உங்களுக்கு நடந்த கதை

இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே
- விக்ரமாதித்யன் -

இன்றைக்குச் சனிக் கிழமை. நீங்கள் மதுவருந்தும் நாள்.

இது உங்களுக்கு நடந்த விஷயம் என்பதால் உங்கள் பார்வையிலேயே எழுதுகிறேன். வசதிக்கென ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன் : இந்தக் கதையில் அடைப்புக் குறிக்குள் () வருவது உங்கள் மனம் நினைப்பது.

கதையைத் துவங்குமுன், உங்களைப் பற்றிய சில குறிப்புகள் :வயது 26. பெயர் அவ்வளவு முக்கியமில்லை; உயரம் 5'8”. சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறீர்கள். இரண்டு முறை காதலித்து, தோற்றிருக்கிறீர்கள். தற்சமயம் காதலி இல்லை; அது பற்றி சிறு வருத்தமுண்டு. நிற்க. இந்தக் கதை உங்கள் காதலைப் பற்றியதல்ல.

வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் அருகிலுள்ள sea farers club பாருக்குச் சென்று தனியாக அமர்ந்து யோசித்தபடி மதுவைப் பருகுவது உங்களுக்குப் பிடித்தமானது. நான்கு அல்லது ஐந்து பெக்குகள் ஓல்ட் மாங்க் ரம், கலந்து கொள்ள பெப்ஸி அல்லது கோகோ கோலா. தொட்டுக் கொள்ள அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் மிக்சர், சுண்டல், வெள்ளரிப் பிஞ்சு வகையறா.

இன்றைக்கு அலுவலகத்தில் அதிக வேலை; உடனடியாய் அனுப்பியாக வேண்டிய manifest, மற்றும், தலைமயக மாத இறுதி ரிப்போர்ட்களால் தாமதமாகிறது. முடித்து விட்டுக் கிளம்பும் போது மணி மதியம் 3.

20 நிமிடங்கள் நடக்க சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு, ஆட்டோ பிடிக்கிறீர்கள் (20 ரூபாய் தண்டம்). மொத்தமே நான்கு பேர்களே இருந்தார்கள் பாரில். வெற்றி சப்ளை செய்யும் மேசை காலியாக இருக்க அங்கு அமர்கிறீர்கள். அலைபேசி, சிகரெட் பாக்கெட் மற்றும் தீப்பெட்டியை மேசை மேல் வைத்து, கால் நீட்டி அமர்ந்து மூச்சை இழுத்து விடுகிறீர்கள். ரம்மிற்கு உங்கள் தொண்டை பரபரக்கிறது.

வெற்றி சிரித்தபடி வழமையாக நீங்கள் சாப்பிடுபவற்றை உங்கள் மேசையில் வைக்கிறான். கலந்து ஒரு மிடறு விழுங்குகிறீர்கள். தொண்டையில் இறங்குகையில் ஏற்படும் லேசான எரிச்சலில் கண்களை மூடிக் கொள்கிறீர்கள். வெள்ளரிப் பிஞ்சொன்றை எடுத்துக் கடிக்கிறீர்கள்.

நீங்கள் இரண்டாவது ரவுண்டில் இருக்கும் போது பாருக்குள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க கனவான் ஒருவர் நுழைகிறார். வரும் போதே போதையில் தள்ளாடியபடி வருகிறார். (கடவுளே என் மேசையில் அமர்ந்து விடக் கூடாதே). உயர்தர வெள்ளை வேட்டி, சட்டையில் கையில் தங்க வாட்ச், கழுத்தில் செயின் சகிதம் உங்கள் எதிரில் அமர்கிறார். அமரும் போது, மேசை ஆடுகிறது. நீங்கள் நிமிர்ந்து அவரை அசூயையுடன் பார்க்கிறீர்கள். முணகலாக மன்னிப்பு கேட்கிறார்.

(எழுந்து வேறு மேஜைக்குப் போயிடலாமா... முகத்துல அடிச்சது போல இருக்குமோ... சரி, பாப்போம்.)

