Showing posts with label குமார்ஜி. Show all posts
Showing posts with label குமார்ஜி. Show all posts

ஒரு மனதாக

நானொரு மனநோயாளி
விழித்திருக்கும் நேரமெல்லாம்
சலித்திருப்பேன்.
கோவில் கல்வெட்டு
பள்ளி சத்துணவு
திருமண வீடு, ஐயர் குடுமி
சமையல்காரர் வியர்வை
பேருந்து, எரியாத விளக்கு
கிழிந்த கைப்பை நடத்துனர்
மரண வீடு, மருத்துவமனை
சவக்கிடங்கு
சவரக்கத்தி, நிலைத்த பார்வை
நூலகம், மௌனி, காஃப்கா
பிரமிள், பிரளயம்
மனம் நோய்
நோயாள், நோயால்
யாழி, ஆழி
மனம் நோயாய்
நான்
ஒரு மன
நோயாளி

குமார்ஜி எழுதியது

அஸ்தமன வாசலில்

எதையும் இசைக்காத போதும்
உன்னிலிருந்து பீரிடுகிறது
உன்மத்தமான இசையின்
உயிர் ஒலி.
எல்லையில்லா வெளிகளில்
எரிந்து கொண்டிருக்கிறது
வெளிப்படுத்திய விசேடங்கள்.
சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்
தன் கை தேடி
சீழ்பிடித்த உடலுடன்
ஒரு சமூக அவலர்.
சட்டங்களெல்லாம் அறையப்பட்டுவிட்டன
மரச்சட்டங்களில்.
நலத்திட்டங்களுக்காக
நகராத வரிசைகளில்
நாட்கணக்கில்...
ஆனாலும்
மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு.

குமார்ஜி எழுதியது

தெரியாதது

யாரும் சொல்லித்தரவில்லை
தூத்துக்குடி துர்க்காவின்
துரோகம் இப்படித்தான்
இருக்குமென்று
இறந்து போன மாமாவின்
இரண்டாவது அத்தை
கட்டித் தொங்கவிடப்பட்டது
இன்றுவரை யாரும்
வாய்திறக்கவில்லை
பெரிய தம்பியின் சின்ன வீட்டு
விஷயம் பெற்றோருக்கே தெரியாது
வழக்கின் தீர்ப்பு
வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என
வக்கீலுக்கு முன்னரே
எனக்குத் தெரிந்தது
கங்கை கொண்டான் பேருந்தின்
கடைசி இருக்கையில்
வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை
எச்சரித்தார் எவருமில்லை
நான் உட்காரும்வரை
எவரும் குறிப்பிடவில்லை
இசக்கியம்மன் சாமியாடி
வேண்டியவருக்கு மட்டும்தான்
குறிசொல்வாள் என்பதை
சபை நடுவே சப்தமில்லாக்
குசு போடும் நாசூக்கு
நவின்றார் எவர்
எனினும்
அசைபோட பசுவய்யா கவிதை
என்றிருந்தவனை
எல்லோரும் சொன்னார்கள்
இவன் எங்கே
உருப்படப் போறான் என்று

குமார்ஜி எழுதியது

மயிரின் மாண்பு

மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்
என்னைத் திட்டும் சாக்கில்
ஏன் மயிரை இழிவு படுத்தினீர்
பயிர் வளர்ப்பதைவிடவும்
அதிக அக்கறையுடன்தானே
மயிர் வளர்க்கிறீர்
ஏழுவித எண்ணை
எட்டுவித ஜெல்
பதிமூன்று வித ஷாம்பு
இருபது வகை சீப்புகள்
என மயிர் வளர்த்துவிட்டு
ஏன் மண்டை காய்கிறீர்
மொட்டை தலையிலும்
முடி பயிரிடும்
சிகிச்சை முறை தேடித்தானே
சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்
என் கவிதையைத் திட்டுங்கள்
காரி உமிழுங்கள்
இயன்றால்
எதிர்கவிதை எழுதுங்கள்
இல்லையேல்
வலையை மூடிவிட்டு
கொசுவலை போர்த்திப் படுங்கள்
ஏழு மலையான் வருமானத்தில்
ஏழு சதவீதம்
மயிரென்று அறிவீரோ
மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்

‘தலைஇப்பு நீண்ட’ என்ற கவிதையை அனானி நண்பரொருவர் ’மயிரு’ என்று திட்டியதற்கு குமார்ஜியின் எதிர்வினை :)

