக்கும் ஆகாய விமானங்கள் பயங்கர மானவை. பல்லாயிரம் உயிர்களைக் குடித்துள்ளன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும். அதுவும் இப்போது பெண்கள் அவற்றை இயக்கி வருகிறார். ஆகாய விமானத்தில் விபத்துக்கள் இருப்பினும் மக்கள் பயமின்றி அவற்றில் தினமும் பயணம் செய்கிறார்.

அணுமின் நிலையங்களில் நிகழும் யந்திரப் பழுதுகளை மனிதத் தவறுகளைக் குறைப்பதற்கும், அவற்றைக் கண்காணிக்கவும் அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (IAEA) வியன்னாவில் சிறந்த பணி செய்கிறது.

பொதுடமை ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் IAEA வற்புறுத்திய அணு உலை அரண் போன்ற பாதுகாப்பு முறைகளைச் செர்நோபில் உலையில் கையாள வில்லை.

கூடங்குளத்து ரஷ்ய அணு உலைகளில் இப்போது IAEA வற்புறுத்திய அத்தனை பாதுகாப்பு முறைகளும் உள்ளன.

அவற்றை IAEA கண்காணிப்பது போல் மற்ற இரசாயனத் தொழிற் துறைகள் கண்காணிக்கப் படுவதில்லை.

போபால் விபத்து ஓர் உதாரணம்.

---


ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 43,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.

ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.

இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.

மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.

வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.

செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.

செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !


சி. ஜெயபாரதன், கனடா.
http://jayabarathan.wordpress.com/
jayabarathans@gmail.com

கவிதை புரியும் கணம் - எம்.யுவன்

சமீபத்தில் 'உயிர்மை' பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் எம்.யுவனின் 'தோற்றப் பிழை' கவிதைத் தொகுப்புக்கு ஒரு முன்னுரையை அவரே எழுதியிருக்கிறார். உரையாடலுக்கு வழிவகுக்கும் அந்த முன்னுரை, எம்.யுவனின் அனுமதியுடன் இங்கே...

--------

சிறு வயதில், பிரம்மாண்டமான மீன் பண்ணை ஒன்றுக்குச் சென்றிருந்தது ஞாபகம் இருக்கிறது. அரைக் கிணறு போன்ற ஆழமான காங்க்ரீட் தொட்டிகள். அவற்றுக்கிடையே அமைந்த சிமென்ட் நடைபாதையில் யாரோ ஒருத்தரின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோனேன். எந்த ஊர், யாருடைய கை என்பதெல்லாம் நினைவில் தங்காத அளவு சிறுவயதாக இருக்கவேண்டும். ஆனால், ஒவ்வொரு தொட்டியிலும் வேறுவேறு வகையான மீன்கள் துடிப்பாகப் போய்வந்துகொண்டிருந்த காட்சி அழுத்தமாக நினைவில் பதிந்திருக்கிறது.

மீன்தொட்டியை மனம் என்று உருவகித்துக்கொள்கிறேன். சொற்கள் குட்டியிட்டுச் சொற்கள் உருவாகி நசநசவென்று சொற்கள் புழங்கும் மாயத்தொட்டி. சொற்கள் தம் இயல்பான சலனத்தில் இணைந்தும் விலகியும் அடர்ந்து திரியும் தொட்டியில், எல்லா நேரத்திலும் எல்லாச் சொற்களிலும் கவனம் குவிந்திருப்பதில்லை. கூட்டத்திலிருந்து விலகி வந்து கவனம் பெறும் மீன்கள் கொத்தாகத் திரளும் ஒரு சந்தர்ப்பம் கவிதையின் வரிகளாக உருக்கொள்கிறது.

எழுதும் மனத்தில் கவிதை வரி உருவாகும் இதே விதமாகத்தான் வாசக மனத்தில் கவிதை புரிவதும் நிகழ்கிறது என்று சொல்லலாம்.

வீடு மாற்றுவதற்காகப் புத்தக அலமாரியைக் காலிசெய்து அட்டைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தேன். மிகப் பழைய சிறுபத்திரிகைத் தொகுப்பு ஒன்றைக் கையில் எடுத்தபோது, அதைப் பிரித்து மேலோட்டமாக மேயத் தோன்றியது. தன்னிச்சையாகப் பார்வையில் பட்டது அந்தக் கவிதை. பல காலம் முன்பு வாசித்து, புரியாமல் போனதால், மனத்தில் உறுத்தலாகத் தங்கியிருந்த கவிதை.

அன்று படித்தபோது, சடாரென்று திறந்துகொண்டது. உண்மையில், அதுதான் அந்தக் கவிதை உணர்த்த முனைந்த அனுபவமா என்று தெரியாது. அவ்வளவு நாள் மூடிக் கிடந்த ஒரு சொல்லோட்டத்தை, அந்தத் தருணத்தில் என்வயமாகத் திறக்கக் கிடைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். மூடியிருந்த வரை மகோன்னதமான எதையோ தனக்குள் பொதிந்து மறைத்திருப்பதாகத் தோன்றிய வரிகள் உடனடியாக வெளிறிவிட்டன என்பது வேறொரு விஷயம்.

கவிதை எழுதப்பட்டும் சந்தர்ப்பத்திற்குச் சமமான மாயத்தன்மையும், பரவசமும் வாசிக்கும் தருணத்தையும் சூழ்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்ட சந்தர்ப்பம் அது. எனவே, கவிஞன் குறித்துச் சொல்லப்படும் சிறப்புக் குணநலன்கள் அத்தனையும், மிகச் சமமான விதத்தில் வாசகனுக்கும் உரித்தானவைதாம். நுட்பமான வாசக மனம் அன்றி, வேறெங்கு பொருள்கொள்ளும் கவிதை?

---------

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கிறோம். கவிதையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன?

அ. கவிஞனின் உத்தேசம் என்பனவாகத் தென்படும் எல்லைகளை அறிந்துகொள்வதா?

ஆ. கவிதையின் வரிகளுக்கு அப்பால், தன்னுடைய திராணியும் சுதந்திர இச்சையும் சார்ந்து வாசகன் மேற்கொள்ளும் பயணத்தின் துவக்கமா?

உண்மையில், தர்க்கபூர்வமாகத் தான் புரிவதற்குச் சற்று முன்னமேயே கவிதை புரிந்துவிடுகிறது. சொல்லற்ற ஒரு தளத்தில் கவிதையின் வெளிச்சம் பாய்கிறது. மொழியமைப்பில் உள்ள வசீகரம் காரணமாக, முதல் வரியிலிருந்தே மேலெழும் வாஞ்சை காரணமாக, சொற்றொடர்களின் பிரயோகத்தில் உள்ள நூதனம் காரணமாக, கருத்துப் புலத்தில் உள்ள வலுவின் காரணமாக, இவையனைத்துக்கும் மேலே, அந்தக் கவிதை உணர்த்த முனையும் அனுபவத்தை ஏற்பதற்கான பதநிலையில் வாசக மனம் இருப்பதன் காரணமாக, என்று பல்வேறு காரணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு மொழிக்கொத்தாக மனத்தில் தொற்றுவதற்குச் சில நுண்கணங்கள் முன்பே கவிதை வாசக மனத்தில் தன்னை ஊன்றிக்கொள்கிறது, இன்னதென்று தெரியாத விதை போல. இனி அது வளர்ந்து பூமிக்கு வெளியில் தலைகாட்டும்போதுதான் தெரியும் எந்தவிதமான தாவரம் என்று.

எளிமையான வரிகளில் எழுதப்பட்ட கவிதையின் பட்சம் இருக்கும் புரியாத்தன்மை, சிடுக்கான வரிகளில் எழுதப்பட்ட கவிதையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் எழும் சிக்கல், அந்தக் கவிதையின் அர்த்தப் புலம் பற்றியது அல்ல. அது எதனால் கவிதையாக இருக்கிறது, கவிதை என்ற கோரிக்கையோடு, கவிதையின் அறியவந்த உருவத்தில் எதற்காக முன்நிறுத்தப்படுகிறது என்ற குழப்பம்தான்.

கவிதை புரிந்துவிடும் தருணத்தில் நடப்பது என்ன?

அந்தத் தருணம்வரை வாசகத் தனிமனம் தன்போக்கில் சேகரித்து வந்திருக்கும் அர்த்தத் தொகுப்பின்மீது கனமான அதிர்வலைகள் மோதி சமநிலையைக் குலைக்கின்றன.

உணர்ச்சிமயமான கவிதை வாசக மனத்தில் துயரத்தையும் ஒருவித கையறுநிலையையும் உருவாக்குகிறது. மறுபுறம், அறிவார்த்தக் கவிதைகள் பரவசத்தையோ சிந்தனாபோதத்தையோ கிளர்த்துகின்றன.

தன்னுடைய ஆழ்மனத்தில் கவிதைக்கான வேட்கை இல்லாத தனிமனங்களுக்கு நவீன கவிதை சுலபத்தில் திறப்பதில்லை. காரணம், கவிதையின் நிறைவு காட்சியில் இல்லை. வார்த்தைகளில் இல்லை. அழகுணர்ச்சியில் இல்லை. என்றோ எங்கோ எழுதப்பட்ட வரிகளைத் தன் மனத்தின் தரையில் புனர்நிர்மாணம் செய்துகொள்ளும் வாசகனின் அந்தரத்தில் மாத்திரமே முழுமை பெறக் காத்திருக்கும் அரைச் சந்திர வடிவம் அது.

புழங்கிய பாட்டையில் மலரும் கவிதை, பரிச்சயமான, பலமுறை அவிழ்க்கப்பட்டு ஏற்கனவே விடை தெரியவந்த புதிரையே முன்நிறுத்துகிறது. மாறாக, புதிய கவிதை, புதிய சவாலை விடுப்பது. தீர்க்கமான கவிதைச் செயல்பாட்டை வாசக மனத்தில் துவக்கிவைக்க கவிதையின் வெளிப்பாட்டில் கொஞ்சம் ரகசியமும் புதிர்த்தன்மையும் அவசியமாகின்றன.

---------

கவிதை என்ற சொல்லுக்கும் அனுபவம் என்ற சொல்லுக்கும் உள்ள உறவு சாமானியமானதல்ல. பிற புனைவு வடிவங்கள் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அதில் அனுபவத்தின் சாரத்தை இறக்க முயல்கின்றன என்றால், அனுபவத்தையே நேரடியாக முன்நிறுத்த முயல்கிறது கவிதை. ஆனால், இதில் பிரதானமான இரண்டு தரப்புகள் உள்ளன.

முதல் தரப்பு, அனுபவத்தைப் பதிவு செய்வதே கவிதை என்று வாதாடுகிறது. அதாவது, கவிஞனின் அகப்பரப்பில் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்துவிட்ட அனுபவத்தின் பதிவுதான் கவிதை என்கிற தரப்பு. இதிலும் சொல்முறையின் காரணமாக இரண்டாகப் பிளவுபடும் இரட்டைத் தடம் உண்டு. அனுபவத்தை நேர்த்தியாகவும் அலங்காரமாகவும் மிகைத் தழுதழுப்புடனும் சொல்வது என்பது ஒரு மார்க்கம். அனுபவத்தை நேரடியாகச் சொல்வது, சொல்லும்போதே அவ்வனுபவத்தின் தோற்றுவாயையும் விளைவையும் சேர்த்தே ஆராய்வது என்பது மற்றது.

இரண்டாவது தரப்பு, அனுபவத்தைப் பதிவுசெய்வது அல்ல, அனுபவத்தை உருவாக்குவதுதான் கவிதை என்று வாதிக்கிறது. அதாவது, கவிஞனின் அகத்தளம் உட்பட, வேறெங்குமே இன்னமும் நிகழாத ஒன்றைக் கவிதையின் புலத்தில் நிகழ்த்த முயல்வது என்பது. இதில், மொழியின் பரிமாணங்களுக்குள் அடங்காத பேரனுபவத்திலிருந்து, வெறும் சர்க்கஸ் வித்தைகளான கோமாளித்தனங்கள்வரை ஏகப்பட்ட தினுசுகள் இருக்கின்றன.

