ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நானறிந்த வரையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. அவர்களது இந்த மௌனம் என்னை பயமுறுத்துகிறது. அல்லது மிக உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நாம் ஏன் தலையை நுழைக்க வேண்டுமென்று இருக்கிறார்களோ என்னவோ...? ஆனாலும் தமிழில் அறியப்பட்ட புத்திஜீவிகளின் / எழுத்தாளர்களின் இந்தக் கள்ள மௌனம் என்னைத் துணுக்குறவே செய்கிறது.
அனைத்திந்திய அளவில் தொலைக்காட்சிகள் போகும் போக்கில் அல்லது ஒளிபரப்ப வேறு விஷயங்கள் இல்லாதபோது மட்டுமே ஈழப்பிரச்சனையைத் தொட்டுச் செல்கின்றன. பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பிரச்சனை பிரதானமாகக் கைகொள்ளப் படவில்லை.
தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியலாம், அதாவது ஜெயலலிதா, சுப்ரமணிய சுவாமி, சோ, ஹிந்து ராம், மாலன் போன்ற பார்ப்பனர்களாக அவர்கள் இருப்பது. காங்கிரஸ்காரர்களை விடுங்கள்; காவேரி விஷயத்தில்கூட கர்நாடக மற்றும் தமிழக காங்கிரஸ் தனித்தனி நிலைப்பாடெடுக்கலாம். ஆனால் ஈழப்பிரச்சனையில் அதுவும் முடியாது. ஆனால் தேசத் தலைமையைவிட அதிக அளவில் குரல் கொடுக்கிறார்கள் மாநிலத் தலைவர்கள்.. Loyal than the king..?? அல்லது ராஜீவின் ஆவி இன்னமும் அவர்களைத் துரத்துகிறதா...?
ஆயுதங்களின் ஷெல்ஃப் லைஃப் முடிவதற்கு முன்னர் உபயோகித்தாக வேண்டிய கட்டாயத்தினால் சில நாடுகளின்மேல் போர்த் தொடுக்கும் அமெரிக்கா. தன்னுடைய ராணுவத் தளவாடங்களை விற்பதற்காகவே உலகின் பல இடங்களில் போர் நடந்து கொண்டேயிருக்க வேண்டுமென விரும்புமது. இப்படிப்பட்ட வல்லரசாகத்தான் இந்தியா விரும்புகிறதா எனத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி, பிற மாநிலத்தவர்களும் யோசித்துப் பார்க்கலாம்.
இந்திய அரசை நோக்கிப் பலர் இங்கு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இந்தப் போரில் இலங்கைக்கு இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிக் கொண்டிருக்கிறது எனும்போது இதைவிட வேலையற்ற செயல் வேறிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் :
இலங்கையில் தம்முடைய தொழில்களை நடத்தும் மாருதிகளின், அஷோக் லேலண்டுகளின், டாடா டீக்களின், ஹீரோ ஹோண்டாக்களின், ஏர்டெல்களின் நலனை முன்வைத்தே இந்தியா செயல்படுகிறது. ஈராக்கில் மறு கட்டுமானப் பணிகளை பல அமெரிக்க நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டதைப் போல இலங்கையில் செய்ய இந்திய கம்பெனிகள் விழைகின்றன. இதையேதான் பிரணாப் முகர்ஜியும் இலங்கையின் மறு கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா உதவும் எனச் சொல்கிறார்.
இந்நிலையில் நமது போராட்ட வடிவமென்பது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என இல்லாது இலங்கையில் வணிக நலன்கள் உள்ள இந்திய நிறுவனங்களையும் அவர்களது பொருட்களையும் மறுப்பதேயாகும். எங்கு வலிக்குமோ அங்குதான் அடிக்க வேண்டும். (we should hit them where it counts). இதை ஒரு ஆரம்ப கட்ட போராட்ட வடிவமாகச் செய்யலாம். தனிநபராக இல்லாமல், ஏதாவது ஒரு இயக்கம் முன்னெடுத்தால் நல்லது.
விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகள் என உடுக்கையடிக்க வரும் நண்பர்களுக்கு... மன்னிக்கவும், அதைப் பிறிதொரு சமயம் வைத்துக் கொள்வோம். உடனடித் தேவை போர் நிறுத்தம்... இது எவ்வளவுதான் மொண்ணையான வெற்று மனிதாபிமான அரசியல் கலப்பற்ற கோரிக்கையாக இருப்பினும்.
குறிப்பு :
http://www.kalugu.com/ தளத்திற்காக எழுதப்பட்டது. இதன் ஆங்கில வடிவத்தை இங்கே படிக்கலாம் :
http://kalugu.com/2009/02/21/eelam-issue/#comment-236. மொழிபெயர்த்து வெளியிட்டமைக்கு கழுகு.காமிற்கு நன்றி.