நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்

தலைப்பில் உள்ள புத்தகத்தை எழுதியிருப்பவர் ஜமாலன். புலம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இடம் : தேவநேயப் பாவாணர் சிற்றரங்கம், அண்ணா சாலை, சென்னை.

கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் :

தமிழவன்
ராஜன்குறை
பிரேம்
எஸ் சண்முகம்
கடற்கரய்
அ கா ஜான்

புத்தகம் அரங்கில் கிடைக்கும். விலை ரூ 300/-.

நேரமிருப்பவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

என்ன கொடுமை இது?

இன்று எங்கள் வீட்டிற்கு வந்த தமிழ் தினசரியொன்றின் உள்ளே சொருகப்பட்டிருந்த கலர் பிட் நோட்டிசில் இருக்கும் வாசகங்களைக் கீழே தந்திருக்கிறேன் :

வணக்கம்,

நான் விஜய் டீவி உங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் (குட்டி) ஸ்ரீகாந்த். என்னுடைய சூப்பர் சிங்கர் ஜூனியர் வெற்றி உங்களுடைய vote-ல் தான் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச்வங்களையும் உங்க நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, அக்கா, மாமா, மாமி, எல்லோரிடமும் சொல்லி என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து ஜூனியர்2 டைட்டிலை win பண்ணி கொடுங்க. Please.

குறிப்பு : ஒருவர் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் போடலாம்

வாக்கு போட : ஜுன் 7ம் தேதி இரவு 10.30 மணி முதல்
நாளும் நேரமும் : ஜூன் 17ம் தேதி இரவு 9.30 மணி வரை
SMS எண் : SSJ 20
அனுப்பும் எண் : 57827
Email : www.vijay.indya.com

அன்புள்ள உங்கள்
செல்ல ஸ்ரீகாந்த்

நோட்டிசின் இன்னொரு பக்கத்தில் இதனுடைய ஆங்கில வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கூடவே கூழைக் கும்பிடு + நெஞ்சின் குறுக்காக இரண்டு கைகளையும் வைத்து வாக்குகளுக்காக இறைஞ்சும் சிறுவனின் புகைப்படம். இம்மாதிரி அந்தந்த ஊர்களில் தனிசரிகளில் வைத்து இம்மாதிரியான நோட்டிஸ்களை வினியோகிப்பதாக அறிகிறேன்.

நான் தொலைக்காட்சி பார்ப்பது எப்போதாவதுதான். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது இல்லை. இது பற்றி அதிஷா எழுதிய ஒரு கதையை வாசித்தபின் விசாரித்தபோது இன்னும் கேவலமான விஷயங்கள் நடப்பதாகச் சொன்னார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே? வணிக முதலாளிகளின் பண வெறிக்கு இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.

சில விளக்கங்கள்

இப்போது இணையத்தில் தொடர்ந்து இயங்க முடியாது ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன். இது நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும். அதனாலேயே ஒன்றும் எழுதத் தோன்றவில்லை.

வினவு பதிவைப் படித்தேன். பின்னர் அதை பைத்தியக்காரன்தான் எழுதியது எனத் தெரிந்ததும் மனம் நொந்து போனேன். ஒரு நாள் முழுவதும் யோசித்துவிட்டு நேற்று காலை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவருடைய சமீபத்திய வழக்கப்படி அந்தத் தனிப்பட்ட கடிதத்தை / அல்லது அதன் contentஐயும் வினவுக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வளவு நாள் பழகிய நண்பன் தனிப்பட்ட முறையில் ஒன்றை எழுதினால் அதை எப்படி அடுத்தவர்களுக்குக் கொடுக்க முடிகிறது எனத் தெரியவில்லை. இப்போது அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். அது ஒன்றும் மிகப் பெரிய ரகசிய ஆவணமல்ல என்பதால், நானே அதைக் கீழே கொடுத்துவிடுகிறேன் :

அன்புள்ள பைத்தியக்காரன்,

நீங்கள் நர்சிம்மிற்குச் செய்திருப்பது பச்சை துரோகம். சமீபத்தில் கிடைத்த பெண் நட்புக்காக இரு வருடங்களாகப் பழகிய ஆண் நட்பைக் கொல்கிறீர்கள். அரசியல் ரீதியாகவும், தகவல் ரீதியாகவும், இரட்டை வேடம் குறித்தும் கேள்வி கேட்க நிறைய இருக்கிறது உங்களுடைய அந்த வினவு பதிவிலும் உங்கள் தளத்தில் வெளியான பதிவிலும்.