வெற்றியிடம் இரண்டு லார்ஜ் சிக்னேச்சர் விஸ்கி கொண்டு வரச் சொல்கிறார். இரண்டையும் ஒரே தம்ளரில் விட்டு மேலாகக் கொஞ்சம் தண்ணிரை ஊற்றி, ஒரே மடக்கில் குடிக்கிறார். தண்ணீர் அவர் சட்டையில் வழிகிறது. துடைத்தபடி ‘பொறுமையில்லை, பொறுமையில்லை' எனச் சொல்லிக் கொள்கிறார்.

அவரை ஓரக் கண்களால் பார்க்கிறீர்கள். அழகான ஓவல் வடிவ முகத்தில், தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி காதுகளில் சேருமிடங்களில் நரை. அவர் தலையைக் கோதியபடி இன்னும் இரண்டு என்கிறார். நீங்கள் தலை கவிழ்ந்து உங்கள் தம்ளரில் கவனத்தைக் குவிக்கிறீர்கள். ஒரு லார்ஜை தம்ளரில் ஊற்றிய வெற்றி, மற்றொன்றை அதன் அருகில் வைத்து அகல்கிறான்.

சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியபடி, ‘ஐயா, கொஞ்சம் தீப்பெட்டி தர முடியுமா' என ஆங்கிலத்தில் வினவுகிறார். நீங்கள் லேசாக அவர் பால் நகர்த்துகிறீர்கள்.

(போச்சு, முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பானுங்க; அப்புறம் போட்டு அறுத்துத் தள்ளிடுவானுங்க).

வலக்கையில் கோப்பையை எடுத்தபடி, உங்களிடம், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா.?” என்கிறார். நீங்கள் ‘இது என்ன கேள்வி' என்ற பாவனையில் அவர் முகத்தைப் பார்க்கிறீர்கள்.

“ஆகவில்லையெனில், தயவு செய்து, செய்து கொள்ளாதீர்கள்... “ வாயில் கவிழ்த்துக் கொள்கிறார். மறுபடியும் சட்டையை மது நனைக்கிறது. காகித நேப்கினால் துடைத்துக் கொள்கிறார்.

பாக்கெட்டைத் தடவி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதிவியிலிருந்ததைப் பறை சாற்றியது அது. (பெரிய புண்ணாக்கு). அவர் அறியாமல் அதைக் கசக்கி எறிகிறீர்கள். நேரம் கிடைக்கையில் உங்களை வீட்டிற்கு அழைக்கிறார். அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைக்கிறீர்கள்.

“பெண்கள் எல்லாரும் ஏமாற்றுப் பேர்வழிகள்..”
(போச்சு, மற கழண்ட கேஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்)

‘அனுபவத்தில் சொல்கிறேன் நண்பரே... All women are bitches, fuckin' bitches"
(என்ன வுட்டுடேன்).

சிறிது நேரம் மௌனமாய்க் கழிகிறது. சிகரெட்டை ஆழ்ந்து புகைக்கிறார். முகம் லேசாகக் கோணுகிறது. தனக்குள் சொல்லிக் கொள்பவரைப் போல் “வேசி, அவள் ஒரு வேசி” என்கிறார்.

இடைவெளி விட்டு, “ஆம், அவள் வேசி தான்”
(யாரைச் சொல்றான் லூசு)

“எனக்குத் தெரியாதெனெ நினைத்தாளா அவள். எல்லாரும் என் முதுகுக்குப் பின் பேசுவது என் காதில் விழுகிறதே... என் கேட்கும் திறனை நிறுத்த வழி தெரியவில்லையே... ”

உங்களுக்கு எப்படி எதிர் வினை ஆற்றுவது எனத் தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தபடி இருக்கிறீர்கள்.

“எனதருமை மனைவி” மனைவியில் அழுத்தம் கொடுக்கிறார். உங்களுக்கு விளங்குவது போல் இருக்கிறது.
(பெண்டாட்டி காரி சரியில்ல; புருஷன் குடிகாரன்)

“அவளால் தான் நான் இவ்வாறு குடிகாரனானேன்...” நீண்ட இடைவெளியில் நீங்கள் உங்கள் கோப்பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.