இவை இரண்டுமே அறுதியானவை அல்ல. மூன்றாவது தரப்பு ஒன்றும் இருக்கிறது. கவிதையின் தோற்றுவாய்க்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் தரப்பு.

கவிதை என்ற பெயரில் வாசகன் கைக்கு கிடைப்பது அனுபவத்தின் ஒரு சாயை மட்டுமே. அது ஏற்கனவே கவிஞனின் அகப்பரப்பில் நிகழ்ந்து முடிந்துவிட்டதன் பதிவா, அல்லது இதுவரை எங்குமே நிகழாத முதல் நிகழ்வா என்பது அல்ல கேள்வி. என் கைக்குக் கிடைப்பது அனுபவத்தின் முழுமையா என்பதுதான்.

அனுபவம் பற்றிய சிறு குறிப்பு மாத்திரமே என்னிடம் வழங்கப்படுகிறது. அதன் நீள அகல ஆழங்களை வாசகனாகிய நான்தான் உருவாக்குகிறேன். உணர்ச்சி சார்ந்தும் அறிவார்த்தம் சார்ந்தும் என் கைவசம் உள்ள தாதுக்களைக் கொண்டு நான் வனைவதுதான் முழுமை பெற்ற கவிதானுபவமாகத் திரள்கிறது. அதாவது, கவிஞனின் வார்த்தைகளும் கவிதை உபகரணங்களும் ஒரு சாக்கு மாத்திரமே. அவற்றில் காலையூன்றி நான் சாடும் அந்தரத்தில் எனக்கான கவிதை அனுபவம் கட்டப்படுகிறது. விக்கிரமாதித்தன் கதையில் ஒரு ஓவியன் வருவான். தற்செயலாகக் கிடைத்த கட்டைவிரல் நகத்தை வைத்து அந்த நகத்துக்குரிய பெண்ணின் முழுவடிவத்தை, அவளுடைய தொடையில் இருந்த மச்சம் உள்பட, வரைந்து முடிப்பான். அவனுடையதே போன்ற தீவிரமான தியானநிலைக்குள் நான் இறங்குகிறேன்.

-----------

கவிதையின் உலகம் தனித்துவமானது. அணுவுக்குள் செயல்படும் நுண்ணிய சலனங்கள் போல, கவிதைக்குள்ளும் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நுண்ணோக்கியின் தீவிரத்துடன் சொற்கோவைகளைத் துளைத்து, காட்சியையோ, கருத்தையோ தேடிச் செல்லும் வாசக மனத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் இயக்கம் அது.

இலக்கணத்தின் பிடியிலிருந்து முற்றாக வெளியேறிக் கவிதாம்சத்தின் தாழ்வாரத்தில் தமிழ் நவீன கவிதை நடைபயில ஆரம்பித்துக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியும் கவிதையைப் புரிந்துகொள்வதில் ஒரு சமச்சீரான பாதை உருவாகிவிடவில்லை. தொடர்ந்து புழங்கி நிலைபெற்றுவிட்ட மார்க்கத்தில் எதிர்ப்படும் ஒவ்வொரு புதிய விதக் கவிதையும், தன் இயக்கத்தில் நூதனம் கொண்ட ஒவ்வொரு புதிய கவிஞனும் வாசக மனத்தை நோக்கி விடுக்கப்படும் மாபெரும் சவால்கள்தாம்.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. கவிதை விமர்சனம் என்பது வேறு; எழுதப்பட்ட கவிதையின் விளிம்புகளுக்குள் மாத்திரம் சுழன்று திரிவது அது. கவிதையியல் நோக்கில் கோட்பாடுகளை முன்நிறுத்தி உரையாடுவது வேறு; எழுதப்படாத, அல்லது எழுதப்பட வேண்டிய ஆதரிசக் கவிதையை நோக்கி ஒட்டுமொத்தக் கவிதைச் சூழலையும் உந்திச் செலுத்த முயல்வது இது.

வாசிக்கும் மனத்தில் கேள்விகளின் சரவரிசையைக் கிளர்த்தி விடுவதன் மூலம் தன் இயக்கத்தை நிறுவிக்கொள்கிறது கவிதை. கவிதையின் உள் தர்க்கமும், கவிதைக்கு வெளியில் செயல்படும் பொதுத் தர்க்கமும் ஒத்துப்போகிற/முரண்படுகிற முனைகளில் உருவாகும் கேள்விகள், பல நேரங்களில் கேள்விகளாகவே நின்றுவிடும் இயல்புடையவை. அதன் காரணமாகவே நிரந்தரத் தன்மை கொண்டவை.

---------

எழுத ஆரம்பித்த நாட்களில் கவிதை தொடர்பாக ஏகப்பட்ட கோட்பாடுகள் வைத்திருந்தேன். மிகவும் கறாரானவை. அவற்றிலிருந்து வழுவும் ஒரு வரியைக்கூட நான் எழுதமாட்டேன். அது மட்டுமல்ல, என்னுடைய கோட்பாடுகளுக்கு விசுவாசமாக இல்லாத கவிதைகளைப் படிப்பேனே தவிர, சிலாகிக்க மாட்டேன்.

இருபது வருடங்கள் ஓடிய பிறகு, என்னுடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு வெளியாகும் இத் தருணத்தில், இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை முன்வைத்து, சில விஷயங்களைக் கவனிக்க முடிகிறது.

முன்னர் நான் பேணிய கோட்பாடுகளில் பலவற்றை என்னையும் அறியாமல் மறுபரிசீலனை செய்து வந்திருக்கிறேன்.

புதிர்த்தன்மையையும் கச்சிதத்தையும் தக்கவைத்துக்கொண்டு, இறுக்கத்தை மட்டும் கழற்றிவிடவேண்டும் என்ற விழைவு எனக்குள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், ஒரே இரவில் மாற்றிக்கொண்டுவிடும் அளவு இலகுவானவை அல்ல, கவிதை தொடர்பான நம்பிக்கைகளும் செயல்பாடும். முந்தைய தொகுப்புகள் போலின்றி, இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கிடையில் ஒருவிதமான சமச்சீரின்மை நிலவுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். கனத்த, இறுக்கமான கவிதைகளும், மெல்லிய உணர்வுகளை மென்மையாகவே சொல்ல யத்தனிக்கும் கவிதைகளும் கலந்து கிடக்கின்றன இந்தத் தொகுப்பில்.

புனைகதைப் பரப்பில் யதேச்சையாக நுழைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கும், கவிதைகள் பற்றி எனக்குள் இருந்துவந்த கோட்பாடுகள் நெகிழ்ந்ததற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்றே நம்புகிறேன்.

----------

ஆரம்ப நாட்களில் எழுதிய அளவு அதிக எண்ணிக்கையில் எழுதுவதில்லை இப்போதெல்லாம். கவிதையின் கருப்புள்ளி தானாக - கனவு உதிப்பதைப்போல அவ்வளவு ரகசியமாகவும், இயல்பாகவும் - உருவாக வேண்டும்; தயார் செய்யப்படும் கவிதைகளை வாசிக்கப் பிடிப்பதில்லை என்பது மாதிரியே எழுதவும் பிடிக்காது; என்றாலும், கவிதையுடனான தொடர்பு அழுத்தம் குன்றாமலே இருந்து வந்திருக்கிறது. முந்தைய தொகுப்பான கைமறதியாய் வைத்த நாள் வெளியான பிறகு, கடந்த நான்கு வருடங்களில் நான் எழுதிய கவிதைகள் இவை. மிகச் சிலவற்றைத் தவிர மற்றவை இப்போதுதான் முதன்முறையாகப் பிரசுரமாகின்றன.

கவிதைகளைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பது பற்றி ஏனோ தயக்கம் தொற்றிவிட்டது. கவிதை என்பது கருப்பொருள் மட்டுமே, உருவத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்ற இடத்துக்கு நவீன தமிழ்க்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. இது வளர்ச்சியா தேய்மானமா என்பதையெல்லாம் இன்றே முடிவு கட்டிவிட முடியாது. பொதுவான ஒரு பார்வைக்கு, சோர்வளிப்பதாக இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கை, கவிதைகள் வாசிக்கப்படும் விதம் இவை பற்றியும் நுட்பமான அவநம்பிக்கை படிந்திருக்கிறது.

பிரசுரிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டாலும், எழுதுவதில் ஊக்கம் குன்றவில்லை. கைப் பிரதியில் என் கவிதைகளை வாசித்துக் கறாரான விமர்சனங்கள் வைக்கும் நண்பர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

---------

கவிதைகள் எழுதுவதில் மட்டுமே கவனம் கொண்டிருந்த என்னை, கவிதை குறித்துப் பேச வைத்தவை பிரம்மராஜன் கூட்டிய கவிதைப் பட்டறைகள் மற்றும் குற்றாலம் ஹொகேனக்கல், உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஜெயமோகன் கூட்டிய நித்யா ஆய்வரங்குகள். அவை எனக்கு வழங்கிய உத்வேகம் அளப்பரியது.

முதன்முறையாகக் குற்றாலத்தில் நடந்த இரு மொழி ஆய்வரங்கத்துக்கு வந்திருந்த மலையாளக் கவிஞர்களில் பலரில், சிலரை மட்டுமே திரும்பத் திரும்பச் சந்திக்கவும், சம பாவத்துடன் உரையாடவும் வாய்த்தது. அவர்களில், திரு கல்பற்றா நாராயணன், திரு டி பி ராஜீவன் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் கவிதைப்பற்றிப் பேசும்போது, தமிழ்க் கவிதை மலையாளக் கவிதை என்ற இரண்டும் தனித்தனி வகைகளுக்கு அப்பால் கவிதை என்ற பொதுத்தளம் ஒன்று இருக்கிறது - அது விடுக்கும் சவால்களை எதிர்நோக்குவதுதான் தலையாய பணி என்று உணரக் கிடைக்கிறது.

மலையாள நவீன கவிதையின் இந்தத் தலைமுறைப் பிரதிநிதிகளும், என் நண்பர்களுமாகிய கல்பற்றா நாராயணனுக்கும், டி பி ராஜீவனுக்கும் இந்தத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்வதில் பெரும் திருப்தி எனக்கு.

- எம்.யுவன்

சென்னை
23.10.2009.

நன்றி:

'தோற்றப் பிழை'

உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை 600 018.

தொலைபேசி: 91 44 2499 3448
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

விலை: ரூ.60

பூம் பூம் ஷக்கலக்க பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் பதிவைப் படித்ததும் சாரு ஒரு ஹிட்லரா என்ற கேள்வியெல்லாம் எனக்கு எழவில்லை. எதற்காக அந்தப் பதிவு என்றுதான் தோன்றியது.

அதற்காகச் சிலர் கேட்டது போல் முதல் பத்தியை நீக்கச் சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் மொத்தப் பதிவுமே கிசுகிசுக்களின் அடிப்படையில் எழுதப் பட்டதுதான். யார் அலெக்ஸ், யார் விஷால் என்பதைத் தெரிந்து கொண்டதைத் தவிர அதில் பெரிதாக வேறொன்றுமில்லை.

அந்த முதல் பத்திகூட சிறுபத்திரிகை வட்டாரங்களில் கிசுகிசுவாக இருந்ததைத்தான் பைத்தியக்காரன் எழுதியிருக்கிறார். சாருவைப் பற்றிய சமீபத்திய வலையுலக (காமரூபக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வந்த) கிசுகிசுக்களை மட்டும் ஏன் விட்டுவிட்டாரோ தெரியவில்லை.