என்னுடைய தற்போதைய சூழ்நிலை காரணமாக என்னால் விரிவாக எழுத இயலவில்லை. நீங்கள் இப்போது என்னைப் பற்றி எழுதவில்லை என்றாலும், நாளை உங்களுடைய வேறு ஏதாவது பெண் நண்பர்களுடன் எனக்குப் பிணக்கு வந்தால் நீங்கள் அதை எனக்கும் செய்யலாம் என்று பயமாயிருக்கிறது.

நம்முடைய நட்பை முறித்துக் கொள்வதுதான் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. இதுவரை என்னுடன் நட்புடன் பழகியதற்கு நன்றி.

--
அன்புடன்,

ஜ்யோவ்ராம் சுந்தர்

அவர் தன்னுடைய இரட்டை வேடம் குறித்து எதுவும் பதில் சொல்லவில்லை. அதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கும் மனநிலையில் நானில்லை. என்னுடைய தளத்தில் வெளியான சுகுணா பதிவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் வினவில் எழுதக்கூடாது என்பதில்லை, ஆனால் பைத்தியக்காரன் பதிவில் ஒருவிதமாகவும் மற்ற பெயரில் வேறு விதமாகவும் எழுதுவதைத்தான் இரட்டை வேடம் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றிக்கூட இப்போது விவாதிக்கும் நிலையில் நானில்லை.

இவரே பண விஷயம் குறித்து எழுதிவிட்டதால் அது பற்றி மட்டும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. திங்கட் கிழமை வினவு பதிவு வெளியான அன்று இரவு இவர் தன்னுடைய தளத்தில் நர்சிம் பண விவகாரம் குறித்து எழுதுகிறார். அதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது (ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை). வினவு பதிவில், பணத்தைத் தின்று, பணத்தை மலங்கழித்து, பணத்தில் குளிக்கும் நர்சிம் என்ற வரிகளைப் படிக்கையில் துணுக்குற்றேன். இவருடைய பணத்தேவையின் போது நர்சிம் எப்படிக் கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டிக் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும். அப்படிப் பெற்ற உதவியைக்கூட இப்படியெல்லாம் வன்மம் தெறிக்க எப்படி எழுத முடியும்?

அவரது பதிவில் உள்ள வேறு சில விஷயங்களும்கூட என்னை அதிர்ச்சி அடைய வைத்தன (அதில் ஒன்று நான் சாதி காரணமாகத்தான் நர்சிம்முடன் பழகினேன் என்பது மாதிரி ஒரு வரி - நர்சிம் முதலில் என்னுடன் பழக ஆரம்பித்தபோது அவர் என்ன சாதி என்றே எனக்குத் தெரியாது - அவர் ஒரு முறை மெயில் அனுப்பும்போது அதில் உள்ள நரசிம்மன் என்ற பெயரை வைத்து ஒரு மாதிரி யூகித்தேன், அவ்வளவுதான்). அந்த ஒரு வருட வரலாறுகூடப் பக்கச் சார்பானதுதான். ஆனால் சம்பந்தப்பட்ட யாராவது விரும்பினால் பதில் எழுதிக் கொள்ளட்டும். போன வருட தீபா விஷயத்தைப் பற்றியும் எழுதியிருப்பதுதான் வேடிக்கை. ஏனெனில், பைத்தியக்காரனும் தீபாவைக் கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தார் அப்போது. சரி, இதையும் இரட்டை வேடம் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

நானும் நர்சிம்மும் நெருங்கிய நண்பர்களில்லை. யாராவது குடி வாங்கிக் கொடுத்தார் என்று எழுதிவிடுவார்களோ என பயமாயிருக்கிறது. ஒரே ஒரு முறை - அதுவும் போன வருடம் ஜனவரி மாதத்தில் - அவருடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் மது அருந்தியிருக்கிறேன். அப்போது பைத்தியக்காரனும் உடனிருந்தார். நர்சிம்மைப் பதிவர் சந்திப்புகளில் மட்டுமே சந்தித்திருக்கிறேன். ஒரே ஒரு முறை நான் மருத்துவமனையில் இருந்தபோது பைத்தியக்காரனுடன் தன்னுடைய புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். வேறு தனிச்சந்திப்புகள் இருந்ததில்லை.