“இப்படிப் பட்ட ஒரு மனைவி இருந்தால் புருஷன் என்னாவது... குறைந்தது ஐந்து பேருடனாவது அவளுக்குக் கள்ள உறவிருக்கும்.. இவள் தொல்லை தாளாமலேயே கோயமத்தூரிலிருந்துச் சென்னைக்கு வந்தேன். இங்கேயும் இதே பிரச்சனை தான்”

“பிரச்சனை இடத்திலல்ல; அவளிடம் தான்..”

இடைவெட்டு : இது உங்களுக்கு நடந்த விஷயம் தான் என்றாலும், எழுதுவது நானல்லவா. அதனால் சிலவற்றைச் சேர்த்து, சிலவற்றை விலக்கியிருப்பேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் நிறுத்தி என்னைக் கேட்கலாம்.

“இதோ வெளியில் இருக்கிறானே டிரைவர்; அவனுடன் கூட அவளுக்கு உறவிருக்கிறது...”
(என்ன மனுஷன் இவன் பிரதம மந்திரிலேர்ந்து வீட்டு வேலைக்காரன் வரைக்கும் தொடுப்பு இருக்குன்னு சொல்வான் போல).

“உங்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன் அல்லவா.. ” நீங்கள் தலையாட்ட, தொடர்கிறார் “வேண்டாம்; வர வேண்டாம். வந்தால் நீங்களும் அவளுடன் படுப்பீர்கள்...”
(எழுந்து ஓடிடலாமா).

சிறிது இடைவெளி விட்டு, “உங்களுக்கு எது சொந்த ஊர்.?” என வினவுகிறார். அப்பாடா வேறு விஷயத்திற்கு வருகிறாரே என்ற நிம்மதியுடன் நீங்கள் “தஞ்சாவூர்” என்கிறீர்கள்.

“தஞ்சாவூர்... தஞ்சாவூர்... அங்கு கூட அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான்”
(வேதாளம் முருங்க மரம் ஏறி விட்டது).

அவளுடைய காதல் கதைகளை முழுமையாய் விவரிக்கிறார். Graphical Descriptionsஐத் தவிர்க்கும் பொருட்டு அவற்றை நீக்கிவிட்டேன். அவர் விவரித்ததின் சாராம்சம் : அவர் மனைவி வேசை. உங்களுக்குச் சங்கடமாயிருக்கிறது. அவர் குரல் குழற ஆரம்பிக்கிறது. அவர் முகத்தையும் உங்கள் கோப்பையையும் மாறி, மாறிப் பார்த்தபடி இருக்கிறீர்கள். அவர் உச்ச போதைக்குச் சென்று கொண்டிருக்கிறார். வெற்றியை அழைத்து பணம் கொடுக்கிறார்.

“சரி, நான் கிளம்புகிறேன்” என்றவாறு எழுந்திருக்கிறார். உடல் ஆடுகிறது. இரண்டடி சென்றவர் சாயப் போகிறார். வெற்றி அவரைத் தாங்கிப் பிடிக்கிறான். முடியாமல் தடுமாறுகிறான். நீங்கள் எழுந்து ஒரு பக்கம் அவரைத் தாங்குகிறீர்கள்.

“கொண்டு போய் கார்ல விட்டுறலாம் சார்” என்கிறான் வெற்றி. அவனுக்குப் பழக்கம் போல.

நீங்கள் அவரை அழைத்து வருவதைப் பார்த்ததும் டிரைவர் சிகரெட்டை அணைத்து, வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்கிறார். அவரைப் பின் இருக்கையில் அமர வைத்ததும், வெற்றி அகல்கிறான்.