ஆடிச்சாமிகள் அல்லது கொடைகாலம்

வாடிக்கிடந்த சாமிகளுக்கு
ஆடிக்காலம் கொண்டாட்டம்
சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் பூஜைக்குத் தயாராவர்
கூரையில்லாக் கூத்தனுக்கும்
குறைவில்லாப் படையலுண்டு
கொட்டு மேளம் குறவை
நையாண்டி கணியன் வில்லுப்பாட்டு
கும்பம் குமரி குட்டைப் பாவாடை
செவியடைக்கும் டென்ஷனில்
செல்லப்ப வாத்தியார் இடுப்புக் கச்சுடன்
வாங்கிய காசுக்கு
வராத சாமிக்காக
வயிறு எக்கி வாசிப்பான்
வட்டக் கோட்டை நாதஸ்வரம்
சுடலையை கடைசிவரை
தாமிரபரணி தாண்டாமல்
பார்த்துக் கொள்வாள்
சுசீந்திரம் வில்லுக்காரி
காது பொத்திப் பாடும்
கணியான் பாட்டு காற்றில்
வார்த்தைகளற்று கரையும்
கடன்காரன் எதிர் வரா
தைரியத்தில்
மயான வேட்டைக்குச் செல்லும்
மாசானத்திற்கு
மத்திய அமைச்சரின் மிடுக்கு
அறுப்பவன் கத்தியையே
பார்த்துக் கொண்டு ஓசைக்கு
அஞ்சிக்கிடக்கும்
உருண்டு திரண்ட கிடாக்கள்
இறுதியில் கிடைக்கும் கிடாக்கறி
ஊர்ப் பெரிய கிடாக்களுக்கு மட்டும்
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எப்போ அடுத்த ஆடி
என்றிருப்பான்
எல்லைச் சாமி

குமார்ஜி எழுதியது

தலைஇப்பு நீண்ட...

அம்மா அப்பா ஆட்டு உரல்
ஆரம்பக் கல்வி இடைநிலைக் கல்வி
தொலைதூரக் கல்வி
நிற்றல் நகர்தல் நகர்த்துதல்
வாசிப்பு கருத்தரங்கம்
கருத்தில்லா அரங்கம்
இட்லி சாம்பார் நாண்
சரவணபவன் சாலையோரக்கடை
சுந்தர் சுந்தர ராமசாமி
பிரபாகர் கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை
வேலை வேலை இல்லாமை
இல்லாமை
பணம் பதவி தேர்தல்
இடை இடைத் தேர்தல்
கலவி கல்யாணம்
குமுதம் குழந்தை குற்றம்
பீர் பிராந்தி விஸ்கி
காக்டெயில் கூட்டணி
தனிமை தவம் தவிப்பு
தற்பெருமை நொடி நோய்
மாத்திரை லவங்கம் கற்பூரம்
தாமிரபரணி காவேரி காவிரி
தலைவிரிந்து நடந்தாய்
வாழவில்லை சக்தி
வைத்தியம் ஜானகி ராமன்
நகுலன் மௌனி அபி
தர்மு சிவராமு லாசரா
அம்மா அப்பா நான்
நீ பைத்தியம்
தவிர்க்க முடியவில்லை
அச்சமும் கவிதையும்
மிச்சம் ஒன்றுமில்லை
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
எப்படியும் இரு சாமி
சாமிகள் சாத்தான்கள்
ஒன்றுமே இல்லாதவன்
எங்கேயும் இல்லை

நண்பர் குமார்ஜி சமீபத்தில் எழுதியது. இத்தனைகாலம் எழுதாமல் இருந்தது குறித்து :

பொழுது போகாமல்
எழுதத் துவங்கினேன்
இப்
பொழுது போதாமல்
எழுதாமலிருக்கிறேன்
இடைப்பட்ட காலத்தில்
அவிந்து
போகாமலிருக்கிறது
ஆரம்ப காலத்தின்
அடி ஊற்று

இன்னொரு தலைப்பில்லாத கவிதை :

இடக்கையில் தூக்கு
வலக்கையில் வாளி
வரப்புச் சேற்றில்
கால்கள் புதைய
அப்பாவுக்குச் சோறு
வார் அறுந்த
நிக்கரின் சொறுகல்
அவிழ்ந்து கொண்டிருக்கும்
அடிக்கு அடி

தெரிந்தது

நாயன்மார் கதைகளும் தசரத சோகமும்
ஆச்சி சொன்னது
ஆற்று மணல் பரப்பி
விரல்களில் ரத்தம் கசிய
அம்மா சொன்னது
உயிர் எழுத்தின் சுழிவுகள்
கல் சிலேட்டை விடவும்
தகர சிலேட்டின் உழைப்பு
அப்பா சொன்னது
கடிதம் எழுதக் கற்றுத் தந்தது
கல்யாண்ஜியும் மாதவனும்
மோகமுள், பொய்த்தேவு
முதல் சரோஜாதேவி ரமணி சந்திரன்
வரை நண்பர்கள்
இன்னும் இருக்கிறது
இவள் வந்து சொன்ன
இலக்கணமில்லா இரவுகள்
நானாய்த் தெரிந்தது என்ன
காலையில் காபி நுரையில் கண்விழிப்பதும்
விளம்பரம் பார்த்து ஷேவிங் க்ரீம் மாற்றுவதும்
தவிர

(நண்பர் குமார்ஜி 1990களின் ஆரம்பத்தில் எழுதியது. நண்பர் மறுபடியும் எழுதத் துவங்கியிருக்கிறார்!)