மரணத்தை அஞ்சுபவன்

சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான்
செய்தி கிடைத்தது எனக்கு
மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை
அருகில் நெருங்கக்கூட விடவில்லை
அதுவே தற்கொலைக்குக் காரணமென்றான் செந்தில்
இல்லையில்லை
கடன்காரர்களின் தொல்லை என்றான் ஃபிரெடரிக்
மூன்றாவதாய் நுழைந்த சங்கர்
இருவரையும் மறுத்தான்
லட்சோப லட்சம் மக்கள் தற்கொலைக்குக் காரணமான
தீராத வயிற்று வலியே சரவணனைத்
தற்கொலைக்குத் தள்ளியது என்றான்
நல்ல வேளை
இயற்கையாகச் செத்தான் என யாரும் சொல்லவில்லை
அந்த வரையில் நிம்மதிதான் எனக்கு

சின்னத்துவம்

'பெரிதினும் பெரிது கேள்
என்றானே பாரதி...'
ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த
பேராசிரியரை
இடைவெட்டினான்
சி மணியின்
மினி யுகத்து மனிதன்
காணி நிலம் வேண்டாம்
10க்கு 12 அறை போதும் என்றான்
முக்கியத்துவம் வேண்டாம்
சின்னத்துவம் போதாதா?
என வினவினான்
'ஸின்னத்துவம் என்றால்...'
இழுத்த பேராசிரியரிடம்
சின்னதாய்க் கோபப் பட்டான்
சின்ன விஷயங்கள் குறித்து
சின்னதாய் விளக்கினான்
சின்னத்துவத்தைச்
சின்ன தத்துவம்
என முணுமுணுக்கலானார்
சின்ன விரக்தியில்
பெரிதாய்ச் சிரித்து
கைகுலுக்கி விடை கொடுத்தான்
மினி ஆசிரியன்

ஒரு காதல் கவிதை

என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்லாமே சோர்வு
கண்முன் தெரியும்
வானம் தாண்டியும்
பல வானங்கள் இருக்கின்றனதாம்
நிராகரிப்பின் வலி தாங்காமல்
ஒளிந்து கொள்கின்றன
எல்லா வான்மேகங்களும்
வழுக்கைத் தலையே
பிரதான பிரச்சனையாய்
இருக்கிறது
இப்போதைய சீமாட்டிக்கு

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

சதுரத்தை ஆங்காரமாய்
உடைத்தெறிந்தால்
சச்சதுரம் சச்சச்சதுரம்

குடிகாரனின் வார்த்தைகளாய்ச்
சிறுத்துப் போன என் காதலை
மீட்டெடுப்பேன்
அதுவரை
நமஸ்காரம்

முன்திட்டமிடப்படாத பின்மாலைப் பொழுதொன்றில்

அருகிப் போன நண்பர்களில்
எவரையேனும்
அலைபேசியில் அழைக்கலாம்
மனைவி மகளுடன்
ஊர் சுற்றப் போகலாம்
கறுப்பு வில்லையைத்
தனியாக ருசிக்கலாம்
பழைய காதலிக்குக் கடிதமெழுதலாம்
பிரபல கவிஞர்களைப் போல்
பட்டியல் கவிதை எழுதி
கடைசி வரியில் திருப்பம் வைக்கலாம்
மிட்டாய் நசுக்கியை
மகழ்ச்சியாய் விளையாடலாம்
இப்பெரு அருவியை
என் சிறு வாய்
கொண்டு அருந்தலாம்

மகிழ்ச்சியான செய்தி. உரையாடல் போட்டி சிறுகதைகள் புத்தகமாகின்றன


உரையாடல் சார்பாக 2009 வருடம் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது.  அதில் 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.  அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைப் புத்தகமாக கொண்டு வரலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.  அதற்கான ஒப்புதல்களும் சிறுகதைகளை எழுதியவர்கள் தந்திருந்தார்கள்.

ஆனால், சில தவிர்க்க இயலாத காரணங்களால் புத்தகம் கொண்டு வர இயலவில்லை. 

இப்போது நண்பர் அகநாழிகை வாசுதேவன் அந்தச் சிறுகதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர இசைந்திருக்கிறார்.  சிறுகதைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது :

1. பெண்கள் இல்லாத ஊரின் கதை - ரெஜோ வாசன்  ( http://www.rejovasan.com/2009/06/30/no-land-for-women/ )
2. பிரசன்னம் - யோசிப்பவர்  ( http://kathaiezuthukiren.blogspot.com/2009/06/blog-post.html )
3. அம்மாவுக்குப் புரியாது - RV  ( http://koottanchoru.wordpress.com/2009/06/30/ )
4. அம்மாவின் மோதிரம் - எம் ரிஷான் ஷெரீப்  ( http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html )
5. அப்பா வருவாரா - கவிதா   ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_30.html )
6. நீர் வழிப்படுஊம் புணை - சேரல்  ( http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html )
7. அவளாக இருந்திருக்கலாம் - நந்தவேரன்  (  http://adtams.blog.com/2009/06/27/அவளாக-இருந்திருக்கலாம்/ )
8. மலைகள் காணாமல் போன தேவதைகள் - தமிழன் - கறுப்பி  ( http://enninavinveliyilnan.blogspot.com/2009/06/blog-post_26.html )
9. வாழையடி வாழை - வெட்டிப் பயல்  ( http://naanrasithavai.blogspot.com/2009/06/blog-post.html )
10. மனையியல் - இரா வசந்தகுமார் ( http://kaalapayani.blogspot.com/2009/06/blog-post.html )
11. அவள் பத்தினி ஆனாள் - ராமச்சந்திரன் உஷா ( http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html )
12. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - நிலா ரசிகன் ( http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html )
13. காத்திருத்தல் - சரவணன்.P.  ( http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post.html )
14. நீரும் நெருப்பும் - வெண்ணிலா ( http://vennilapakkangal.blogspot.com/2009/06/blog-post_3928.html )
15. நான் அல்லது நான் - நந்தா குமாரன் ( http://nundhaa.blogspot.com/2009/05/blog-post_25.html )
16. வழியனுப்பிய ரயில் - உமாசக்தி ( http://umashakthi.blogspot.com/2009/05/blog-post_27.html )
17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் - புபட்டியன் ( http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html )
18. மைய விலக்கு - சத்யராஜ்குமார்  ( http://inru.wordpress.com/2009/06/08/twilight/ )
19. தற்செயலாகப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - அகநாழிகை வாசுதேவன் (  http://aganaazhigai.blogspot.com/2009/06/blog-post_03.html )
20. காதோரமாய் - ஸ்ரீதர் நாராயணன்  ( http://www.sridharblogs.com/2009/06/blog-post_17.html )


இதில் எங்களுக்கு லாப நோக்கு எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.  காப்புரிமை எழுதியவர்களுக்கே சொந்தம்.