பைத்தியக்காரனின் நேற்றைய பதிவில் என்னைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்ததைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னுடைய கடிதத்தை அல்லது அதனுடைய கண்டெண்ட்களை வினவுக்கு கொடுப்பது என்ன மாதிரியான காரியம் என்று தெரியவில்லை.

அவருடைய கடவுச்சொல் என்னிடம் கொடுத்திருப்பதாக ஏற்கனவே எழுதியிருக்கிறார். நான் தான் அதை சுகுணாவுக்குக் கொடுத்தேன் என்று சூசகமாகச் சொல்கிறார். வினவிலும் அதே மாதிரி எழுதியிருக்கிறார்கள். மற்றவர்களும் அதை நம்பலாம். அதற்காக இந்த விளக்கம் : அவருடைய கடவுச் சொல்லை எனக்கு மட்டும் தெரிந்தே பைத்தியக்காரன் நான்கைந்து வலைப்பதிவர்களிடம் கொடுத்திருக்கிறார். என் நெஞ்சில் கைவைத்துச் சொல்ல முடியும் அதை நான் செய்யவில்லை என்று.

எனக்கு நர்சிம்மைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ஒன்றுமில்லை. அவரது அந்தப் பதிவைப் படித்த உடனே பைத்தியக்காரனிடம் தொலைபேசியில் நர்சிம்மின் நுண்ணுர்வற்ற தன்மையையும் ஆண் திமிரைப் பற்றியும் 5 நிமிடம் பேசிவிட்டே, பிறகு, ’நேற்றே சொன்னேனே ஏதாவது பிரச்சனை வரும்னு, பாத்தீங்களா, ஏன் அந்தம்மா இப்படிச் செஞ்சாங்க’ என்றும் கேட்டேன். அது என்னுடைய உடனடி எதிர்வினை. ஆனால் யோசித்த பிறகு என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே செய்தேன். மதியம் சந்தித்தபோதும் நர்சிம்மை விமர்சித்தே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சந்தன முல்லை பற்றிப் பேச நேர்ந்த எப்போதும் அவரை அவள் இவள் என்று குறிப்பிட்டதில்லை. ஏன், எந்தப் பெண் பதிவரையும் தனிப்பட்ட பேச்சுகளின்போதுகூட ஒருமையில் யாரைப் பற்றியும் பேசியதில்லை. அதனால் அவரது பதிவில் உள்ள /நர்சிம்முக்கும் எனக்கும் நெருக்கமான நண்பரிடம், நர்சிம்மின் இந்த செய்கையை கண்டித்தபோது, 'அவளுக்கு இது வேணும்...' என்றார்./ என்ற வரி என்னைக் குறித்ததாக இருக்காது என நம்புகிறேன். இது குறித்து சிலர் என்னிடம் தொலைபேசியில் விசாரித்ததால் இந்த விளக்கம். சந்தேகமே இல்லாமல் நர்சிம் செய்தது ஆண் திமிரிலும் பார்ப்பனத் திமிரிலும்தான் என்பதுதான் என்னுடைய தற்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவரைக் கழுவிலேற்ற வேண்டும் போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்னிடம் இல்லை.

நானும் பைத்தியக்காரனும் நெருங்கிப் பழகியவர்கள். மற்ற எல்லா வலைப்பதிவர்களையும்விட அவரைத்தான் அதிகமாக நேசித்தேன். ஒருவேளை அதனாலேயேகூட என்னுடைய அதிர்ச்சி அதிகமாயிருந்திருக்கலாம் என்றும் புரிகிறது. யாருடனும் சண்டை போட்டுப் பிரிவது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எனக்குப் பயமாயிருந்ததால் நட்பை முறித்துக் கொண்டேன். அவ்வளவுதான். விளக்கம் சொல்லத் தோன்றியதால் இந்தப் பதிவு. பின்னூட்டங்கள் பைத்தியக்காரனுக்கு என்மீதும் வன்மத்தைத் தூண்டுவதாக அமையலாம். அதனால் அம்மாதிரியான பின்னூட்டங்கள் வேண்டாமே. நேரம் கிடைத்தால் மட்டுமே பதில் எழுத முடியும் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.