ஜனவரி 1ம் தேதி புத்தகச் சந்தைக்குப் போகலாம் என்று முடிவு செய்தது அன்று காலைதான். முதல் நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஒன்றும் பெரிதாக இல்லையென்றாலும் மதியம்கூட ஏனோ தலையை வலித்தது. கடையில் அனாசின் வாங்கிக் கொண்டு பார்த்தால் தண்ணீர் இல்லை. ஒரு பாக்கெட் தண்ணீர் 3 ரூபாய் (டாஸ்மாக்கில்) ஆனால் வெளியில் 1 ரூபாய்தான். மாத்திரையைப் போட்டுக் கொண்டு ரயில் பிடித்து சேத்துப்பட்டில் இறங்கினேன். என்னுடன் என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அங்கிருந்து அப்படியே நடந்து வந்து பஸ் பிடித்து பச்சையப்பா கல்லூரியில் இறங்கிக் கொண்டோம்.
கண்காட்சிக்கு எதிராகப் பழைய புத்தகக் கடை ஒன்றிரண்டு இருந்தது. நிறைய புத்தகங்களை விரித்திருந்தார்கள். சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை 10 ரூபாய்க்குக் கிடைத்தது. வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு பிரதி வீட்டிலிருந்தாலும் யாருக்காவது கொடுக்கப் பயன்படுமே என்று நினைத்துத்தான் வாங்கினேன். போலவே என்னுடைய நண்பன் ஒருவனுக்குப் பரிசளித்து விட்டேன்.
கண்காட்சியில் வாசலில் கார்கள் வருவதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டூ வீலரில் வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் - உடனே செல்ல முடிந்தது. ஆனால் பார்க்கிங் சீட்டு ரொம்பச் சின்னதாக இருந்தது என்று உள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஃபிளெக்ஸ் பேனர்களில் நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனந்த விகடன் நிறைய விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். நல்ல வேளையாகக் க்யூ இல்லை. மூன்று பேருக்குமாய்ச் சேர்ந்து 15 ரூபாய் சில்லரையாகக் கொடுத்தேன். உள்ளே நுழையும் முன் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என்று பார்த்தேன்.
பதிவர்கள் பைத்தியக்காரன், லக்கி லுக், சங்கர் மற்றும் சிலரைச் சந்தித்தேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். தனி இடுகையாகப் புகைப்படங்களை வெளியிடுகிறேன்.
நிறைய ஸ்டால்கள் இருந்தன. ஸ்டால்களின் நடுவில் நிறைய இடைவெளி விட்டிருந்தார்கள். கிழக்கு பதிப்பக ஸ்டால் அருகில் பா ராகவனும், பத்ரியும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தேன்.
புதிய தலைமுறை (?) பெரிய பையைக் கொடுத்தார்கள். புத்தகங்களை வைத்துக் கொள்ள வசதியாயிருந்திருக்கும். விகடன் அரங்கிலும், இன்னும் சில அரங்களில் மட்டும் கூட்டம் அம்மியது.
சாரு நிவேதிதா.உயிர்மை அரங்கில் இருந்தார். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டேன். புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். எஸ் ரா இல்லை. இருந்திருந்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.
கார்பெட் நன்றாக இருந்தது. சென்ற வருடங்களைப் போல முனை மழுங்கியில்லை. மழுங்கியிருந்த இடங்களிலும் உடனுக்குடன் ஆணியடித்துச் சரி செய்து கொண்டிருந்தார்கள்.
வீட்டுக் கடன் வழங்கும் HDFC ஸ்டாலில் நின்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். குறைவான வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே. அப்போது வெளியில் இருந்த புடவைக்கடை விளம்பரங்களைக் குறித்து யாரோ பேசியபடி சென்றார்கள்.
அழகான பெண்கள் தனியாக வந்திருந்தார்கள். அவர்களை ஸைட் அடித்தபடி நடந்து செல்வது ஆனந்தமானது. காலையில் கிளம்பும் முன் இங்கே செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் இன்னும் நல்ல உடையில் வந்திருக்கலாம். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
முக்கியமான விஷயம் : புத்தகச் சந்தை கேண்டீனில் லிச்சி ஜூஸும், தக்காளி சூப்பும் நன்றாக இருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம். லிச்சி ஜுஸ் 10 ரூபாய். வாங்கிக் குடித்தோம்.
புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது சரியான கால்கடுப்பு. மதியம் ஏற்பட்ட தலைவலி ஏனோ ஞாபகம் வந்து, தலையும் வலிப்பது போல் தோன்றியது.
கார்காலக் குறிப்புகள் - 155
1 week ago