இடைவெட்டு : இன்னும் இரண்டு பத்திகளில் கதை முடியப் போகிறது. நீங்கள் எனக்குச் சொல்லிய படி தான் கதையின் முடிவை எழுதியிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இது உங்களுக்கு நடந்த கதை; எனவே உண்மையில் என்ன நடந்ததோ அதைப் போலவோ அல்லது வேறு விதமாக மாற்றியோ நீங்கள் இந்தக் கதையை எழுதிக் கொள்ளலாம்.

முகம் கோணி, உங்களைப் பார்த்து இளிக்கிறார். உங்களை அருகில் அழைக்கிறார். உங்கள் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நீங்கள் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.

திரும்பவும் பாருக்குள் நுழைகையில் நீங்கள் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினீர்கள் என்பது ஞாபகம் வருகிறது. தொண்டையில் பாறாங்கல்லை அடைத்ததைப் போல் உணர்கிறீர்கள்.

(இது ஒரு மீள் பதிவு. பழைய பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் வாசிக்க : http://jyovramsundar.blogspot.com/2008/02/blog-post_13.html)

24 comments:

Unknown said...

சுந்தர்,

வித்தியாசமா இருக்கு. ஒரு வித சஸ்பென்ஸூம் மிதக்குது கதையில்.
அடுத்த டேபிளில் உட்கார்ந்து வாட்ச்
பண்ற மாதிரி இருக்கு.

எப்படி வேணா interpretபண்ணலாம்.
ஸ்பிலிட் பெர்ஸ்ஸனாலிட்டி?

Raju said...

\\இடைவெட்டு : இன்னும் இரண்டு பத்திகளில் கதை முடியப் போகிறது. நீங்கள் எனக்குச் சொல்லிய படி தான் கதையின்முடிவைஎழுதியிருக்கிறேன். ஆனால் அடிப்படையில் இது உங்களுக்கு நடந்த கதை; எனவே உண்மையில் என்ன நடந்ததோ அதைப் போலவோ அல்லது வேறு விதமாக மாற்றியோ நீங்கள் இந்தக் கதையை எழுதிக் கொள்ளலாம்.\\

இதோ எழுதுகிறேன் பாருங்கள்...

முகம் கோணி, என்னைப் பார்த்து இளிக்கிறார். என்னை அருகில் அழைக்கிறார். என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறேன். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.

என் மனதுக்குள் ஒரு இனம்புரியாத வெறுமைஆட்கொள்கின்றது.மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்..குணங்கள்.!
(இப்படிதானே கதையை முடிக்கனும்..)

Raju said...

கதையை இப்படியும் முடிக்கலாம்..

முகம் கோணி, என்னைப் பார்த்து இளிக்கிறார்.என்னை அருகில் அழைக்கிறார். என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.
திரும்பவும் பாருக்குள் நுழைகையில் நான் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை தான் பேசினேன் என்பது ஞாபகம் வருகிறது. தொண்டையில் பாறாங்கல்லை அடைத்ததைப் போல் உணர்கிறேன்.

அந்த வார்த்தை.." நான் இனிமேல் குடிக்கப்போவதில்லை".......

Raju said...

கதையை இந்த மாதிரியும் முடிக்கலாம்..

முகம் கோணி, என்னைப் பார்த்து இளிக்கிறார்.என்னை அருகில் அழைக்கிறார். என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.
நான் மீண்டும் பாருக்குள் நுழைந்து "கிழித்துப் போட்ட விசிட்டுங் கார்டைத் தேடுகிறேன்"...

மண்குதிரை said...

புதிய வாசிப்பனுபவமாக இருக்கிறது. இதன் முடிவும் சுவரஷ்யமாக இருக்கிறது. மறுபடியும் வாசிக்கிறேன்.

Unknown said...

டக்ளஸ்,

//நான் மீண்டும் பாருக்குள் நுழைந்து "கிழித்துப் போட்ட விசிட்டுங் கார்டைத் தேடுகிறேன்"

இது சூப்பர்.

சென்ஷி said...

கதை மீள் வாசிப்புத்தான் எனக்கும். ஆனால் முன்பை விட சற்று அதிகமான பொறுமை கிடைத்துள்ளது உங்களின் எழுத்தை புரிந்து கொள்ள.