இதற்கு மாற்றாக நானும் மானாவரியாக கிசுகிசுக்களை அடுக்கிச் செல்லலாம். ஆனால் படிப்பவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பதோடு நானும் பைத்தியக்காரன் செய்யும் தவறையே செய்தவனாவேன். அதனால், விபரங்களின் அடிப்படையில் மட்டும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சாரு படிப்பதேயில்லையாம். எப்படி ஐயா தெரியும் உங்களுக்கு? புதுமைப் பித்தன், நகுலன், ஜி நாகராஜனைக்கூட சாரு படித்தது இல்லையாம். அதற்கான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம். பக்கம் பக்கமாய்க் கிசுகிசுக்களை எழுதித் தள்ளும் உங்கள் விரல்கள் ஏன் அப்படிப்பட்ட ஆதாரங்களை மட்டும் எழுதாமல், எழுத வைத்துவிடாதீர்கள் எனக் கெஞ்ச வைக்கிறது?

அவர் புதுமைப் பித்தனின் பல கதைகளை விரிவாக விமர்சித்து - கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு - கட்டுரை எழுதியிருக்கிறார். உடனே இலக்கு கால இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் ஜீரோ டிகிரி இன்ஸ்டால்மெண்ட் நண்பர்கள் என ஆரம்பித்து விடாதீர்கள். இந்தப் பிரஸ்தாபக் கட்டுரை வெளியாது 2002 இறுதியில். போலவே ப சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றி மார்ச் 2003ல் எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய / லத்தீன் அமெரிக்க / அரேபிய எழுத்தாளர்களின் பெயர்களை (மட்டும்) சாரு உதிர்க்கிறாராம். மரியா வர்காஸ் யோசாவின் The Real Life of Alejandro Mayta, எல்ஃபிரெட் ஜெலனிக்கின் பியனோ டீச்சர், சார்லஸ் ப்யுகோவ்ஸ்க்கி, முகமது ஷூக்ரி பற்றியெல்லாம் விரிவாகவே சாரு எழுதியிருக்கிறார். இப்போது நான் கேட்கிறேன் - சாரு தமிழில்கூடப் படித்ததில்லை எனச் சொல்லும் நீங்கள் சாருவையே படித்ததில்லை என்று நான் சொல்ல முடியும்தானே?

அவருடைய வாசிப்பிற்கு அவரது எழுத்துகளே சாட்சி. அதை வைத்து நாம் உரையாடலாம். ஆனால் நீங்கள் அதையும் வேறு யாராவது எழுதிக் கொடுத்தது எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடக் கூடும். அதனாலேயே நான் அவரது ஆரம்ப கால எழுத்துகளை மேற்கோள் காட்டாமல் அவரது பிந்தைய - அதாவது 2002ற்குப் பிறகு எழுதிய விஷயங்களை மேலே எழுதியிருக்கிறேன். இல்லை, இவையும் வேறு யாராவது தவணை முறை நண்பர்கள் எழுதிக் கொடுப்பது என்று சொல்லிவிட்டால், தவணை முறையில் இல்லாமல் மொத்தமாகத் தீர்ந்தது விஷயம்.

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் & ஜீரோ டிகிரி பிரேம் ரமேஷ் எழுதியதாம்! ஆபிதீன், எக்ஸிஸ்டென்ஷியலிசம் நாவலில் ஒரு பத்தி தான் எழுதியதாகச் சொன்னதிலிருந்து, இதுவரை எனக்குத் தெரிந்து அந்த நாவல்களுக்கு ஆறு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது இப்போது வரைக்குமான கணக்குதான். நாளையேகூட இன்னும் சிலர் வந்து அந்நாவல்களை தாம்தான் எழுதினோம் என்று சொல்லக் கூடும். இதெல்லாம் என்னய்யா விவாதமா - இதெற்கெல்லாம் ஒருவனால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

(இடைவெட்டு : மாலதி மைத்ரி ஜீரோ டிகிரியை சாரு எழுதவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால் அந்நாவலை எடிட்டிங் செய்தது ரமேஷ்தான் என்று எழுதியிருக்கிறார். நாவலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட்டவுடன், அதற்கு எடிட்டிங் அவசியமாகிறது. அந்த எடிட்டிங் பணிக்குச் சிலர் உதவியிருக்கலாம். மேலை நாடுகளில் இது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக அந்தப் புத்தகத்தையே எழுதினது தான்தான் என்று சொன்னால் என்ன செய்ய?)

”ரோலான் பார்த் ரைட்டிங் டிகிரி ஜீரோ என்று எழுதியிருக்கிறார். அதனால் ஜீரோ டிகிரி என்று தலைப்பு வைத்தது சாருவாய் இருக்க முடியாது!” ஜீரோ டிகிரி எப்போது வந்தது? ரோலான் பார்த்தின் அந்தப் புத்தகம் வெளியானது 1953ல். தமிழிலேயே ஜீரோ டிகிரி வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே பார்த், தெரிதா, ஃபூக்கோ எல்லாம் அறிமுகமாகிவிட்டார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பைத்தியக்காரன்.

சாருவுக்கும் பின் நவீனத்திற்குமான தொடர்ப்பு எத்தகையது என்பதை பிரேம் ரமேஷை விடுங்கள், நீங்கள் எழுதுங்கள். நான் எதிர்வினையாற்றுகிறேன். சும்மா சாருவுக்கு பின் நவீனம் தெரியாது, அமைப்பியல் தெரியாது என்பதெல்லாம் ஹம்பக்.

அவருடைய கட்டுரைகளை யார் எழுதிக் கொடுத்தார்கள், யார் பிழை திருத்தினார்கள் (எழுதறவனே பிழையையும் கொஞ்சம் திருத்திக் கொடுத்துடக் கூடாதா!) என அதே கிசுகிசு பாணியில் சொல்லிச் செல்கிறீர்கள். நீங்கள் பெயர் சொல்லாமல் சொல்லும் அவர்களே இதை ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நீங்கள் பிரமிளுக்குச் சாரு எழுதிய குசு கடிதத்தையோ விமர்சன ஊழல்களில் பிரமிள் எழுதியதையோ சொல்வீர்களேயானால், பிரமிளைப் பற்றி சுந்தர ராமசாமி தொடங்கி அழகிய சிங்கர் வரை எழுதியிருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதும் யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய், எது புனைவு என்று ஒரு மயக்கம் ஏற்படலாம்! மட்டுமில்லாமல், எது உண்மை, எது பொய் என தீர்மானிக்க நாம் யார்?

சரி, சாருதான் இறந்த பிறகு பிரமிளையும் சுஜாதாவையும் பாராட்டுகிறார். ஜெயமோகன் என்ன செய்கிறார்? கமலாதாஸ் இறந்தவுடன் அவர் குரூபி, தன்னுடைய நிறைவேறாத காமத்தினால்தான் (பச்சையாகச் சொன்னால் படுக்க அலைந்தார் என எழுதியிருந்தார்!) எழுதினார் எனச் சொன்ன போது எங்கே போயிருந்தீர்கள். அப்போது உங்கள் அறச் சீற்றத்தை இப்படித்தான் காட்டினீர்களா?

விஷ்ணுபுரம்தான் முதலில் ஃபிரெஞ்சிற்குப் போக வேண்டுமாம்! உங்கள் மனச் சாய்வு தெளிவாகவே தெரிகிறது பைத்தியக்காரன். இப்போது சொல்கிறேன், பின் தொடரும் நிழலின் குரலைக்கூட ஒரு முறை கஷ்டப்பட்டு படித்து விட்டேன், ஆனால் விஷ்ணுபுரத்தை இவ்வளவு வருடங்களில் என்னால் 5 பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை! அவரது தலையணை புத்தகங்களின்மேல் ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது.

அடுத்த கண்டுபிடிப்பு : ஜீரோ டிகிரி ஐரோப்பிய வடிவ பாணி நாவலாம், அதனால் ஃபிரென்சில் மொழிபெயர்த்தால் செல்லுபடியாகாதாம்! நாளையே நாவல் என்கிற வடிவமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதானே, அதனால் ஆங்கிலம், ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கவே வேண்டாம் என்றுகூட நீங்கள் சொல்லக் கூடும் - அதற்குள் உங்கள் விருப்பப்படி விஷ்ணுபுரம் நாவலை ஃபிரெஞ்சில் மொழிபெயர்த்து விடட்டும்.

உங்களுக்கு ராசலீலாவில், ஜீரோ டிகிரியைப் போன்ற அடர்த்தியோ கட்டுடைப்போ தெரியவில்லை. அது உங்கள் அபிப்ராயம். ஆனால் எனக்கு ராசலீலா அவரது முந்தைய ஆக்கங்களை விட அதிகமாகப் பிடித்திருக்கிறது. இதெல்லாம் தனிப்பட்ட நபர்களின் கருத்து என்பதற்குமேல் ஒன்றுமில்லை. உடனேயே ஜீரோ டிகிரிவரை மற்றவர்கள் எழுதிக் கொடுத்தார்கள், பிறகு இந்த நிலைமை என்று சொன்னால் எப்படி?

சாரு எவ்வளவு மோசமானவர் என்பதைக் காட்ட நீங்கள் ஜீரோ டிகிரிக்குப் பிரச்சனை வந்தபோது ஜெமோதான் ஆதரித்தார் என்கிறீர்கள். இது என்னய்யா புதுக்கதை என்றால் ஜீரோ டிகிரி நாவலின் ஒரு பதிப்பில் வெளியான ஜெமோவின் 5 வரிக் கடிதமாம்! அந்தப் பதிப்பில் அவரது கடிதம் மட்டுமா வந்தது? பலர் அந்நாவலைப் பாராட்ட ஜெமோ செய்திருந்தது கோஷ்டி கானமாகத்தான் தெரிகிறது எனக்கு.

எழுத்தாளன் என்பவன் தன் புத்தகங்களை வெளியிட பல பதிப்பகங்களை அணுகுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் தன்னுடைய புத்தகங்களை வெளியிடாததால், தமிழினி வசந்தகுமாரை எங்கே குறிவைத்துத் தாக்கினார் சாரு? தமிழினியில் புத்தகங்கள் எழுதுவதால் ஜெமோ உயிர்மையை எதிர்க்கிறார் என்று எழுதினால் அது தமிழினியைத் தாக்குவதா? பண்பாட்டைப் பேசுதல் என்ற கட்டுரையில் மற்ற எல்லாப் பத்திரிகைகளையும் மட்டம் தட்டி தமிழினி, வார்த்தை போன்றவற்றை ஜெமோ தூக்கிப் பிடித்ததற்கான எதிர்வினை அது. மனதாரச் சொல்லுங்கள், உங்களுக்கு அந்தக் கட்டுரை ஏற்புடையதுதானா?

இரண்டாம் வகுப்பு டீச்சராக மாறி யாமம் வாசித்திருக்கிறீர்களா, அழகிய பெரியவன் வாசித்திருக்கிறீர்களா, அதிலிருந்து நான்கு வரிகளை மனப்பாடமாக ஒப்பியுங்கள் என்று கையில் பிரம்பெடுக்காதீர்கள். அசிங்கமாயிருக்கிறது.

மற்றபடி ஒரு புத்தகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் பெரிய தவறே இல்லை - இப்படி எவ்வளவு புத்தகங்களைப் பற்றி, எவ்வளவு சினிமாக்களைப் பற்றி வந்திருக்கிறது. என்னவோ தமிழ்கூறும் நல்லுலகமே சாரு சொல்லிவிட்டால் படிக்காமல் விட்டுவிடப் போகிறதா என்ன? அதற்கான எதிர்வினையையும் நாகார்ஜூனன் செய்துவிட்டார். எனக்கென்னவோ நீங்கள் அதற்காக உங்கள் பதிவை எழுதியது போல் தெரியவில்லை.