சிறுகதை ஆசிரியர்கள் யாருக்காவது புத்தகமாவதில் ஆட்சேபணை இருக்குமானால், எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அகநாழிகை வாசுதேவனுக்கு எங்களுடைய நன்றிகள்.

நன்றி,

பைத்தியக்காரன் / ஜ்யோவ்ராம் சுந்தர்.


நேசம் & யுடான்ஸ் நடத்தும் கதை, கட்டுரை & குறும்பட போட்டிகள்

புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு. 


கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.

2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.


3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரை :  சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.

நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.


பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும்.  யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.

2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ )  இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது. 

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.

4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும். 

5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.

7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும். 

8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.

சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம்.  வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள்  வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.

வா மு கோமுவின் நாவல்கள் வெளியீட்டு விழா

வா மு கோமுவின் இரண்டு நாவல்களை உயிர்மை வெளியிடுகிறது. அதற்கான விழா வரும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி மாலை நடக்கிறது.  விவரங்கள் கீழே :

உயிர்மையின் 10 நூல்கள் வெளியீட்டு விழா

நாள் : 1-1-2012, ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், LLA பில்டிங், 735 அண்ணா சாலை, சென்னை - 2.

நூல்கள் :

ஒன்றுக்கும் உதவாதவன் (அ முத்துலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்பு)
சகுனம் (எஸ் வி ராமகிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பு)
இசையின் ஒளியில் (ஷாஜியின் கட்டுரைத் தொகுப்பு)
கால்கள் (ஆர் அபிலாஷின் நாவல்)
மங்கலத்து தேவதைகள் & எட்றா வண்டியை (வா மு கோமுவின் நாவல்கள்)
நீர்த்துளி (சுப்ரபாரதி மணியனின் நாவல்)
வேட்டை (சுப்ரபாரதி மணியனின் சிறுகதைகள்)
வானில் பறக்கும் புள்ளெல்லாம் (சு. தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகள்)
கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளை சிங்கங்களும் (சு.கி. ஜெயகரனின் கட்டுரைகள்)

பங்கேற்போர் :

எஸ் ராமகிருஷ்ணன்,
அசோகமித்திரன்
பாலாஜி சக்திவேல்
மிஷ்கின்
ஸ்ரீனிவாஸ் (பின்னணி பாடகர்)
ந முருகேச பாண்டியன்
பாமரன்
இந்திரன்
தமிழ்மகன்
வே தட்சிணாமூர்த்தி
அ முத்துக்கிருஷ்ணன்

நண்பர்கள் அனைவரையும்  அழைக்கிறோம்.

சிறுமி கொண்டு வந்த மலர் அல்ல, இது மாமல்லன் கொண்டு வரும் பொறுக்கி மொழி

சிலருக்குப் புரியாது என்பதால் என்ன நடந்தது என்பதற்கான ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்.

லும்பன் மொழியையும் விளிம்பு நிலை மக்களின் மொழியையும் மாமல்லன் குழப்பிக் கொண்டார்.  அதை டுவிட்டரில் இப்படி எழுதியிருந்தேன் :

விளிம்பு நிலை மக்களின் மொழியையும் லும்பன்களின் மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார் மாமல்லன். நல்ல புரிதல் :-)

அதற்கு அவரது வழக்கம் போல இப்படி எழுதியி்ருந்தார் :

/எவனுடையதையாவது பிடித்துத் தொங்காவிட்டால் வாழ்வில் பிடிமானம் இல்லாமல் பதற்றத்தில் ஜ்யோவ்ராம் சுந்தருக்குத் தள்ளாட்டமே வந்துவிடும்போல் இருக்கிறது.

அரசியல் கருத்துக்கு வளர்மதி
இலக்கிய வழிபாட்டுக்கு சாரு (சாட்டு சாகசத்திற்கு முன்னால்)
வெற்றுப் பிரதிபலிப்பிலேயே உருவாக்கொண்ட பிம்பம் எத்துனை நாள் ஜொலிக்கும்?

விளிம்பு நிலைக்கு ஆங்கிலம் என்ன ?
லும்பனுக்குத் தமிழ் என்ன?

கை இரண்டு என்பதால் இரு சாமானங்களை ஒரே நேரத்தில் பிடித்துத் தொங்கினால் இதுதான் கெதி.

http://www.thefreedictionary.com/lumpen
http://dictionary.reference.com/browse/lumpen
/

மேல உள்ளதை அறிவார்த்தமான கட்டுரை என்று வேறு ஒருவர் சொல்கிறார் (கெரகம்!).

சிலர் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரில் வந்து இவரிடம் லும்பனுக்கும் விளிம்பு மக்களின் மொழிக்கும் பொறுமையாக விளக்கம் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்து, வழக்கம் போல் மூர்க்கத்துடன் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.

இவரிடம் விளக்கம் சொல்லிப் புரியவைப்பது ஆகாத விஷயம் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் நான் அதைச் செய்யவில்லை :-)  ஆனால் நான் அரசியல் கருத்துக்கு வளர்மதியையும், இலக்கிய வழிபாட்டிற்கு சாருவையும் (அதுவும் சாட் சாகசத்துக்கு முன்னால்தானாம்!) பிடித்துத் தொங்குவதாகச் சொல்வது மிகத் தவறான திரித்தல் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.

அடுத்து இப்போது ஒரு சாமான்யர்களின் சாமானும், அறிவுஜீவிகளின் சாமானும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அதன் சுட்டி :http://www.maamallan.com/2011/12/blog-post_21.html

அதில் நான் என்னவோ இலக்கியத் திருட்டு செய்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.  அதாவது, நான் 6 - 7 படிக்கையில் கேட்ட பாட்டு என்று சொல்லிவிட்டு பிறகு அதை என் பதிவில் என்னுடையது என்று எழுதிவிட்டேனாம். இதையெல்லாம் கஷ்டப்பட்டு சான்றுகள் கொடுத்து நிரூபிக்க முயற்சிக்கிறார்.  இதுவும் மாம்லல்னின் வழக்கம்தான். அவரது கருத்தோடு ஒப்புக் கொள்ளாதவர்களை அடுத்தவர்களிடமிருந்து காப்பி அடிப்பவர்கள் என்று சொல்வது.