முன்பதிவாக்கியதில் உள்ள பின்னூட்டத்தில் ஜமாலன் சந்தேகங்கள் தீர்த்து வைத்துவிட்டார்.

நன்றி சுந்தர்.. அருமையான வாசிப்பை தந்ததற்கு..

மஞ்சூர் ராசா said...

//கதையை இந்த மாதிரியும் முடிக்கலாம்..

முகம் கோணி, என்னைப் பார்த்து இளிக்கிறார்.என்னை அருகில் அழைக்கிறார். என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறீர்கள். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.
நான் மீண்டும் பாருக்குள் நுழைந்து "கிழித்துப் போட்ட விசிட்டுங் கார்டைத் தேடுகிறேன்"...//

சூப்பர் முடிவு

Athisha said...

adada!

அகநாழிகை said...

சுந்தர்,
கதையும், விவரணை உத்தியும் அருமை. வாழ்த்துக்கள்.
sea farers club
பாரின் ஸ்பெஷல் முக்கியமான பக்க உணவு சூடான ‘ரசவடை‘யை ஏன் மறந்து விட்டீர்கள் ? அதிகாலை 2 மணி வரை அங்கு மதுவருந்தி இலக்கியம் பேசிப்பகிர்ந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. இன்றும் 24 மணி எப்போது வேண்டுமானாலும் மது அருந்த வேண்டுமென்றால் sea farers club ஒன்றுதான்.
உலகில் மதுவும், மாதும் இல்லையென்றால் என்றோ வன்முறை பெருகி தாண்டவமாகியிருக்கும்.

- பொன்.வாசுதேவன்

ILA (a) இளா said...

இன்னும் வித்தியாசமா எழுதனும்னா..

முகம் கோணி, என்னைப் பார்த்து இளிக்கிறார். என்னை அருகில் அழைக்கிறார். என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறேன். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.

மீண்டும் கடைக்குள் நுழைந்து இன்னொரு ரவுண்ட் வெற்றியிடம் கொண்டுவரச்சொன்னேன்.

"வெற்றி நாங்கல்யாணமே பண்ணிக்கபோறதில்லே" என்றேன். (நாம கல்யாணம் பண்ணி ஏன் மனைவியை வேசியாக்கனும். Coz,I am also impotent).

யாத்ரா said...

வாசகனையே கதையின் பாத்திரமாக வடிவமைத்திருப்பது நன்றாயிருக்கிறது, இன்னும் சொல்லப்போனால் கதை முடியும் தருணத்தில் தான் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கதையே ஆரம்பிக்கிறது. வாசகனிடம் எதையுமே வலுக்கட்டாயமாக திணிக்காமல் அவரவர்க்கேற்றபடி சுதந்திரத்திற்கு இடமளிக்கும் இது போன்ற உத்தியுள்ள கதைகள்,,,,,
அருமை.

மாதவராஜ் said...

மொழி விளையாட்டுத்தான்.

அனாயாசமாக வந்திருக்கிறது. ரசித்தேன்.
வாழ்த்துக்கள் சுந்தர்.

Cable சங்கர் said...

//என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறேன். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.//

அப்போது அவர் பையிலிருந்து விழுந்த பர்ஸ் கீழேயிருக்க, திறந்து பார்கையில், உள்ளே அவருக்கு அருகில் ஸ்வேதா..

தமிழன்-கறுப்பி... said...

இந்த கதையை நான் பிரதி செய்து அறையில் கொண்டு போய் வாசித்திருக்கிறேன். என்னுடைய அலமாரியில் இப்பொழுதும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மனிதர்களின் இயலாமை என்பது படுக்கையறையில் வெளிப்படும் தருணமாகட்டும் அதனை எதிர்பாலினம் ஏற்று கொள்ளாமையின் வெறுப்பாகட்டும்.. கசப்பானது.. சொல்லபோனால் மதுவை விட கசப்பானது.. சம்பவங்கள் மிகவும் தெளிவாக சொல்லபட்டு இருந்தாலும் ஒரு சிறுகதையின் பாணியை விட ஒரு அனுபவ பகிர்வின் பாணியை ஒத்துள்ளது..