அமர்நாத்திற்கான பதிலில் பின் குறிப்பாக சாரு எழுதியது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் அவராவது பதில் சொல்ல வாய்ப்பிருக்கும் மனிதரைப் பற்றி எழுதுகிறார். ஆனால் ஜெமோ அந்த வாய்ப்பில்லாத இறந்து போனவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார். நீங்கள் ஜெமோவை விட்டுவிட்டு சாருவிற்கு மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினை செய்கிறீர்கள். உங்களின் இந்தத் தேர்வுதான் என்னை உறுத்துகிறது. இன்னொன்று, சிறுபத்திரிகைக்காரர்கள் என்றாலே சண்டை (மட்டுமே) போடுபவர்கள் என்பதாகச் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், எழுத்து காலம் முதற்கொண்டு, படிகள், பரிமாணம், கசடதபற, பிரக்ஞை, மீட்சி, கல்குதிரை, நிறப்பிரிகை ஈறாக தமிழில் பல விஷயங்கள் சாத்தியமானது சிறுபத்திரிகைகளால்தான் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதற்கு உங்களின் இந்தப் பதிவும் துணை போவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

விப்ரோ சத்யம் மற்றும் பங்குச் சந்தை

விப்ரோ

உலகவங்கி விப்ரோவை 2011 வரை தடைசெய்திருக்கிறது. முதலில் விப்ரோ conflict of interest என சால்ஜாப்பு சொன்னது. உலக வங்கி தெளிவாக தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு லஞ்சம் (இதையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்) கொடுத்ததால்தான் விப்ரோவைத் தடைசெய்ததாய் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து விப்ரோ டெக்னாலஜிஸின் Co - Chief Executive கிரிஷ் பரஞ்சபே சொல்லியது :

"நிறுவனத்தின் 2% பங்குகளை எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் சில வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்தோம். அப்படி issue priceல் 72,000 டாலர்களுக்கு உலக வங்கியில் பணிபுரிபவர்களுக்கு தந்தோம். அந்த வங்கியிடம் எங்களுக்குப் பெரிதாக ஒன்றும் வர்த்தகமில்லை, அதிகபட்சம் மொத்தமாக 10 லட்சம் டாலர்கள்கூட இல்லை."

இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் வேலை செய்பவர்களுக்குச் ஊக்கத்தொகை, போனஸ் தரலாம். ஆனால், அதையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தால்...??

விப்ரோவே வெளிப்படையாகச் சொல்லியபடி மொத்த வியாபாரத்தில் 7.2% மதிப்பிற்கு பங்குகளைக் கொடுத்திருக்கிறார்கள் (issue priceற்கும் சந்தை விலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!).

விப்ரோ கொடுத்திருப்பது அப்பட்டமான லஞ்சம். இதன் மூலமே பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படி வெட்ட வெளிச்சமாகி, விப்ரோ போன்ற நிறுவனங்களின் புனித பிம்பங்கள் கட்டவிழத் துவங்கியது ஒருவிதத்தில் நல்லதுதான்.

அரசியல்வாதிகளை sting oprationaகளிலிருந்து பலவற்றையும் செய்து தோலுரிப்பதுபோல் வணிக நிறுவனங்களைச் செய்வதில்லை ஊடகங்கள். அதற்கு விளம்பரம் மட்டுமல்ல, என்ன இருந்தாலும் அவர்கள் நம்மைபோன்ற முதலாளிகள் என்ற பாச உணர்வுதான் காரணமாயிருக்கமுடியும். தொலைக்காட்சி ஊடகங்களின் புனிதபிம்பங்கள் எப்போது உடையுமோ தெரியவில்லை.

சத்யம்

சத்யம் பிரச்சனையில் ராமலிங்க ராஜூவையும் அவரது தம்பி ராம ராஜூவையும் (காலதாமதமாகக்) கைது செய்தது செபி விசாரணையை ஒத்திப் போடத்தான் எனச் சிலர் சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அரசு - இயந்திரத்திற்கும் ராஜூக்களுக்குமுள்ள நெருங்கிய உறவு வெள்ளிடைமலை. உபரி தகவலாக 25 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ராஜூவிற்காக வாதாடப் போகிறதாம். இவ்வளவு பெரிய குழுவிற்கு எவ்வளவு செலாவுகுமோ என விசனப்பட்ட என்னிடம், யார் வீட்டுக் காசு என்கிறான் என் நண்பன்!

இப்போதாவது சில கேள்விகள் கேட்கப்பட்டேயாக வேண்டும்!

1. ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா?

2. மக்களின் வரிப் பணத்தை எதற்காக சத்யம் போன்ற ஒரு தனிப்பட்ட (அதுவும் ஆரம்பித்தவர்கள் செய்த திருட்டு காரணத்தால் கவிழப்போகும்) நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த செலவு செய்ய வேண்டும்?

3. இப்போது ஆடிட்டர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் ICAI, இதே ஆடிட்டர்கள்மீது GTB Bank தொடர்பாகப் பலவருடங்கள்முன் ஆரம்பித்த விசாரணை என்ன ஆனது? இம்மாதிரியாகத் தவறு செய்த பல உள்ளூர் ஆடிட்டர்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லித் தப்பிக்க முடியாது; கேள்வி, பன்னாட்டு முதலாளிகள் என்றால் மட்டும் ஏன் உங்கள் நடவடிக்கைகள் நொண்டியடிக்கின்றன என்பதுதான்.

4. SBI மேதாஸ் இன்ஃபிராவிற்கு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதை வராக் கடனாக அறிவிக்க நேரலாம் என இப்போது சொல்லியிருக்கிறது. ஏன் இவ்விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம்?

5. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை 4 மடங்குகள் குறைந்த விலையில் மேதாஸ் இன்ஃபிராவிற்குக் கொடுத்திருக்கும் ஆந்திர அரசு மேலும் முன் பணமாக 600 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரு scam waiting to happen என dmrc ஸ்ரீதரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் (ஸ்ரீதரனுக்குப் பரிவட்டம் கட்டுவது என் நோக்கமல்ல). ஆனாலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?

பங்குச் சந்தை

சுழியம் போன்ற நண்பர்கள் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நிலைபார்த்து முதலீடு செய்ய வேண்டுமென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அபாயம் கூடுதலோ அவ்வளவுக்கவ்வளவு லாபமும் கூடுதல் போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது? அவர்கள் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையே பொய்யானது எனும்போது எதன் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யமுடியும்? போக, அவர்கள் தொழில் செய்ய நீங்கள் எதற்காகப் பணம் தர வேண்டும்? அவர்களுக்கு வேண்டுமானால் கடன் பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டிக் கொள்ளட்டுமே. உதாரணத்திற்கு இப்போது சத்யம் பங்குகளையே எடுத்துக் கொள்வோம்... எவ்வளவு பேர் அதை 550 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற வீதத்தில் வாங்கியிருப்பார்கள். ஆனால் சத்யம் 20% டிவிடெண்ட் என்றாலும் அதன் அடக்க விலையான 2 ரூபாய்க்குத்தானே தருகிறார்கள் (அதாவது ஒரு பங்கிற்கு நீங்கள் 550 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அம்முதலீட்டிற்கு வருடத்திற்கு 80 பைசா டிவிடெண்டாகப் பெறுகிறீர்கள்!).

அபாயம் கூடுதலாக இருந்தால் லாபம் கூடுதலாக இருக்கும் என்பது அவர்கள் கிளப்பிவிட்ட மாயை!

சென்செக்ஸிலிள்ள 30 கம்பெனிகளின் (மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின்) மொத்த சந்தை மதிப்பீடென்ன, இந்தியாவின் gdp என்ன போன்ற சிக்கலான விஷயங்களுக்குப் போகாமலேயே பங்குச் சந்தை என்பது ஒரு ஏமாற்றுவேலை என்பது புரியும்.

யோசித்துப் பாருங்கள். கடந்த இருபது வருடங்களில் நடந்த மிகப் பெரிய பொருளாதார ஊழல்கள் பங்குச் சந்தையோடு நேரடித் தொடர்புடையவை (ஹர்ஷத் மேத்தா & பாரேக்). இப்போது சத்யம். நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், இது பங்குச் சந்தை மதிப்பிடலை (stock market valuation) அதிகப்படுத்த தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையாகச் சொல்லலாம். இதில் உள்ள பண சுருட்டல்கள் தனிக் கதை!.

இது தொடர்பாக முன்னர் எழுதிய இடுகைகளின் சுட்டிகள் :

http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html

http://jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

சட்டக்கல்லூரி மாணவர் மோதலும் பொதுப்புத்தியின் தலித்விரோதப் போக்கும்

இந்தப் பதிவை அனுப்பியவர் ஒரு பத்திரிகையாளர், வலைப்பதிவுகளில் பரவலாக அறியப்பட்டவர். இப்போதுள்ள சூழலில் தன்னால் தன் வலைப்பூவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினை குறித்து எழுத இயலாது என்பதால் இதை அனுப்பியுள்ளார்.

தொலைக்காட்சியில் 'மனதைக் குலுங்க வைக்கும்' அந்தக் காட்சிகளைக் கண்டவர்களின் மனட்சாட்சிகள் இருகேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்பின.

1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?

2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?

1. உண்மைதான். இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதுதான். இது மட்டுமல்ல, எல்லாவிதமான வன்முறையும். ஆனால் இந்த வன்முறை எதிர்ப்பு மனச்சார்பு உடைய இந்திய ஆதிக்க சாதி மனங்கள், கயர்லாஞ்சி வன்முறை, தாமிரபரணிப் படுகொலை, திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணிக்கப்பட்ட வன்முறை, குஜராத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழித்த வன்முறை என தூலமான வன்முறை தொடங்கி கௌதம் மேனன் என்னும் தேவடியாப் பையன், முஸ்லீம்களைப் பிள்ளைபிடிப்பவர்களாகப் படமெடுக்கிற கருத்தியல் வன்முறை வரை எதுகண்டும் எப்போதும் அதிர்ந்ததில்லை. அப்படியானால், வன்முறை எதிர்ப்பு என்பது பக்கச்சார்பாய் இருக்கும் போது வன்முறையும் வன்முறை ஆதரவும் பக்கச்சார்பாய் இருந்தே தீரும். தென்மாவட்டங்களில் பள்ளர்களின் எழுச்சி சாதிக்கலவரமாக முன்வைக்கப்பட்டதைப் போலவே இப்போது சட்டக்கல்லூரி மாணவர் 'வன்முறை' குறித்துக் கதையாடப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு உண்மையை மட்டும் வரலாற்றின் மிதிபட்ட பாதங்களுக்கு அடியில் நசுங்கிக்கிடக்கும் துணுக்குகளிலிருந்து கண்டுபிடிப்பது சிரமமான காரியமில்லை. தலித்துகள், முஸ்லீம்கள் 'வன்முறை' நிகழ்த்துவது, குண்டுவெடிப்பை நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்படுவது ஆகிய 'வன்முறைச் சம்பவங்கள்' மட்டுமே பொதுப்புத்தியால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. ஆனால் சிரிப்பதற்கும் அழுவதற்குமான முரண்நகை என்னவென்றால் இந்தியாவின் ஆகப்பெரும் ஆளும் கருத்தியல் சித்தாந்தமான பார்ப்பனீயத்தால் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட மேற்கண்ட மக்கள் குழுமங்கள் நிகழ்த்துவது வன்முறையல்ல, எதிர்வன்முறை என்கிற எதார்த்தம்தான்.