ஆனால், அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே (http://jyovramsundar.blogspot.com/2009/07/blog-post.html) இவை நான் எழுதியதல்ல என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.  யாருடைய சாமானத்தையோ வாயில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் மாமல்லன், அதனால்தான் இதைக் கவனிக்கவில்லை என்று சொல்லலாமா?

இவருடைய கவிதை பற்றி ஒரு முறை சொன்னபோது இதே மாதிரி என்னுடைய பழைய கவிதை ஏன் சரியில்லை என்று விரிவாக எழுதினார் (http://www.maamallan.com/2011/08/tue-sep-7-2010-at-909-pm.html) .  உண்மையில் அந்த விமர்சனத்தை எனக்கு அவர் ஏற்கனவே வேறொரு நண்பர் மூலமாக அனுப்பியிருந்தார். தனிப்பட்ட கடிதம்தானே என்று நானும் விளக்கம் சொல்லியிருந்தேன்.  அதைச் சமயம் பார்த்து, நான் அவரது கவிதைகளைப் பற்றிப் பேசும்போது பதிவில் ஏற்றினார்.  என்னமோ செய்து தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.  ஆனால் தொடர்ந்து இப்படி சாமானம் அது இதென்று எழுதுவதால் இந்தப் பதிவு.

ஐயா, எனக்கு எந்தப் பதட்டமும் இல்லை.  மலை மலையாக எழுதிக் குவித்து புத்தகமாகப் போட வேண்டுமென்றோ அல்லது, இறந்த பின்னும் புகழப் பட வேண்டுமென்றோ எவ்வித பிரயத்தனங்களையும் நான் செய்வதில்லை.  அதனால் என்னுடைய வலைப்பதிவின் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி என்னைத் தோலுரித்து காலி செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.  அது வியர்த்தம்.

மாமல்லன் வெகுஜனக் கதைகள் / சினிமாக்கள் x கலைப் படைப்புகள் என்று வித்தியாசப்படுத்திச் சொல்பவர்.  தான் எழுதுவது கலை என்று இறுமாப்புடன் சொல்பவர்.  ஆனால் அவரது சோ கால்ட் விமர்சனக் கட்டுரைகளிலும் அதே நக்கீரன் / தராசு பாணிதான் பின்பற்றப் படுகிறது என்பதை எம்டிஎம் சொல்லிவிட்டார்.  அதனால்தான் இவ்வளவு பதட்டம் இவருக்கு!  கூடவே அவர் கவிதை என்ற பெயரில் எழுதியவதற்றை நான் கிண்டலடித்ததால் என்னையும் பிடித்துக் கொண்டார் :-)

எம்டிஎம்மின் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரையை சுட்டி கொடுத்ததற்காகப் பாய்வது என்றால், அவர் என்மீது மட்டுமல்ல, இன்னும் நான்கைந்து பேர்மீது பாய வேண்டும்.  பலருக்கு அந்தக் கட்டுரை பிடித்திருந்தது. 

அப்புறம் இவருக்கு இன்னொரு பழக்கம் உண்டு.  தன்னுடைய விமர்சனத்தில் ஒரே வரியைத்தான் நான் மறுத்திருக்கிறேன் - மற்றவற்றிற்கு எங்கே பதில் எங்கே பதில் என்று கூவுவார் (கூகிள் பஸ் / பதிவுகளில்).  நானும் பாயிண்ட் பாயிண்டாகப் பதில் சொல்லிச் சோர்ந்து போவேன்.  அதே மாதிரி இப்போதும் நான் எதற்காவது பதில் சொல்லாமல் விட்டிருந்தால், அவர் சுட்டிக் காட்டினால் பதில் சொல்கிறேன்.  ஆனால் பொறுக்கி மொழியில் எழுதினால், நானும் அதைவிடக் கேவலமான மொழியில் பதில் சொல்வேன் அல்லது பதிலே சொல்லாமல் விட்டுவிடுவேன்.

இரண்டு

(1)


கல்பனா இளவரசி மாதிரியே இருப்பாடா
என்றான் சினிமாவில் இளவரசியைப் பார்த்த இவன்
பல வருடங்களுக்கு முன் தொலைத்த
கல்பனா பற்றிய தகவல்களுக்குப் பதில்
இளவரசியைப் பற்றிய தகவல்களை
இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் இப்போது

(2)

ஆனந்த குமார் மகேஷ் என்ற பெயரை
ஆனந்த் எனலாம்
மகேஷ் எனலாம்
குமார் எனலாம்
ஆனால்
நான்கு பெக்குகளுக்குப் பிறகு
மழுமழுவென்ற இவன் கன்னம் தடவி
ஆனந்தி
என நண்பன் உளறலாய்க் கூப்பிடும்போது
சிலிர்க்கிறது இவனுக்கு

தமிழக மீனவர்களைக் காக்க கையெழுத்திடுங்கள்

Dear Friends,

I have just read and signed the online petition:

"Save Tamilnadu Fishermen"

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:

http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Jyovram Sundar


ஒரு நண்பர் 1 லட்சம் கையெழுத்திருந்தால் இந்தப் பிரச்சனையைக் கொண்டு போய்ச் சேர்க்க  வேண்டியவர்களிடம் சேர்ப்பேன் என்றிருக்கிறார்.  எதாவது நடக்காதா என்ற நப்பாசைதான்.  இந்த இடுகையைப் படிக்கும் அனைவரையும் கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மயிரு

நண்பர் யாத்ராவின் இந்த நூலைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியது நூலாக்கம்.  மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.  நான் இதுவரை பார்த்த அகநாழிகை வெளியீடுகளிலேயே இதுதான் சிறந்தது என்பேன்.  அட்டைப்படம், அச்சாகியிருக்கும் முறை, கவிதைகளின் வரிசைக் கிரமம் என நிறையச் சொல்லலாம்.  பதிப்பாளர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது போல. + வாசுவுக்கும் யாத்ராமீதும், அவரது கவிதைகள் மீதும் மிகுந்த பிரியமுண்டு என்று தோன்றுகிறது.  வாசுதேவனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