Ronin said...

Jyovram:

Nice story..But am unable to avoid the human or cultural politics behind the ending..

I would have finished it this way:He says to the driver,' Vanduya eduppa"
The driver asks him, "veetuka, Madam veetuka sir?"
_____________________________
Coming to the unavoidable human politics. It does touch on a male expectancy to call a women he is upset as a prostitute,(who has sex with everyone she knows including drivers etc) It is possible, but mostly it is a way to humiliate women by men in a society where they've been taught Katpu is ultimate.(bitch concept is there in other culture, not in the same context as our oft abused theviya in tamil)

hat takes us to something else, The absurdity of prostitutes: Many Might take money(bribe) to do an illegal job..Many might take contact with a celebrity as a a token for doing a job...But it is ultimate sin for a women to take money for sex job ..Is n't everything prostitution?

The end is built on the irking but highly like end. Sadly, I guess many readers have left the most likely cause for it and have read this like a Sujata story.Story with a small knot, ending with a investigative wow..

Let me explain:
Is n't absurd that a women needs to be in multiple relationships just because her husband is impotent. There are many girls, who dont have opportunity for sex, I would say all tamil girls (including our daughters) before marriages, with overreactive hormones? Are they going around having multiple partners. or acting as prostitutes.

Since I have some idea of what Jyovram thinks based on speaking to him, I dont think that is what he is meaning..

It is likely that an impotent man is under a complex that he suspects everyone to be cheating with his wife(even if she did have a relationships with 1 or two) ..

But I dont think this secondary story is jumping at readers and the easier and chauvistic route is taken by the unsuspecting reader..And that likely implicaton in the story is saddening..

Unknown said...

கொஞ்ஜம் சுஜாதா ஜாடை இருக்கிறத்தே---மிகவும் நன்றாக இருந்தது---வாஹே குரு

Raju said...

\\//என் காதருகில் “I am an impotent, yes, I am an impotent" என்கிறார் உணர்ச்சியற்ற குரலில். நான் மின்சாரம் தாக்கியதைப் போல் நிற்கிறேன். கண்ணாடி ஏற, கார் நகர்கிறது.//

அப்போது அவர் பையிலிருந்து விழுந்த பர்ஸ் கீழேயிருக்க, திறந்து பார்கையில், உள்ளே அவருக்கு அருகில் ஸ்வேதா..\\

டைரக்டர்..டைரக்டதான்யா..
கலக்கீட்டீங்க சங்கர் அண்ணே...

Joe said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சுந்தர்!

http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html

வால்பையன் said...

//“பிரச்சனை இடத்திலல்ல; அவளிடம் தான்..”//

இது மேட்டரு!
அங்கயே விட்டு வந்துருந்தா பிரச்சனையே இல்லையே!

வால்பையன் said...

வேறென்ன செய்ய திரும்பவும் உள்ளே போய் நாலு லார்ஜ் எக்ஸ்ட்ரா அடிச்சிட்டு மறுநாள் எந்திரிக்குதா இல்லையான்னு எந்திரிச்சு பார்க்க வேண்டியது தான்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரவிஷங்கர், டக்ளஸ், மண்குதிரை, சென்ஷி, மஞ்சூர் ராசா, அதிஷா, அகநாழிகை, இளா, யாத்ரா, மாதவராஜ், கேபிள் சங்கர், தமிழன் - கறுப்பி, முத்துக்குமார், ரானின், குரு, ஜோ, வால்பையன்... நன்றி.

♫சோம்பேறி♫ said...

வெற்றிக்கு டிப்ஸ் கொடுக்க பர்ஸ் தேடிய போது தான் உரைத்தது, 'அடங்கொன்னியா! எங்கடா என் பர்ஸ்..'

பின்னாலிருந்து மற்றொருவன் 'எங்கடா என் கார்'