2. இரண்டாவது கேள்விக்கு வருவோம். போலீஸ் எப்போது வேடிக்கை பார்த்தது, எப்போது 'செயல்பட்டது?' என்கிற கணக்குகள் சாதியக் கறைபடிந்த வரலாற்றில் காணக்கிடைப்பவைதானே. தாமிரபரணி ஆற்றங்கரையில் தலித்துகளையும், பெண்களையும் அடித்து நொறுக்கி, 'கிருஷ்ணசாமி சிவப்பா இருக்கியான்னு பார்க்க வந்தியாடி' என்று பள்ளரினப்பெண்களைக் குண்டாந்தடியால் வன்மையாய்த் தாக்கி, விக்னேஷ் என்னும் ஒன்றரை வயதுக் குழந்தை ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டபோது போலீஸ் 'செயல்படத்தானே' செய்தது? அப்போது போலிஸ் 'செயல்பட்டதை' ஏன் ஊடகங்களும் தமிழ்கூறு நல்லுலகமும் கேள்வி எழுப்பவில்லை? போலீஸ் இந்தச் சம்பவத்தில் மட்டும்தானா வேடிக்கை பார்த்தது? தமிழகம் முழுவதும் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் எவ்வளவு? இதுவரை எவ்வளவு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன? அவற்றில் எவ்வளவு புகார்கள் விசாரிக்கப்பட்டு ஆதிக்கசாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? போலீசு மட்டுமல்ல, நீதிமன்றம், அரசு என எல்லாமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏன் பொதுப்புத்தி கண்டிக்கவில்லை?

சரி , ஆதிக்கசாதி 'மனச்சாட்சி'களின் கேள்விகளை விடுவோம். ஊடகங்களாலும் 'பொது' மக்களாலும் கேட்கப்படாத கேள்விகளுக்கு வருவோம்.

1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?

2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?

3. 'பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்' அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?

1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு 'சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது' என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.

2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.

3. சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலில் பெரும்பாலும் சென்னையைச் சேர்ந்த, மாணவர்கள் ஈடுபடுவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்து மாணவர்களே மோதல்களில் ஈடுபடுகின்றனர். ஆதிக்கச்சாதி மாணவர்கள் கிராமங்களில் தங்கள் சாதிக்கு இருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சட்டக்கல்லூரியிலும் கொண்டு வர முயல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் சட்டக்கல்லூரியில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் கிடைப்பதாலும் பல்வேறு தொடர்புகளும், ஆதரவுச் சக்திகளும் சென்னையில் கிடைப்பதாலும் துணிச்சலாக எதிர்வன்முறையில் ஈடுபடுகின்றனர். சட்டக்கல்லூரியில் ஒவ்வொரு சாதியும் தனித்தனியாகக் கலைவிழாக்கள் நடத்துவதுண்டு. தேவர் சாதி மாணவர்கள் நடத்தும் கலைவிழாக்கள், முளைப்பாரி எல்லாம் எடுத்து, ஒரு தேவர் ஜெயந்தி குருபூஜை விழா போலவே இருக்கும். அப்போது சாதியுணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களும் முன்வைக்கப்படும். 'சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி என்றால், மதுரையில் முத்துராமலிங்கத்(தேவர்)தின் பெயரில் சட்டக்கல்லூரி வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இந்த கோரிக்கைகள் இப்போது படிப்படியாக வளர்ந்து, இந்த மோதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, 'கல்லூரியிலிருந்து அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும், எஸ்.சி ஹாஸ்டல்கள் மூடப்பட வேண்டும்' என்கிற வரை வளர்ந்துள்ளன..

மாணவர்கள் சாதியரீதியாகப் பிரிவதும் மோதிக்கொள்வதும் வருந்தத்தக்கதுதான், கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் ஆதிக்கச்சாதி மாணவர்கள் தங்கள் சாதிய மனோபாவத்தைக் கைவிடாமல் இதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. இப்போதும் கூட தாக்கப்பட்ட சித்திரைச் செல்வன் என்கிற தலித் மாணவரை எந்த மீடியாவும் கண்டுகொள்ளவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பி.ஜே.பியின் திருநாவுக்கரசரைத் தவிர வேறு எந்த பெரிய அரசியல் தலைவர்களும் சென்று நலம் விசாரிக்கவில்லை (மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் உட்பட). சித்திரைச் செல்வன் கைதுசெய்யப்பட்டதைப் போலவே பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோரும் கைது செய்யப்படவேண்டும். ஆனால் தேவர் தரப்பிலிருந்து ஒரு மாணவரும் கைது செய்யப்படவில்லை. இத்தகைய தனிமைப்படுத்தல்கள் தலித் மாணவர்கள் மத்தியில் எதிர் வன்முறை மனோபாவத்தையும் , பொதுவான மாணவர்கள் மத்தியில் சாதியக் கசப்பையும் உருவாக்கவே செய்யும்.

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகார்) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் என்ச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : www.madrasdada.blogspot.com )

பெயரிலியின் பொய் அல்லது வராத பின்னூட்டம்

சமீபத்தில் தமிழரசி என்பவரின் பதிவில் (பார்க்க : http://thenukegirl.blogspot.com/2008/07/blog-post_5800.html ) பெயரிலி ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார். அதைக் கீழே கொடுக்கிறேன்.

-/பெயரிலி. said...
இவ்வளவு ஜ்யோராம்சுந்தர் "ஏழைப்பதிவானாக"ப்பேசுகிறாரே, கருத்துச்சுதந்திரமறுப்புக்கு எதிராகப் பேசும் இவர் அவ்விடுகையிலேயே தமிழ்சசி தமிழ்மணம் தொழில்நுட்ப அளவிலே என்ன வகையிலே இம்முறை செயற்பட்டதென்றும் பதிவு ஏதும் நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இட்ட பின்னூட்டத்தை அமுக்கிவிட்டாரே? இதுவா கருத்துச்சுதந்திரம்? இரண்டு நாட்கள் முன்னால் வந்த இக்கருத்துப்பின்னோட்டத்தினை அவர் பதிவிலேயே இட்டிருந்தால், இன்னமும் காமம் என்ற சொல்லும் நட்சத்திரக்குறியாகவில்லை; "மாலைமுரசு" சொல்லும் காமக்கதை இடுகையும் நீக்கப்படவில்லை என்பது பல பின்னூடமுன்னோடிகளுக்குத் தெரிந்திருக்குமே? எதற்கு அனுமதிக்கவில்லை?

அது சரி; அனுமதித்திருந்தால், எதை வைத்து நான்கு நக்கலான பதிவுகளும் மூன்று போராட்ட வேங்கைப்பதிவுகளும் இந்த இடுகை போன்று மற்ற அதிகாயசூரவீரமார்த்தாண்டர்கள் இடமுடியும்? சுந்தர் விடாததும் சரிதான/

அப்படியான ஒரு பின்னூட்டம் எனக்கு வரவேயில்லை.! பிறகு எப்படி வெளியிட??? கிட்டத்தட்ட இதே கருத்தை கூறிய வேறு சில பின்னூட்டங்களை வெளியிட்டிருந்தேன். ஏதாவது காரணங்களுக்காக பின்னூட்டங்களை நிராகரித்தால், அதையும் அவ்விடுகையிலேயே பின்னூட்டத்தின் மூலமாகத் தெரிவித்துவிடுவேன்.

அவராக முடிவு செய்துகொண்டு எப்படியெல்லாம் அடித்து ஆடுகிறார் பாருங்கள். இதில் அடுத்தவர்களைப் பொய்யர்கள் என்று கூசாமல் சொல்கிறார்.

எவ்வளவு யோசித்தும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நாங்க பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லாட்டா எங்க வயிறுக்குக் கீழே முடி மொளைக்கறதுக்கு முன்னாடியே பின் நவீனத்துவம் எல்லாம் அவருக்கு அத்துப்படியாம். (அதுதான் இப்படியெல்லாம் எழுதறாரு போல :) ). ஆனா பாருங்க, இந்த ‘கெட்ட' வார்த்தைங்கள எழுதும்போது ஆங்கிலத்துக்குத் தாவிடறாரு. பின்நவீன முன்னோடி வாழ்க வாழ்கவே.!

என் கதைகளை அவர் நக்கலடிப்பது ஒன்றும் பிரச்சனையில்லை. திரும்ப அவர் எழுத்தை நக்கலடிக்க எவ்வளவு நேரமாகும் (அதை நான் வேறு செய்யணுமா என்ன?)

அவர் பதிவில் எழுதுவது போல் ஜாங்கிரி எல்லாம் சுத்தாமல், புரியும்படியான மொழியில் அவர் சொல்லிய அபாண்டமான அவதூறைத் திரும்பப் பெற வேண்டும். இதுவே குறைந்தபட்ச நேர்மை. செய்வாரா பெயரிலி?

ஞாநிக்கு ஒரு ஓ போடுவோம்!

என்னுடைய பழைய கட்டுரையில் சொல்லியதுபோல் ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. வெகுஜன தளத்தில் அவருடைய சில மாற்றுச் செயல்பாடுகள் பாராட்டப்பட வேண்டியவை (இதே அடிப்படையில் பாமரனின் செயல்பாடுகளும்). என்னுடைய இவ்வெண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது அவரது இவ்வார குமுதம் பத்திரிகையில் வெளியான 'மதிகெட்ட மாமன்னன் மன்மோகனன்' என்ற கட்டுரை.

இக்கட்டுரையில் அவர் இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்திருக்கிறார் என்பதற்காக அல்ல என் மகிழ்ச்சி; ஒட்டு மொத்தமாக அணுசக்தி எனச் சொல்லப்படும் பேரழிவுச் சாத்தானையும் ஒப்புக் கொள்ளாததால்தான்.

நான் அறிவியல் மாணவனோ அல்லது ஆராய்ச்சியாளனோ அல்ல. ஆனால் என்னாலேயே அதன் படுபாதகமான பின்விளைவுகளை உணர முடிகிறதெனில், நிச்சயம் விஞ்ஞானிகள் இதைப் பற்றி இன்னமும் தெளிவாக விளக்க முடியும். இது அவர்கள் முன்னிருக்கும் வரலாற்றுக் கடமையும்கூட!

டி.அருள் எழிலன் ஒரு குறிப்பிடத்தகுந்த கட்டுரையொன்றை எழுதியிருந்தார் இந்த 123 ஒப்பந்த்தில் உள்ள பாதகமான அம்சங்களைப் பற்றி (பின்ன அமெரிக்காவுடனான ஒப்பந்தம் வேறு எப்படி இருக்கும்!). அதில் அணுசக்தி தேவையா என்ற அடிப்படையான கேள்வியை எழுப்பியாக வேண்டும் என பின்னூட்டமிட்டிருந்தேன்.

இனி, ஞாநியின் கட்டுரையிலிருந்து :

/நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழிநுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன./

நன்றி, ஞாநி.

நான் தொடர்ந்து கற்றுவரும் நாகார்ஜூனனும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். http://nagarjunan.blogspot.com என்ற முகவரியில் அணுகுண்டு / அணுசக்தி போன்ற விஷயங்களில் அவரது கருத்துகளை அறியலாம்.

இது போன்ற ஒப்பந்தங்கள் அல்லது இப்படியான ஒரு முக்கியமான அரசியல் - சமூக நிகழ்வின்போது அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பலர் சாதகாமகவோ அல்லது பாதகமாகவோ விமர்சிக்கலாம். ஆனால், அடிப்படையான கேள்விகளை எழுப்புபவர்கள் முக்கியமானவர்கள். அவ்விதத்தில் எனக்கு ஞாநி முக்கியமானவராகத் தெரிகிறார்.

இப்படித் தொடர்ந்து ஞாநிக்கு ஓ போட முடிந்தால் மிகவும் மகிழ்வேன் :)

விக்ரமாதித்யன் கவிதைகள்

என் மனிதிற்கு நெருக்கமான கவிஞர்களுள் ஒருவர் விக்ரமாதித்யன். இவரது முதல் தொகுதி 1982ல் அன்னம் நவ கவிதை வரிசையில் வெளியானது (ஆகாசம் நீல நிறம்). தொடர்ந்து பல தொகுப்புகள் (ஒரு முழுத் தொகுதி உட்பட) வந்து கொண்டிருக்கின்றன.