பதிப்பாளர் கவிஞராய் இருப்பதில் சில சிக்கல்களும் இருக்கின்றன.  பின்னட்டை வாசகங்களைப் பாருங்கள் : காற்றை எட்டி உதைத்து விளையாடும் குழந்தையின் அறியாமையோடு, பித்தேறிய மனதோடு, பிராயத்தின் பிரியங்களோடு, வாழ்க்கையின் முரண்களோடு என எல்லா நிகழ்வுகளையும் ஆதார மையமாக்கி இணையிணை காட்சிகளாக நிகழ்த்திச் செல்கின்றன யாத்ராவின் கவிதைகள்.  ஸ்ஸ்ஸ்யப்பா! இந்த மாதிரி வரிகள் எனக்கு அலர்ஜி. அது இருக்கட்டும், ஆனால் இந்த இணையிணை காட்சிகள் அப்படிங்கற வார்த்தை நம்மை எப்படி மயக்குகிறது பாருங்கள். நல்ல பின்னட்டை வாசகங்கள். முடித்துவிட்டு, புத்தகத்தைத் திறந்தால், முதல் கவிதையே பின்னால் வரப் போவதற்கான கட்டியம் சொல்லிவிடுகிறது :

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா

அழைக்கும் பிம்பம்னு தலைப்பு வைத்திருக்கிறார்.  முதல் கவிதைலயே ஒரு அதிர்ச்சி கொடுத்துவிடுகிறார்.  இதை வாசிக்கும்போது எனக்கு கிணற்று நீர், ஆத்மாநாம் எல்லாம் ஞாபகம் வந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்த கவிதை இது.

இணையத்தில் பொருட்படுத்தக்கூடிய கவிஞர்கள் நிறைய பேர் ஒரே மாதிரியான விஷயங்களைத்தான் எழுதுகிறார்கள்.  தனிமை, பிரிவு, சோகம் இத்தியாதிகள்.  யாத்ராவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதில் எனக்கு முக்கியமாகிறார்.

அப்படியும் ஒரேயடியாக ஒரே மாதிரிக் கவிதைகள் என்றும் சொல்லிவிட முடியாது. உதாரணத்திற்கு அதீத கற்பனையாக வரும் ஒரு பொழுதில் கவிதை (http://yathrigan-yathra.blogspot.com/2009/08/blog-post.html).

பட்டியல் போடும் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாக் கவிஞர்களும் எழுதியிருப்பார்கள்.  நகுலனோட உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி, கேசவ மாதவன் ஊரில் இல்லை, சிவனைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்பது மாதிரி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் கவிதைகளை ஒரு வசதிக்காகப் பட்டியல் கவிதைகள் என்கிறேன். நம் யாத்ராவும் அதை முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் கவிதையில் முக்கியமான அம்சம் என்பது கடைசி வரிகளில் வரும் திருப்பம். அது சரியா வந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த நகுலனோட கவிதையை கடைசி வரி, வெயிலில் வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன அப்படின்னு முடிப்பார். மனுஷ்யபுத்திரனோட பிரபலமான கால்களின் ஆல்பம் இன்னொரு சிறந்த உதாரணம். நடனம் ஆடுபவரின் கால்கள், கால்பந்து ஆடுபவரின் கால்கள் அப்படின்னு வரிசையா சொல்லிகிட்டே போய்க் கடைசில ‘யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுவேன் என் போலியோ கால்களை’ன்னு முடிச்சிருப்பார்.

யாத்ரோவோட அந்த மாதிரியான கவிதைகளில் வெற்றியடைந்ததாகத் தோன்றுவது : மயிர் கவிதை. வரிசையா விதம் விதமான மயிர்களை, கூந்தல்களை விவரித்துக் கொண்டே போகும் கவிதை கடைசியில் போடா மயிரு செருப்பு பிஞ்சிடும்னு முடிஞ்சிருக்கும். நல்ல திருப்பம்.  அதனாலேயே இது வெற்றியாகிறது. ஆனால், இவருடைய இன்னொரு பட்டியல் கவிதையான எங்கெங்கோ தோல்வி முயற்சியாத்தான் தெரிகிறது.   ஒவ்வொருத்தி பெயரா சொல்லி, அவ அங்க இருக்கா, இவ இங்க இருக்கா எனச் சொல்லிச் செல்லும்போதே கடைசியில் தன்னோட காதலியைப் பத்திதான் சொல்லப் போகிறாரெனத் தெரிந்து விடுகிறது.  இவரும் அதே மாதிரி பார்கவி எங்க இருப்பாளோன்னு முடித்திருக்கிறார்.


கடைசிக் கவிதையான எப்படி இருக்கீங்க? (http://yathrigan-yathra.blogspot.com/2010/07/blog-post.html) கவிதையையெல்லாம் நான் கொண்டாடுவேன்.  அந்தக் கவிதை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  அந்த அளவுக்குப் பிடித்து விட்டது.  அவருடைய  பதிவில்  அந்தக் கவிதை வந்தபோது கூட நான் எதுவும் பின்னூட்டம் போடவில்லை மிகப் பெரிய பாதிப்பை அது எனக்கு ஏற்படுத்தியது. போலவே சாவைப் பற்றிப் பேசும் இவருடைய கவிதையான சாசனம் http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html).

பாராட்ட, மகிழ, கொண்டாட நிறைய கவிதைகள் இருக்கின்றன இந்தத் தொகுப்பில். T Shirtற்கு தேனீர்ச்சட்டை,  கவிதை தர்க்கத்திற்குள் அடங்க மறுக்கும் ‘இவள்’ கவிதை மாதிரியான ஒன்றிரண்டு தடுமாற்றங்களும் உண்டு.  ஆனால் பெரும்பாலும், மன நிறைவைத் தரும் கவிதைகள்தான்.

இந்தக் கவிதைகள் அவை எழுதப் பட்ட காலத்திலேயே வலைப்பதிவில் வாசித்திருக்கிறேன்.  ஆனால் அதற்கும், முழுத் தொகுப்பாக இப்போது படிப்பதற்குமான மனப் பதிவு வேறு மாதிரியா இருக்கு.

மிகப் பிரியமான மனுஷன் யாத்ரா. அவருடைய கவிதைகள் தொகுப்பாக வருவது மன மகிழ்ச்சியைத் தருகிறது.  80 பக்கங்கள் கொண்ட, நேர்த்தியான அச்சமைப்பு, அழகான அட்டை உடைய புத்தகத்திற்கு வெறும் 60 ரூபாய்தான் விலை வைத்திருக்கிறார்கள்.  நண்பர்களை இவரது கவிதைத் தொகுதியை வாங்கிப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

(29/12/2010 அன்று யாத்ராவின் ’மயிரு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது).

தற்காப்பு

என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது
யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது
வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து
நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை
நண்பர்களே கிடையாது எனக்கு -
அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை
கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்
நேரம் பற்றிய போதமின்றி
குடித்துக் கொண்டிருக்கலாம்
என்னுடைய உளறல்களை
யாரும் கேட்டுவிடாதபடி
எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு
வசதியான செவ்வக மேஜை
அதன் மேல் சாம்பல் கிண்ணம்
கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது
வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று
சுருண்டு கிடக்கலாம்
தூசி படிந்த புத்தகங்கள்
அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி
என் அழகையோ அழகின்மையையோ காட்ட
சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது
சூரியனைப் பார்க்காத என் உடம்பு
இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்
உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள
தேவையாயிருக்கிறது இந்த அறை

(இது மீள் பதிவு. பழைய இடுகை : http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_31.html)

சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்

முதல் முறை படித்தபோது இந்த நாவல் சில குறைகளுடன் என்னைக் கவரவே செய்தது.  ஆனால் யோசித்துப் பார்க்கும்போது நிறைய குறைகளே தெரிகின்றன. இது ஏதோ நாவல் வெளியிட வேண்டுமே என்று அவசரத்தனமாக எழுதப்பட்ட ஒரு நாவல் என்று தோன்றுகிறது.

 தேகம் நாவலில் எனக்குத் தெரியும் சில குறைகள் :

கத்துக்குட்டித்தனமான முயற்சிகள். தர்மா, நீதி என்று குறியீட்டுப் பெயர்கள் வைத்திருப்பது (remember, அன்னைவயல், தாய்வாசல்!).

ஒழுங்காக எடிட்டிங் கூடச் செய்யாதது.  கந்தவேல் என்ற பெயர் அடுத்த
பக்கத்தில் கந்தசாமியாக மாறுவது.

ஒரே விதமான வரிகள் திரும்பத் திரும்ப வருவது. உதா : உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது... (இந்த இடத்தில் அம்பை சொன்னது ஏனோ நினைவுக்கு வருகிறது : சினிமால தொட்டாலே ஆர்கசம் வந்தா மாதிரி உணர்ச்சி காட்டறாங்களே, அப்ப முத்தம் கொடுத்தா காக்கா வலிப்பு வந்துடுமா?)

ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன் என்கிறாய் என்ற கேள்விக்கு செலின் பதில் சொல்லியிருப்பாள். ஆனால் இரண்டு அத்தியாயங்கள் கழித்து நான் அப்ப சொல்லலை, இப்ப சொல்றேன் என்றுவிட்டு அதே காரணத்தை மறுபடியும் சொல்வாள்.  நூலாக்கும் போது இதையெல்லாம் கூடவா கவனிக்காமல் விடுவார்கள்?

ஏற்கனவே எழுதி உயிர்மையில் / சாரு ஆன்லைன் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் பக்க நிரப்பிகளாக மறுபடியும் இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.  தனிப்பட்ட அளவில் சில கவிதைகள் நன்றாயிருந்தாலும், நாவலுடன் முழுத் தொடர்பும் கொண்டவை எனச் சொல்ல முடியவில்லை.

வேதங்கள் / சங்க இலக்கியத்திலிருந்து எதையாவது தொடர்பே இல்லாததை (அல்லது தொடர்பு இருப்பது போன்ற தோற்றம் தருவதை) எடுத்து
அங்கங்கே பொன் தூவலாகத் தூவுவது ஒரு ஃபேஷனாகிவிட்டது போல. அது இந்த நாவலிலும் அப்படியே இருக்கிறது.  என்ன எழவோ இந்த மாதிரி மோஸ்தர்களைக் கண்டாலே எரிச்சலாகிவிடுகிறது.

கதையின் நாயகனால் உடல்-ரீதியாக வதை செய்யப்படுபவர்கள் ரொம்பக் கெட்டவர்கள் என்பது வெகு கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதேச்சைத்தன்மையாகவோ அல்லது காரண காரியமற்ற ’வெறும்’ வதையாகவோ இவை மாறாததால், சாதாரண கிராஃபிக்கல் டீடெய்ல்ஸுற்கு மேல் மதிப்பளிக்க முடியவில்லை.  (இதை காம்யூவின் அந்நியன் நாவலில் வெயில் நேரத்தில் ஒருவனைச் சுட்டுக் கொல்லும் சம்பவத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கலாம்).

சாருவைப் பற்றிய முக்கிய குற்றச் சாட்டு அவர் கிசுகிசு பாணியில் தன்னுடன் பழகியவர்களைப் பற்றி எழுதுகிறார் என்பது. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் அதைக்கூட ஏற்கனவே எழுதியதை மறுபடி எழுதினால் என்ன செய்ய?  ஏற்கனவே சிறுகதைகளில், பத்திகளில், ராசலீலாவில் வந்த அதே நிகழ்வுகள் வேறு பெயர்களுடன் இந்த நாவலிலும் வருகின்றன (நீலாவதி என்ற பெண் பெயரில் வரும் பகுதிகளைப் படித்துப் பாருங்கள்).

இது மட்டுமில்லை.  ஏற்கனவே இவர் கதைகளில் வந்த அதே பாத்திரங்கள் அதே குணங்களுடன் இங்கேயும் உண்டு. ஆனால் வேறு பெயர்கள்.  ஆழ்வார், கிருஷ்ணா என்று. அடப் போங்கப்பா, போரடிக்குது.

அப்படியானால், நாவலில் நல்ல விஷயங்களே இல்லையா எனக் கேட்கிறீர்களா.. சில கவித்துவமான வர்ணனைகள், பித்த நிலையில் வரும் நேஹாவின் வரிகள்...

இது வதையைப் பற்றிய நாவல் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை.  பாலியல் சித்தரிப்புகளில் வதையெல்லாம் தெரியவில்லை (சாமான் எழும்பாததை எல்லாம் வதை லிஸ்டில் சேர்க்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்).  எனக்குத் தெரிந்து இது, வதை + சாருவின் வழக்கமான பாலியல் சித்தரிப்புகள் + வழக்கமான சாரு சமாச்சாரங்கள் உள்ள நாவல்.

நந்தலாலாவும் கிகுஜிரோவும்

சினிமா பற்றி எதுவுமே எழுதியதில்லை இதுவரை.  சினிமாக்களை எப்போதாவது பார்ப்பதுடன் சரி. உலக சினிமாக்களில் அதிகப் பரிச்சயம் இல்லாதவன். சினிமா என்ற கலையின்மேல் பெரிய ஈடுபாடோ ஆர்வமோ இல்லாதவன்.

நந்தலாலாவை போன ஞாயிறன்று மாலைக் காட்சியில் பார்த்ததும், ஆடிப் போனேன்.  ஆடிப் போனேனுக்கு மேல் ஏதும் சொல்லத் தோன்றாததால் இப்படி எழுதுகிறேன்.  இந்தப் படத்தைப் பற்றிச் சில வரிகளை டுவிட்டரிலும் பஸ்ஸிலும் பகிர்ந்து கொண்டேன்.