வண்ண நிலவன், வண்ணதாசன், கலாப்ரியா காலகட்டத்தைச் சேர்ந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன். 1960களின் இறுதியிலிருந்து எழுதி வருகிறார். 'சாதாரண வார்த்தைகளில் பல தளச் சிக்கல்' என்பது இவரது கவிதைகளுக்குச் சாலப் பொருந்தும்.

போய்ச் சேர்ந்தான் புதுமைப் பித்தன்
வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்

என எழுதும் துணிவு இவருக்குத் தான் உண்டு !

இவரது தனிச்சிறப்பு குறுங்கவிதைகள். இவரின் பிரபலாமான சில குறுங்கவிதைகள் :

அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு
*
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
*
சௌந்தர்யக் கூச்சம்
சாப்பாட்டுக்குத் தரித்திரம்
*
கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
*
எஜமானனைவிட
ஊழியனுக்கு நல்லது
எஜமான விசுவாசம்
*
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை
*
சாக்லெட்டே சாக்லெட்டே
குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லெட்டே
சிகரெட்டே சிகரெட்டே
நேரம்கெட்டநேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே
*
கண்ணாடிப் பாத்திரங்களைக்
கையாள்கிற கஷ்டம்
*

கவிதை / கவிஞர்கள் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுகிறார். அதிலிருந்து சில :

கட்டில் செய்யலாம்
கப்பல் செய்யலாம்
கணக்கு செய்யலாம்
கவிதை செய்ய முடியுமா
*
நடுவழியே நல்லது
கலைஞர்கள் துருவசஞ்சாரிகள்
*
கலைஞர்களாவதற்கு
இல்லை குமாஸ்தாக்கள்
*
விலைகூவி விற்கலாம்
இருக்கிறது சரக்கு எல்லோருக்குமாக
ஒருசிறு பிரச்சனை
வியாபாரி அல்ல நான்
வீணாக அழிந்தாலும் கலைஞன் தான்
*

இனி, கொஞ்சம் பெரிய கவிதைகள். நேரடித் தன்மை வாய்ந்த கவிதைகள் இவருடையவை. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்

மிகச் சொற்ப வார்த்தைகளில் ஒரு சித்திரத்தைத் தீட்டிக் காட்டி விடக் கூடிவை இவரது கவிதைகள். வேலை தேடி மனமின்றி வெளியூர் செல்லும் ஒரு நடுத்தர வயது மனிதனின் கவிதை. :

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள

நிறைய சுய புலம்பல் கவிதைகளும் இருக்கும். உதாரணத்திற்கு :

ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
*

சில கதைக் கவிதைகளும் உண்டு :

அத்தனைபேர் இருந்த பேருந்தில்
அது நிகழ்ந்தது
அப்பாவைவிடவும் வயது கூட
அந்தப் பெரியவருக்கு
தளர்ந்துபோன உடம்பு
குச்சிகுச்சியான கையும் காலும்
எப்படித்தால் அந்தப் பாய்க்கட்டுகளை ஒத்தையில் சுமந்து வந்து
ஓட்டுநர் பக்கமாக ஏற்றி இறக்கி வைத்தாரோ
அந்த ஊரின் கடைசி நிறுத்தத்தில்
பயணச் சீட்டு கொடுக்கும் நேரத்தில்
வெடித்துக் கிளம்பிஅது தகராறு
சுமைக்குக் கட்டணமாக முழுச்சீட்டுப் போட
முஸ்லீம் முதியவர் அரைச்சீட்டுத்தான் என மறுதலிக்க
வழமையைச் சொல்லி வாதித்த
வயசாளியின் பக்கம் பாதிக்கூட்டம்
நடத்துநரின் நியாயத்துக்கு
லாலி பாடியது மீதிக் கூட்ட்ம்
இருக்கிற காசுக்குள்
வருகிற ஊரில்
இறக்கி விட்டார் நடத்துநர்
முழுக்கட்டணம்தான் பாய்ச்சுமைக்கு என்று
முதலிலேயே சொல்லியிருந்தாராம் அவர்
பாவப்பட்ட கிழவர் சபித்தார்
நொந்துகொண்டு அழுதார்
ஆதரவாக ஏந்திவைத்துக் கொள்ளும் உயிர்கள்
அனுப்பி வைத்திருக்கும் நிச்சயமாக ஊருக்கு
என்றபோதும் அன்றையதினம்
அவருக்கு உதவாமலிருந்தது
உறுத்துகிறது இந்த நிமிஷமும்
நண்பரிடம் வாங்கிவந்த யாசகக் காசில்
பத்து ரூபாய்க்கும் மேல் பையிலிருந்தது
வேலையற்ற
வீட்டிலிருந்தது நாலுநாளில் திரும்பிவந்து அலையவேண்டிய
வெங்கொடுமை நிலைக் குழப்பத்தில் சிக்கலில்
வறண்டு போயிற்றோ என் மன ஊற்று
விளங்கவில்லை இன்னமும்
எப்படிக் காய்ந்தது என் மனஈரம்
எவ்விதம் உலர்ந்தது என் பச்சையம்
எனக்கு நானே அந்நியமானதுதான் என் சோகம்
ஆழ்ந்து யோசித்தால்
அவர் ஸ்திதியல்ல பிரச்சனை
என் ஸ்திதிதான் எனக்குப் பிரச்சனை
*

இனி, வேறு சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு :

நான் யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை
வசந்தம் தவறிய போதும்
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை
வெயில் காயும்
மழை புரட்டிப் போடும்
அல்பப்புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை
நீ கலகக்காரன் இல்லை?
நல்லது நண்ப
நானும் கூடத்தான்
எனது இருபதுகளில்
*

நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு
***

விதம் விதமாய் நவ நவமாய் எழுதியவர் விக்ரமாதித்யன். இன்னும் பல கவிதைகள் இருக்கினறன. எழுதி மாளாது.!

உலகமயமாக்கல் - அதியமான் - எதிர்வினை

க.ர. அதியமான் ஒரு பதிவிட்டுள்ளார். பார்க்க : http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_1502.html. முழுக்க முழுக்க மறுக்கப் பட வேண்டியது இக்கட்டுரை. எதிர்வினையாக இதை எழுதுகிறேன்.

/ /ல் வருவது அவர் பதிவிலிருந்து எடுத்தது. வேறு வழியில்லை. 'மேற்கோள் யுத்தம்' செய்து தான் ஆக வேண்டியுள்ளது :)

/முதல்ல உலகமயமாக்கல் என்றால் என்ன ?
பெரும்பாலானோருக்கு சரியா புரியாமலே 'எதிர்பதாக' சொல்கிறார்கள்/

சரி, விளக்குங்களேன். தெரிந்து கொண்டே ‘எதிர்க்கிறோம்'.

/இந்த தமிழ் blogs/posts , ஆர்குட்/கூகுள் என்னும் அமேரிக்க நிறுவனமும்,
இன்னும் பல இணைய மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனக்களும், தொலைதொடர்பு
நிறுவனங்களின் அபாரமான வளர்சியில் விளைவுதாம். அவைகளை இந்தியாவிற்க்குள்
அனுமதித்து உலகமயமாக்கலின் ஒரு அங்கம்.
அதை எதிர்க்கிறவர்கள், இந்த tamilblogs/posts/groups ஆணிவேரையை
எதிர்ப்க்கிறார்களா ? எப்ப‌டி ? உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இல்லாம‌ல் இந்த‌
அர‌ங்க‌மே சாத்திய‌மில்லையே ? முர‌ண் தொகை !!!/

1. தொழில் நுட்ப முன்னேற்றங்களை உலகமயமாக்கலால் தான் சாத்தியமானது எனச் சொல்ல முடியுமா.? wheel, ரேடியோ, தொலைக்காட்சி, தொலைபேசி எல்லாம் வந்தது உலகமயமாக்கலுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.?

2. முரண் தொகை எனச் சொல்வது முரண்நகையைத் தானென நினைக்கிறேன். ஒரு சமூகத்தில் இயங்குவதால் அதில் உள்ள பாதகமான அம்சங்களை விமர்சிப்பதில் என்ன முரண்நகை இருக்க முடியும்.? இதை இவர் செய்வதில்லையா.?

/சிறிபெரும்புதூர் தொடங்கி, ஒரகடம், மறைமலை நகர் வரை, சென்னையை சுற்றி
நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும்
அதற்க்கு பல உதிர்பாகங்கள் தயாரிப்போர் நிறுவனங்கள் க‌டந்த 15
ஆண்டுகளில், உலகமயமாக்கலின் விளைவாக‌ உருவாகின. அதில் பல ஆயிரம்
பேர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசுக்கு அபாரமான வரி வசூல், அன்னிய
செலாவாணி, மக்களுக்கு மலிவான தரமான பொருட்க்கள் (உ.ம் : நோக்கியா
செல்போன்கள்)..../

இதன் பாதக அம்சங்களை ஏன் பட்டியலிடாமல் வசதியாக மறந்து விட்டார்.? உதா. hire and fire policy etc. அப்புறம் இந்தத் ‘தரமான'ங்கற வார்த்தையை கேட்டாலே என்னவோ போலிருக்கிறது :)

சரிங்க, stp / ehtp நிறுவனங்களுக்கு வரி விலக்கு (வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரி - எல்லா வரிகளும்) அளிப்பது எதனால்.? ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டும் சென்னைத் துறைமுகத்தில் சகாய விலை (subsidised rates) எதனால்.?

/சரி, இவை எல்லாம் அனுமதிக்கபடாமல், 1990 வரை இருந்த மாதிரியே
தொடர்ந்திருந்தால், நம் நிலைமை இன்னும் 'நன்றாக' இருந்திருக்குமா ?
அல்லது மோசமாகியிருக்குமா ?/

சிலரின் வாங்கும் சக்தியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், பலரின் வாழ்க்கை நிலையை கணக்கில் கொண்டால், நன்றாக இருந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

/இவற்றின் சாதக/பாதகங்கள் என்ன ? உலகமயமாகலுக்கு பின் தான் தனியார்
துறைகளில் இப்ப வேலைவாய்ப்புகள் மிக மிக அதிகம் வளர்ந்துள்ளது. 1980இல்
வெளியான கமல் படம் 'வறுமையின் நிறம் சிகப்பு' பார்க்கவும், அன்றைய
சூழ்னிலை பற்றி அறிய. 1965க்கு முன் பிறந்தவர்களிடமும் விசாரிக்கவும்,
வேலை வாய்ப்புகள் பற்றி./

உலகமயமாக்கலின் 'சாதனைகள்' :

1. வினாயகர் சோடா, பொவண்டோ போன்றவை கிட்டத்தட்ட காணாமல்
போனது

2. ராமலிங்க ராஜு, அஜிம் பிரேம்ஜி போன்ற பணக்காரர்களை இன்னும் பணக்காரர்கள் ஆக்கியது

3. ஏழைகளைப் பிச்சைகாரர்கள் ஆக்கியது

4. என்ன சொல்ல வருகிறார்.? விட்டால், வேலை வாய்ப்புகளே உலகமயமாக்கலுக்குப் பின் தான் வந்தது என்கிறாரா.?

பொதுவாக கேப்பிடலிசத்தினால் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம். ஆனால் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டது உலகமயமாக்கல் மட்டுமே என்பதால் அதைத் தவிர்ப்போம்.

அவர் பதிவில் எழுதிவற்றை முழுவதுமாக எடுத்து எழுதியிருக்கிறேன். பிற அவர் பதில் கண்டு...