கிகுஜிரோவின் கதையை ஒட்டி எடுக்கப் பட்ட படம் நந்தலாலா என முதலிலேயே கேள்விப்பட்டிருந்தேன்.  இவ்வளவு தூரம் நம்மைக் கவர்ந்த படம் ஒரு தழுவலாக இருந்துவிடக் கூடாதே என்று மனம் ஆசைப்பட்டது.  கிகுஜிரோவின் குறுந்தகடை நண்பரிடமிருந்து பெற்று, இந்த வாரத்தில் இரண்டு முறை பார்த்தேன்.  மறுபடியும் நந்தலாலாவை நேற்று மதியம் திரையரங்கில் பார்த்தேன்.

கிகுஜிரோவின் தழுவல் இல்லை நந்தலாலா என்று தெளிவாக உணர்கிறேன்.  ஆனால், கிகுஜிரோவின் பாதிப்பில் உருவான படமே நந்தலாலா என்பதும் தெரிகிறது.

கிகுஜிரோவில் ஒரு சிறுவன் தன் தாயைத் தேடிச் செல்கிறான்.  உதவிக்கு வருபவன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்பவன்.  சிறுவனின் தாய், வேறொருவருடன் செட்டிலாகிவிட்டது தெரிகிறது. பையனைச் சமாதானப்படுத்த,  அவனது அம்மா வேறு இடத்திற்கு மாறிச் சென்றிருக்கலாம் என்கிறான் உடன் வந்தவன்.  சிறுவனைக் குஷிப்படுத்த சில விளையாட்டுகள் காட்டுகிறார்கள். விளையாடுகிறார்கள். பயணிக்கிறார்கள்.  ஊருக்குத் திரும்ப வந்ததும், மறுபடி இன்னொருமுறை இதே போன்று செய்யலாமென உடன் வந்தவன் சொல்ல, சிறுவன் மகிழ்ச்சியாகச் செல்வதுடன் படம் முடிகிறது.

நந்தலாலாவின் அடிப்படைக் கதையே வேறு மாதிரியானது.  இங்கே சிறுவன் மட்டும் தாயைத் தேடிச் செல்வதில்லை.  மனநலம் குன்றிய பாஸ்கர் மணியும் அதையேதான் செய்கிறான். சிறுவன், தாயின் மேல் கொண்ட பாசத்தால். பாஸ்கர் மணி, கோபத்தால். சிறுவனின் தாயார், வேறு ஒருவருடன் இருப்பது தெரிந்ததும், இவனைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு வருகிறான். தன்னுடைய தாயின் பைத்திய நிலையைப் பார்த்ததும், இவனது பைத்தியம் சொஸ்தமாகிறது.  சிறுவனுக்கு வேறொரு தாய் கிடைத்து, பாஸ்கர் மணிக்கு பைத்தியம் குணமாவதுடன் படம் முடிகிறது.

சில காட்சிகள் கிகுஜிரோவில் இருப்பதைப் போலவே வந்தாலும் வேறு மாதிரியான அழுத்தங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் படத்தில் லாரிக்காரன் அடிப்பது எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. தமிழில் அருகாமைக் காட்சியில் அடி விழுந்து பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. ஒருவிதத்தில் நந்தலாலா கொஞ்சம் மெலோடிராமாவும்கூடத்தான்.

பயணம் என்றால், கார், பஸ், வேன் என்றுதான் இருக்க முடியும். அதனால் அதையெல்லாம் காப்பி என்றால் என்ன சொல்ல முடியும்? ஒருவர், அந்தப் படத்திலும் இயக்குனரே நடித்திருக்கிறார். அதையுமா மிஷ்கினும் காப்பியடிக்க வேண்டுமென்றிருந்தார்! (இணையத்தில்தான் படித்தேன், யார் சொல்லியிருந்தது என்று நினைவில்லை).  விட்டால் அதையும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள், இதிலும் காமெராவில் எடுத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வார்கள் போலும்.

படத்தின் சிறப்புகளைப் பற்றிப் பலர் விரிவாக எழுதிவிட்டார்கள்.  நானும் திரும்பவும் அதையே சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அதற்குள் போக விருப்பமில்லை.

என்னளவில் இதுவரை இப்படியான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. இரண்டாவது முறை பார்த்தபோதும் அதே மனநிறைவைத் தந்தது நந்தலாலா.  நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க நிச்சயம் சிபாரிசு செய்வேன்; செய்கிறேன்.

ஒரு உறுதியான தாயோளியின் வரலாறு

ஓரிரவு அவன் கதவருகே வந்தான்
நனைந்து, ஒல்லியாய், அடிவாங்கியவனாய்,
மிரட்சியுடன்
வாலில்லாத ஒண்ணரைக் கண் வெள்ளைநிறப் பூனை
அவனை அள்ளினேன்
சோறிட்டேன்
அவன் தங்கினான்
என் மீது நம்பிக்கை வளர்ந்தது
நண்பனொருவன் வண்டியை இவன் மேல் ஏற்றும் வரைக்கும்
மீதமிருந்ததை அள்ளி எடுத்து கால்நடை மருத்துவரிடம் சென்றேன்.
அவர் சொன்னது :
”பிழைக்க அதிக  வாய்ப்பில்லை
இந்த மாத்திரைகளை கொடுங்கள்
இவன் முதுகெலும்பு நொறுங்கியிருக்கிறது
ஆனால், இதற்கு முன்பே நொறுங்கி எப்படியோ இணைந்திருக்கிறது
பிழைத்தாலும்  நடக்க முடியாது
இந்த எக்ஸ்ரேவை பாருங்கள்
இவன் சுடப்பட்டிருக்கிறான்
இங்கே பாருங்கள்,
தோட்டாக்கள் இன்னும் இருக்கின்றன
அத்துடன் ஒருகாலத்தில் இவனுக்கு வாலும் இருந்திருக்கிறது
யாரோ அதை நறுக்கியிருக்கிறார்கள்''

(நேற்றிரவு சார்லஸ் ப்யுகோவ்ஸ்கியின் The History of One Tough Motherfucker வெளியிட்டபோது மொழிபெயர்ப்பு போட வேண்டாமென நினைத்தேன்.  இப்போது வேறு மாதிரி தோன்றுவதால், மொழிபெயர்ப்பை வெளியிடுகிறேன்)

கொஞ்சும் தீபாவளி

ராக்கெட்டைக் கையில் பிடித்துக் கொளுத்து
திரி பற்றியவுடன்
வீசியெறி
வானத்தில் புகைபரப்பி
விர்ரெனச் சென்றால் மகிழ்ச்சி
இன்னொன்றை
கொளுத்தி பக்கவாட்டில் விசிறி அடி
வாகனங்களின் புகையைக் கிழித்து
தூரத்தில் இருப்பவனின் சூத்து
காலியாகுமென கெக்கலி
அடுத்த ராக்கெட்
பாலத்தின் மேல் வருபவனை
அலறி வண்டியை ஒதுக்கி ஓட்ட வைக்கட்டும்
(நடுவில் காரின் மேல் எய்த அம்பு
குறி தவறி பக்கவாட்டுச் சுவரில்
மோதி விழுவதை விட்டுவிடு)
நமக்கிது தீபாவளி
நம் உலகம்
நம் தீபாவளி
நம் கொண்டாட்டம்
நானும் ஒன்று கொளுத்திக் கொள்கிறேன்
என் வழுக்கைத் தலைமேல் விழாதிருக்கட்டும்
இந்த எழவெடுத்த ராக்கெட்.

ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

(நகுலனின் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று இது.  கணையாழியில் 1992ல் வெளியானது, பிறகு காவ்யா பதிப்பகம் நகுலன் சிறுகதைகள் என்ற தலைப்பில் தொகுத்தது.  காவ்யா பதிப்பகத்திற்கு நன்றியுடன் இதை இங்கே பகிர்கிறேன்).

என் அறையில் இருந்தேன்.  அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது.  அதன் தாய்மொழி மலையாளம்.  அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.  கறுப்பிலும் கறுப்பு.  அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.

கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும்.  விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது.

நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று.  அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி’ யின் ‘கிங்கிணிக் கவிதைகள்’ என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன்.  குழந்தை ஒரு கிராமத்தில் L.P. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.

மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன்.  “படித்தேன்” என்றது.  இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.  நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன்.  அது அதிலிருந்து ‘ஸைக்கிள்’ என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும்’ வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்ததும் எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது.  அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன்.  குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.

    1. ஜன்ம காரணி
    பாரதம்
    ஆஹா ஆஹா ஆஹா
    கர்ம மேதினி பாரதம்
    நம்மளாம் ஜனகோடிதன்
    அம்மையாகிய பாரதம்
    ஆஹா ஆஹா ஆஹா

    2. பல பல நாளுகள்
    ஞானொரு புழுவாய்
    பவிழக் கூட்டில் உறங்கி
    இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே
    நாள்கள் நீங்கி
    அரளிச் செடியுடே
    இலைதன் அடியில்
    அருமக் கிங்கிணி போலே
    வீசுங் காற்றத்தில் இளகி விழாதே
    அங்கனே நின்னு

    ஒருநாள் சூரியன்
    உதிச்சு வரும்போள்
    விடரும் சிறகுகள்வீசி
    புறத்து வந்து அழகு துடிக்கும்
    பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)
    தளிராய் விடர்த்து வீசும்
    பனிநீர்ப்பூவில்
    படர்ந்து பற்றியிருந்தது.
    பூவில் துள்ளும் பூவதுபோலே
    பூத்தேன் உண்டு களிச்சு.

அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.

எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு.  அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு.  வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள்’ என்றே சொல்ல வேண்டும்.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது.  ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன்.  ”அதற்கென்ன எழுதலாமே” என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது.  ஒரு இசைவெட்டு.

ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி” என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.  சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன்.  ஒரு நாள் அதன் ’அம்மூம்மா’ (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு” என்று சொல்லிச் சிரித்தது.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்”

குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    சிமி
    குமி
    உமிக்கரி

    நஞ்சு
    குஞ்சு
    மத்தைங்காய்

    மணிக்குட்டன்
    குணிக்குட்டன்
    கொடுவாளை

குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.

மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது.

விமலாதித்த மாமல்லன்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.

இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.

பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்த்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத தெளிவான மொழியில் கதைகள் இருக்கும்.

முதலில் சு.ரா.வின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதையைப் படித்தேன். நாயகனின் பெயர் தகுடு லோம்டே. இந்தப் பெயரே என்னை அக்கதையின்பால் இழுத்தது. சாவகாசமாய் ஆரம்பித்து வேகம் கொள்ளும் கதை. விடிகாலைக் கனவில் கண்டதைப் போல் அன்றிரவு யாரோ முகம் தெரியாத ஒருவன் கத்தியால் குத்த மாண்டு போவான் லோம்டே.

பிறகு புதிய பார்வை, சுபமங்களா என அவர் பெயர் பார்த்து கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தொகுப்புகளைத் தேடியதில், மூன்று வந்திருப்பதாகத் தெரிந்தது : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள், அறியாத முகம் & உயிர்த்தெழுதல். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் கிடைத்தன. இப்போது புத்தக அலமாரியில் எவ்வளவு தேடியும் அறியாத முகம் கிடைக்கவில்லை. :)

உயிர்த்தெழுதல் தொகுதியில் மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. நீள் கதையான நிழலில் துவங்கி ஒளியில் முடிகிறது தொகுப்பு.

இவர் கதைகளில் வரும் சில பெயர்கள் தகுடு லோம்டே, லச்சு, டம்போ, கஸ்ஸு, சூர்ய நாரயண ராவ், சி.ஆர்.சலபதி ராவ் (நிறைய ராவ்கள் வருகிறார்கள்).

குல்லா ஒரு வித்தியாசமான கதை. சூர்ய நாராயண ராவ் பெரிய பதவியில் (உதவி அதி உயர் அதிகாரி) இருப்பவர். பதவியின் முன் இருக்கும் உதவி என்பது அவருக்கு உறுத்துகிறது. மேல் பதவியை அடைய மந்திரவாதியிடம் சென்று குட்டிச் சாத்தானை வசியப் படுத்தும் உபாயத்தைக் கற்றுக் கொள்கிறார்.

தலைநகருக்கு மாற்றலாகிறது. குட்டிச் சாத்தானுக்காக ஒரு கொழுத்த தேவாங்கை ஒருவனிடம் வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து குதூகலிக்கும் மனைவியிடம் விபரம் சொல்லாமல் அலமாரியில் தேவாங்கை வைக்கிறார்.