வளர்மதியின் குறும்படம் - Shiva : The Third Eye

நண்பர் வளர்மதி சமீபத்தில் UNESCOவிற்காக சிவா : தி தேர்ட் ஐ என்ற மூன்று நிமிடங்கள் ஓடும் குறும் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்து மத தொன்மங்களில் உள்ள சிவ பார்வதி நடனத்தை முன்வைத்து இந்த நாட்டிய குறும் படத்தை இயக்கியிருக்கிறார். சிவனும் பார்வதியும் நடனமாட பார்வதி காலை தூக்கி ஆடிய கோபத்தில் அவரை எரித்து விடுகிறார். அவரது மறு பாகம் போனதால் தடுமாறி, தன் தவறை உணர்ந்து பார்வதியை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். மன்னிப்பு கோரும் விதமாக பார்வதியை நெருங்க, அவர் சாதுர்யமாக சிவனின் மூன்றாவது கண்ணைப் பிடுங்கி அதை முழுங்கச் செய்கிறார். சிவனின் தொண்டையில் அதை நிறுத்துகிறார். இதுவே adam's apple. பிறகு இருவரும் களி நடனம் புரிகிறார்கள். இருவரின் கால்களும் ஒரு கண்ணைப் போலத் தோன்ற நடுவில் நீல நிற ஒளி வீசுவதுடன் படம் முடிகிறது.

இந்த நாட்டியப் படம் தொன்மங்களை மறு வாசிப்பு செய்வதன் மூலம் இரு பாலருக்குமான சமத்துவத்தை முன் வைக்கிறது. படத்தில் நிறங்களை கையாண்டிருக்கும் விதம் நன்றாக வந்துள்ளது.

இக்குறும் படத்தின் வெளியீட்டு விழா உலக நடன தினமான நாளை (29/04/2008) யதார்த்தா ஃபிலிம் சொசைட்டியால் மதுரையில் நடத்தப் படுகிறது :

MUTA அரங்கு
6 காக்கா தோப்பு தெரு
மதுரை 625 001
நேரம் : மாலை 6.15

செந்நிறக் கண் இமைத்தபடி துவங்கும் இப்படத்தை நீங்கள் யுனெஸ்கோவின் இணைய தளத்தில் பார்க்கலாம் :

http://www.unesco-ci.org/cgi-bin/media/page.cgi?g=Detailed%2F134.html;d=1

இப்படத்திற்கான என் விமர்சனத்தை பிறகு நேரம் கிடைக்கையில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு வளர்மதிக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்கிறேன்.

T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி

நண்பர் டிபிசிடி ஒரு பதிவு போட்டுள்ளார் (http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html).

அப்பதிவில் சியர் லீடர்ஸ் நடனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிபிசிடி முக்கியமாக வைக்கும் பிரச்சனைகள் :

1. கால்பந்தைப் பின்பற்றி இதை இறக்குமதி செய்தது ஏனோ.?
2. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் உற்சாகமடைவார்களா.? அதற்கு நிர்வாணப் படத்திற்குப் போக மாட்டானா.?
3. சியர் லீடர்களைக் காட்டும் காட்சிக் கோணம் கீழிருந்து மேலாகப் படு கேவலமாக இருக்கிறது

சியர் லீடர்கள் வரவேண்டிய கட்டாயதைப் பார்க்க வேண்டும். அதற்கு கிரிக்கெட் விளையாட்டு மிகப் பெரிய வர்த்தகமாகியது ஏன், 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான பார்வையாளர்கள் குறைந்தது ஏன் போன்ற பல கேள்விகள் கேட்கப் பட்டாக வேண்டும் (டெஸ்ட் கிரிக்கெட்டே உண்மையான கிரிக்கெட்டாகவும் 50 ஓவர்கள் ஆட்டம் பொழுது போக்காவும் பல வீரர்களால் சொல்லப் பட்டிருக்கிறது. இப்போது அந்தப் பொழுது போக்கிற்கு ஆபத்து வந்து விட்டது).

உலகத்தில் மிகச் சில நாடுகளே விளையாடும் இவ்விளையாட்டிற்கு இந்திய மக்களிடம் ஆர்வம் உண்டாக்கப்பட்டதின் பின்னாலுள்ள வர்த்தகர்களின் அக்கறைகள் பேசப் பட்டாக வேண்டும்.!

ஒவ்வொரு ஓவர் நடுவிலும் விளம்பரம் காட்ட முடிவது தான் இதிலுள்ள கவர்ச்சி. அதனாலேயே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இவ்விளையாட்டை முன்னிறுத்துகின்றன. பல கோடிக் கணக்கில் செலவழித்து இவ்வாட்டத்தின் மீதான ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டமைத்தன. விளையாட்டில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வணிக நிறுவனங்களைன் அக்கறைகள் காப்பாற்றப் பட்டாக வேண்டும்.

பொதுவாக பெண்கள் மறைத்து வைத்திருக்கும் பாகங்களை வாயூரிஸ்டிக்காக upskirt view ஆகவோ அல்லது down blouse viewஆகவோ காட்டுவது கேவலமானது தான். ஆனால் இங்கு நடனமாடும் பெண்களுக்கும் இப்படிக் காட்டப் படுவது தெரியுமென்றே நினைக்கிறேன். பெண்களைச் சுரண்டுவதாக இதைப் பார்க்க முடியுமே தவிர ஒரு ஒழுக்குப் பிரச்சனையாகவோ அல்லது சமூக ஒழுங்காகவோ பார்க்க முடியாதென்று தோன்றுகிறது.

விளையாட்டும் சினிமாவும் இங்கு ஒன்று கூடுகிறது -- T20 எனும் விறுவிறுப்பான சினிமா மைதானத்தில் வீரர்கள் விளையாட அதற்கு நடிகர்கள் (உதா ஷாருக் கான், பிரிதீ ஜிந்தா, விஜய்) துணைப் பாத்திரங்களாக, சில சமயம் முதலாளிகளாக மாறுகின்றனர். இதன் மூலமாக அதிகப் பணம் புரளுவது சாத்தியமாகிறது.

கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி ஒரு மாலை நேர பொழுது போக்காக, வேலை முடித்து ஓய்வாக அமர்ந்து பார்ப்பதற்குத் தேவையான விறுவிறுப்பு கொண்டதாக மாற்றப் பட்டாகி விட்டது. இனி இன்னும் சுவாரசியம் குறையும் பட்சத்தில் டிபிசிடி சொன்னது போல் ஸ்டிரிப் டீஸ் அல்லது டாப்லெஸ் நடனங்களுடன் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.!

விளையாட்டை ஜெயித்தே ஆக வேண்டிய ஒன்றாக மாற்றப் பட்டதை, வணிக மயமானதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர இது போன்ற விஷயங்களை அல்ல.

வார்த்தை பூதம்

(மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்; தேவி பாரதி, காலம் பதிப்பகம், 29, ஜீவா தெரு, சிவகிரி 638 109. முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1996, 124 பக்கங்கள், விலை ரூ 25/-)

தேவி பாரதியின் இத்தொகுப்பு ஒரு கட்டுரையையும், ஒரு நாடகத்தையும், இரண்டு சிறுகதைகளையும் கொண்டது. பின் அட்டை பறை சாற்றுவது போல, தீர்ப்பு முக்கியச் சிறுகதை.

சமீப காலத்தில் ஃபேண்டஸி தளத்தில் கதை எழுதுபவர்களில் முக்கியமானவர்கள் என கோணங்கி, ஜெயமோகன், கௌதம சித்தார்த்தன் போன்றவர்களைச் சொல்லலாம். எதார்த்தத்தை முற்றாகத் தவிர்த்த உள் - மன மொழி கோணங்கியினுடையது. வாசிக்க சுவாரஸ்யமானவர்கள் ஜெயமோகனும் கௌதம சித்தார்த்தனும். இவர்களுடன் இப்போது தேவிபாரதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெளிப்பாட்டின் தீவிரத் தன்மையால் ‘தீர்ப்பு' முக்கியமாகிறது. மொக்கையான யதார்த்தத்தை இரு கதைகளும் புறக்கணிக்கின்றன. முதலில் ‘தீர்ப்பு'.

இறுக்கமான மொழியாலும் நெகிழ்ச்சியான உணர்ச்சிகளின் ஊடாகவும் கட்டப்பட்டிருக்கிறது தீர்ப்பு. பலவிதங்களில் காஃப்காவின் தீர்ப்பை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை. மிக லாவகமான மொழி நடையும் ஃபேண்டஸி தன்மையுமான கதைப் போக்கும் நல்ல வாசிப்பனுபத்தைத் தருகின்றன. மிஸ்டிக்-புதிர்த்தன்மை கதையின் கனத்தைக் கூட்டுகிறது.

"நாங்கள் சல்லாபித்திருந்த ரகசியமான இரவு நேரம் அது. அலறி கூச்சலிட்டான் சேது. பதறி எழுந்து அம்மணமாக ஓடி விளக்கைப் போட்டேன் நான். கடவுளே... என்ன கொடுமை.! சேதுவின் கழுத்தைப் பின்னி இறுக்கி உஷ்ஷென வன்மத்துடன் சீறிக் கொத்தத் தயாரானது பாம்பு... என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தது போல பிடியைத் தளர்த்திக் துவண்டது நாகம். சுதாகரதித்துத் துள்ளி உதறினான் சேது. சொத்தென என் காலடியில் விழுந்தது மதுவினுடைய ரப்பர் பாம்பு."

புனைவு தருக்கத்தை மீறி வார்த்தைகள் சீறிப் பாய்கின்றன. தனியறையில் அமர்ந்து இக்கதையை வாசிப்பவனை நாலாபுறத்திலிருந்தும் அவை சுற்றி வளைத்துத் தாக்குகின்றன. வார்த்தைகளின் தீவிரம் - சற்றே நீள் வாக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கதையின் முடிந்தவுடன் - வாசகனையும் தொற்றிக் கொள்கிறது.

இந்தக் கதையைக் கட்டுடைத்து, தாக்கலாம். சார்ந்தோ எதிர்த்தோ எல்லாக் கதைகளையும் விமர்சிக்கலாம் தானே. ஆயின், அது விமர்சனமல்ல. கழைக் கூத்தாட்டம்.

சிறுகதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த / இது போன்ற எழுத்துகள் உதவும் எனச் சொல்கின்ற நேரத்தில், ‘தாஸ் என்பவனும், தாஸ் என்பவும்' சிறுகதை ‘போலச்' செய்ய முயன்ற தோல்விக் கதை என்றே தோன்றுகிறது. புதிர்த் தன்மையும் தேவதைக் கதைப் பாணியும் கைகூடாத கதை. (அப்படிச் சரியாகக் கைகூடாத கதையைக் கூடத் தன் கவித்துவ நடையால் ஈடு செய்து விடுவார் கோணங்கி). வெற்று வார்த்தைக் கூட்டங்கள் தரும் ஆயாசத்தையே இந்தக் கதை ஏற்படுத்துகிறது. சொல்லப்படும் விஷயத்தின் கனம், வியாபரக் கதைகளையே தூக்கி நிறுத்தக் கூடும்.

சடார் சடாரென்று மாறும் காட்சிப் பிம்பங்கள், நடனம், திரும்பத் திரும்ப உபயோகிக்கப்படும் ஒலிகள், வார்த்தைகள் என இருக்கிறது ‘மூன்றாவது விலா எலும்பும், விழுதுகளற்ற ஆலமரமும்' நாடகம். இது பிரதானமாய் நடனத்தையும், உடல் அசைவு மற்றும் ஒலிகளை முதன்மைப் படுத்தும் காட்சி ரூப நாடகம். அதனாலேயே எழுத்துப் பிரதி திருப்தி தராத தோற்றம் ஏற்படுகிறது. நிகழ்த்துதலில் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும் என நம்புகிறேன்.