நல்ல நாள் பார்த்து, பொரி, பானை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மாட்டு மந்தையின் முதல் மாட்டின் கொம்புகளுக்கு இடையில் குல்லா; அதன் கீழ் குட்டிச் சாத்தான். குல்லாவில் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். குட்டிச் சாத்தான் கீழே குதிக்கிறது. பொரியை விசிறியபடி ஓடத் துவங்குகிறார். பொரிக்கும் ஆசை, குல்லாவிற்கும் ஆசை - பொரியைப் பொறுக்கித் தின்றபடி அவரைத் துறத்துகிறது குட்டிச் சாத்தான். வீட்டை அடைந்து, அலமாரியில் இருந்து கண்ணிமைக்கும் நேரம் தேவாங்கை அதனிடம் காட்டி பின்புறம் மறைத்துக் கொள்கிறார். தேவாங்கைத் தரச் சொல்லிக் குட்டிச் சாத்தான் கெஞ்சுகிறது. தனக்கு அடிமையாய் இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டு தேவாங்கைக் கொடுக்கிறார். தேவாங்கை வாங்கிய குட்டிச் சாத்தான் அவரை ஓங்கி அறைகிறது; ஏனெனில் வெறும் தேவாங்கின் தோல் மட்டுமே இருக்கிறது - உள்ளே வெறும் வைக்கோல். கறியன்பு கொண்ட மனைவியால் வந்தது வினை. அது அவருக்குச் சாபமிடுகிறது.

அன்று முதல் சாவு ஊர்வலம் வந்தால் இடம் பொருள் பார்க்காமல் கோட் சூட் சகிதம் ரோட்டில் இறைந்து கிடைக்கும் பொரியைப் பொறுக்கித் தின்னத் துவங்குகிறார்...

புள்ளிகள் மிக நெகிழ்ச்சியான கதை.

உயிர்த்தெழுதல் மிக முக்கியமான கதை. இதை விமலாதித்த மாமல்லனின் மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்லலாம். பறவை ஒன்றை எடுத்து வளர்க்கிறான் நரசிம்மன். அது சிறிது காலம் பறக்காததால், அது இறந்து விட்டது என வீடு தீர்மானிக்கும். அவனுக்கு அழுகையாய் வரும். அது நிச்சயம் ஒரு நாள் பறக்கும் எனத் திடமாய் நம்புவான். வெளியூரில் இருந்து வந்த உறவுக் காரப் பையன் சோதிட ரீதியாக அலசி, அதன் ஆயுட் காலம் முடிந்து விட்டது; பறப்பதல்ல, இன்னும் அது அழுகாமல் இருப்பதே பெரிய அதிசயம் என்பான். நரசிம்மன் பறவையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டகல்வான்.

மனநல மருத்துவரைப் (டாக்டர் ருத்ரன்.?) பார்ப்பான். அவர் ஆதுரமாகப் பேசி, அதற்கு மருந்து போட்டு, நிச்சயம் பறக்கும் எனச் சொல்வார். பக்கத்து வீட்டிற்கு வரும் பாவாவிடம் வணங்கி அவரிடம் பறவையைக் கொடுப்பான். அவர் மந்திரம் ஓதி ஆண்டவன் விருப்பம் இருந்தால் அது பறக்கும் எனச் சொல்வார்.

வீட்டிற்குத் திரும்பினால் ஏன் அதை மீண்டும் எடுத்து வந்தாயென கத்துவார்கள். அவனிடமிருந்து அந்தப் பறவையைப் பிடுங்கி ரோட்டில் வீசுவார்கள். அவன் அலறியபடி வெளியில் பாய்வான்.

சரியாகத் தரைக்கு அரை ஜான் இருக்கையில் அது மேலெழும்பும். அவன் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு மேல் நோக்கிப் பறக்கத் துவங்கும் பறவை. கதையின் கடைசி வரிகளைக் கீழே தருகிறேன்.

கண்களில் ஊற்றெடுத்த கண்ணீர் நரசிம்மனின் கன்னங்களில் நன்றி கூறிக் கொண்டு வழிந்த படி இருந்தது மருத்துவருக்கும் பாவாவுக்கும்.

பிஸ்மில்லா ஹிர்ரம்ஹான் நிர்ரஹீம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அவனே அல்லாவாகிய ஆண்டவன்.

எல்லையற்ற வெளியில் எழுதிக் காட்டுவதைப் போல, இரண்டாய் இருபதாய் இருநூறாய்த் தோற்றம் கட்டியபடி கட்டற்ற வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறது பறவை.

லேசான சுயசரிதைத் தன்மை கொண்டது மேலே உள்ள கதை. எழுதத் துவங்கிய பின் சில காலம் எழுதாமல் இருந்தார் விமலாதித்த மாமல்லன். அப்போதைய அவரது தவிப்பை வெளிப் படுத்தும் கதையாக இதை வாசிக்கலாம்.

இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப் புனைவுலகிற்கு நஷ்டமே. சுந்தர ராமசாமி ஓர் இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கல் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கிம் சூழலில் இருக்கிறோம். (முதல் தரம் மூன்றாம் தரம் என்பதில் சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது).

விமலாதித்த மாமல்லனைப் பற்றியோ அல்லது அவரது எழுத்துகளைப் பற்றியோ மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

(ஜனவரி 2008ல் எழுதிய இடுகை - http://jyovramsundar.blogspot.com/2008/01/blog-post_21.html. இப்போது விமலாதித்த மாமல்லன் இணையத்தில் எழுதத் துவங்கியுள்ளார். அவரது வலைப்பதிவு முகவரி : http://madrasdada.blogspot.com)

சற்று முன்புதான்

அதிகாலை நேரம்
காகங்கள் மின்சாரக் கம்பிகளில்
காத்துக் கொண்டிருக்கின்றன
நேற்றிரவு மறந்து போன
சப்பாத்தியைத் தின்று கொண்டிருக்கிறேன்
அமைதியான ஞாயிறு காலை 6 மணிக்கு

சுவரோரத்தில் ஒரு செருப்பு சாய்ந்து இருக்கிறது
அதன் ஜோடி அருகில் சிதறிக் கிடக்கிறது

சில வாழ்க்கைகள் பாழாய்ப் போகவே
படைக்கப்பட்டிருக்கின்றன

சார்லஸ் ப்யுகோவ்ஸ்கி

நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்

தலைப்பில் உள்ள புத்தகத்தை எழுதியிருப்பவர் ஜமாலன். புலம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது. இடம் : தேவநேயப் பாவாணர் சிற்றரங்கம், அண்ணா சாலை, சென்னை.

கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் :

தமிழவன்
ராஜன்குறை
பிரேம்
எஸ் சண்முகம்
கடற்கரய்
அ கா ஜான்

புத்தகம் அரங்கில் கிடைக்கும். விலை ரூ 300/-.

நேரமிருப்பவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.