இத்தொகுப்பில் முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டியது ‘வாழ்வு சார்ந்த கலையும், கலை சார்ந்த வாழ்வும்' கட்டுரை. இது சேர்க்கப் பட்டதற்கான காரணம் விளங்கவேயில்லை. மிகக் குறைந்தபட்சம், இது கட்டுரையாகக் கூட இல்லை. இரண்டு மூன்று இடங்களில் முன் தயாரிப்பின்றி பேசப்பட்ட பேச்சுகளும், அதற்கான எதிர்வினைகளும், எதிர்வினைகளுக்கான பதில்களும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை தாண்டி, ஒரு வாசகன், திறந்த மனத்துடன் மற்ற படைப்புகளை அணுகுவதைச் சாத்தியமற்றதாக்குகிறது, இது ரிப்போர்ட் செய்யப் பட்டிருக்கும் விதம்.

இப்புத்தகம் முக்கியமானது. ‘பலி' சிறுகதைத் தொகுதியின் மூலம் அறிமுகமான தேவிபாரதி தற்கால எழுத்தாள இளைஞர்களில் வலிமையுள்ள ஒருவராக வெளிவருகிறார். பலவித சலனங்களையும், சர்ச்சைகளையும், பாதிப்புகளையும் எற்படுத்த வல்லது இவரது எழுத்து. இதை அவர் தன் வரையில் நேர்மையாக வெளிப்படுத்துகிறார். இதுவே பெரிய விஷயம்தானே.

(குறிப்பு : இந்தப் புத்தக விமர்சனம் கவிதா சரண் ஃபிப்ரவரி 1998 இதழில் வெளியானது. இதில் நான் முன் வைத்திருக்கும் சில கருத்துகளோடு இப்போது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்)

திலீப் குமார் - வித்தியாசமான கதைசொல்லி

1975லிருந்து எழுதி வருபவர் திலீப் குமார். பரவலாக அதிகம் அறியப் படாதவர். மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும் தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு முக்கிய இடம் அவருக்குண்டு. இவரின் தாய் மொழி குஜாராத்தி என்றாலும் எழுதுவது தமிழில். சென்னை மயிலாப்பூரில் புத்தகக் கடை நடத்திக் கொண்டிருந்தார் (இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை). அவர் எழுத்துக்களை அறிமுகப் படுத்துவதே இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம்.

திலீப் குமாரின் புத்தகங்கள் :

1. மூங்கில் குருத்து
2. கடவு (மேலே உள்ள தொகுப்பிலிருந்து சில கதைகளும் + சில கதைகளும் கொண்டது)
3. மௌனியுடன் கொஞ்ச தூரம் (வானதி பதிப்பகம்)
4. 'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)

முதலிரண்டும் க்ரியா வெளியீடு.

தினமணியில் எழுதியிருந்தாலும் பெரும்பாலும் மீட்சி, காலச்சுவடு, 1/4 போன்ற சிறுபத்திரிகைகளே அவரின் வெளியீட்டுக் களனாயிருந்துள்ளது.
குறைவாகவே எழுதியிருந்தாலும் விதம் விதமான கதைகளை எழுதிப் பார்த்தவர் திலீப்குமார்.

'அக்ரகாரத்தில் பூனை' கதை சுவாரஸ்ய நடை கொண்டது. பப்லிப் பாட்டி கோயில் பூஜை என இருப்பவள். புஷ்டி மார்க்கத்தின் authority. பூஜைக்கு வைத்திருக்கும் பாலைக் குடிப்பது போன்ற தொல்லைகளைச் செய்யும் பூனையை விரட்டச் சொல்லி தன் மகன் நட்டூவை ஆணையிடுவாள். அவன் சூரியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பான் ('போயும் போயும் அந்தத் துஷ்டப் பயலிடமா, அவன் பூனையைக் கொன்றாலும் கொன்று விடுவான்' என்பாள் பாட்டி). பத்து நாட்களில் அவன் பூனையுடன் வருவான்; அது அவனிடம் குழையும். கொண்டு போய் விடுவதற்கு முன் அவளிடம் காட்ட எடுத்து வந்திருப்பான். பாட்டி அவனிடம் பூனையை தன்னிடம் எடுப்பாகக் காட்டச் சொல்வாள். தன் கையில் மறைத்து வைத்திருந்த மூக்குப் பொடியை அதன் மூக்கில் திடீரென்று தேய்த்து விடுவாள். பொறி கலங்க அலறி அடித்துக் கொண்டு ஓடும் பூனை. எல்லோரையும் வைது விட்டு பூனையைத் தேடிப் போவான் சூரி. அன்று மாலை பாட்டியைப் பார்க்க வந்தவர்களிடம் பாட்டி ஆரம்பிப்பாள்: 'புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்...'

இப்படி எளிதாக கதைச் சுருக்கம் சொல்ல முடிகிற 'அக்கிரகாரத்தில் பூனை', 'கடவு', கதையம்சமே அற்ற 'நிகழ மறுத்த அற்புதம்', எதார்த்த பாணியிலான 'கண்ணாடி', 'கடிதம்', குடும்பத்திற்கு வெளியேயான உடலுறவைச் சொல்லும் 'கானல்' வன்முறையின் வீச்சைச் சொல்லும் 'தடம்'.

'ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக் காரரும்' கதையில் வரும் பாத்திரம் ஜி.நாகராஜனை நினைவு படுத்துவதாலேயே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இவர் கதையில் பெரும்பாலும் கதைமாந்தர்கள் குஜராத்திகள்; நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கதைக் களன் சென்னையில் உள்ள அதிகமும் குஜராத்திகள் வாழும் தங்கசாலை (மிண்ட்). ஆயினும் ஒவ்வொரு கதையும் வேவ்வேறு தொனியில் இருக்கும்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவரைப் படித்தவர்கள் பின்னூட்டமிட்டால் மகிழ்வேன்.

கற்றது தமிழின் வன்முறை அரசியல்

(1. இந்தக் குறிப்புகளை எழுதிவிட்டு, பிறகு சில பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறேன். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்து முடிக்கலாம் அல்லது நிறுத்தலாம். 2. இப்படம் முன்வைக்கும் காட்சிப் பிம்பங்களின் வன்முறை வேறொரு சமயம் மடக்கிப் பிடிக்க வேண்டும்).
காற்றின் கிளையேறி
திகுதிகுவென பரவின
எரியும் பிரச்சனைகள்
நாடி ஒடுங்கிற்று
வார்த்தை பூதம்
(தேவதச்சன்)
இந்தப் படத்தில் பிரதானமாய் இரண்டு விஷயங்கள் இருப்பதாய் அவதானிக்கப் படுகிறது. ஒன்று கவித்துவம் மற்றது வன்முறை. எப்படிக் கவித்துமான வசனங்கள் வன்முறைக்கு உதவுகின்றன என்பதைப் பார்ப்போம்.

படம் ஆரம்பிக்கும்போது மேட்டுக்குடி நடனத்தில் கேட்கும் 'தா தித்தோம் தா' என்பது திரும்பத் திரும்ப வருகிறது.


பிரச்சனைகளை ஒற்றைப் பரிமாணமாக ஆக்க முயற்சிக்கிறது பிரதி. உதா :
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் எப்படி உயிர் வாழ முடியும்.?'
'தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் சாவதற்கு காரணமா பஞ்சம்.?'

கதாநாயகன் பெயர் பிரபாகர் (கவனிக்கவும் பிரபாகரன் இல்லை) - பெயர் பற்றி வரும் வசனங்கள் :

'பெயரே வில்லங்கமா இருக்கே'
'எனக்குத் தெரிஞ்சு ஒரு பிரபாகர் தான்; அவர் லங்காவில இருக்கார்'

(நாயகனின் பெயர் பிரபாகராய் இருப்பதால் விடுதலைப் புலிகளின் தலைவர் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இங்கு.!).

பிரபாகர் சிவனாகிவிடுகிறான். அதனால் யார் வாழலாம் யார் சாகலாம் என முடிவெடுக்கும் 'அதிகாரம்' அவனுக்கு வருகிறது (அந்நியனில் கருட புராணம் இதில் சிவன்).

அவன் செய்யும் சில கொலைகள் :

1. ரயில் பயணச் சீட்டு கொடுப்பவர். ஐந்து ரூபாய் மாற்றி எடுத்து வரச் சொல்வார்.
2. ரயிலில் RPF (போலிருக்கும்) ஒருவர். அவர் தூங்கிகொண்டிருக்கும் ஒருவரின் பையிலிருந்து பணம் எடுத்து விட்டு பிரபாகரிடம் வந்து பணம் கேட்பார்.
3. வைரம் பிடித்துப் போக பணம் இல்லாததால் வைர வியாபாரியைக் கொலை செய்வான் (இது பாடல் வரிகளில் வருவது)
4. 26 வயதாகியும் ஒரு பெண்ணும் கிடைக்காததால் கடற்கரையில் உள்ள காதல் ஜோடிகள்.
5. முதலில் இவனைத் துன்புறுத்திய போலீஸ் அதிகாரி (பழிக்குப் பழி.!).

கொலைகளை புணர்ச்சி இன்பத்துடன் இணைப்பது; அதை கவிதை வரிகளாகச் சொல்வதன் மூலம் திரும்பத் திரும்ப பிரதியின் ஆசிரியர் வன்முறையை கவித்துவத்துவத்தின் மூலம் நியாயப் படுத்த முயற்சித்திருப்பார்.

தந்தையை மறத்தல் : அப்பா தட்டாமாலை சுற்றுவது பிடிகாது என வசனம் வரும். அதையே தமிழ் ஆசிரியர் செய்யும்போது அந்தக் குரல் மவுனமாகிவிடும். இங்கு தந்தையை மறப்பதின் மூலமே (தன் வரலாற்றை அழிப்பதன் மூலமே) ஆசிரியர் பட்டையாக விபூதிப் பூச்சுடனும் பிரபாகர் விபூதிக் கீற்றுடனும் வரமுடிகிறது...

தமிழ் உயர் வகுப்பில் சேரும் காட்சி மிக மோசமான அரசியலை முன் வைக்கிறது. மாணவனொருவன் பேர் ஸார்ஜ் என, ஆசிரியர் திருத்துவார் ஜார்ஜ் என்று. வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எல்லோரும் கறுப்பு நிறத்திலிருக்க (அவர்கள் சரியாகப் படிக்காதவர்கள், கடன் கிடைக்குமென்பதால் படிக்க வந்தவர்கள்) பிரபாகர் சிகப்பாக இருக்கிறான். அதனாலேயே அவன் அதிக மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டிய கட்டாயமேற்படுகிறது பிரதிக்கு.

பிரபாகர் படம் முழுவதும் designer shirt, pant, உயர்தர shoe, மினரல் வாட்டர் சகிதமாகவே வருகிறான்.

அறையில் படுத்திருக்கையில் ஷு போட்டிருப்பவன் உறங்கி எழுந்து நண்பனின் அலுவலகத்திற்குச் செல்லும்போது செருப்பு போட்டிருப்பது உதவி இயக்குனர் கோட்டை விட்டதால் அல்ல; அப்போதுதானே நாயகனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசத்தைப் பெரிதுபடுத்திக் 'காண்பிக்க' முடியும்.?

தமிழ் படித்திருந்தாலும் நாயகன் அழகான் ஆங்கிலம் பேசத் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் அவனது நண்பனுக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியாது எனக் காட்டும்போது ஏற்படுகிறது.

ஒரு பெண்ணின் டீ சட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்து (touch me if you can), அவள் மார்பகங்களைத் தொடுகிறான். மற்ற குற்றங்கள் செய்கையில் கலங்காத நாயகன் இந்தச் செய்கைக்கு வருந்தி கைகளில் சூடு வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு politically correct stand எடுப்பது ஏனோ.?

குடித்து விட்டு போதையில் ஒரு வாகனம் சேறடித்துவிட்டுப் போக அடுத்த வண்டியின் கண்ணாடியை உடைப்பான் நாயகன். ஒட்டி வந்தவனை அடிப்பான் (முதலில் போலீஸ் செய்வதையே இந்த இடத்தில் நாயகன் செய்கிறான்).